Showing posts with label Editorial. Show all posts
Showing posts with label Editorial. Show all posts

Friday, September 26, 2008

இதுதான் ஒரு நல்ல மக்கள் தலைவனுக்குரிய குணம்! - 2


ரஜினி எதிர்பார்த்த ‘வேளை’ வந்துவிட்டதா?

இந்தத் தொடர்ச்சியை நீங்கள் படிக்கும் தருணத்தில் என்ன மாதிரி செய்திகள் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கும், அவற்றைப் படித்துவிட்ட பின் உங்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதையெல்லாம் உணர முடிகிறது.

சிலர் ரஜினிக்கு சுத்தமாக ஆதரவே இல்லை என்றும், இன்னும் சிலர் கட்சி தொடங்க ரஜினிக்கு ஜோசியர் அனுமதி கொடுத்துவிட்டார் எனறெல்லாம் தங்கள் கற்பனை எல்லைகளை விரித்துக் கொண்டே போகிறார்கள். முன்பே நாம் சொன்து போல கதை வசனத்தை சினிமாக்காரர்களை மிஞ்சும் அளவுக்கு லாஜிக்குடன் எழுதக் கற்றுக் கொண்டார்கள் பத்திரிகையாளர்கள்.

இருக்கட்டும்... அதைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். மேலே தொடருங்கள்...

ரஜினி அரசியலுக்கு வர இது உகந்த தருணமா... அல்லது அவர் நினைப்பது போன்ற சாதகமான சூழல் இப்போது உள்ளதா... இதுதான் நண்பர்கள் பலரும் நம்மைக் கேட்கும் ஒரே கேள்வி.

நிச்சயம் ரஜினி விரும்பிய மாதிரி ஒரு நல்ல சூழல் இப்போது தமிழகத்தில் இல்லைதான்.
ஆனால்-

முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட அந்த சாதகமான சூழலில் ரஜினி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஒரு நல்ல ஆட்சியாளர் எனப் பெயரெடுக்க ரஜினி பெரும்பாடுபட்டிருப்பார்... ஆனால் அவர் மூலம் நிறைய அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்த கும்பலால் அவருக்கும் கெட்ட பெயராகி, சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தையும்கூட இழக்க வேண்டி வந்திருக்கும். சுயநல அரசியல் தந்திரர்களிடம் சிக்கி பெரும் வேதனைக்கு ஆளாக நேரிட்டிருக்கும்.

அன்றைக்கு ரஜினி ஒரு பெரும் அரசியல் சக்தியாக இருந்தார் (இப்போதும்தான்... லயோலா சர்வேயையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்!). அதனால் அவரை வைத்துக் குளிர் காய பெரும் கூட்டம் காத்திருந்தது. தங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாத கோபத்தில் ரஜினிக்கு எதிராகப் போனவர்கள்தான் இப்போது ரஜினியைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த 12 ஆண்டுகளில் ரஜினியை அரசியலுக்கு வருமாறு மக்கள் நிர்பந்தப்படுத்துவது இது 3-வது முறை. ஆனால் இன்றைய சூழல் மற்ற இரு சந்தர்ப்பங்களிலிருந்தும் வேறுபட்டது. அன்று ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது, ஏழை, பணக்காரன், படித்த, படிக்காதவர்கள் என்ற பேதமில்லாமல் பொதுமக்கள், மீடியா, பெரும்பாலான அரசியல் கட்சிகள், ஆன்மீகப் பெரியவர்கள்... அட அவ்வளவு ஏன்... காவல் துறையினர் கூட ரஜினி முதல்வராக வரவேண்டும் என விரும்பினர்.

ஆனால் இன்று-

ரசிகர்களும், பொதுமக்களும் மட்டும்தான் ரஜினிக்கு பலமாக நிற்கிறார்கள். மற்ற பிரிவினரிடம் பெரிய சலனம் எதுவும் தெரியவில்லை. காரணம் மீடியா உலகம் ஒட்டு மொத்தமாக அவருக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

அவர் என்னதான் நல்லது செய்தாலும் அதிலும் ஒரு குற்றம் சொல்லத் தயாராக நிற்கிறது மீடியா.

அதிகார வர்க்கம் அவர் பக்கமில்லை. பொதுமக்களில் ஒரு பிரிவினர்கூட ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் இப்போதும் அதே போன்ற நிதானத்தைதான் ரஜினி கடைப்பிடிக்கிறார். இதுதான் நல்ல தலைவன் மற்றும் நிர்வாகிக்கு அடையாளம்.

இந்த விஷயத்தில் ரஜினி ஒரு ஞானி (முற்றும் உணர்ந்தவர் என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்!). அன்றைய வரவேற்புக்கு மயங்கிவிடவும் இல்லை, இன்றைய எதிர்ப்பு நிலைக்கு அஞ்சவும் இல்லை. எந்த மண்ணிலும் தவழ்ந்து, எத்தகைய மனிதர்களையும் தழுவிச் செல்கிற நதி மாதிரிதான் அவரது ஓட்டம்!

ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் ஏற்பட்ட தாமதம்தான் மக்கள் மனதில் அவர் மீதிருந்த நல்ல அபிப்பிராயத்துக்கு ஒரு தற்காலிகத் திரையைப் போட்டிருக்கிறது. அப்படியெனில் மக்கள் அவர்மீது வெறுப்பாக இருக்கிறார்களா என்றால் அப்படியும் இல்லை. இது வெறுப்புமில்லை, விருப்பும் இல்லை...

‘வந்தா வரட்டும்... பார்க்கலாம்’ என்ற ஜஸ்ட் லைக் தட் அணுகுமுறை இது!

ஆனால் மக்களின் இந்த மனநிலை மாறும். அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மீது விழுந்துள்ள தற்காலிக திரை நிச்சயம் மறையும். அதற்கு உகந்த நேரம் இதுதான்!

ரஜினி எந்த முடிவை அறிவிப்பதாக இருந்தாலும் அதற்கு இதைவிட்டால் வேறு நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா தெரியவில்லை.

'நான் அரசியலுக்கு வரவே மாட்டேன். குசேலன் படத்தில் நான் பேசிய வசனங்களே முடிவானவை' என அவர் அறிவித்துவிட்டாலும் கூட மக்கள் ஒன்றும் விமர்சிக்கப் போவதில்லை.

'பரவால்லய்யா... தில்லான ஆள் இவர். என்னதான் வருந்தி வருந்தி கூப்பிட்டாலும் அரசியல்.. கட்சியெல்லாம் தனக்கு ஒத்து வராதுங்கிறதுல தெளிவா இருக்காரே...' என்று மக்கள் பாராட்டுவார்கள்...

இதற்காக அவர் படத்தைப் பார்க்காமலும் இருக்கமாட்டார்கள். அரசியலில் தோற்றாலும் நடிப்பில் மரியாதைக்குரிய ஒரு உயர்ந்த இடம் ரஜினிக்குக் கிடைக்கும்.

ரசிகர்கள்தான் மனம் வெதும்பிப் போவார்கள். ச்சே... இதுக்காகத்தானா இவ்வளவு காலம் காத்திருந்தோம் என்று வெறுப்பின் விளிம்புக்குப் போவார்கள். அதுகூட எந்திரன் அல்லது சுல்தான் ரிலீஸ் வரைக்கும்தான்.

மனதுக்குள் நெருடலும் கோபமும் மிச்சமிருந்தாலும், தங்கள் அபிமான சூப்பர் ஸ்டாரின் படத்தை ஒரு ரசிகன் என்ற முறையில் நிச்சயம் மிஸ் பண்ண மாட்டார்கள். ரஜினி ரசிகர்களின் மனநிலை அப்படித்தான். ரஜினியும் விரும்பும் வரை சூப்பர் ஸ்டாராகவே இருக்கலாம்.
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால் -

நிச்சயம் இது ஒரு பாதுகாப்பான பந்தயமாக அமையும் ரஜினிக்கு.

அலையின் வேகத்தோடு கடலோடுவதில் என்ன வீரமிருக்கிறது? அதே அலை எதிர் முகம் காட்டும் போது கடலோடுவதில் ஏதாவது விவேகமிருக்கிறதா? கப்பல் கவிழ்ந்து கதியற்றுப் போகவேண்டி வரும்.

ஆனால் சாதகமான அலையும் எதிர்ப்பலையும் இல்லாத ஒரு இயல்பான நிலையில் கடலோடுவதுதான் நிலையான வெற்றிகளைத் தரும். இலக்கை அடைய சற்று தாமதமானாலும் எதிராளிகளை சரியான வியூகமிட்டு வீழ்த்த போதிய அவகாசமும், அதற்குத் தோதான தெளிந்த மனநிலையும் இருக்கும்.

அப்படியொரு தருணம் இதுதான்!

ஆனால் இந்த முறையும் ரஜினி எந்த முடிவும் சொல்லாமல் தவிர்த்தால், அவருக்குத்தான் பல சங்கடங்கள் தோன்றும். கடந்த இருமுறைகளிலாவது மக்களின் அதிருப்தி அவருக்கு எதிராகத் திரும்பியது. ஆனால் இம்முறை மக்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் எதிராகத் திரும்பி விடும் அபாயமிருக்கிறது.

ரஜினி எப்போதும் விவேகமான முடிவுகளைத்தான் மேற்கொண்டிருக்கிறார். சிலர் அவரைக் குழப்பவாதி என்று வர்ணித்ததுண்டு. நிச்சயம் இல்லை. விவேகமுள்ள ஒரு தலைமைக்குரிய குணம் அவரிடம் உள்ளது. அதை எப்போது வெளிப்படுத்த வேண்டுமோ அப்போது வெளிப்படுத்தினால் போதும் என்றுதான் அவர் தனது நண்பர்களிடம் கூறிவந்திருக்கிறார்.

ஆகவே எந்த முடிவாக இருந்தாலும் ரஜினி அதைத் தயங்காமல் அறிவிக்க வேண்டிய தருணம் இதுவே... உரிய முறையில் இதைப் பயன்படுத்திக் கொண்டால் அவருக்கு மட்டுமல்ல, ஒரு சமூகத்துக்கே உயர்வு நிச்சயம்!

சரி...ஒருவேளை அரசியலுமில்லாமல், சினிமாவுமில்லாமல்... எல்லாரும் சொல்லிக் கொண்டிருப்பது போல சமூக நல இயக்கம் ஆரம்பித்தால், எத்தகைய வரவேற்பிருக்கும்?

நாளை அலசலாமே!

குறிப்பு: இதன் கடைசி பகுதிக்குச் செல்லும் முன் இரு நிகழ்வுகளைப் பதிய வேண்டியிருக்கிறது. எனவே ஒரு சின்ன இடைவெளி!
குறிப்பு: மேலும் படங்களுக்கு www.onlyrajini.com பாருங்கள்.

Friday, August 22, 2008

நண்பர்களே... ஒரு நிமிஷம்!


தமிழகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சென்னையில் வரும் 27ஆம் தேதி கூடி அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக நண்பர் சுந்தர் (http://www.onlyrajini.com)) ஒரு சிறப்புச் செய்தி கொடுத்துள்ளார்.

இன்றைய மாலைப் பத்திரிகைகள் மற்றும் தளங்களுக்கு அநேகமாக இதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலகில் யாருக்குமே இல்லாத மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பது ரஜினிக்குதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பதிவு செய்யப்பட்ட, படாத மன்றங்கள். ஒரு மன்றத்துக்கு சராசரியாக 100 பேர் என்று வைத்துக் கொணாடல் கூட எங்கோ போகிறது கணக்கு. இவர்களைவிட நான்கைந்து மடங்கு பொதுமக்கள் ரஜினி மீது அபிமானம் வைத்திருக்கிறார்கள்.

அதாவது இந்த அபிமானம் அப்படியே திரையரங்கில் பணமழையாகப் பொழிய வேண்டும் என கணக்குப் போடக்கூடாது.

இவர்களுக்கெல்லாம் ரஜினியைப் பிடிக்கும். படம் பிடித்திருந்தால் திரும்பத் திரும்ப பார்த்து ரசிப்பார்கள்.

குசேலன் பேனர்கள் கிழிக்கப்பட்ட போது, குசேலனுக்கு எதிராக பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட போது எங்கே போனது இந்தப் பட்டாளம் என்று ஏற்கெனவே விமர்சனங்கள் எழுந்துவிட்டன. ரஜினியின் அரசியல் நிலைப்பாடு, அவர் படம் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்துவிட்டதில் ரசிகர்கள் ஒருவித சோர்வில் இருந்தது உண்மைதான்.

அதேநேரம் தலைமை மன்றத்தின் உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டுதான் விகடன் எரிப்புத் திட்டத்தைக் கூட ரசிகர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்ததக் கட்டுப்பாடுதான் இன்றைக்கு மிக முக்கியம். அதே நேரம் தங்கள் உணர்வுகளை நியாயமான வழிகளில் வெளிப்படுத்துவதிலும் தவறில்லை. இந்த நடவடிக்கைகள் ரஜினியைப் புண்படுத்தும் விதத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கடந்த முறை காரைக்குடியில் கூட்டம் போட்டு தனிக் கட்சி அறிவித்த மாதிரி எதுவும் செய்து விடக்கூடாது. இன்னொன்று ரஜினி அரசியலுக்கு வந்தே தீரவேண்டும் என்று வற்புறுத்துவதும் இப்போதைக்கு வேண்டாம்.

ரசிகர்கள் தங்கள் ஒற்றுமையை, அவர் மீதுள்ள நம்பிக்கையை அழுத்தமாக உணர்த்தும் விதத்தில் இக்கூடத்தில் முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆவேசம் வேண்டாம்... விவேகமாக இருந்தால் ரஜினிக்கு எதிராக நடக்கும் இந்த சதிகளையும் எளிதில் சமாளிக்கலாம்!

Monday, August 11, 2008

குசேலன் - சந்தேகம் வேண்டாம், வெற்றிப் படம்தான்!


நிறைய விமர்சனங்கள், அலசல்கள் வந்துவிட்டன குசேலன் பற்றி.

நானும் அவற்றில் ஒன்றை இங்கே கொடுத்திருந்தேன். அதை இப்போது நீக்கிவிட்டேன்.

காரணமாகத்தான்.

காரணம் சிலர் செய்த கோயபல்ஸ் பிரசாசாரத்தை நம்பி நானும் இந்தப் படம் தோற்றுவிட்டிருக்குமோ என சற்றே அயர்ந்துவிட்டேன். அவ்வளவுதான். எந்த ஒரு சாதாரண ரசிகனுக்கும் ஏற்படுகிற சின்ன தடுமாற்றம் அது.

இந்த கட்டுரையை எழுதுவதற்கு 2 மணிநேரம் முன்புதான் - இன்று செவ்வாய்கிழமை- காசி, கமலா மற்றும் சைதை ராஜ் திரையரங்குகளைப் பார்த்துவிட்டு வருகிறேன்.

இன்றைய மாலை நேர காட்சிக்கு கிட்டத்தட்ட திரையரங்குகள் நிறையத் தொடங்கிவிட்டன.
மோட்டார் சைக்கிள்களை நிறுத்த இடமின்றி பக்கத்தில் இடம் மாற்றிக் கொண்டிருந்தார்கள், காசியில். நினைவில் கொள்ளுங்கள், இன்று செவ்வாய்க்கிழமை. நிறைவாக இருந்தது.

இந்தப் படத்தை ரஜினி தமிழில் யாருக்காகச் செய்தாரோ, அவர்களிடம் இதுவரை சம்பளமாக ஒரு நயா பைசா கூட பெற்றுக் கொள்ளவில்லை என்ற உண்மை இங்கே எத்தனைப் பேருக்குத் தெரியும்…

செவன் ஆர்ட்ஸ் மற்றும் அஸ்வினி தத் ஆகிய இருவரிடமிருந்தும், தெலுங்குப் பதிப்புக்காக மட்டுமே அவர் சம்பளம் பெற்றுக் கொண்டார்.

அவரைப் போய் வியாபாரி என்றும், பணத்துக்காக மாற்றிப் பேசுகிறார் என்றும் விமர்சிப்பவர்களைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

முன்பு, 1985லிருந்து 87 வரையிலான அமரர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியை கோமாளியின் தர்பார் என்றும், துக்ளக் தர்பார் என்றும் எழுதிய அதே உத்தம பத்திரிகைகள், இன்று ‘புரட்சித் தலைவரின் ஆட்சிக் காலம்தான் தமிழகத்தின் பொற்காலம்’, என்று அவர் புகழ் பாடுவதைப் படிக்கிறோம். அன்று அவர் படங்களைக் கிண்டலடித்த அதே விகடனும், குமுதமும், மக்கள் திலகத்தின் படங்கள்தான் 'க்ளீன் எண்டர்டெயின்மெண்ட்' என பாராட்டுப் பத்திரம் வாசிக்கின்றன.

அட, அவ்வளவு ஏன்... இந்த சத்துணவுத் திட்டத்துக்கு எம்ஜிஆர் ரூ.100 கோடி ஒதுக்கியதைக் கிண்டலடித்தும் குறை கூறியும் எழுதாதவை மூன்று தினப் பத்திரிகைகள்தான்.
தினத்தந்தி, தினத்தூது மற்றும் அண்ணா.

வாரப் பத்திரிகைகளில் தாய் மற்றும் இதயம் பேசுகிறது தவிர மற்றவர்கள் எல்லாம் பொளந்து கட்டினார்கள் புரட்சித் தலைவருக்கு எதிராக.

ஆனால் இன்று... விளக்கத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும் அந்த திட்டத்தின் சாதனை என்ன... வாக்கு வங்கி எவ்வளவு என்று!

நண்பர்களே… உங்களுக்குத் தெரிந்திருக்கும்… பாபா படத்துக்காக 48 அட்டைப் படக் கட்டுரைகளை (ஆனந்த விகடன் 16, ஜூனியர் விகடன் 32) வெளியிட்டு, ரஜினி ரசிகர்களையே மிஞ்சிய பெருமைக்குரியவர்கள் விகடன் குழுமத்தினர்.

அதுவும் அன்றைக்கு அவரை சூப்பர் ஸ்டார் என்று கூட குறிப்பிடாமல், தலைவர் என்ற அடைமொழியோடு கட்டுரை எழுதி நம் ரசிகர்களின் பாக்கெட்டுகளைச் சுரண்டியவர்கள். நானும் ஒரு பத்திரிகைக்காரன் என்றாலும் எனக்கு இதைச் சொல்வதில் எந்தத் தயக்கமுமில்லை. இதை அவர்களின் இணை நிர்வாக இயக்குநரிடமே நேரடியாகச் சொன்னவன்.

அவ்வளவு ஏன், ரஜினிக்கு ஓப்பனாக கடிதம் எழுதிய இந்த வீராதி வீர விகடன்கள், குசேலன் விமர்சனத்தை எழுதாமல் விட்டிருக்க வேண்டியதுதானே… அப்படிச் செய்யமாட்டார்கள். காரியவாதிகள்… குசேலன் விமர்சனத்துக்காகவே இந்த இதழ் கூடுதலாக பல ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகுமே... அதை எப்படி இழக்க முன்வருவார்கள் இந்த தர்மாத்மாக்கள்!

அவ்வளவு ஏன்… இன்று பெரிதாக எழுதிக் கிழிக்கும், தன்னைத்தானே பெரிய தத்துவ மேதையாகக் கருதிக் கொள்ளும் அந்த ஜோல்னா பை நபர், அருணாச்சம் படத்துக்காக ரஜினி நடத்திய பிரஸ்மீட்டில் ‘ரூபாய் 2000 அன்பளிப்பு’ பெற்றுக் கொண்டு அதையும் பெரிய சாதனையாக அடுத்த இதழில் எழுதியவர்தானே!

அடுத்து ரஜினியை விமர்சித்திருக்கும் எழுத்தாள நபரோ பார்களில் மட்டுமே பிரபலமான பாரு. ரஜினியுடன் சேர்ந்து தண்ணியடித்தவனாக்கும் நான் என ஊரெல்லாம் பீற்றிக் கொள்வதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு. ஆனாலும் ஒருத்தரும் மதித்த மாதிரி தெரியவில்லை. வந்துட்டார் அந்த தேசிய தமிழ் நாளிதழில் எழுதிக் கிழிக்க... அதுவும் சொந்த சரக்கென்றால் எவரும் சீந்த மாட்டார்கள். இது குசேலன் சீஸன். முடிந்த வரை அதில் தனது மூன்றாம் தரத்தைக் காட்ட முயன்று கேவலப்பட்டு நிற்கிறார்.

இந்த மாதிரி பத்திரிகையாளர்களை, பார்களில் இலக்கியம் தேடும் சைக்கோ கூட்டத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்க வேண்டிய அவசியமில்லை. இன்றைக்கு பத்திரிகையுலகம் நிதானத்திலும் இல்லை!!



இல்லாவிட்டால் எந்த ஆதாரமும் இல்லாமல், தியேட்டர்களுக்கே செல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு, ஆகஸ்ட் 3-ம் தேதியே கூட்டம் குறைந்துவிட்டதாக எழுதுமா அந்த முன்னணி நாளிதழ்!

ஆக. 3 ஞாயிற்றுக்கிழமை. ரஜினியின் பழைய படம் போட்டால் கூட கூட்டம் அலைமோதும் நாள் அது. ரிலீசாகி மூன்றாவது நாள் மட்டுமே ஆன அவரது படம் விழுந்துவிட்டதாக எழுதுவது எத்தனை பெரிய மோசடி!

இப்போதும் சொல்கிறேன்… நாளையே வாசுவோ… பிரமிட் நிறுவனமோ ஒரு பிரஸ் மீட் வைத்து சில ஆயிரங்களை அள்ளி விட்டுப் பார்க்கட்டும், இதே பத்திரிகைகளின் ‘பத்திரிகா தர்மம்’ என்னவென்று தெரிந்துவிடும்…!!

மக்களே... உண்மையான ரசிகர்களே... விழிப்போடு இருங்கள். நல்லவர்கள் பக்கம் உங்களைச் செல்ல விடாமல் தடுப்பதற்காகவே இருப்பவைதான் பத்திரிகைகளும் இன்றைய அரசியல் கட்சிகளும்.
நல்லவர்களை அடையாளம் கண்டு கொள்ள இவர்களை நம்பாதீர்கள்!

Sunday, August 10, 2008

இதுவும் கடந்து போகட்டும்!


உள்ளூரில் ரஜினி எதிர்ப்பு குரைப்புகள் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் கூட ரஜினிக்கு எதிராக ஒரு குரல் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்...

என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது... செலவில்லாமல் இலவச பப்ளிசிட்டி கிடைக்கிற அல்ப சந்தோஷம் அவர்களுக்கு.

ஒரு நாலாம்தர... ஏன் ஐந்தாம் தர பத்திரிகை அது. அதன் பெயரைக்கூட இங்கே எழுத விரும்பவில்லை. அவர்களுக்குக் கூட ரஜினி கிள்ளுக்கீரையாகிவிட்டார்.

இத்தனை லட்சம் ரசிகர்கள் இருந்து என்ன பயன்?
ஒருவராவது தங்கள் எதிர்ப்பை வலிமையாகக் காட்டினார்களா...

அட மற்ற காட்டுமிராண்டி கும்பல் மாதிரி பஸ்களைக் கொளுத்தி, நடைபாதையில் உறங்கிக் கொண்டிருக்கும் பிச்சக்காரர்களை கட்சித் தொண்டன் எனக் கூறி பெட்ரோலில் குளிப்பாட்டி அல்லது மாணவிகளை உயிரோடு கொளுத்தியெல்லாம் எதிர்ப்பு காட்ட வேண்டாம். குறைந்த பட்சம் காந்திய வழியில் ஒரு அடையாள எதிர்ப்பையாவது காட்டலாமே...

99 சதவிகித பத்திரிகைகளுக்கு வருத்தம் தெரிவிப்பதற்கும் மன்னிப்புக் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் மட்டுமல்ல, நேர்மை என்றாலும் கூட என்னவென்றே தெரியாது.

விகடனையும் குமுதத்தையும் நக்கீரனையும் குறை சொல்லிப் பயனில்லை. அவர்கள் தங்கள் பத்திரிகைகளை முன்னுக்குக் கொண்டு வர உபயோகித்த வழிகள் அப்படி.

நடக்காத ஒரு விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா...
இதை அப்படியே நம்பிவிட்ட சில ரசிகர்களும் இந்த நேரம் பார்த்து மனச்சோர்வுடன் வெளியில் தலைகாட்ட முடியாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு பத்திரிகை அதிபரும், பத்திரிகையாளர்களும் இனி ரஜினி நடித்து வெளிவரும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பங்கு கேட்டாலும் கேட்பார்கள் போலிருக்கிறது.
இத்தனை நாள் இவர்கள் பார்த்து, கவலை மறந்து சிரித்த ஒரு அருமையான கலைஞனை பொய் செய்திகளால் நிலைகுலைய வைக்க இவர்களுக்கு எப்படி மனசு வந்தது?

கடந்த 25 ஆண்டுகளாக விகடன், குமுதம் வருமானங்களில் கணிசமான பகுதி ரஜினிக்குத்தான் சொந்தம்! இவ்வளவு சொரணையுள்ள இந்த வீரத் தமிழர்கள் அதை திருப்பி வாசகர்களின் நலனுக்குச் செலவழித்துவிடலாமே...

நக்கீரன் என்ற ஒரு பத்திரிகை இன்று தாக்குப்பிடிக்க இருவர் முக்கியக் காரணம். ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினி, அடுத்தவர் சூப்பர் வில்லன் வீரப்பன்.
இனி நல்லவர் ரஜினியை ஏமாற்றி சம்பாதிக்க முடியாது எனத் தெரிந்ததும், கொள்ளையன் வீரப்பன் பக்கம் தாவிய பத்திரிகை அது.

அப்படிப்பட்ட ஒரு பத்திரிகையும் அதன் அதிபரும் இன்று நியாய தர்மம் பேசுகிறார்கள். சாத்தான் வேதம் ஓதுவதை நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு!

இதுக்குத்தான் சார் யாரையுமே பார்க்க விரும்பறதில... ரசிகர்களைக் கூட இந்த பத்திரிகைகள் கெடுத்து வச்சிருக்கேன்னு ஒவ்வொருமுறையும் சார் வருத்தப்படுவார்.... அவரோட நல்ல மனசு வெளியாகிற தருணம் விரைவில் வரும் - இது சத்தியநாராயணா சில தினங்களுக்கு முன் என்னிடம் சொன்னது.

நிஜமாகட்டும்...


படங்கள்: http://onlysuperstar.blogspot.com