Sunday, August 31, 2008

இந்த திண்ணைப் பேச்சுக்காரர்களிடம்...


இந்தப் பதிவைப் படிக்கும் முன்... ஒரு சின்ன வேண்டுகோள்!

ரஜினி –கமல் இருவரில் யார் உசத்தி என்று அலசுவதற்கல்ல இந்தப் பதிவு. இந்த இருவரும் நண்பர்களாகவே இருந்தாலும், உண்மையில் யார் முதலிடத்திலிருக்கத் தகுதியானவர் என்பதை அலசும் பதிவு இது. இதற்கென்ன இப்போது அவசியம் என்பவர்கள் மேலே தொடருங்கள்.

கமல் ரசிகர்களும் படியுங்க... நியாயம் புரியும்!



இப்போது பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்களை சற்றே கூர்ந்து நோக்குபவர்கள், மீடியா... இல்லையில்லை... பத்திரிகையாளர்களின் வக்கிர புத்தி என்ன என்பதை வெகு எளிதாக உணரலாம்.

இதுவரை – கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் – ரஜினி – கமல் என்று எழுதப்பட்டு வந்த Ranking-ஐ திருப்பிப் போட முயற்சித்து வருகிறார்கள், ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல!

மேலோட்டமாகப் பார்க்கிறபோது இதில் என்ன இருக்கிறது இந்த அளவு அலட்டிக் கொள்ள... இந்த இருவருமே ஒரே அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள்தானே... என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்கு ஒரு சின்ன விளக்கம்...

சில மாதங்களுக்கு முன், கமல்ஹாசனின் தசாவதாரம் வருமா.. வராதா என்ற சூழலை மீடியா உருவாக்கிருந்த நேரம் அது. சிவாஜி தந்த வெற்றியில் எங்கும் எதிலும் ரஜினி என்ற சூழ்நிலை.

அப்போது, கமல்ஹாசன் தனது நெருக்கமான, சொல்லப்போனால் அந்தரங்கமான காராயதரிசி போன்ற ஒருவரிடம் குறைபட்டுக் கொண்டார் இப்படி... (இது ஜூவி கழுகு டைப் கப்ஸா இல்லை... உயிருள்ள ஆதாரங்களுடன் கூடிய உண்மை!!)

‘என்னய்யா இது... நானும் இவ்வளவு முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். வேணும்னா தோல்விப் படம் தர்றோம்... வித்தியாசமா பண்ண முயற்சிக்கிறேன். மீடியாக்காரங்க நம்மகிட்ட நல்லா பேசறாங்க... நம்ம படத்தைப் பத்தி நல்லாதான் எழுதறாங்க... ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்கு என்னை இரண்டாமிடத்திலேயே வைத்திருக்கப் போகிறார்கள்? இருபது வருஷமா ரஜினி – கமல்னுதான் எழுதறாங்க... இந்த ரேங்கிங்ல எப்பதான் மாறுதல் வரும்?’

அடுத்த நாளே, கமல் அலுவலகத்திலிருந்து போன் கால்கள் முக்கிய பத்திரிகையாளர்களுக்குப் பறந்தன. கமல்ஹாசனை அவர்கள் தனித் தனிக் குழுவாகப் போய் பார்த்ததும் தசாவதார அல்வா வாங்கி வந்ததும் தனிக் கதை.

சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மீடியா சந்தர்ப்பவாதிகள், இப்போது தங்கள் விஷமத்தனத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்காக நீண்ட நாள் காத்திருந்த கமல் அதை தசாவதாரத்தில் பெற்று விட்டார்! (சிஃபி)
இன்னொருவர்: ரஜினி-கமல் என்ற ரேங்கிங்கில் தற்போது மாற்றம். தசாவதாரமும், குசேலனும் இந்த வரிசையை மாற்றிப் போட்டிருக்கின்றன (தினமலர்).
அடுத்தவர்: இனி கமல் Vs ரஜினி! (வாடகை கன்டன்டில் காலம் தள்ளும் எம்எஸ்என், யாஹூ!)


இன்னும் இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

இது நியாயமா... யோசித்துப் பாருங்கள்!

சினிமா என்பது கலை என்ற நிலையைத் தாண்டி வெகு காலமாகிவிட்டது. இங்கு வியாபாரம்தான் பிரதானம். அதன்பிறகுதான் கலை... கொலை எல்லாம்.
வியாபாரத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ரஜினி என்றுமே முதலிடத்தில்தான் நிற்கிறார். முன்பே நாம் சொன்னதுபோல, ரஜினிதான் இன்றைக்கு இந்திய சினிமாவின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார் வெளிநாடுகளில்.

வெளிநாட்டில் நூறு நாட்களைக் கடந்து ஓடியவை ரஜினியின் படங்கள் மட்டும்தான்... மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள் கூட ரஜினியின் சுமாரான படம் என்று மீடியாவால் வர்ணிக்கப்பட்ட படங்களை நெருங்க முடியாது. அப்படி ஒரு சாதனை.

அட... நடிப்பென்று வந்தாலும் ரஜினிக்கு இணை கிடையாது. இன்றும் கூட ரஜினியின் அருமையான நடிப்பாற்றலை வியந்து பேசுகிறார் தங்கர் பச்சான். அவருக்கு மிகப் பிடித்த இரு படங்கள் அண்ணாமலை மற்றும் பாட்ஷா.

ஒரு ஆக்ஷன் ஹீரோ அழுதால்கூட ரசிக்க முடியும். ஆனால் ஒரு ரொமான்டிக் ஹீரோ சண்டை போட்டால்கூட அது டான்ஸ் மாதிரிதான் தெரியும் – இது நான் சொல்வதல்ல... நடிப்புச் சக்ரவர்த்தி என ரஜினி புகழும் அமிதாப்பச்சன் சொன்னது!

இன்றும் இயக்குநர் விக்ரமன் பிரமிப்போடு இப்படிக் கூறுகிறார்:

என்னுடைய வானத்தைப் போல படம், ரஜினி சாரின் படையப்பாவை முந்தியதாக குமுதத்தில் ஒரு செய்தி போட்டார்கள். அதை உடனே மறுத்து அறிக்கை கொடுத்தேன். காரணம் படையப்பா வசூலில் 20-ல் ஒரு பங்குதான் வானத்தைப் போல. இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

அதே போல.. பாபாவை ஒரு தோல்விப் படமென்று என்னால் ஒருபோதும் கூற முடியாது. அந்தப் படத்தில் எல்லா அம்சங்களுமே சிறப்பாக இருந்தன. நியாயமாக ரஜினியின் ரசிகர்கள் அதை நன்றாக ஓட வைத்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் வருவதை மட்டுமே நம்பிக்கொண்டு, படத்துக்கு போதிய ஆதரவளிக்காமல் விடுபவர்கள் எப்படி அவரது தீவிர ரசிகர்களாவார்கள்? சொல்பவர்கள் பேச்சைக் கேட்காமல் யோசித்துப் பார்த்தால் புரியும் நான் சொல்வது...

பாபாவுக்கு பணத்தை ரஜினி சார் திருப்பித் தந்தார் என்ற செய்தி எனக்குக் கிடைத்த போது மிகவும் வருத்தப்பட்டு ரஜினி சாரிடம் என் உணர்வுகளைச் சொன்னேன். நான் இந்த அளவு பேசக் காரணம், அடிப்படையில் ரஜினி சாரின் அத்தனை படங்களும் குடும்பம் சார்ந்தவை. குடும்பத்தோடு பார்த்து மகிழக் கூடியவை... ரஜினியோடு நான் யாரையும் ஒப்பிட மாட்டேன். அவர் வழி தனி வழி... அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்!”

-என்ன செய்வது... சினிமாவிலேயே இருக்கிற ஒருவருக்குத் தெரிந்ததை விட, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என பிதற்றும் ஒரு கும்பல் இப்போது கமல் – ரஜினி என எழுத ஆரம்பித்துள்ளது.

இன்றைக்கு ரஜினி கவுர வேடத்தில் தோன்றிய ஒரு படத்தை சதி செய்து, உண்மைகளை மறைத்து தோல்விப் படமாகக் காட்டிவிட்டதால் அவரது மதிப்பு குறைந்துவிடுமா... அல்லது வசூல் சக்கரவர்த்தி அந்தஸ்து இறங்கிவிடுமா...

குசேலன் படத்தில இப்போதும் பிரமிட் சாய்மிராவுக்கு லாபம்தான். இதை எப்போதும் சொல்ல முடியும், எங்கேயும் சொல்ல முடியும். ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டி நஷ்டஈடு வாங்குவதில் குறியாக இருக்கிறார்கள். (இவர்களும் அடுத்த ரஜினி படம் வெளியாவதற்குள் தியேட்டர்களை சாய்மிராவுக்கோ ஆட்லேப்ஸூக்கோ விற்றுவிட்டு ஓடப் போகிறவர்கள்தான்.)

அதனால் இந்த ஜுஜுபி மேட்டருக்காக ரஜினியை ஒரு படி இறக்கி, தகுதியில்லாத ஒருவரை மேலேற்றப் பார்ப்பது என்ன நியாயம்?

ஆளவந்தான் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ் வரை வெளியான கமலின் தோல்விப் படங்களுக்காக அவரை ஒவ்வொரு படியாக இறக்கிக் கொண்டே போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் கடைசிப் படியில் அல்லவா நின்று கொண்டிருந்திருப்பார் கமல்ஹாசன்!

விகடன் சர்வே – எங்கே நடுநிலை?


‘என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்... துடைத்துப் போட்டு விடுகிறோம். எங்களிடம் இருக்கவே இருக்கிறது நடுநிலை எனும் முகமூடி. ரஜினியை அட்டையில் போட்டு காசு சம்பாதிக்க இதைவிட மிகச் சிறந்த ஆயுதம் எங்களிடம் இல்லை...’ என மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது விகடன் குழுமம், ரஜினி பற்றிய ஒரு அரைவேக்காட்டு சர்வேயை நடத்தியதன் மூலம்!

விகடனைத் திட்டுவதல்ல நமது நோக்கம்... ஆனால் இவர்கள் நடத்துவதுதான் பத்திரிகை, அதற்குப் பெயர்தான் பத்திரிகை தர்மம் என்று பிதற்றித் திரிகிறார்களே... அதைத் தோலுரிக்காமல் இருக்க முடியாதல்லவா?

ஒரே ஒரு சின்ன கேள்வியில் அம்பலப்பட்டு விடுகிறது விகடனின் அரைவேக்காட்டுத்தனம்...

ரஜினி அரசியலுக்கு வரலாமா... வேண்டாமா?

இந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது யாரிடம்? ஓட்டுப் போட்டு அரியணைக்கு அமர்த்தப் போகிற வாக்காளர்களிடம்...

ஆனால் இவர்கள் நடத்திய சர்வேயில் வாக்களித்தவர்களில் பெரும்பான்மை வாசகர்கள் யார் தெரியுமா? இணையத்தில் வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் வாசகர்கள். (சற்று கடுமையான வார்த்தைப் பிரயோகம். எல்லோருக்கும் இது பொருந்தாதுதான்... ஆனால் வேறு வழியில்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு, உதைக்க உடனடியாக யாரும் வரமாட்டார்கள் எனும் தைரியத்தில், ரஜினியைப் பற்றி கேவலமாக விமர்சிக்கும் கும்பல் மட்டுமே அதிகம் பங்கேற்ற கருத்துக் கணிப்பு இது!)

இவர்கள் முழுமையாக அல்லது பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். விகடனை இதழாக வாங்கிப் படிக்க முடியாமல் ஆன்லைன் சந்தா செலுத்தி படிப்பவர்கள். தேர்தலுக்காக நேரில் வந்து வாக்களிக்கும் வாய்ப்பற்றவர்கள். ஆக, நியாயமாக இவர்கள் விகடனுக்குப் போட்டிருக்கும் ஓட்டே செல்லாதது!

சாவடிக்கு வந்து வாக்களிக்க வக்கில்லாதவர்கள்தான், இந்த நாட்டின் அரசி யலைப் பற்றியும், ஆட்சி முறைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்கள்.

‘தேர்தல் வந்துடுச்சா... ஒரு நாள் லீவு கிடைச்சதுதான் லாபம்’ என்று கூறி வீட்டுக்குள்ளே மனைவியை விதவிதமாக சமைக்கச் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தீர்த்தவாரி நடத்தும் ஹைகிளாஸ் குடிகார கூட்டத்தின் கருத்தை பொதுமக்கள் மீது திணிக்கும் முயற்சி இது.

அல்லது, தங்களால் நேரடியாகச் சொல்ல முடியாத விஷயத்தை, வாசகர்கள் கருத்துக் கணிப்பு என விகடனே நடத்துகிற திணிப்பு.

இந்த சர்வேயில் விகடன் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திலும் விஷமத்தனம் ஒளிந்திருப்பதை, சாதாரணமாக நாள், வார இதழ்களைப் படிக்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
கன்னடர்களிடம் எந்தக் கட்டத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை ரஜினி. அவர் வார்த்தைகளில் சொன்னால் 'It is just a clarification to the people of Karnataka!'.

ஆனால் இவர்களோ இரண்டு கேள்விகளில் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாகவே எழுதியுள்ளனர்.

மன்னிப்புக்கும் வருத்தத்துக்கும் வித்தியாசம் என்னவென்று விகடனுக்கு தெரியவில்லையோ? கொஞ்சம் பிளாஷ்பேக்கை ஓட்டிப்பாருங்க...

1996-ல் ஜெயலலிதாவின் பாதாரவிந்தங்களில் விழுந்து பணிந்தார்களே... இந்த விஷக் குழுமத்தினர், அதற்குப் பெயர்தான் மன்னிப்பு... சமீபத்தில் ஜெயமோகனிடமும் எம்ஜிஆர் பக்தர்களிடம் அசடு வழிந்து நின்றார்களே அதற்குப் பெயர் வருத்தம் (விரிவாக ஆதாரங்களுடன் ஒரு பதிவு தயாராக இருக்கிறது!).

சூப்பர்ஸ்டார் ரஜினி இப்படி எந்தக் கேவலமான செயலையும் செய்யவில்லை என்பதை விகடனுக்கு இன்னும் எப்படி விளக்கிச் சொல்வது?

சரி... ஆன்லைன் வாக்களிப்பைத்தான் குறை சொல்கிறீர்கள்... ஊர் ஊராய் போய் கணித்தார்களே அது கூடவா தவறு? என அடுத்த கேள்வி உங்கள் மனதில் எழுகிறதல்லவா...

இதோ அவர்கள் கருத்து சேகரித்த லட்சணம்...

இதற்காக அமைப்பு ரீதியான எந்தக் குழுவும் ஊர் ஊராகச் செல்லவில்லை. குறிப்பிட்ட சில ஊர்களிலிருக்கும் விகடன் ஏஜென்டுகளும், லோக்கல் நிருபர்களும் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களின் அடிப்படையில் இவர்களாகவே ஒரு கணிப்புக்கு வந்திருக்கிறார்கள்.


கரூரிலிருக்கும் என் நண்பர் ஒருவர் மட்டுமே 10 படிவங்களை நிரப்பிக் கொடுத்திருக்கிறார்!
இப்படி கணிக்க என்ன Research Methodology-ஐ உபயோகித்தார்கள், Sampling கருவிகள் என்ன... ம்ஹூம்...

'அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? ரஜினி பெயரில் என்ன போட்டாலும் வாங்கிப் படிக்கிறீர்கள் அல்லவா... பிறகென்ன... நாளையே, 'ரசிகர்களைக் காக்க தேர்தல் களத்தில் ரஜினி', என ஒரு கவர் ஸ்டோரி போட்டால் போகிறது!' - இதுதான் விகட மனோபாவம்.

ரஜினிக்கு பகிரங்க கடிதம் என யாரோ ரசிகரின் பெயரில் எடிட்டோரியல் குழுவே ஒரு மொட்டைக் கடிதம் எழுதிய பிறகு, இவர்களிடம் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்! நியாயமாக இவர்கள் மீண்டும் ஒருமுறை ரஜினி பெயரைக் கூட அச்சடிக்க அருகதையற்றவர்கள்.

‘ரஜினி நின்றாலும் செய்தி, நடந்தாலும் செய்தி....’ – சர்வே கட்டுரை ஆரம்பத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வாக்கியம் இது.

அது தெரிந்துதானே கடந்த 15 வருடங்களாக ரஜினி நாமத்தை ஜெபித்தபடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

இவர்களுக்குத் துணிச்சலிருந்தால்,

யார் அடுத்த முதல்வர்- அழகிரியா? ஸ்டாலினா?

ஒகேனக்கல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி அடித்த பல்டி சரியா?

பொய்களை உண்மை போலவே பரப்புவதில் சன் குழுமத்துக்கு நிகர் எது?


இப்படி ஒரு பத்துக் கேள்வியை வரிசைப்படுத்தி, அட குறைந்த பட்சம் அறிவிப்பாவது செய்து பார்க்கட்டும்.

அடுத்த நாள், விகடன் ஒளித்திரையை இருட்டிப் போகச் செய்திருப்பார்கள் மாறன்கள்...
கருணாநிதி கவிதை வடிவில் சாபம் கொடுத்திருப்பார்... அதற்கும் முன்பே அதைப் படிக்கக்கூட அவகாசம் தராமல் அழகிரியும் ஸ்டாலினும் விகடன் அலுவலகத்தை காலி செய்திருப்பார்கள்...!!

Saturday, August 30, 2008

புல்லரிக்க வைக்கும் தமிழ்ப் பற்று!


பணத்துக்கு முன் கொள்கையாவது, விளக்கெண்ணையாவது... இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம் தமிழினக் காவலர்களில் ஒருவரான சரத்குமார்.

ஒகேனக்கல் பிரச்சினையில் வாய் கிழிய கன்னடர்களைத் தாக்கிப் பேசிய அதே வீராதி வீரன் சரத்குமார் இப்போது என்ன செய்திருக்கிறார் தெரியுமா... சத்தம் போடாமல் ஒரு கன்னடப் படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் கூட வாங்கி விட்டார்!

‘என் படத்தை தமிழர்கள், அதுவும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பார்த்தால் போதும். கர்நாடகத்தில் அந்தப் படம் ரிலீசாக வேண்டிய கட்டாயமில்லை (அப்படியே தப்பித் தவறி ரிலீசானாலும் யார் பார்ப்பார்கள்?). தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை அரங்கேற்றும் கன்னடர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம். பெங்களூரில் தமிழர்கள் இருக்கலாம். சென்னையில் கன்னடர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்...’ இப்படியெல்லாம் வெற்றுப் பப்ளிசிட்டிக்காகப் பேசிய சரத்குமாரின் நிஜமான கோர முகத்தை மீண்டும் ஒரு முறை தமிழர்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஓம் பிரகாஷ் என்ற கன்னடப் பட இயக்குநரின் பிரமாண்ட மும்மொழிப் படத்தில் இந்த சரத்மார்தான் ஹீரோ. தமிழ் மற்றும் இந்தியிலும் இந்தப் படம் தயாராகிறது. கன்னடத்தில் நேரடிப் படம் இது.

இந்தப் படத்தை மட்டும் பிரச்சினையில்லாமல் ரிலீஸ் செய்ய விட்டு விடுவார்களா கன்னட அமைப்பினர்?

அப்போது யார் காலில் விழுந்து தன் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார் இந்த சரத்குமார் என்பதைப் பார்க்க ரஜினிக்கு வேண்டுமானால் ஆர்வமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது லட்சோப லட்சம் ரசிகர்கள் தீயாய் எரியும் மனதோடு காத்துக் கிடக்கிறார்கள்.

ரஜினியின் தகுதிக்கும் தரத்துக்கும் நேர்மைக்கும் சரத் குமாரைப் பற்றி இங்கே எழுதுவதுகூட நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிற விஷயம்தான். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பொது மனிதர்களுக்கும் இந்த மாதிரி போலி அரசியல்வாதி – நடிகரின் நிஜ முகம் தெரிய வேண்டுமல்லவா...

ஆரம்ப நாட்களில் அதிமுக தலைவி ஜெயலலிதாவின் கால்பிடித்து சுற்றி வந்தவர், பின்னர் சில பல கோடிகளில் வந்த சண்டை காரணமாக திமுகவில் தஞ்சம் புகுந்து பதவிகளை அனுபவித்துப் பின்னர் அவர்களுக்கும் துரோகம் செய்து, 10 கோடி ரூபாய்க்கு மனைவியுடன் மீண்டும் ஜெயலலிதாவிடமே விலை போனவர் இந்த சரத்குமார்.

கொள்கை, கோட்பாடு, தமிழர் நலம் என முழங்கும் இவரிடம் அவற்றுக்கான அர்த்தம் பற்றிக் கேட்டால் அரைகுறை ஆங்கிலத்தில் உளறுவார். அவ்வளவுதான்.

இந்த சுப்ரீம் காப்பி ஸ்டாருக்கு கதை கேட்கும்போது கூட சொந்தமாக யோசிக்கத் தெரியாது. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா...

இவர் தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்களிடம், ரஜினி சாருக்கு எப்படி சீன் பண்ணுவீர்களோ அப்படிப் பண்ணுங்கள் எனக்கும், என்றுதான் முதல் கண்டிஷனே போடுவாராம். என்னதான் விளக்கெண்ணெயோடு புரண்டாலும் ஒட்டுகிற மண்தானே ஒட்டும்...

ஓரளவு யோசிக்கத் தெரிந்த அனைவருமே இவரது பச்சோந்தித்தனத்தைப் புரிந்தவர்கள்தான். ஆனால் என்ன செய்வது... இன்றைக்குப் பொய்கள் அலங்காரமாய் மேடையேறி ஆரவாரமாய் கிரீடம் சூடிக் கொள்கின்றன, நிஜம் மௌனமாய் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது!

Thursday, August 28, 2008

ஆகஸ்ட் என்றாலே சோதனையா?


ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்த ராசிதான் குசேலனுக்கு இவ்வளவு சோதனைகளைத் தந்து விட்டது என பத்திரிகைகள் இஷ்டத்துக்கும் எழுத, ரஜினியின் ரசிகர்களே கூட அதைப் பெரிதும் நம்பிவிட்டனர்.

செண்டிமெண்டிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் திரையுலகினரைப் பற்றி கேட்க வேண்டுமா... அவரவர் தங்கள் பங்குக்கு, ‘ரஜினி சார்கிட்ட அப்பவே சொன்னோம்...’ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

ஓரிரு பொது மேடைகளிலும் கூட இதைப் பற்றி பேசிவிட்டார்கள். தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக 2002, ஆகஸ்ட் 14-ம் தேதி வந்த பாபா சந்தித்த சோதனைகளைச் சுட்டிக் காட்டவும் செய்தார்கள்.

ஆனால் அந்த பாபா, கிட்டத்தட்ட 105 திரையங்குகளில் 50 நாட்கள் ஓரளவு நல்ல கூட்டத்துடனேயே ஓடியது. சென்னை மதுரையில் 8 திரையரங்குகளில் 100 நாள் ஓடியிருக்கிறது. ரஜினியின் தோல்விப் படம் என்று கூறப்படுவது கூட 100 நாள் படம்தான் என்பதை என்னவென்று சொல்வது!

சரி... உண்மையாகவே சூப்பர் ஸ்டாருக்கு ஆகலஸ்ட் மாதம் என்றாலே ஆகாதா... என்ற நினைப்போடு அவரது படங்கள் வெளியான தேதிகளைப் பார்த்தோம்.
அட... ஆகஸ்ட் மாதம் வெளியான ரஜினியின் பல படங்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. பெரும் திருப்பு முனைகளைத் தந்துள்ளன என்பதை நிறைய பேருக்கு நினைவுபடுத்தவே இந்தப் பதிவு.

ரஜினியின் முந்தைய ஆகஸ்ட் வெளியீடுகள் குறித்த ஒரு சில தகவல்கள்...

கிட்டத்தட்ட குசேலனைப் போலவே ரஜினி ரஜினியாகவே நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் வெளியானது 1984, ஆகஸ்ட் 2-ல். படம் பெரிய வெற்றி.

1982 ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான எங்கேயோ கேட்ட குரல், மிகப் பெரிய வெற்றி. சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. ரஜினிக்கு சிறந்த நடிகருக்கான மாநில விருதைப் பெற்றுத் தந்தது.

1981-ல் ரஜினி நடித்த இரு படங்கள் வெளிவந்துள்ளன. ஆகஸ்ட் 14-ல் கர்ஜனையும், 15-ம் தேதி நெற்றிக்கண்ணும் வெற்றிப் படங்களே.

ஆகஸ்ட் 15, 1980-ல் வெளிவந்த ஜானி, இரட்டை வேட நடிப்புக்கு புதிய இலக்கணம் எழுதியது. தமிழ் தெரியாதவர்கள் கூட ரசித்துப் பார்த்த ‘க்ளாஸிகல் ப்ளாக் பஸ்டர்’ அந்தப் படம்.

அட அவ்வளவு ஏன்... ரஜினி என்ற சூப்பர்ஸ்டாரை தமிழ்ப் படவுலகத்துக்குத் தந்த அபூர்வ ராகங்கள வெளியானது கூட 1975 ஆகஸ்ட் 18-ம் தேதிதான்.

அதனால் தேதியில் என்ன இருக்கு... படத்தின் சேதியில்தான் விஷயமிருக்கு. அப்படியே சேதி நன்றாக இருந்தாலும், அதைச் சுற்றி எழுப்பப்படும் சதி வலைகளைத் தாண்டி படம் ஓடும்போதுதான் வெற்றி உறுதியாகிறது.

குசேலனைச் சுற்றி கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒருவரல்ல... இருவரல்ல... ஓராயிரம் எதிரிகள்.

படம் பற்றி வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட புரளிகள், ரஜினி என்ற மாபெரும் நடிகரின் இமேஜைக் குலைக்க அசுர பலத்துடன் களமிறங்கிய மீடியாக்கள்... கிடைத்த இடைவெளியில் தங்கள் வக்கிரம் தீர்த்துக்கொண்ட அஞ்ஞானிகள், பார் மேதாவிகள், அந்துமணிகள், சதிவிகடன்கள், பொய்யையே பிழைப்பாய் கொண்ட மாறன் டிவிக்கள்...

- இவர்களையெல்லாம் தாண்டித்தான் இன்றைக்கு ஒரு படம் ஜெயித்தாக வேண்டும்.
இந்த தீய சக்திகளுக்கு எதிராகப் போராட மிகப் பெரிய சக்தியை ரஜினி போன்ற நல்ல மனிதர்களுக்கு இறைவன் அருளட்டும்!

Rajini's Next!


Once again media switched on their hyphening engine to create publicity to the yet to be finalised project of Super Star Rajini. Here is another report on his so called ‘quickie’ before the release of Robot.

Report published in www.oneindia.in on 27th Aug. 2008:

As oneindia.in reported earlier, the superstar will do a quickie again before the release of Sultan – the Warrior and Shankar's Robot to prove himself as the emperor of Box Office again.

According to sources close to Rajinikanth, the superstar is now in a discussion about his next flick and its director.
After Kuselan's debacle in its homeland, the actor is very much disappointed and has also assured his distributors and exhibitors about his compensation plan through a quick release.

According to the present plans, A.R. Murugadoss, the director of Gajini and S.J.Suryah are in the race to direct the superstar. As already said, the film may be a joint venture of big producers Panchu Arunachalam and Rm.Veerappan of Sathya Movies.

Because of this sudden plan, it is said that the shooting of Shankar directed Robot will be postponed for a while. Soundarya's Sultan - the Warrior also will be released in the mid 2009.

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் ரஜினி! - மோகன்லால்


மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால் சமீபத்தில் கொச்சியில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது.

சற்றே யோசித்துப் பார்த்தால் ஒரு ரஜினி ரசிகரின் மனநிலையை அவர் பிரதிபலித்திருப்பது புரியும்.

பேட்டி விவரம்:

ரஜினிகாந்த் போன்ற சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கெஸ்ட் ரோல் என்பது சரிப்பட்டு வராது. அதை அவர்களது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள், சாதாரண நடிகர்கள் என்ற அந்தஸ்தை தாண்டியவர்கள். அவர்களை ஓரிரு காட்சிகளில் மட்டும் பார்ப்பதை அவர்களது ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள்.

என்னைப் போன்ற நடிகர்களுக்கு எந்த ரோலும் ஒரு பொருட்டே அல்ல. நான் திடீரென்று கெஸ்ட் ரோல் பண்ணுவேன், நாயகனாகவும் வருவேன். இரண்டு மூன்று கதாநாயகன்களில் ஒருவராககக்கூட வந்து போவேன். மம்முட்டியும் கூட அப்படித்தான். கத பறயும்போல் வெற்றி பெற அதுவும் ஒரு காரணம். இதெல்லாம் கேரளாவில் சகஜம்.

ஆனால், ரஜினி அப்படி நடிப்பதை கேரள மக்கள் கூட விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு ரஜினியை முழுமையாக ரசிக்க வேண்டும். மூன்று மணிநேரமும் ரஜினி இருக்க வேண்டும், என்றார் மோகன்லால்.

நன்றி: மலையாள மனோரமா

Wednesday, August 27, 2008

தலைவா... !


ரோபோவுக்கு முன் அதிரடியாக தனது ஸ்டைல் படம் ஒன்றை மீண்டும் தரவிருக்கிறார் ரஜினி – இதுதான் செய்தி.

உற்சாகத்தில் தொண்டை நரம்பு வெடிக்குமளவுக்கு குரல் எழுப்புகிறார்கள் ஒவ்வொரு ரஜினி ரசிகரும், தகவல் கேள்விப்பட்டு.

இத்தனைக்கும் இது ஒரு உறுதி செய்யப்பட்ட தகவல் கூட இல்லை. செவிவழிச் செய்திகள்தான்.

ஓரிரு இணைய தளங்களும், சில நாளிதழ்களும் இச்செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால் இன்னும் ரஜினியிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இப்படத்தின் தயாரிப்பாளர்கள் எனக் கூறப்படும் பஞ்சு அருணாச்சலம், ஆர்எம்வீயிடம் கேட்டால் அத்தமான சிரிப்பும் மௌனமும்தான் பதிலாகக் கிடைக்கிறது.

எப்படியோ நல்ல படமான குசேலனை இந்த நன்றி கெட்ட உலகம்படுத்திய பாட்டைக் கண்டும், ரசிகர்களைப் போல தளர்ந்துவிடாமல் உறுதியாக நின்று பிரச்சினையை ரஜினி கையாண்ட விதம், எதற்கும் உதவாத விதண்டாவாதிகள், பொறாமைக்காரர்கள் நிறைந்த நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவுன்சில், பிலிம் சேம்பர் போன்றவர்களின் துணையை நாடாமல் தன்னந் தனியாகவே அவர் இந்த விவகாரத்தை சமாளித்த பாங்கு... இவைதான் ஒரு நல்ல தலைவனுக்குண்டான இலக்கணங்கள் என அவரது நலம் விரும்பிகளை நெஞ்சு நிமிர வைத்துள்ளது.
தட்ஸ்தமிழில் வந்த இந்த நல்ல செய்தி நிஜமாகட்டும்:

ரஜினியின் ஆக்ஷன்-காமெடி!

இப்போதைக்கு சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு இதைவிட சந்தோஷமான செய்தி எதுவும் இருக்க முடியாது. சில தினங்களுக்கு முன் தட்ஸ்தமிழ் வெளியிட்ட செய்தி விரைவில் உண்மையாகப் போகிறது.

ரோபோவுக்கு முன்பே மீண்டும் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். அதுவும் முழு நீள ஆக்ஷன்- காமெடி சரவெடியில் கலக்கப் போகிறார்.

குசேலன் படம் பல விதங்களில் ரஜினிக்கு மன உளைச்சலையும் அவரது ரசிகர்களுக்கு சங்கடத்தையும் தோற்றுவித்துவிட்டது.

இதைச் சரிகட்டும் விதத்திலும், தனது பாக்ஸ் ஆபீஸ் பலத்தை இன்னொரு முறை நிரூபித்துக் காட்டவும் இந்த அதிரடிப் படத்தை தர முடிவு செய்துள்ளாராம் ரஜினி.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் முருகதாஸ் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் எதையும் உறுதி செய்யவில்லையாம் ரஜினி.

எஸ்.ஜே.சூர்யாவும்கூட ரஜினிக்கு ஒரு அதிரடி ஆக்ஷன் கதை சொல்லியிருக்கிறார். ரவிக்குமார் இப்போதைக்கு ஜக்குபாய் படத்தை சரத்குமாரை வைத்து எடுப்பதால், அவரும் ரஜினியை இயக்க முடியாத நிலை. எனவே தனது நண்பர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம் ரஜினி.

படத்தை பஞ்சு அருணாச்சலம்-சத்யா மூவீஸ் ஆர்எம் வீரப்பன் இணைந்து தயாரிக்கப் போவது மட்டும் நிச்சயமாகிவிட்டது.

தள்ளிப் போகும் ரோபோ:

இதற்கிடையே ரோபோ படம் சில தொழில்நுட்ப விஷயங்களுக்காக சில தினங்கள் தள்ளிப் போடப்பட்டுள்ளதாம். பிரேசில் நாட்டில் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு நடத்தப்படும் என்கிறார்கள்.

சௌந்தர்யா இயக்கிவரும் சுல்தான் தி வாரியர் வெளியாவதற்கு முன்பே இந்த புதிய படத்தை வெளியிடப் போகிறார்கள்.
நன்றி: தட்ஸ்தமிழ்

Monday, August 25, 2008

ரஜினி என்ற நல்ல ஆத்மா... மோகன்பாபு!


ரஜினிகாந்த் என் மிகச் சிறந்த நண்பன். என் வாழ்வில் மறக்க முடியாத மனிதன்... என்கிறார் நடிகர் மோகன்பாபு.

மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘என்னைத் தெரியுமா?’ இந்தப் படத்தை மோகன்பாபுவின் லட்சுமி பிரசன்னா மூவீஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

மனோஜை நாயகனாக அறிமுகப்படுத்தும் விழாவும், படத்தின் ஆடியோ வெளியீடும் நேற்று பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடந்தது.

அறிமுக நிகழ்ச்சிக்குப் பின்னர் மோகன்பாபு இப்படிப் பேசினார்:

தமிழ்நாட்டை நான் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு தாய்ப்பால் கொடுத்தது இந்த மண்தான். கலைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த பேதமும் இல்லை எனப் புரிய வைத்தவர்கள் தமிழ் மக்கள்தான். இந்த உணர்வு எல்லாருக்கும் இருந்தால் நம் சினிமா உலகம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

ஒரு தாயின் பல குழந்தைகள் மாதிரிதான் தென்னிந்திய சினிமா. தமிழ்தான் நமக்கெல்லாம் தாய். இதுல எந்த மாற்றமும் இல்லே.

இதே சென்னையில்தான் நான் படித்தேன். சென்னையின் பிளாட்பாரங்களில்தான் நானும் ரஜினியும் ஒன்றாக அலைந்திருக்கிறோம், வாய்ப்புகளுக்காக. என் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததும் இங்குதான்.

முன்பின் தெரியாத ஒரு நபர் ஐதராபாத்தில் ஒரு நயா பைசா கடனாகப் பெற முடியாது. அதுவும் சினிமாக்காரனுக்கு ஒருத்தரும் உதவ மாட்டார்கள். ஆனால் இந்த தமிழ்நாட்டில், நானும் ரஜினியும் வாய்ப்புக்காக அலைந்த நாட்களில் எத்தனையோ முறை எங்களுக்கு பணமும் உணவுப் பொருளும் கொடுத்து உதவியவர்கள் தமிழ் மக்கள். ஒரு சின்ன கார் ஷெட்டில், மழை ஒழுகும் கூரையில் ஒடுங்கி உட்கார்ந்துகொண்டு இருவரும் பல ராத்திரிகளைக் கழிச்சிருக்கோம்.

என் மகனை அறிமுகம் செய்வதற்காக இதை இங்கே பேசுவதாக நினைக்காதீர்கள். ஆந்திராவிலும் இதையேதான் சொன்னேன்.

தமிழர்கள் கிட்ட கத்துக்கங்க!

போங்கடா... போய் தமிழ் மக்கள் கிட்ட நல்ல பண்பு, உதவும் குணம், ரசனைன்னா என்னன்னு கத்துக்கங்கடா... நீங்களும் பெரிய அளவுக்கு வருவீங்கன்னு எத்தனையோ சினிமா விழாக்களில், பொது மேடைகளில் பேசினவன்தான் நான். என்னை அதற்காக யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஏன்னா நான் உண்மை பேசறேன்.

வாழ்க்கை ஒரு தேவாலயம் அல்ல... அது போர்க்களம்னு நான் அடிக்கடி சொல்லுவேன். அதைத்தான் ரஜினி தன் படத்துல டயலாக்கா வச்சான். இப்படி அடிக்கடி என் டயலாக்கை எடுத்து வச்சிடுவான் அவன். அது பெரிய ஹிட்டாயிடும். நான் சும்மா தமாசுக்கு சொல்றேன். ரஜினி என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சிறந்த நண்பன். மிகச் சிறந்த ஆத்மா. அவனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

வேண்டாம் அரசியல்!

நடிகனா இருந்தேன், அரசியலுக்கு வந்தேன். இப்போ அரசியல் ஒரு சாக்கடை எனத் தெரிந்துவிட்டது. அதனால் நல்ல கல்வியை நாட்டுக்குத் தரும் வேலையில் நிம்மதியா இறங்கியிருக்கேன் என்றார் மோகன் பாபு.

ரஜினி மனசு... பாக்யராஜ் உருக்கம்!


"நல்ல நேரத்துல கெட்ட நேரம் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். நம்ம ரஜினி சாருக்கு அப்படியொரு நேரம் இது.

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் ரஜினிக்கு வைக்கப்பட்ட கட் அவுட் குறித்து செய்திகள், படங்களைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவர் புகழ் ஜப்பான், ஹாங்காங் தாண்டி அமெரிக்கா, கனடான்னு போயிடுச்சேன்னு சந்தோசப்பட்டேன்.

ஆனால் அடுத்த இரு வாரங்கள்ல அதே ரஜினி சாரைப் பத்தி என்னென்னமோ எழுதறாங்க. குசேலன் அப்பிடி இப்பிடின்னு பேசறாங்க. பத்து நாளா எந்தப் பேப்பரப் பாத்தாலும் இதே நியூஸ்தான்.

எனக்கே மனசு கஷ்டமா போச்சு. எவ்வளவோ பேருக்கு எத்தனையோ உதவிகளை கணக்கு வழக்கில்லாம செஞ்சவர் ரஜினி. சினிமா நல்லாருக்கணும், சினிமால இருக்கிற எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். இந்த குசேலன் படத்துல வேலை பார்த்த அஸிஸ்டன்ட் டைரக்டர்கள் ஒவ்வொருத்தருக்கும் ரூ.1 லட்சம் ரூபாய் வரை உதவி செஞ்சவர். இதைத்தவிர படத்தோட எல்லா டெக்னீஷியன்களுக்கும் ரூ.40 லட்சம் உதவி செஞ்சார். இந்த மாதிரி நல்லவங்களை உற்சாகப்படுத்தினா அவங்களும் நல்லாருப்பாங்க, அடுத்தவங்களும் நல்லாருப்பாங்க...

எனக்கே இப்படின்னா, அவர் மனசு எப்படியெல்லாம் சங்கடப்பட்டிருக்கும். அத நினைச்சுப் பார்த்தேன், உலகத்தோடு இயல்பு இதான்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனா எனக்கு முன்னமே அவர் புரிஞ்சிக்கிட்டிருப்பார்...”

-ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவரான இயக்குநர் திலகம் பாக்யராஜ் பேசியதைத்தான் இங்கே படிக்கிறீர்கள்.

தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் புத்திசாலிகள் நம்மாளுங்க... வேறு எப்படி இருப்பாங்க..!

தியேட்டர்களில் பார்கள் – உதைக்க வேண்டாமா இவர்களை?

மக்கள் வாழ்க்கையில் திரைப்பட அரங்குகள் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன.

என்னதான் அறிவுஜீவிகள் வாய்கிழியப் பேசினாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை சினிமா என்பது முதல்வர்களை உருவாக்கும் இடமாகத்தான் இப்போதும் பார்க்கப்படுகிறது.

இன்றும் மக்களுக்கு குடும்பத்துடன் போய்வர ஒரு எளிய சிற்றுலா மையம் திரைப்பட அரங்குகள்தான்.

ஆனால் இத்தகைய அரங்குகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?

எக்கச்சக்கமாக கட்டணம் வசூலித்தாலும் எந்த அடிப்படை வசதியும்- ஒரு சில திரையரங்குகளைத் தவிர- மற்றவற்றில் கிடையாது.
மோசமான இருக்கைகள், சுத்தமில்லாத கழிவரைகள், மூன்று நான்கு மடங்கு அதிக விலையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்... அடுக்கிக் கொண்டே போகலாம் இத் திரையரங்குகளின் லட்சணத்தை. சென்னை கூட இதற்கு விதிவிலக்கல்ல (சத்யம், ஐநாக்ஸ் என சில வளாகங்கள் தவிர).

குடும்பத்தோடு படத்துக்குப் போகும் ஒருவர் தியேட்டர்காரர்களோடு சண்டை போடாமல் வீடு திரும்பவதே அதிசயம்தான்.

இந்த லட்சணத்தில் அரங்குகளில், பார் வசதி செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.


இக்கோரிக்கையை தீர்மானமாகவே நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளனர் திரையரங்க உரிமாயாளர்கள் சங்கத்தினர்.

இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளிலேயே பார்களைத் திறப்பது!!

வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நமக்குத் தெரிந்து பார் தியோட்டர்கள் வெளிநாட்டில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், ஏற்கெனவே குற்றங்களும், அத்துமீறல்களும் மலிந்துவிட்ட தமிழக திரையரங்குகளுக்குப் பொருந்துமா...

பணத்துக்காக இப்போது பார் கேட்பவர்கள், நாளை வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சிவப்பு விளக்கு கார்னர் ஒன்றை ஏற்படுத்தவும் கோரிக்கை வைப்பார்களோ? (இன்னும் பணத்தை அள்ளலாமே!)

ஒகேனக்கல் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினி கேட்டாரே ஒரு கேள்வி: ...உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!, என்று.

நியாயமாக அது இந்த பேராசைக்கார, நேர்மையற்ற வணிகப் பிரதிநிதிகளான தியேட்டர்காரர்களுக்குத்தான் பொருந்தும்!!

Sunday, August 24, 2008

காழ்ப்புணர்வன்றி வேறில்லை!


ரஜினி மீது மீண்டும் விஷம் கக்கியிருக்கிறது சன் டிவி, குசேலனுக்கு விமர்சனம் எனும் பெயரில்.

குசேலன் நல்ல கதையாம்... அருமையான நடிப்பாம். ஆனால் ரஜினிகாந்த் பகுதி மிகவும் செயற்கையாம். லாஜிக் இல்லாத மேஜிக் நடத்திக் காட்ட முயன்று தோற்றுப் போய் விட்டார்களாம்.

படம் வெளியாகி 25 நாட்கள் கழித்து சன் டிவி கண்டுபிடித்திருக்கும் மாபெரும் உண்மை இது. ஆனால் இதே விமர்சனத்தை சாக்காக வைத்து திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டி பல லட்சம் ரூபாயை விளம்பர வருவாயாக கல்லா கட்டினார்களே (25 விளம்பரங்கள். சன் டிவியில் ஒரு விளம்பரத்துக்கான கட்டணம் ரூ.2 லட்சத்துக்கும் மேல் - 10 நொடிகளுக்கு!) அப்போதி தெரியவில்லையா இந்த லாஜிக் இல்லா மேஜிக்.

இவர்கள் என்ன நோக்கில் அரை மணி நேர நிகழ்ச்சியில் திரும்பத் திரும்ப ரஜினியைக் காட்டினார்களோ... அதே லாஜிக்கில்தானே வாசுவும் இந்தப் படத்தை எடுத்திருப்பார்?

இந்த மாதிரி மூன்றாம் தர விமர்சனம் பார்த்த பிறகுதான், மக்கள் அந்தப் படத்தைப் பார்ப்பார்கள் என்ற நிலைமை ரஜினியின் எந்தப் படத்துக்கும் இல்லைதான்.

ஆனால் குசேலன் விஷயத்தில் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டு கடும் விஷத்தைக் கக்கி வருகிறது சன் நெட்வொர்க்.
ரஜினியின் விறுவிறு ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே விரும்பும் ரசிகர்களுக்கு குசேலன் திரைப்படம் ஏமாற்றமாக இருந்தாலும், அது ஒரு நல்ல படம் என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது.

துப்பாக்கி குண்டு எதேச்சையாகப் பாய்ந்ததில் தொண்டையிலிருந்த கேன்சர் நீங்கிவிட்டது என்றும், 12-ம் நூற்றாண்டில் கடலில் போடப்பட்ட ரங்கநாதர் சிலை 10 நூற்றாண்டுகள் கழித்து ரங்கராஜன் நம்பிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்க சுனாமியை உருவாக்கியது எனும் கேயாஸ் தியரி பகுத்தறிவையும் (பெரியார் இருந்திருந்தால் தாடியாலேயே தூக்கு மாட்டிக் கொண்டிருந்திருப்பார்.... என்னே பகுத்தறிவு!) சிலாகிக்கும் இந்த மோசடிக் கும்பலுக்கு, வாழ்வின் வலிகளையும், நட்பின் உன்னதத்தையும் சொல்லும் குசேலன் லாஜிக் இல்லாத படமாகத்தான் தெரியும்.

கலைஞர் டிவி ரூ.7 கோடிக்கும் மேல் கொடுத்து வாங்கிவிட்ட குசேலனை இன்னும் எந்தெந்த வழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளிலும் தாக்கவே செய்யும் இந்த நச்சுக் கும்பல்.
என்ன கொடுமையென்றால்... இந்த நச்சுப் பிரச்சாரத்துக்கு அடிமையாகி ரஜினி ரசிகர்கள் சிலரும், குசேலனை நினைத்து வெறுத்துப்போய் உட்கார்ந்திருப்பதுதான்.

முன்பெல்லாம் மொத்த மீடியாவும் தங்கள் தனிப்பட்ட வெறுப்பை விட்டுவிட்டு வியாபாரத்துக்காக ரஜினி படங்களைக் கொண்டாடுவார்கள். ஞானி மாதிரி சிலர் கூனி வோலை செய்வார்கள். அதனால் அது பெரிதாகத் தெரியவில்லை. துரதிருஷ்டவசமாக இன்று பெரும்பாலும் மீடியாவை கூனிகளே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

ரஜினி நல்ல படம்தான் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்றைய மோசமான நச்சுத்தனம் மிக்க மீடியா உலகில், அவர்களுக்குரிய 'பங்கு' சரியாகப் போய் சேராததன் விளைவுதான் இந்த விமர்சனத் தாக்குதல்கள்.

மாநிலத்துக்கு மாநிலம் நாராயண கவுடாக்களும், வட்டாள் நாகராஜாக்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் வந்தாரை வாழ வைத்துக் கிழித்து விட்டோம் என்ற ஜம்பம் வேறே...‍!

இது தெரியுமா உங்களுக்கு...!


ஜாக் டிவி... ஜாக் டிவி என்று ஒரு லோக்கல் கேபிள் சேனல் ஓடிக்கொண்டிருக்கிறது வட தமிழ் மாவட்டங்களில்.

சென்னை தொடங்கி, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ரொம்பப் பிரபலம் இந்த சேனல்.

ராஜ் டிவிக்காரர்களையே மிரட்டி, கண்ணில் விரல்விட்டு ஆட்டிய (பல நாட்கள் தலைமறைவு வாழக்கை வாழ்ந்திருக்கிறார்கள் ராஜ் டிவிக்காரர்கள், இந்த தாதா சேனலின் அடக்குமுறைக்கு பயந்து!) அந்த ‘மீடியா பயங்கரவாதிகள்’, இந்த ஜேக் டிவியையும் விலை பேசினார்கள்.

ஜேக் ஜெயராமன் மசிவதாக இல்லை... இன்னும் ஜோராக பிரபல நடிகர்களை அழைத்து லைவ் ஷோ நடத்த ஆரம்பித்துவிட்டார் ஜேக் டிவியில்.

அடுத்த அஸ்திரத்தை ஏவினார்கள். இது ஆளையே காலி பண்ணும் அஸ்திரம்.
ரூ.12 கோடிக்கு அவர் நிலமோசடி செய்துவிட்டதாக தங்கள் நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.

இந்த நவீன வன்முறைக்கு பயந்து அவர் தலைமறைவாகத் திரிய வேண்டிய நிலை. இத்தனைக்கும் ஆளும் கட்சியின் முக்கியப் பிரமுகர் இந்த ஜெயராமன். ராணிப்பேட்டை காந்தியின் பார்ட்னர். வேறு வழியில்லாமல், ரூ.3.5 கோடி பணத்தை ரொக்கமாகக் கட்டி முன்ஜாமீன் எடுத்திருக்கிறார், இந்த மீடியா பயங்கரவாதிகளிடமிருந்து தப்பிக்க!

மக்கள் எப்போதும் போல் பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்!

இவர்கள் பகல் கொள்ளைக்காரர்கள்!


திரைத்துறையில் ஒரு படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம்:

‘சினிமாவில் தில்லுமுல்லுகள் ஆரம்பமாகும் இடமே திரையரங்குகள்தான்!’

சினிமாவில் எல்லாருக்குமே பேராசை உண்டுதான். ஆனால் அதுவே பெருவியாதியாய் பீடித்திருப்பது திரையரங்க உரிமையாளர்கள் எனும் பிரிவினரை.

அதற்கு உதாரணம் அவர்கள் நேற்று எழுப்பிய கோரிக்கைகள். இவற்றில் ஏதாவது நியாயமுள்ளதா கூறுங்கள்:

ஒரு படத்துக்கு 10 லட்சம் கொடுத்தால், அது அடுத்த வாரமே லாபத்தோடு திரும்பக் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, இன்றைய திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும்.

யாரோ ஒரு சிலர் நியாயமாக நடக்க முயன்றாலும் அவர்களை சங்கம் என்ற பெயரில் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

முன்பே நான் குறிப்பிட்டது போல, 99 சதவிகிதம் தியேட்டர்காரர்கள் காட்டுவது பொய்க் கணக்குதான். இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

அதிலும் மாவட்ட அளவில் உள்ள திரையரங்குகள் வருவாய்த் துறை அலுவலர்களைக் கையில் போட்டுக் கொண்டு அடிக்கும் கொள்ளை அளவில்லாதது. சென்னை போல சின்னச் சின்ன திரையரங்குகள் அல்ல, இரண்டாம் கட்ட நகரங்களில் இருப்பவை. இவற்றில் பல, 1000இருக்கைகள் கொண்டவை. ரஜினியின் படங்களுக்கு, இவற்றில் கூடுதலாக 500 பேர்வரை போட்டு அடைத்து படம் காட்டுவார்கள். பணம் பார்ப்பார்கள்.

டிக்கெட் விலையும் தாறுமாறாக இருக்கும். எல்லா கவுன்டர்களிலும் 100 ரூபாய் டிக்கெட் கொடுத்துவிட்டு, ரூ. 3.50 அல்லது ரூ.10 என டிக்கெட் விலையைக் கணக்குக் காட்டுவது இன்றும் அமோகமாக நடக்கிறது. இது அரசுக்குத் தெரியாதா அல்லது படம் பார்த்த ரசிகர்களுக்குத் தெரியாதா...

இதைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாவட்ட வருவாய் அதிகாரிகள், கலெக்டர் அலுவக பிஆர்ஓக்கள் (இவர்கள்தான் தியேட்டர் விசிட் அடிப்பார்கள்) அனைவருக்கும் படம் ஒடி முடிந்ததும் கரெக்டாக மாமூல் போய்ச் சேர்ந்துவிடும்.

தியேட்டர் அளவில் இவர்கள் அடித்த கொள்ளை போக, மீதமிருப்பதுதான் விநியோகஸ்தர்களுக்கு கணக்குக் காட்டப்படும். அதிலும் இம்மாதிரி எம்ஜி முறையில் வாங்கிய படங்களுக்கு, சூப்பர் ஹிட் என்ற லேபிளை பத்திரிகைகளும், மக்களும் குத்தினால்தான் தியேட்டர்காரர்கள் அமைதி காப்பார்கள். இல்லாவிட்டால் இப்போது போடுவது போலவே அநியாய ஆட்டம் போடுவார்கள்.

எல்லாவற்றுக்கும் இருக்கவே இருக்கிறார் ரஜினி... நீங்க ரொம்ப நல்லவர்... மனித நேயம் உள்ளவர் என்று சொல்லி போவோர் வருவோர் எல்லாம் அவரை சுரண்டப் பார்க்கிறார்கள்.
குசேலன் 80 சதவிகித நஷ்டம் எனக் கணக்கு கூறுவதை நிச்சயம் ரஜினியின் எதிரிகள் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அதிலும் இந்த அளவு அதிக தொகையைக் கேட்பதற்கு தியேட்டர்காரர்கள் சொல்லும் காரணம் இருக்கிறதே அது படு கேவலமானது. இந்த மாதிரி ஒரு ஈனப்பிழைப்பை யாரும் செய்ய மாட்டார்கள்.

இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்த காரணம் இருக்கிறது.
குசேலனுக்கு நஷ்ட ஈடு கேட்பதில்லை என விநியோகஸ்தர்கள் முடிவு செய்துவிட்டனர். அதை ரஜினியிடமும் கூறிவிட்டனர். ஆனால் இந்த தியேட்டர்காரர்களோ, அவர்களின் பங்கையும் சேர்த்து எங்களுக்கே கொடுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெட்கமே இல்லாமல் இதைத் தெரிவித்துள்ளனர்.

24.08.08 தினத்தந்தி செய்தியின் ஒரு பகுதி...

....குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து பேசினோம். எங்களுடன் ரஜினிகாந்த் மனிதாபிமானத்துடன் பேசினார். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. எங்கள் பிரச்சினைகளை சுமார் 45 நிமிடங்கள் கேட்டறிந்தார்.

தியேட்டர் அதிபர்களுக்கு 35 சதவீத நஷ்டஈடு தருவதாக உறுதி அளித்து, பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் இதுபற்றி எங்கள் பொதுக்குழுவில் கலந்துபேசி முடிவை சொல்வதாக தெரிவித்தோம்.
70 சதவீதம் வேண்டும்!

இந்தத் தொகை குறைவாக இருப்பதாக எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தார்கள். 35 சதவீத நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்கக் கூடாது என்றும், கூடுதல் நஷ்ட ஈடு தொகை வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, 70 சதவீத நஷ்ட ஈடு தொகை கேட்பது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். 70 சதவீதம் என்பது எவ்வளவு தொகை? என்பதையும் கணக்கிட்டு வருகிறோம்.

விநியோகஸ்தர்கள் பங்கையும் கொடுங்கள்!

குசேலன் படத்தின் வினியோகஸ்தர்களுக்கு 35 சதவீத நஷ்ட ஈடு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். வினியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்க மாட்டோம் என்று கூறிவிட்ட காரணத்தால், வினியோகஸ்தர்களுக்கு தரப்பட இருந்த நஷ்ட ஈட்டுத் தொகையையும் சேர்த்து எங்களுக்கே தரப்பட வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கையை ரஜினிகாந்த் மனிதாபிமானத்துடன்(!!) ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு உரிமை உள்ளது!

குசேலன் படத்துக்கு நஷ்ட ஈடு கேட்க எங்களுக்கு தார்மீக உரிமை இருக்கிறது. மலையாள படத்தில், மம்முட்டி 20 நிமிடங்கள்தான் வந்தார். அதை அப்படியே படமாக்குவதாக எங்களிடம் கூறவில்லை. ரஜினிக்காக, கதையை மாற்றி படமாக்குவதாக டைரக்டர் பி.வாசு கூறினார். ரஜினியின் குசேலன் என்றுதான் விளம்பரமும் செய்யப்பட்டது. எனவேதான் நாங்கள் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கிறோம், என்று கூறினார் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர் செல்வம்.


பிரஸ் மீட் முடிந்ததும் இதை அவர்களுக்கேற்ற விதத்தில் செய்தியாகப்
போட நிருபர்களுக்கு வெயிட்டான கவனிப்பு வேறு!)

பகல் கொள்ளை


கடவுளே... தார்மீக உரிமை, மனிதாபிமானம் பற்றியெல்லாம் யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.
சம்பந்தமே இல்லாவிட்டாலும், தானாக முன்வந்து பணம் (நிச்சயம் நஷ்ட ஈடு அல்ல. குசேலன் நஷ்டமும் அல்ல. இது எரிகிற வீட்டில் பிடுங்கும் தியேட்டர்காரர்களின் பகல் கொள்ளை உத்தி) கொடுக்க ஒப்புக் கொண்டுள்ள ரஜினியை மேலும் மேலும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொள்ளைக் கும்பல் மனிதாபிமானம் பற்றிப் பாடம் எடுக்கிறது.
நேரம்தான்!

குறிப்பு: தியேட்டர்காரர்கள் இந்த அளவு கொடூரமாக நடந்து கொள்வதன் பின்னணியில் ஒரு பிரபல நிறுவனமும் முக்கியப் புள்ளிகள் சிலரும் உள்ளனர். சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதைப் பதிவு செய்யும் திட்டமுள்ளது!

இது ‘விகட’ துவேஷம்!


பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!

வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.

எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.

ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.

அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.

அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.

ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.

அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!

அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.

அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.

நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.

அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)

சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.

வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!

Saturday, August 23, 2008

குசேலனுக்கு எதிராக ஒரு விஷ (சன்) நெட்வொர்க்!


கோயபல்ஸை நம்மில் யாரும் பார்த்ததில்லை... சன் - தினகரன் குழுமத்தினர் பெரிய மனது பண்ணி அந்த விஷ மனிதனின் வாரிசுகளாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தினகரன் குழும இதழ்கள் சன் நெட்வொர்க்குக்கு கை மாறியபோது ஒரு வாரப் பத்திரிகை இப்படி எழுதியிருந்தது.

“ஏற்கெனவே சாராயத்தைக் குடித்த குரங்கை ஒரு குளவியும கொட்டிவிட்டால் எப்படியிருக்கும்.... அப்படி ஒரு ஆட்டத்தை இனி இந்த குழுமம் தமிழகத்தில் நிகழ்த்துவதைப் பார்க்கலாம். சக பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த பத்திரிகை உலகத்துக்குமே ஒரு அபாய மணியாகத்தான் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது...”

கிட்டத்தட்ட அதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி வருகிறார்கள் சன் குழுமத்தினர். கோயபல்ஸ் பிரச்சாரம் என்ற வார்த்தை திமுக முகாம்களில் அடிக்கடி பிரயோகிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த ஒரிஜினல் கோயபல்ஸ் வாழ்ந்தது ஹிட்லர் காலத்தில். இந்த தலைமுறை அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளது சன் நெட்வொர்க்.

ஒரே பொய்யை தன்னிடம் உள்ள அத்தனை வித மீடியா மூலமாகவும் உண்மை போலவே ஜோடனை செய்து வெளிப்படுத்தும் இவர்களது டெக்னிக்கைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அந்த ஒரிஜினல் கோயபல்ஸே வெட்கித் தலைகுனிந்திருப்பார்.

அறவழிப் போராட்டமாவது செய்யுங்கள்!

இனி ரஜினி படங்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கிடைக்காது என்ற உண்மை ஒருபக்கம், கலைஞருக்குப் பிந்தைய வெற்றிடம் ரஜினிக்காக என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்... இப்படி அவர்களின் நடவடிக்கைகளுக்கு சுயநல காரணங்கள் நிறைய.
எனவே இவர்கள் செய்தியைப் பார்த்து நண்பர்கள் மனக் கவலையடைவதை விட, அறவழிப் போராட்டம் எதையாவது உடனே செய்யலாம்.

குசேலன் விவகாரம் நிஜமாகவே தீர்ந்து விட்டாலும் கூட, இவர்கள் வேண்டுமென்றே அதைக் கிளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.

முதல் நாள் 40 கோடி நஷ்டம் என்று தியேட்டர்காரர்கள் சொன்னதாகப் போட்டார்கள். இப்போது 40 கோடி, 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டால், குசேலன், குபேரனாகிவிடும்! நஷ்டப் பழி போயே போய்விடும்!!

ஊரெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பிதற்றும் பத்திரிகைகள் தங்களுக்குள்ளேயே பெரும் பயங்கரவாதியாய், சமூகத்தை அரிக்கும் கிருமியாய் உருவெடுத்து வரும் இந்த மோசமான பத்திரிகை பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள்?
குறைந்தபட்சம் எதிர்த்து, கண்டித்து ஒரு எடிட்டோரியல் எழுதும் தைரியமாவது இவர்களுக்கு உள்ளதா...(சோ விதிவிலக்கு)?

காலை விடிந்ததிலிருந்து இரவு முடியும் வரை ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள்,. ரஜினி பட காமெடி என்று கல்லா கட்டும் இவர்கள், அடுத்து தங்கள் செய்திகளில் அவதூறு பரப்பவும் அதே ரஜினி தலையைத்தான் உருட்டுகிறார்கள்.

பால் கொடுத்த தாயின் மார்பை அறுத்துப் பார்க்கும் ஈன புத்திக்காரர்களுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா...?

இவர்களுக்கு பாடம் புகட்ட, ரசிகர்களுக்கு உடனடித் தேவை நிறைய அழகிரிகள்!

ரஜினியிடமிருந்து ஒரு முடிவான ஆனால் பாஸிடிவ் பதில் வந்தால் போதும், அழகிரிகளுக்குக் கூட அவசியமிருக்காது!!

சிங்கம் சிங்கிளாகவே ஜெயிக்கும்!


ஆம்... கடவுள் நிறைய சோதித்துப் பார்த்து கடைசியில் கைவிடாமல் ரஜினி என்ற நல்லவரைக் காப்பாற்றியிருக்கிறார். (ஆனாலும் இது ஒரு தற்காலிக காப்பாற்றல்தான். இன்னும் நிறைய சோதனைகள் காத்திருக்கின்றன. அதற்கு முன் ரஜினி செய்ய வேண்டிய காரியங்களும் நிறைய உள்ளன. அடுத்து வரும் பதிவுகளில் அவற்றைப் பார்க்கலாம்.)

பேராசை பிடித்த திரையரங்கு உரிமையாளர்களின் நச்சரிப்பு மற்றும் மீடியாக்களின் பொய்ப் பிரச்சாரங்களை முழுமையாக நிறுத்த ரஜினியே முன் வந்து திரையரங்கு உரிமையாளர்களின் பிரிதிநிதிகளைச் சந்தித்து ஒரு சமரசத் தீர்வு கண்டிருக்கிறார்.

திரையுலகின் பவர்புல் அமைப்புகள் என்று பீற்றிக்கொள்ளும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் கவு்சில், பிலிம் காட்டும் பிலிம் சேம்பர்... போன்ற அமைப்புகளின் தயவில்லாமல் தனியாகச் சாதித்திருக்கிறார் ரஜினி இம்முறையும். இந்த முயற்சியில் ஆரம்பத் தடைகள் இருந்தாலும் நாளை காலைக்குள் பிரச்சிநை முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஆரம்பத்தில் வந்த செய்தி, அதன் பின்னர் ஏற்பட்ட திருப்பங்கள் ஆகியவற்றின் முழு வடிவத்தையும் அப்படியே தருகிறோம். அதற்கு முன் சில விஷயங்களில் ஒரு தெளிவு காண்பது நல்லது.

இனி விஜய், அஜீத், கமல் படங்களுக்கும் இதே சுறுசுறுப்பைக் காட்டுவார்களா தியேட்டர்காரர்கள்.... (மும்பை எக்ஸ்பிரசுக்கு என்ன கணக்கு?)

விஜயகாந்தின் 7 படங்கள் வரிசையாகத் தோல்விப் படங்களே... இந்த நஷ்டம் எப்படி ஈடுகட்டப்பட்டது என்ற பேருண்மையைச் சொல்வார்களா...

வெற்றிப் படங்களுக்கு பதில் வெற்றுப் படங்களை மட்டுமே தந்து கொண்டிருக்கும் சரத்குமாரின் படங்களை திரையிடும் போதும் இந்த நடைமுறை தொடருமா...

மேலே நாம் கூறிய அத்தனை நடிகர்களின் தோல்விப் பட நஷ்டங்களையும் ஈடு கட்டியவை ரஜினியின் படங்கள்தான். இன்று அவர் படத்துக்கே பொய்க் கணக்கு காட்டி நஷ்ட ஈடு கேட்டு மிரட்டிப் பார்க்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.

எல்லாம் நேரம்தான்...

இனி அந்த செய்தியின் ஒரு பகுதி- (From thatstamil.com)

குசேலன் விவகாரம் – சுமூகமாக முடித்து வைத்த ரஜினி!!

ஒரு வழியாக குசேலன் பட விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. குசேலன் படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று இந்த நஷ்ட விவகாரத்தில் சுமுகமான தீர்வு கண்டு, திரையரங்க உரிமையாளர்களையும் திருப்தியோடு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் சிலரது அதிருப்தி முணுமுணுப்புகள் ஓய்ந்தபாடில்லை...!

இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தரவேண்டும் எனக் கோரினர்.

இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்துள்ளார். அதை பன்னீர்செல்வம் தலைமையிலான திரையரங்கு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளும் ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தனர்.

இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாக திரையரங்க உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

தற்போது பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர். இதைத்தவிர பிரமிட் சாயம்மிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

ஒரு பிரிவினர் எதிர்ப்பு:

மேற்கண்ட செய்தி வெளியான சிலமணி நேரங்களில், மீண்டும் ஒரு கும்பல் பிரஸ் மீட் என்ற பெயரில் நடத்திய நாடகம் பற்றிய குறிப்பு இது.

ரஜினியின் சமரச முயற்சியை அவர் எதிரில் ஒப்புக் கொண்டுவிட்டு வெளியே வந்ததும் வழக்கம் போல நேர்மையற்ற முறையில் நடக்க ஆரம்பித்து விட்டனர் சில தியேட்டர்காரர்கள்.

இவர்களில் 25 பேர் மட்டும் சமரசத் தீர்வுக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர்.

தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் இந்த 75 சதவிகிதம் 80 ஆகிவிட்டது (சன் குழும கைங்கர்யம்?)

இப்படிப் பார்த்தால், ஒரு பைசா கூட வசூலாகவில்லை. மொத்த பணத்தையும் கொடுங்கள் என்கிறார்களா... அப்படியெனில் தியேட்டர்களில் முதல் வாரம் முழுக்க நாம் பார்த்தது ஆட்டு மந்தைக் கூட்டமா.. யாரும் காசு கொடுத்து டிக்கெட்டே வாங்கவில்லையா...

அடப் பாவிகளா... ரஜினி இந்த கொள்ளைக் கும்பலை அழைத்துப் பேசியதுதான் தவறு.

இந்த நிலை குறித்து கலைப்புலி சேகரன் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து, தான் ஒரு சிறந்த மனிதன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ரஜினி.

ஆனால் இதையும் ஒப்புக்கொள்ளாமல் பிரச்சினை செய்தால், மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் தரப்பில் ரஜினிக்கு ஆதரவு தொடரும் என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன் தெரிவித்துள்ளார்.

அட... பரவாயில்லையே!


திரைப் பிரமுகர்கள் அத்தனை பேருக்குமே மனசாட்சி செத்துவிட்டதா... ரஜினிக்கு எதிராக இத்தனை அநியாயங்கள் நடந்தும் அவரால் பயன் பெற்ற, கோடீஸ்வரர்களான, உதவிகள் பெற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வாய் மூடி ஊமைகளாய்க் கிடக்கின்றஎனவே எனப் பொருமிக் கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.

லைட் மேன்களின் பிரச்சினையில் ஒரு வாரமாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் ராம நாராயணன் அண்ட் கோவுக்கு, குசேலனுக்கு எதிரான அநியாயங்களைக் கண்டு கொள்ள நேரமில்லை.

நண்பர்கள் சொல்வதுபோல குஷ்புவுக்கு கொசு கடித்தால்கூட ஓடோடிப்போய் கலைஞரிடம் சொல்லி அதற்கு மருந்து போடும் புண்ணிய வேலையைச் செய்யும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் துணைச் செயலாளர் சத்யராஜூக்கும் இந்தப் பிரச்சினை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

என்ன செய்வது... இவர்கள் பெவிக்காலைப் பூசிக்கொண்டு உருண்டால்கூட ஒன்றும் ஒட்டமாடேங்கிறதே... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார். இவர்கள் அனைவரும் சும்மா ஸ்டார்கள். அந்த வயிற்றெரிச்சல் அவர்களுக்கு.

இனி சினிமாக்காரர்கள் எதற்காகவும் ரஜினியிடம் வரமாட்டார்களா... அவர்களுக்கு ரஜினியின் தேவை முடிந்துவிட்டதா... என்று எல்லோரும் ஒருவித கடுப்போடு இருந்த நேரத்தில், ஆதரவுக் குரல் கொடுத்துள்ளன, விநியோகஸ்தர்கள் சங்கங்கள்.

தமிழ் சினிமா விநியோகத்தைப் பொருத்தவரை இந்த நால்வர் வைத்ததுதான் சட்டம். அதனால் அவர்களின் குரலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது...
விநியோகஸ்தர்களுக்குத் தெரியும் ரஜினி படங்களில் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பது.

அதிலும் ரோபோவின் நாயகனல்லவா ரஜினி... அதனால் இப்போதே ஒரு பாதுகாப்புக்கு அறிக்கை விட்டு வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் உடுக்கை இழந்த நேரத்தில் நீண்டிருக்கும் உதவிக் கரங்கள் இவை. பாராட்டுவோம்.


இனி அறிக்கை விவரம்:

ரஜினியை மிரட்டுவதா? – விநியோகஸ்தர்கள் கண்டனம்

வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம். இதில் சம்பந்தப்பட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத்தை விட்டுவிட்டு, ரோபோவின் நாயகன், சூப்பர்ஸ்டார் ரஜினியை மிரட்டிப் பார்ப்பது கண்டனத்துக்குரியது என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகம், கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம், மதுரை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை குசேலன் படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

குசேலன் படப் பிரச்சினை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அறிக்கைகள், வியாபார அடிப்படை உரிமைகளை தகர்க்கும் வண்ணம் அமைவது கண்டு அதிர்ச்சி அடைகிறோம்.

காலம் காலமாக எத்தனையோ பெரிய படங்கள் எதிர்பாராத வீழ்ச்சி அடைவதும், சிறிய பெரிய படங்கள் மாபெரும் வெற்றி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஒரு படத்தின் வெற்றி-தோல்விகள் அவரவர் இட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அமைவதாகும்.

எதிர்பாராத லாபம் அடையும்போது மகிழ்வதும், வீழ்ச்சி அடையும்போது வருத்தம் அடைவதும் இயற்கையே.

குசேலன் படத்தை கவிதாலயம் தயாரிக்க, உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது. அவர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் சில பகுதிகளுக்கு உரிமை பெற்று திரையிட்டனர். பெரும் பகுதிகளை சாய்மீரா நிறுவனமே திரையிட்டது. அப்படி உரிமை பெற்றவர்களிடம் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த லாபம் பெறலாம் என்று பல வழிகளில் திரையிட்டுள்ளனர்.

கவுரவ வேடம்

இன்னும் ஒரு சில தியேட்டர் அதிபர்கள் மூன்றாவது நபர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்று விட்டனர். ஆரம்பம் முதல் தான் இதில் கவுரவ வேடம் ஏற்றுள்ளதாக ரஜினிகாந்த் கூறியது அனைவருக்கும் தெரியும்.

இது, ஒரு மலையாள படத்தின் மறுபதிப்பு என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த படத்துக்கு இந்த விலை மிக அதிகம் என்று தெரிந்து பல பேர் அமைதி காக்க, ஒரு சிலர் மட்டும் இந்த படத்தை லாபம் என்ற நோக்கை மட்டும் வைத்து போட்டா போட்டி நடத்தி வாங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இன்று இழப்பு என்றவுடன் போர்க்கொடி உயர்த்தி மிரட்டுவது ஏன்? பல படங்களில் அதிகப்படியாக லாபம் பெற்றபோது, அதன் வினியோகஸ்தருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ திருப்பிக் கொடுத்தது உண்டா?

படம் பெற்றது சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து. அதை விடுத்து ஒப்பந்தமிடாத கவிதாலயத்துக்கும், இதில் எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்?

ரோபோ படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்தை மிரட்டிப் பார்க்கவா?

லாபமும், நஷ்டமும் வியாபார ஒப்பந்தத்தின் வழி நடக்க வேண்டிய ஒன்று. தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரெயில் தடம்புரண்டு ஊருக்குள் பாய்ந்தால், அதன் முடிவு எப்படி இருக்கும்? வேண்டாம் முரண்பட்ட விவாதங்கள், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்ற பலம் வாய்ந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.

ஒரு சதி உருவாகிறது!!


இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் நம் உதடுகள் முணுமுணுக்கும் வார்த்தை... அட கேவலமே...!

செய்யும் தொழிலுக்கு இதைவிட ஒரு கேவலத்தை வேறு எந்தப் பத்திரிகையாலும் ஏற்படுத்த முடியாது.

இந்தப் புகைப்படம் தினகரனில் மட்டும் நேற்று வெளிவந்தது.

இந்தப் புகைப்படத்தில் போஸ் கொடுப்பவர்கள் ஆந்திராவிலிருந்து வந்த (வரவழைக்கப்பட்ட?) சில வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆந்திராவின் மேற்கு மாவட்டங்களில் குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடுவை வெளியிட்டவர்களாம். இப்போது நஷ்டமாகிவிட்டதாம். எனவே குசேலன் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால் ரஜினியை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதமிருப்பதாக அறிவித்திருக்கிறார்களாம்.

அட அதைக்கூட விடுங்கள்... ஏதோ சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிவிட்டார்கள்...

சென்னைக்கு இவர்கள் எதற்கு வந்தார்கள்...? குசேலன் உண்மை நிலையை விசாரித்துவிட்டுச் செல்ல. ஆனால் இங்குள்ள சிலரோ, சும்மா பார்த்துட்டுப் போனா எப்படிய்யா... போய் குசேலனுக்கு எதிரா உண்ணாவிரதம்னு போஸ் குடு... தானாவே மேட்டர் பெரிசாயிடும். போங்கய்யா, துணையா நாங்க இருக்கோம், என ஏத்திவிட, அவர்களும் அந்த விடுதியின் ஒரு அறையில் உட்கார்ந்து குசேலனுக்கு எதிராக போஸ் கொடுத்தனர்.

அப்போதுதான் அந்தப் பத்திரிகையின் புகைப்பாடக்காரர் ஒருவர், ரெட்டி சார், சும்மா உக்காராதீங்க. அந்த காதாநாயகுடு பேனரோடு உட்காருங்க எனச் சொல்ல அவர்கள் திகைத்திருக்கிறார்கள். திடீரென பேனருக்கு எங்கே போவார்கள்!

ஆனால் எல்லா பொய்களையும் அக்மார்க் உண்மை போலவே காட்டும் பவர்புல் மீடியாவை மொத்தமாக வைத்திருப்பவர்கள் ஆயிற்றே... இப்படி ஒரு பேனர் தயாரிப்பதா அவர்களுக்குக் கஷ்டம்!

இரு தினங்களுக்கு முன்பே பக்காவாக ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு பேனரை அவசர அவசரமாகக் கொண்டுபோய், அங்கிருந்தவர்களில் இருவரை ஆளுக்கொருபக்கம் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, வேண்டிய மட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இவர்கள் பத்திரிகையில் மட்டும் வருகிறது... இந்தச் செய்தியும் படமும்.

“குசேலனுக்கு எதிராக தெலுங்கு திரையரங்க உரிமையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!”
-எக்ஸ்க்ளூசிவாம்!

உண்மையாகவே உண்ணாவிரதமிருக்கப் போவதாகக் கூறினீர்களா என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டால், லேது லேது.... என்று மறுத்தவர்கள், இவர்களின் மீடியா பயங்கரவாதத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியது முதல், பத்திரிகைகளுக்கு வீராவேசமாய் பேட்டி கொடுத்தது வரை எதுவும் எங்கள் சொந்தக் கருத்தில்லை. இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தவர்கள் அந்த நம்பர் ஒன் நாளிதழ் நடத்துபவர்கள்தான், என்கின்றனர் ஆந்திரப் பார்ட்டிகள்.

தினகரனில் வெளியான இந்தப் படத்தின் நிஜப் பின்னணியும், குசேலன் ரிலீசிலிருந்து இன்று வரை, இந்த குறிப்பிட்ட நாளிதழில் மட்டும் ரஜினிக்கு எதிராக வெளியாகும் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் நிஜமான பின்னணி யார் என்பது புரிகிறதா...

அண்ணாமலையில் ரஜினி இப்படிச் சொல்வார்:

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஏன்யா இந்த புனிதமான அரசியலைக் (பத்திரிகைத் தொழிலை) கெடுக்கறீங்க...,
என்பார்.
எத்தனை சத்தியமான வார்த்தைகள்! இந்த சதிப் பேர்வழிகளுக்காகவே எழுதப்பட்ட மாதிரியல்லவா இருக்கின்றன!

இதே தினகரன் வளர்ந்த விதத்தை நினைத்துப் பாருங்கள்...

திமுக துணையின்றி, மதிமுக ஆதரவுமின்றி தவித்த 90களின் மத்தியில், ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் இந்தப் பத்திரிகையை உயிரோடு வைத்திருக்க பெரிதும் உதவியது.

எங்கோ ஒரு குக்கிராமத்தலிருக்கும் ரஜினி ரசிகன் ஒரு சின்ன தகவல் சொன்னால்கூடப் போதும், தினகரனில் கட்டம் கட்டிப் போடுவார்கள்.

அந்த தினகரன் செய்திருக்கும் வேலையா இது!

அட கேவலமே...!

இத்தோடு ஓயுமா... இன்னும் தொடருமா?


குசேலன் தொடர்பாக இன்னுமொரு செய்தி போட வேண்டாம் என நினைத்தாலும், நடக்கிற அநியாயங்களைப் பார்க்கிறபோது, அதற்கான எதிர்ப்பைப் பதிவு செய்வது நமது கடமை.

குசேலனை தோல்விப் படம்... நஷ்டம் கொடுத்த படம் என்று முத்திரை குத்தி வெளியேற்றவே திரையரங்கு உரிமையாளர்கள் பெரிதும் விரும்புவது நன்கு தெரிகிறது.

ரஜினி என்ற தங்கச் சுரங்கத்திலிருந்து ஒவ்வொன்றாக வந்து விழும் பொன் மூட்டைகளுக்காக காத்திருக்கக் கூட இனி இவர்களுக்குப் பொறுமையில்லை போலும். மொத்தமாக அந்த தங்கச் சுரங்கத்தையே கொள்ளையடித்து விட்டால் என்ன என்ற இவர்களின் கொடூரச் சிந்தனையின் விளைவுதான் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை.

இனி ரசிகர் கூட்டம் வந்தாலும், குசேலனைப் பார்க்கவிடாமல் துரத்தி விடுவார்கள் போலிருக்கிறது, தங்களது பொய்களை நிஜமாக்கிக் காட்ட!

இல்லாவிட்டால் வெளியாகி வெறும் 20 நாட்களேயான ஒரு படத்தைத் தோல்விப் படம், நஷ்ட ஈடு கொடுங்கள் என்று கூறிக்கொண்டு வந்து நிற்பார்களா...

இவர்களின் நச்சரிப்பு தாங்காமல் இப்போது பிரமிட் சாய்மீரா நிறுவனம் சரோஜா திரைப்படத்தை நஷ்ட ஈடாகத் தருகிறது என தட்ஸ்தமிழ், சிஃபி மற்றும் பல இணைய தளங்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிடுகின்றன. நாம் கேள்விப்பட் வரை இதில் ஓரளவு உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

சனிக்கிழமை (23.08.08) காலை 200 தியேட்டர்களின் உரிமையாளர்கள் சென்னையில் கூடி ரஜினி, பாலச்சந்தர், சாய்மிரா, ஐங்கரன் நிறுவனங்களுக்கு எதிராக முடிவெடுக்கப் போவதாக மிரட்டிய நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்போது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது சூப்பர்ஸ்டார் ரஜினியிடமிருந்து வரப்போகும் அடுத்த அறிவிப்பை. குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வருமா என காத்திருக்கிறார்கள்.

இந்த சிறுமை கண்ட பின்னும் ரஜினி அமைதி காப்பது ஏன்?

அடுத்த பதிவில் இருக்கிறது... இக்கேள்விக்கு விளக்கம்!

அதற்கு முன் தட்ஸ்தமிழ் செய்தியின் ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்...

...இப்போது குசேலன் ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து திரையரங்குகளும் (எல்லாருமே நஷ்ட ஜோதியில் தங்களையும் சேர்த்துக் கொண்டார்கள்... அகப்பட்ட வரை லாபம்தானே..!) ஒரு பைசா கூட பெற்றுக் கொள்ளாமல் சரோஜாவைத் தருகிறார்கள் பிரமிட் சாய்மிரா.

ஆக, ஒரு பெரிய பட்ஜெட் படத்தையே இலவசமாகக் கொடுக்கும் அளவுக்கு பிரமிட் சாய்மிரா லாபம் பார்த்திருக்கிறது குசேலனில் என எடுத்துக் கொள்ளலாமா...

‘லாபம் எவ்வளவு என்பது தெரியாது. ஆனால் சாய்மிராவுக்கு குசேலனால் நஷ்டமில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் அவர்கள் இந்த அளவு இறங்கி வந்திருக்கிறார்கள். ஆனாலும் இது ஆரோக்கியப் போக்கல்ல... இனி, ஒரு படம் முதல் இரு வாரங்களுக்குள் லாபம் சம்பாதிக்காவிட்டால் தோல்விப் படம் என முத்திரை குத்தி விடுவார்களா தியேட்டர்காரர்கள்...

இந்தப் போக்குத் தொடர்ந்தால் சினிமா என்ற தொழில் இருக்காது. அந்தப் பெயரில் சூதாட்டம் நடக்கவே உதவும். இதே தியேட்டர்காரர்கள் ரஜினியின் அடுத்தடுத்த படங்களில் கோடிகளைக் குவித்தவர்கள்தானே... இன்னும் ஒரு மாதம் கூட பொறுத்திருக்க முடியாதா இவர்களால்..., என்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர் கோபத்துடன்.

இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட செய்கைகளால் ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் படம் பண்ணாமல் ஒதுங்கிப் போகும் சூழலும் உருவாகிவிடும். அது சினிமாவுக்குத்தானே இழப்பு என்கிறார் அவர்.

நியாயம்தானே!

Friday, August 22, 2008

நண்பர்களே... ஒரு நிமிஷம்!


தமிழகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னையில் வரும் 27ஆம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக நண்பர் சுந்தர் (http://www.onlyrajini.com)) ஒரு சிறப்புச் செய்தி கொடுத்துள்ளார்.

இன்றைய மாலைப் பத்திரிகைகள் மற்றும் தளங்களுக்கு அநேகமாக இதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகில் யாருக்குமே இல்லாத மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது ரஜினிக்குதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பதிவு செய்யப்பட்ட, படாத மன்றங்கள். ஒரு மன்றத்துக்கு சராசரியாக 100 பேர் என்று வைத்துக் கொணாடல் கூட எங்கோ போகிறது கணக்கு. இவர்களைவிட நான்கைந்து மடங்கு பொதுமக்கள் ரஜினி மீது அபிமானம் வைத்திருக்கிறார்கள்.

அதாவது இந்த அபிமானம் அப்படியே திரையரங்கில் பணமழையாகப் பொழிய வேண்டும் என கணக்குப் போடக்கூடாது.

இவர்களுக்கெல்லாம் ரஜினியைப் பிடிக்கும். படம் பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப பார்த்து ரசிப்பார்கள்.

குசேலன் பேனர்கள் கிழிக்கப்பட்ட போது, குசேலனுக்கு எதிராக பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது எங்கே போனது இந்தப் பட்டாளம் என்று ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்துவிட்டன. ரஜினியின் அரசியல் நிலைப்பாடு, அவர் படம் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துவிட்டதில் ரசிகர்கள் ஒருவித சோர்வில் இருந்தது உண்மைதான்.

அதேநேரம் தலைமை மன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டுதான் விகடன் எரிப்புத் திட்டத்தைக் கூட ரசிகர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்ததக் கட்டுப்பாடுதான் இன்றைக்கு மிக முக்கியம். அதே நேரம் தங்கள் உணர்வுகளை நியாயமான வழிகளில் வெளிப்படுத்துவதிலும் தவறில்லை. இந்த நடவடிக்கைகள் ரஜினியைப் புண்படுத்தும் விதத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த முறை காரைக்குடியில் கூட்டம் போட்டு தனிக் கட்சி அறிவித்த மாதிரி எதுவும் செய்து விடக்கூடாது. இன்னொன்று ரஜினி அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவதும் இப்போதைக்கு வேண்டாம்.

ரசிகர்கள் தங்கள் ஒற்றுமையை, அவர் மீதுள்ள நம்பிக்கையை அழுத்தமாக உணர்த்தும் விதத்தில் இக்கூடத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆவேசம் வேண்டாம்... விவேகமாக இருந்தால் ரஜினிக்கு எதிராக நடக்கும் இந்த சதிகளையும் எளிதில் சமாளிக்கலாம்!

மீடியாவும் ரஜினியும் – ஒரு பார்வை


யோசித்துப் பார்த்தால் மீடியாவுக்கு ரஜினிமீது எப்போதுமே பாசமோ, நல்ல அபிப்பிராயமோ இருந்தது கிடையாது.

அபூர்வ ராகங்கள் தொடங்கி அவரது ஆரம்ப காலப்படங்கள் அனைத்திலும் அவரை ஒரு செட் ப்ராபர்ட்டி மாதிரி கண்டு கொள்ளாமல் விட்டிருந்தன, அறிவுஜீவிப் பத்திரிகைகள்.
அவர் ஒரு சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்ற உண்மையை பலகாலம் ஜீரணிக்க முடியாமல் தவித்தது ஆனந்த விகடன்.

நினைத்தாலே இனிக்கும், தில்லுமுல்லு படங்களுக்குக் கூட நியாயமான, சமநிலையுடன் கூடிய ஒரு விமர்சனத்தை அவர்களால் முன் வைக்க முடியலவில்லை.
முள்ளும் மலரும் தவிர வேறு எந்த ரஜினி படத்துக்கும் பெரிதாக மார்க் போட்ட மாதிரி நினைவில்லை. சொன்னால் நம்ப மாட்டீர்கள், தம்பிக்கு எந்த ஊரு படத்துக்கு இந்த மேதாவிகள் தந்த மதிப்பெண் 35!

அட, ஏவிஎம்முக்கு கோடிகளைக் குவித்த மனிதன் படத்துக்கும் அதே கதிதான். அதனால்தான் பல ரசிகர்கள்... அப்பாடா இவங்க குறைவா மார்க் போட்டுட்டாங்களா... இனி படம் நல்லா ஓடும், என்பார்கள் தமாஷாக.
பாபா படத்துக்கு வரம்பு மீறி செய்தி வெளியிட்டதாக ரஜினி தரப்பில் ‘ஆவி’ மீது வழக்குப்போட அடுத்த சில தினங்களிலேயே மன்னிப்புக் கேட்டு வழக்கை வாபஸ் வாங்க வைத்தார்கள்.

அந்தக் கோபத்தை எப்படிக் காட்டினார்கள் தெரியுமா...
வழக்கமாக இருவாரங்களுக்குப் பிறகு நிதானமாக விமர்சனம் எழுதும் இவர்களின் விமர்சனக் குழுவினர், பாபா வெளியான இரு தினங்களில் விமர்சனம் என்ற பெயரில் படத்தைக் குதறி விட்டிருந்தார்கள். இந்தப் படத்தின் நிஜமான ஹீரோக்கள் என்று வாலிக்கும் வைரமுத்துவுக்கும் மகுடம் வேறு (இவர்களுக்காகத்தான் ரூ.100 கோடிக்கு அந்தப் படம் விலைபோனது பாருங்கள்!).

மூன்று வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி வந்தது. சச்சினுக்கு முதலிடத்தையும், மும்பை எக்ஸ்பிரசுக்கு இரண்டாமிடத்தையும், சரித்திரம் படைத்த சந்திரமுகிக்கு கடைசி இடத்தையும் கொடுத்து கேவலப்படுத்த முயன்று கேவலப்பட்டு நின்றார்கள்.

இதில் கொடுமை பாருங்கள்... இதே விகடன், சந்திரமுகி வெற்றிக்குப் பிறகு ரஜினியின் பாபாஜி குகைப் பயணத்தை அட்டைப்படக் கட்டுரையாக்கி காசு பார்த்தது. கொட்டும் தேள் எனத் தெரிந்தும் அதைக் கையிலெடுத்து காப்பாற்றும் முனிவரைப் போல ரஜினியும் இவர்களுக்குத்தான் பேட்டி தருகிறார் என்பது வேதனையான உண்மை.

அது என்னமோ தெரியவில்லை... எம்ஜிஆர், ரஜினி போன்றவர்களை ஆதரிப்பவர்களுக்கு பாமரப் பட்டமும், தனக்கும் புரியாமல், கேட்பவர்ளுக்கும் புரியவிடாமல் உளறிக்கொண்டே இருக்கும் கமல், நாசர் போன்ற சில நடிகர்களின் ஆதரவாளர்களுக்கு அறிவு ஜீவிப் பட்டமும் கொடுத்து வந்திருக்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

இந்த பட்டத்துக்கு பயந்தே பல பத்திரிகையாளர்கள் கமல்ஹாசன் மாதிரி நடிகர்கள் சொல்வதுதான் நிஜமென்றும், அவர்கள் நடிப்புதான் நிஜ சினிமா என்றும் ஏமாந்து போகிறார்கள். (ரஜினியும் கமலும் நண்பர்கள் என்பது வேறு விஷயம். நமது கருத்தைச் சொல்கிறோம், அவ்வளவுதான்.)

ரஜினிக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் அல்லது பத்திரிகைகள் சோ - துக்ளக் தவிர வேறு யாரும், எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மற்ற அனைத்துப் பத்திரிகைகளுமே சந்தர்ப்பத்துக்காக ரஜினியைப் பயன்படுத்தி கவர் ஸ்டோரியாக்கிக் காசு பார்த்தவைதான்.

விகடன், குமுதம், கல்கி வகையறாக்களுக்கு அப்போதெல்லாம் ஹீரோக்கள் என்றால் செக்கச் செவேலென்று சுண்டினால் ரத்தம் வருமளவுக்கு இருக்க வேண்டும் (அப்படி இருந்தாலும் எம்ஜிஆரைப் பிடிக்காது இவர்களுக்கு!!).

சிவாஜி கணேசன் என்ற இமயத்தையே கிண்டல் செய்த பாதகர்கள்தானே இவர்கள்.
ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ஸ்ரீகாந்த், சிவக்குமார்... போன்றவர்களை மட்டுமே தொடர்ந்து உயர்த்திப் பிடித்து எழுதி, ரஜினியை அமுக்கப் பார்த்தவர்கள் 70களின் இறுதியில். தினத்தந்தி மட்டுமே விதிவிலக்கு.

இந்த மீடியா எதிர்ப்பைத் தாண்டித்தான் அவர் மேலே வந்தார்.
அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் என்பது புரிந்துதான் சற்று அடங்கினார்கள் இந்த மேல்தட்டு மீடியா பிரதிநிதிகள். ஆனாலும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் கொட்டிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

பிளாஷ்பேக்!

பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்தித்து வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவதில் ரஜினிக்கு நிகர் வேறு யாருமில்லை.

ஒரு சின்ன பிளாஷ்பேக்...
ரஜினி – லதா திருமணம். அடுத்த நாள் திருப்பதியில் நடக்கும் திருமணத்துக்கு ஒரு நாள் முன்னதாக பத்திரிகையாளர்களை சோழாவுக்கு அழைத்து அழைப்பிதழ் கொடுத்து, இரவு மதுவிருந்தும் தருகிறார் ரஜினி.

‘இந்தாங்க அழைப்பிதழ், ஆனா கண்டிப்பா நீங்க யாரும் கல்யாணத்துக்கு வந்துடாதீங்க...’
அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி.

‘ஒருவேளை வந்தா...’ – இது தினத்தந்தி நிருபர்.
‘உதைப்பேன்..’ – இது சூப்பர்ஸ்டார்.

உடனே எழுந்தார் ஒரு புகழ்பெற்ற நடிகரும் பத்திரிகையாளருமான அந்த நபர். ‘ரஜினி சார்... கல்யாணத்துக்கு வர வேணாம்னு சொன்னது ஓகே. ஆனா இவ்வளவு கடுமை தேவையா... கொஞ்சம் பாத்துக்கிடுங்க...’ என்று கூற,

‘நைஸ்... நைஸ் மேன் யூ ஆர்... ஓகே.. நான் அப்படிப் பேசினது தப்புதான். ஆனா என் பேச்சை மீறி வந்து என் தனிமையை, ஒரு புனிதமான நிகழ்ச்சியைக் கெடுத்தா வேற வழியில்ல... திரும்பவும் சொல்றேன், உதைப்பேன்...’

-இதுதான் ரஜினி.

இந்த நேர்மையும், எதற்கும் அஞ்சாத தன்மையும்தான் அவரை பத்திரிகையாளர்களின் எதிரியாக்கிவிட்டது; தனிமனித ஒழுக்கமற்ற, தொழில் நேர்மையில்லாத நபர்களையெல்லாம் பெரிய நாயகர்களாக்கிவிட்டது!

ஆனால் அவரோ இவர்கள் போற்றுவதையும் கவனிப்பதில்லை, தூற்றுவதையும் காதுகொடுத்துக் கேட்பதே இல்லை.

இந்த பத்திரிகை அரசியலெல்லாம் தெரியாத அடித்தட்டு மக்கள்தான் ரஜினியின் சொத்து. அவர்களை ரஜினி மகிழ்விக்க, அவர்களும் தங்களில் ஒருவராய் ரஜினியை பாவித்து கோடிகளைக் கொட்டிக் கொடுத்து வருகின்றனர் தங்கள் அபிமான கலைஞனுக்கு.
இந்த பந்தத்தை உடைக்கத்தான் இன்று பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது மீடியா!
நண்பர்கள்... புரிந்து கொண்டால் சரி!

Thursday, August 21, 2008

குசேலன்: சில உண்மைகள், உங்கள் பார்வைக்கு!


குசேலன் நஷ்டம், தியேட்டர்களை விட்டு தூக்கப் போகிறார் கள்.. வேறு காட்சிகளைச் சேர்க்கப் போகிறார்கள்... இல்லையில்லை, ரஜினி அடுத்த படம் நடித்து ஈடுகட்டப் போகிறார்... எவ்வளவோ செய்திகள்.

செய்திகள் என்ற பெயரில் வக்கிரப் பதிவுகள்.

அவற்றை விடுங்கள். உங்களுக்கு மீண்டும் குசேலன் தொடர்பான சில உண்மைகள்.
உடனே, இப்படியெல்லாம் தினமலரில் வந்திருக்கிறதா... தினகரனில் வந்திருக்கிறதா என்று கேட்காதீர்கள். இந்த உண்மைகளைச் சொல்லும் நெஞ்சுரமும், யோக்கிதையும் அவர்களுக்குக் கிடையாது. ரஜினியை வைத்து உயிர் பிழைத்து, மீண்டும் அந்த ரஜினி என்ற மரத்தின் மீதே கூர் பார்த்த கத்திகளே இவர்கள்.

1994-96 நிகழ்வுகளை அசைபோட்டுப் பாருங்கள். தினகரன், தினமலர், சுதேசமித்திரன், கதிரவன், மாலைமுரசு, ஆவி, ஜூவி, தமிழன் எக்ஸ்பிரஸ்... இன்னும் இப்படி பல பத்திரிகைகள் தாக்குப் பிடிக்கப் பயன்படுத்திய பவர்புல் மந்திரம் 'ரஜினி' என்பது புரியும்.

எனவே இவர்கள் சொல்லி அது எடுபடப் போவதும் இல்லை. ஆதாரத்தின் ஒரு பகுதியை முன்பே உறுதியளித்தது போல் இங்கே தந்திருக்கிறேன். மீதியையும் தருவேன்.
நம்பிக்கையான நண்பர்கள், ஆதாரங்கள் மூலம் கிடைத்த இந்த உண்மைகளைப் படியுங்கள்... முடிந்தால் நீங்களும் உங்கள் சொந்த முயற்சியில் குறுக்கு விசாரணை செய்து கொள்ளுங்கள்!

சென்னையில் குசேலன் வசூல்...

முதல் வாரம் அதாவது முதல் ஆறு நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் குசேலன் வசூலித்த தொகை ரூ.3 கோடி! அதன் பின்னர் வந்த 14 நாட்களின் முடிவில் மேலும் ரூ.1.43கோடி கலெக்ஷன் பார்த்திருக்கிறார்கள். ஆக கிட்டத்தட்ட ரூ.4.5 கோடியைக் கொட்டியிருக்கிறது குசேலன்!!

நினைவு படுத்திக் கொள்ளுங்கள் இந்த வசூலைப் பெற சிவாஜி 30 நாட்களைத் தாண்ட வேண்டியிருந்தது. ஒரு சின்ன கால்குலேஷன் போட்டுப் பாருங்கள் உண்மை உங்களுக்கே விளங்கும். இந்தத் தகவல் பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் முக்கிய ஊழியர் சொன்னது.

வெளியூர்களில் ஏற்கெனவே சொன்னது போல் பிளாட் ரேட்டில் விற்றிருக்கிறார்கள். முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் அவுட்ரைட் டிக்கெட்டுகளாக ஷோவுக்கு 1000 டிக்கெட்டுகள் வரை விற்றிருக்கிறார்கள். இவற்றில் 40 சதவிகிதம்தான் கணக்கில் காட்டப்பட்டுள்ளன.
சென்னை நகர வசூலையும் சேர்த்து முதல் வாரம் மட்டும் 26 கோடி ரூபாய் வசூலைக் கொடுத்திருக்கிறது குசேலன், தமிழகத்தில் மட்டும்.

பெயர் குறிப்பிடக் கூடாது என்ற நிபந்தனையோடு நம்மிடம் பிரமிட் சாய்மிரா அதிகாரி இப்படிக் குறிப்பிடடார்:

உண்மையான கணக்கைக் காட்டினால் ஒருத்தருக்கும் நஷ்டம் வராது. ஆனால் அரசுக்குக் காட்டும் கணக்கைத்தான் இவர்கள் காட்டப் போகிறார்கள். இந்தக் கணக்கை எங்களிடம் காட்டி 30 சதவிகிதம் நஷ்டஈடு தருமாறு திரையரங்க உரிமையாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுமாதிரி இன்னும் பக்காவான நஷ்டக் கணக்கை எங்களாலும் காட்ட முடியும். அதனால்தான் நாங்களும் அவர்களுக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறோம், என்கிறார் அந்த அலுவலர்.

அடுத்த விஷயம்...

குசேலன் தொலைக்காட்சி உரிமை. ரூ.7 கோடியே 7 லட்சத்து 70 ஆயிரத்துக்கு விற்றிருக்கிறார்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு!

சிவாஜி, தசாவதாரத்தைவிட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக விலை போயிருக்கிறது. இந்தத் தொகை முழுமையாக பாலச்சந்தருக்கே தரப்பட்டிருக்கிறது என்பதையும் நினைவில் கொள்க.

ஆந்திர விநியோகம், இதர மாநில விநியோகம், வெளிநாட்டு விநியோகம், ஆடியோ உரிமை (ரூ.2.75 கோடி), ரிங்டோன் உரிமை (ரூ.1.4 கோடி)... அப்பப்பா... இன்னும் எவ்வளவுதான் சம்பாதித்துத் தருவார் ரஜினி?

பிரமிட் சாய்மிரா கொடுத்த ரூ.65 கோடிதான் எல்லாருக்கும் தெரிகிறது. அதைத் தவிர தயாரிப்பாளர்களுக்குக் கிடைத்த இன்னுமொரு பெரிய தொகை யாருக்குமே தெரியவில்லை.

இதில் நஷ்டம் என்று ரஜினியை நோக்கி விரல் நீட்டுபவர்களை என்ன செய்யலாம்?

அல்லது நஷ்டக் கணக்குக் காட்டிய தியேட்டர்காரர்களிடம் ரஜினியை மட்டுமே காட்டி தப்பித்துக் கொண்ட குசேலன் தயாரிப்பாளர்களைத்தான் என்ன செய்யலாம்?

தும்பை விட்டு விட்டு வாலை...


இந்தப் பேட்டியை புஷ்பா கந்தசாமி இரு வாரங்களுக்கு முன்பே கொடுத்திருக்கலாம். அட, போன வாரமாவது கொடுத்திருக்கலாம். ஆனால் நிலைமை முறுறும் வரை விட்டுவிட்டு இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு பொய்க்கான பிரச்சாரம் ஆரம்பாமாகும்போதே அதற்கு சரியான பதிலைக் கொடுத்து வாயை அடைக்க வேண்டும். இதுவும் வியாபாரத்தில் ஒரு உத்திதான். அதே பொய் திரும்பத் திரும்ப ஊர்வலம் வரும்போது நல்லவர்களும் கூட நிஜமாக இருக்குமோ என நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

முதலில் குசேலன் வழக்கமான ரஜினி படம் இல்லை என்ற செய்தி பரவியது. அப்போதே... ஆமாம், இது முற்றிலும் வித்தியாசமான படம். ரஜினி எவ்வளவு நேரம் வருகிறார் என்பது முக்கியமல்ல, கதை அவரைச் சுற்றித்தான் நடக்கிறது, என்ற உண்மைகளை இதே புஷ்பாவும், வாசுவும் வெளிப்படையாக ஒரு பிரச்சாரமாகவே கூடச் செய்திருக்கலாம்.

நம்மைப் பற்றிய உண்மைகள் நம் வாயிலிருந்தே வரும் போது மரியாதை கிடைக்கும். பத்திரிகை மற்றும் எதிரி முகாமிலிருந்து வெளிப்படும்போது மக்களிடம் வெறுப்பைக் கிளப்பிவிடும். அனுபவஸ்தர் பாலச்சந்தரும் இந்த விஷயத்தில் அமைதி காத்தது வேதனையானது.

இந்தப் படத்தில் ரஜினியின் பங்கு எவ்வளவு என்று புஷ்பாவுக்கு மட்டுமல்ல... படத்துடன் சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் தெரியும். ஆனால் ரஜினியின் பக்தர்களுக்குத் தெரியாதல்லவா...

மற்றபடி குசேலன் ஒரு நல்ல படம் என்பதை ஒப்புக் கொள்ள மறுப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. சத்யம், மும்பை எக்ஸ்பிரஸ் மாதிரி படங்களை ஆயிரம் முறை பார்க்கச் சொல்லி சாபம் வேண்டுமானால் கொடுக்கலாம்!

சரி, அந்த விவாதத்தை அப்புறம் பார்க்கலாம். புஷ்பா கந்தசாமி தனித்தனியாக பத்திரிகையாளர்களுக்கு கொடுத்துவரும் விளக்கங்களில் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.

இது ஒரு இணைய தளத்தில் வந்துள்ள கடடுரை. இதே செய்தி தினத்தந்தியிலும் வந்துள்ளது.


குசேலனுக்கு எதிராக திட்டமிட்ட சதி!- புஷ்பா


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள குசேலன் திரைப்படத்தை இப்போதைக்கு எந்தத் திரையரங்கை விட்டும் தூக்கவும் இல்லை, புதிதாக எந்தக் காட்சியையும் சேர்க்கவும் இல்லை, என்று படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான புஷ்பா கந்தாசமி தெரிவித்துள்ளார்.

குசேலன் படத்தில் ரஜினிக்கு முக்கியத்துவம் இல்லை என்றும் அவரது காட்சிகள் அதிகமாக வருவதுபோல படத்தை மாற்ற வேண்டும் என்று பல மாவட்டங்களிலிருந்தும் கடிதங்கள் குவிந்த வண்ணம் உள்ளன, இயக்குநர் வாசுவுக்கும், ரஜினியின் தலைமை மன்றத்துக்கும்.
அரசியல் குறித்து ரஜினி தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிய வந்ததால், அக்காட்சிகளை நீக்கிவிடுமாறு ரஜினி கூறினார். அதைத் தொடர்ந்து அக்காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் குசேலன் திரைப்படத்துக்கு கூட்டம் குறைவாக உள்ளதால் திரையரங்குகளிலிருந்து அந்தப் படத்தை தூக்கிவிட்டு, புதிய காட்சிகளைச் சேர்த்து மீண்டும் வெளியிடப்போவதாக ஒரு பத்திரிகையில் நேற்று செய்தி வெளியானது.

இதை பிரமிட் சாய்மிரா நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியும், இயக்குநர் வாசுவும் இந்த தகவல்களை மறுத்துள்ளனர்.

இதுகுறித்து புஷ்பா கந்தசாமி நேற்று கூறியதாவது:

குசேலன் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் போது. ரிலீசாகி 20 நாட்களுக்குள் ஒரு படத்தின் வியாபாரத்தை எப்படி கணிக்க முடியும். இது திட்டமிட்ட சதி.

உண்மையை மறைக்கவில்லை!

குசேலன் துவக்க விழாவிலேயே, தன்னுடைய பங்கு 25 சதவிகிதம், வடிவேலு 25 சதவிகிதம் மற்றும் பசுபதி 50 சதவிகிதம் என்று தெளிவாகக் கூறிவிட்டார் ரஜினி சார். இதை எந்த இடத்திலும் நாங்கள் மறுக்கவில்லை.

எந்த உண்மையையும் நாங்கள் மறைத்து இந்தப் படத்தை விற்கவில்லை. படத்தை வாங்க பிரமிட் சாய்மிரா எங்களுடன் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பாக இப்படத்தைப் பார்த்தார்கள். அவர்கள் முழுமையாக திருப்தியடைந்த பிறகுதான் வியாபாரம் பேசி முடித்தார்கள்.

ரிலீசுக்கு ஒரு வாரம் முன்புகூட படம் பார்த்த பிரமிட் சாய்மிரா உரிமையாளர்கள், படம் அருமையாக உள்ளது என்று கூறி உலகெங்கும் தாங்களே வெளியிடுகிறோம் எனறனர். உண்மை இப்படியிருக்கும்போது, எங்கள் மீது பழிபோடுவது என்ன நியாயம்?

இந்தப் படத்தை குறைவான திரையரங்குகளில் வெளியிட வேண்டும், கட்டணம் குறைவாக இருக்க வேண்டும். இப்படித்தான் ரஜினி சாரும் சொன்னார். அப்படிச் செய்யாததுதான் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் செய்துவிட்டது.

அதுமட்டுமல்ல... இது குடும்பப் படம். பெண்களுக்குப் பிடித்த கதை. அவர்கள் ரசித்துப் பார்ப்பார்கள். ஆனால் அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, அதற்கு எதிர்மறையான விளம்பரங்களைக் கிளப்புவது வேதனையாக இருக்கிறது. இப்போதும் விளம்பரங்களை நல்ல மாதிரியாக இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும், வரவேற்பு நிச்சயம் தொடரும்.

ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்பம் குடும்பமாக பார்க்கத் தொடங்குவார்கள். அதற்கான அவகாசத்தைக் கூடத் தராமல் தேவையற்ற சர்ச்சைகளை சிலர் கிளப்பி விடுவதை இப்போது மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

இது ஒரு நல்ல கதை. அந்த கதையின் மீது கொண்ட நம்பிக்கையால்தான் ரஜினி இந்தப் படத்தில் நடித்தார். அதே நம்பிக்கையில்தான் இப்போது ஷாரூக்கான் சொந்தமாக தயாரித்து நடிக்கிறார் இப்படத்தில்.

தெரியாத கதையைப் படமாக்கியிருந்தால், இன்று இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஏதாவது நியாயமிருக்கும். ஆனால் இது எல்லாருக்கும் தெரிந்த கதை. படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெரிந்தே வாங்கினார்கள், திரையிட்டார்கள். இப்போது வந்து குறை சொல்கிறார்கள். இதே படம் மற்ற இடங்களில் நன்றாகத்தானே ஓடிக்கொண்டிருக்கிறது...!, என்றார் புஷ்பா கந்தசாமி.

வாசு மறுப்பு

ரஜினி தொடர்பாக புதிய காட்சிகள் எதையும் சேர்ப்பது குறித்த திட்டம் இப்போதைக்கு இல்லை என்றும் இப்படிப்பட்ட யூகச் செய்திகள்தான் படத்துக்கு தேவையற்ற சங்கடங்களை ஏற்படுத்திவிட்டதாகவும் இயக்குநர் வாசு தெரிவித்தார்.

நன்றி: தட்ஸ்தமிழ், தினத்தந்தி

Tuesday, August 19, 2008

நியாயம்தானா... நீங்களே சொல்லுங்க!


குசேலன் படத்தை திரையிட்ட தமிழக திரையரங்கு உரிமையாளர்களில் ஒரு பகுதியினர் நேற்று சென்னையில் கூடி, பத்திரிகையாளர்களிடம் தங்கள் நஷ்டக் கணக்கைக் காட்டினர்.

அதையும் உங்களுக்கு அப்படியே தமிழில் தருகிறேன்.
ஆங்கில பதிவில் இல்லாத சில திரையரங்கு உரிமையாளர்களின் கருத்துக்களையும் இங்கே நீங்கள் காணலாம்.
இவற்றை முழுமையாக (தினத்தந்தி தவிர - அதிலும்கூட ஓரளவுக்குதான் கொடுத்திருந்தார்கள்) எந்தப் பத்திரிகையும் தரவில்லை.

இந்த சந்திப்பில் நடந்தவற்றை திரட்டி இங்கே தருகிறேன். சங்கத்தின் தலைவர் பன்னீர், சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் உள்பட 12 திரையரங்கு உரிமையாளர்கள் கூறியதன் தொகுப்புதான் இங்கே தந்திருப்பது.

இவர்களின் தரப்பில் என்ன நியாயம் உள்ளது என நீங்களே சொல்லுங்கள், முழுதும் படித்துவிட்டு!
இன்னொன்று-
இன்னும் ஒரு விரிவான கட்டுரையோடு குசேலன் சம்பந்தப்பட்ட பதிவுகளை நிறுத்திவிட்டு, அடுத்த கட்டத்தைப் பற்றிப் பார்ப்பது நண்பர்களுக்குப் புத்துணர்ச்சி தரும் என நினைக்கிறேன்.


ரஜினி சாரிடம் நாங்கள் பணம் கேட்கவில்லை!

குசேலன் படத்தை ரஜினி சார் சொன்ன மாதிரி எங்களுக்கு வியாபாரம் செய்திருந்தால், இந்தப் படம் தமிழகத்தில் நன்றாகவே போயிருக்கும். தயாரிப்பாளர் பாலச்சந்தரும், இயக்குநர் வாசுவும் சேர்ந்து போட்ட திட்டத்தில் நாங்கள் மாட்டிக் கொண்டோம், என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

குசேலன் படம் தமிழகத்தையும் ஆந்திராவையும் தவிர பிற பகுதிகளில் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து நஷ்டம் என்கிறீர்கள்?

குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார்.

ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார். அதற்கேற்ற மாதிரி பத்திரிகைச் செய்திகளும் இது ரஜினியின் படம் என்ற இமேஜைக் கொடுக்கும் விதத்தில் பெரிய அளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.

படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். எனவே அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது. ஆனால் படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதைச் சரிகட்ட நாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கொடுத்த தொகையை சதவிகித கணக்கு வைத்து, ‘மினிமம் கியாரண்டி’ தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, மீதித் தொகையை திருப்பித் தருமாரு கோருகிறோம். இதனால் யாருக்கும் நஷ்டம் ஏற்படாது. பாலச்சந்தர், விஜயகுமார், சாய்மிரா போன்றவர்களின் லாபத்தில் ஒரு பகுதி குறையும். இதைச் செய்துதான் தீர வேண்டும்.

ரஜினி தலையிட வேண்டும்!

இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து அவர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியும், அதை எங்களிடம் தவறாகச் சொல்லி வியாபாரம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.

இது நல்ல படம்தான். ஆனால் தவறாக வியாபாரம் செய்யப்பட்ட படம். அதுதான் பிரச்சினையே!

எனவே மனித நேயமிக்க சூப்பர்ஸ்டார் ரஜினி சார் இதில் தலையிட்டு எங்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டும்.

ரஜினி இந்தப் படத்தில் கவுரவ நடிகர்தானே... அப்படியே கதாநாயகனாக இருந்தாலும், அவரிடம் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரக் கேட்பீர்கள்?

நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் இப்போதும் ரஜினி சாரிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் எங்களால் நியாயமாகப் பணத்தைப் பெற முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது.

எனவேதான் ரஜினி சார் இதில் தலையிட வேண்டும் என்கிறோம். அவருக்கு எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் தெரியும்.

பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல (அடப் பாவிகளா... இதை அப்போதே சொல்லியிருக்கலாமே!!). அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

திருப்பித் தராவிட்டால்... ரஜினி படத்தை வாங்க மாட்டீர்களா?

படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். இதில் ரஜினி சார் மீது ஏன் பழிபோட வேண்டும். பொதுவாகவே அவர் படமென்றால் குறைந்தது 50 நாட்களுக்கு அரங்கு நிறைந்த காட்சிகள்தான். ஆனால் இந்தப் படத்தில் அது நடக்கவில்லையே.

ஆனால் உண்மையைச் சொல்லி, இதில் பாதித் தொகைக்கு படத்தை விற்றிருந்தால்கூட எங்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும். படமும் நன்றாகப் போயிருக்கும்.
இந்த விஷயத்தில் ரஜினிசார் தீர்க்கதரிசி. அவர் சரியாகச் சொன்னார், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில். நாங்கள்தான் பாலச்சந்தரின் வார்த்தைகளை நம்பிவிட்டோம்.

இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் நன்றாகப் போகாததற்கு யார் காரணம், அதன் பின்னணி என்ன என்பதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லாத விஷயம். நாங்கள் வியாபாரிகள். நஷ்டத்தைத் தாங்க முடியாது, அதனால் அதைச் சரிகட்டச் சொல்கிறோம். இதற்கும் ரஜினி படங்களை நாங்கள் வாங்குவதற்கும் சம்பந்தமில்லை. நிச்சயம் அடுத்த படத்தை வாங்குவோம். ஆனால் விழிப்புடன் இருப்போம்.

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம்.

இதே போன்ற நடவடிக்கைகளை அனைத்து நடிகர்கள் நடித்த படங்களுக்கும் எடுப்பீர்களா...?

இந்தக் கேள்விக்கு சுந்தர் திரையரங்க உரிமையாளர் கண்ணப்பன் சொன்ன பதில்...

பெரிய நஷ்டம் வந்தால் தவிர்க்க வேறு வழியில்லை.

இப்போதும் வசூலான தொகையை வைத்துச் சொல்கிறோம், நியாயமான சதவிகிதத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு மீதியைக் கொடுத்தால் யாருகத்கும் நஷ்டமில்லை. பாலச்சந்தரிடம் ரஜினி சார் சம்பளம் பெறவில்லை என்று சொல்கிறார்கள். அப்படியிருக்க அவர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்பே இல்லையே.

நல்ல மனிதர் ரஜினியின் பெயரை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டம் இது. இதில் அவர் பெயரைக் கெடுத்தது கூடவே இருப்பவர்கள்தான். எத்தனையோ நெருக்கடியான சூழலில் நாங்கள் ரஜினி சாருக்குக் கைகொடுத்தோம். அதையும் மறந்துவிடாதீர்கள்.

இன்னொன்று எல்லோரிடமும் இப்படிக் கேட்க முடியாதுதான். கொடுக்கிறவரிடம்தானே கேட்க முடியும். அதுதான் ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை. தனிப்பட்ட முறையின் எங்களுக்கு ரஜினிசார் மீது எந்த வருத்தமும் இல்லை. நாட்டுக்கொரு நல்லவன் பட நஷ்டத்தைக்கூட என்னைப் போன்ற சிலர் சமாளிக்க உதவியவர் ரஜினி.

ஒரு வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம்தானே... இதே ரஜினி படங்கள் பலவற்றில் கணிசமாக லாபம் பார்த்தீர்கள் அல்லவா?

இந்தக் கேள்விக்கு யாருமே பதில் சொல்லத் தயாராக இல்லை!!
பின்னர் பழனியப்பன் மட்டும், இப்போதைய சூழ்நிலையில் இந்த மாதிரிதான் வியாபாரம் செய்ய வேண்டி உள்ளது.

சரி... படத்தை நீங்கள் பிரமிட் சாய்மிராவிடம்தானே வாங்கினீர்கள்... அவர்களை விட்டுவிட்டு ரஜினியையும், பாலச்சந்தரையும் பிடித்துக்கொண்டிருப்பது ஏன்?

ஒரு நிமிடம் அமைதி காத்த கண்ணப்பன்... அதான் சொன்னேனே, கொடுப்பவர்களிம்தான் கேட்க முடியும். இது எங்கள் கோரிக்கைதான். அதை மனிதாபிமான முறையில் ரஜினி பரிசீலிக்க வேண்டும்.


நியாயம்தானா...நீங்களே சொல்லுங்க!

இதில் ரஜினியின் நிலை என்ன?

நடந்த நிகழ்வுகளைப் பார்த்து மிகுந்த அதிருப்திக்குள்ளான சூப்பர்ஸ்டார், முழுமையான கலெக்ஷன் ரிப்போர்ட்டை பிரமிட் சாய்மிராவிடம் கேட்டுள்ளாராம்.

ஆனால் பிரமிட் சாய்மிரா இதில் பட்டும் படாமல் இருக்கிறது. காரணம் அவர்களுக்கு Break Even கிடைத்துவிட்டது என்பதே உண்மை. கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமைகளில் கணிசமான கோடிகள் வந்துள்ளன. ஆனால் 'நாங்கள் செய்த வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை மற்றவர்களுக்கு ஏன் தரவேண்டும்?' என்ற நினைப்பில் அமைதியாக இருக்கிறார்கள் சாய்மிரா நிறுவனத்தினர்.

இந்த நிலையில் சாய்மிராவிடம் திரையரங்க உரிமையாளர்கள் போய் நின்றால், சாய்மிரா நஷ்டக் கணக்கோடு ரஜினியிடம்தான் வரப்போகிறது. காரணம் அவர்களிடம் நேர்மையான வியாபாரத்தை எதிர்பார்க்க முடியாது என பல திரையரங்க உரிமையாளர்கள் ஏற்கெனவே கூறியிருக்கிறார்கள். அவர்களுடன் போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்த எத்தனையோ திரையரங்க உரிமையாளர்களைக் காட்ட முடியும்.

ஆக லாபம் பார்த்தது பிரமிட் சாய்மிரா... லாபம் சம்பாதிக்கும் பொருளை (படத்தைத்) தந்தவர்கள் ரஜினியும் பாலச்சந்தரும். ஆனால் இடையில் நஷ்டப்பட்ட சிலர் தங்களிடம் அதிக விலைக்கு விற்ற சாய்மிராவை விட்டுவிட்டு, சிலரைக் காப்பாற்ற உதவிய ரஜினியின் பெயரை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்று இந்தப் படத்தை மினிமம் கேரண்டி அடிப்படையில் வாங்கியிருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இப்படி வாங்குவது அவரவர் சொந்த ரிஸ்க்கில் வாங்குவது போலத்தான். நஷ்டப்பட்டாலும் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. யாருக்கும் தடை போடவும் முடியாது.

நான் முன்பே சொன்னது போல எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம்தானே...!

ஜெய்ஹிந்த்!