
ரஜினி எதிர்பார்த்த ‘வேளை’ வந்துவிட்டதா?
இந்தத் தொடர்ச்சியை நீங்கள் படிக்கும் தருணத்தில் என்ன மாதிரி செய்திகள் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கும், அவற்றைப் படித்துவிட்ட பின் உங்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் உணர முடிகிறது.
சிலர் ரஜினிக்கு சுத்தமாக ஆதரவே இல்லை என்றும், இன்னும் சிலர் கட்சி தொடங்க ரஜினிக்கு ஜோசியர் அனுமதி கொடுத்துவிட்டார் எனறெல்லாம் தங்கள் கற்பனை எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறார்கள். முன்பே நாம் சொன்து போல கதை வசனத்தை சினிமாக்காரர்களை மிஞ்சும் அளவுக்கு லாஜிக்குடன் எழுதக் கற்றுக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்.
இருக்கட்டும்... அதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். மேலே தொடருங்கள்...
ரஜினி அரசியலுக்கு வர இது உகந்த தருணமா... அல்லது அவர் நினைப்பது போன்ற சாதகமான சூழல் இப்போது உள்ளதா... இதுதான் நண்பர்கள் பலரும் நம்மைக் கேட்கும் ஒரே கேள்வி.
நிச்சயம் ரஜினி விரும்பிய மாதிரி ஒரு நல்ல சூழல் இப்போது தமிழகத்தில் இல்லைதான்.
ஆனால்-
முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட அந்த சாதகமான சூழலில் ரஜினி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஒரு நல்ல ஆட்சியாளர் எனப் பெயரெடுக்க ரஜினி பெரும்பாடுபட்டிருப்பார்... ஆனால் அவர் மூலம் நிறைய அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்த கும்பலால் அவருக்கும் கெட்ட பெயராகி, சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும்கூட இழக்க வேண்டி வந்திருக்கும். சுயநல அரசியல் தந்திரர்களிடம் சிக்கி பெரும் வேதனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும்.
அன்றைக்கு ரஜினி ஒரு பெரும் அரசியல் சக்தியாக இருந்தார் (இப்போதும்தான்... லயோலா சர்வேயையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!). அதனால் அவரை வைத்துக் குளிர் காய பெரும் கூட்டம் காத்திருந்தது. தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத கோபத்தில் ரஜினிக்கு எதிராகப் போனவர்கள்தான் இப்போது ரஜினியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த 12 ஆண்டுகளில் ரஜினியை அரசியலுக்கு வருமாறு மக்கள் நிர்பந்தப்படுத்துவது இது 3-வது முறை. ஆனால் இன்றைய சூழல் மற்ற இரு சந்தர்ப்பங்களிலிருந்தும் வேறுபட்டது. அன்று ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, ஏழை, பணக்காரன், படித்த, படிக்காதவர்கள் என்ற பேதமில்லாமல் பொதுமக்கள், மீடியா, பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஆன்மீகப் பெரியவர்கள்... அட அவ்வளவு ஏன்... காவல் துறையினர் கூட ரஜினி முதல்வராக வரவேண்டும் என விரும்பினர்.
ஆனால் இன்று-
ரசிகர்களும், பொதுமக்களும் மட்டும்தான் ரஜினிக்கு பலமாக நிற்கிறார்கள். மற்ற பிரிவினரிடம் பெரிய சலனம் எதுவும் தெரியவில்லை. காரணம் மீடியா உலகம் ஒட்டு மொத்தமாக அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.
அவர் என்னதான் நல்லது செய்தாலும் அதிலும் ஒரு குற்றம் சொல்லத் தயாராக நிற்கிறது மீடியா.
அதிகார வர்க்கம் அவர் பக்கமில்லை. பொதுமக்களில் ஒரு பிரிவினர்கூட ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் இப்போதும் அதே போன்ற நிதானத்தைதான் ரஜினி கடைப்பிடிக்கிறார். இதுதான் நல்ல தலைவன் மற்றும் நிர்வாகிக்கு அடையாளம்.
இந்த விஷயத்தில் ரஜினி ஒரு ஞானி (முற்றும் உணர்ந்தவர் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்!). அன்றைய வரவேற்புக்கு மயங்கிவிடவும் இல்லை, இன்றைய எதிர்ப்பு நிலைக்கு அஞ்சவும் இல்லை. எந்த மண்ணிலும் தவழ்ந்து, எத்தகைய மனிதர்களையும் தழுவிச் செல்கிற நதி மாதிரிதான் அவரது ஓட்டம்!
ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்ட தாமதம்தான் மக்கள் மனதில் அவர் மீதிருந்த நல்ல அபிப்பிராயத்துக்கு ஒரு தற்காலிகத் திரையைப் போட்டிருக்கிறது. அப்படியெனில் மக்கள் அவர்மீது வெறுப்பாக இருக்கிறார்களா என்றால் அப்படியும் இல்லை. இது வெறுப்புமில்லை, விருப்பும் இல்லை...
‘வந்தா வரட்டும்... பார்க்கலாம்’ என்ற ஜஸ்ட் லைக் தட் அணுகுமுறை இது!
ஆனால் மக்களின் இந்த மனநிலை மாறும். அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மீது விழுந்துள்ள தற்காலிக திரை நிச்சயம் மறையும். அதற்கு உகந்த நேரம் இதுதான்!
ரஜினி எந்த முடிவை அறிவிப்பதாக இருந்தாலும் அதற்கு இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியவில்லை.
'நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். குசேலன் படத்தில் நான் பேசிய வசனங்களே முடிவானவை' என அவர் அறிவித்துவிட்டாலும் கூட மக்கள் ஒன்றும் விமர்சிக்கப் போவதில்லை.
'பரவால்லய்யா... தில்லான ஆள் இவர். என்னதான் வருந்தி வருந்தி கூப்பிட்டாலும் அரசியல்.. கட்சியெல்லாம் தனக்கு ஒத்து வராதுங்கிறதுல தெளிவா இருக்காரே...' என்று மக்கள் பாராட்டுவார்கள்...
இதற்காக அவர் படத்தைப் பார்க்காமலும் இருக்கமாட்டார்கள். அரசியலில் தோற்றாலும் நடிப்பில் மரியாதைக்குரிய ஒரு உயர்ந்த இடம் ரஜினிக்குக் கிடைக்கும்.
ரசிகர்கள்தான் மனம் வெதும்பிப் போவார்கள். ச்சே... இதுக்காகத்தானா இவ்வளவு காலம் காத்திருந்தோம் என்று வெறுப்பின் விளிம்புக்குப் போவார்கள். அதுகூட எந்திரன் அல்லது சுல்தான் ரிலீஸ் வரைக்கும்தான்.
மனதுக்குள் நெருடலும் கோபமும் மிச்சமிருந்தாலும், தங்கள் அபிமான சூப்பர் ஸ்டாரின் படத்தை ஒரு ரசிகன் என்ற முறையில் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டார்கள். ரஜினி ரசிகர்களின் மனநிலை அப்படித்தான். ரஜினியும் விரும்பும் வரை சூப்பர் ஸ்டாராகவே இருக்கலாம்.
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால் - நிச்சயம் இது ஒரு பாதுகாப்பான பந்தயமாக அமையும் ரஜினிக்கு.
அலையின் வேகத்தோடு கடலோடுவதில் என்ன வீரமிருக்கிறது? அதே அலை எதிர் முகம் காட்டும் போது கடலோடுவதில் ஏதாவது விவேகமிருக்கிறதா? கப்பல் கவிழ்ந்து கதியற்றுப் போகவேண்டி வரும்.
ஆனால் சாதகமான அலையும் எதிர்ப்பலையும் இல்லாத ஒரு இயல்பான நிலையில் கடலோடுவதுதான் நிலையான வெற்றிகளைத் தரும். இலக்கை அடைய சற்று தாமதமானாலும் எதிராளிகளை சரியான வியூகமிட்டு வீழ்த்த போதிய அவகாசமும், அதற்குத் தோதான தெளிந்த மனநிலையும் இருக்கும்.
அப்படியொரு தருணம் இதுதான்!
ஆனால் இந்த முறையும் ரஜினி எந்த முடிவும் சொல்லாமல் தவிர்த்தால், அவருக்குத்தான் பல சங்கடங்கள் தோன்றும். கடந்த இருமுறைகளிலாவது மக்களின் அதிருப்தி அவருக்கு எதிராகத் திரும்பியது. ஆனால் இம்முறை மக்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் எதிராகத் திரும்பி விடும் அபாயமிருக்கிறது.
ரஜினி எப்போதும் விவேகமான முடிவுகளைத்தான் மேற்கொண்டிருக்கிறார். சிலர் அவரைக் குழப்பவாதி என்று வர்ணித்ததுண்டு. நிச்சயம் இல்லை. விவேகமுள்ள ஒரு தலைமைக்குரிய குணம் அவரிடம் உள்ளது. அதை எப்போது வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது வெளிப்படுத்தினால் போதும் என்றுதான் அவர் தனது நண்பர்களிடம் கூறிவந்திருக்கிறார்.
ஆகவே எந்த முடிவாக இருந்தாலும் ரஜினி அதைத் தயங்காமல் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவே... உரிய முறையில் இதைப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே உயர்வு நிச்சயம்!
சரி...ஒருவேளை அரசியலுமில்லாமல், சினிமாவுமில்லாமல்... எல்லாரும் சொல்லிக் கொண்டிருப்பது போல சமூக நல இயக்கம் ஆரம்பித்தால், எத்தகைய வரவேற்பிருக்கும்?
நாளை அலசலாமே!
குறிப்பு: இதன் கடைசி பகுதிக்குச் செல்லும் முன் இரு நிகழ்வுகளைப் பதிய வேண்டியிருக்கிறது. எனவே ஒரு சின்ன இடைவெளி!
குறிப்பு: மேலும் படங்களுக்கு www.onlyrajini.com பாருங்கள்.








