
பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.
கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!
வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.
எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.
ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.
அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.
ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.
அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.
அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.
ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.
அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!
அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.
‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.
அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.
நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.
அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)
சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.
வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!




