Showing posts with label அலசல். Show all posts
Showing posts with label அலசல். Show all posts

Sunday, August 24, 2008

இது ‘விகட’ துவேஷம்!


பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!

வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.

எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.

ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.

அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.

அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.

ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.

அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!

அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.

அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.

நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.

அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)

சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.

வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!

Saturday, August 23, 2008

அட... பரவாயில்லையே!


திரைப் பிரமுகர்கள் அத்தனை பேருக்குமே மனசாட்சி செத்துவிட்டதா... ரஜினிக்கு எதிராக இத்தனை அநியாயங்கள் நடந்தும் அவரால் பயன் பெற்ற, கோடீஸ்வரர்களான, உதவிகள் பெற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் வாய் மூடி ஊமைகளாய்க் கிடக்கின்றஎனவே எனப் பொருமிக் கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.

லைட் மேன்களின் பிரச்சினையில் ஒரு வாரமாக பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருக்கும் ராம நாராயணன் அண்ட் கோவுக்கு, குசேலனுக்கு எதிரான அநியாயங்களைக் கண்டு கொள்ள நேரமில்லை.

நண்பர்கள் சொல்வதுபோல குஷ்புவுக்கு கொசு கடித்தால்கூட ஓடோடிப்போய் கலைஞரிடம் சொல்லி அதற்கு மருந்து போடும் புண்ணிய வேலையைச் செய்யும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாருக்கும் துணைச் செயலாளர் சத்யராஜூக்கும் இந்தப் பிரச்சினை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

என்ன செய்வது... இவர்கள் பெவிக்காலைப் பூசிக்கொண்டு உருண்டால்கூட ஒன்றும் ஒட்டமாடேங்கிறதே... இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார். இவர்கள் அனைவரும் சும்மா ஸ்டார்கள். அந்த வயிற்றெரிச்சல் அவர்களுக்கு.

இனி சினிமாக்காரர்கள் எதற்காகவும் ரஜினியிடம் வரமாட்டார்களா... அவர்களுக்கு ரஜினியின் தேவை முடிந்துவிட்டதா... என்று எல்லோரும் ஒருவித கடுப்போடு இருந்த நேரத்தில், ஆதரவுக் குரல் கொடுத்துள்ளன, விநியோகஸ்தர்கள் சங்கங்கள்.

தமிழ் சினிமா விநியோகத்தைப் பொருத்தவரை இந்த நால்வர் வைத்ததுதான் சட்டம். அதனால் அவர்களின் குரலுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது...
விநியோகஸ்தர்களுக்குத் தெரியும் ரஜினி படங்களில் எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பது.

அதிலும் ரோபோவின் நாயகனல்லவா ரஜினி... அதனால் இப்போதே ஒரு பாதுகாப்புக்கு அறிக்கை விட்டு வைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் உடுக்கை இழந்த நேரத்தில் நீண்டிருக்கும் உதவிக் கரங்கள் இவை. பாராட்டுவோம்.


இனி அறிக்கை விவரம்:

ரஜினியை மிரட்டுவதா? – விநியோகஸ்தர்கள் கண்டனம்

வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம். இதில் சம்பந்தப்பட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத்தை விட்டுவிட்டு, ரோபோவின் நாயகன், சூப்பர்ஸ்டார் ரஜினியை மிரட்டிப் பார்ப்பது கண்டனத்துக்குரியது என விநியோகஸ்தர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகம், கோவை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம், மதுரை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை குசேலன் படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:

குசேலன் படப் பிரச்சினை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் அறிக்கைகள், வியாபார அடிப்படை உரிமைகளை தகர்க்கும் வண்ணம் அமைவது கண்டு அதிர்ச்சி அடைகிறோம்.

காலம் காலமாக எத்தனையோ பெரிய படங்கள் எதிர்பாராத வீழ்ச்சி அடைவதும், சிறிய பெரிய படங்கள் மாபெரும் வெற்றி அடைவதும் வழக்கமான ஒன்றுதான். ஒரு படத்தின் வெற்றி-தோல்விகள் அவரவர் இட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அமைவதாகும்.

எதிர்பாராத லாபம் அடையும்போது மகிழ்வதும், வீழ்ச்சி அடையும்போது வருத்தம் அடைவதும் இயற்கையே.

குசேலன் படத்தை கவிதாலயம் தயாரிக்க, உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது. அவர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் சில பகுதிகளுக்கு உரிமை பெற்று திரையிட்டனர். பெரும் பகுதிகளை சாய்மீரா நிறுவனமே திரையிட்டது. அப்படி உரிமை பெற்றவர்களிடம் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த லாபம் பெறலாம் என்று பல வழிகளில் திரையிட்டுள்ளனர்.

கவுரவ வேடம்

இன்னும் ஒரு சில தியேட்டர் அதிபர்கள் மூன்றாவது நபர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு விற்று விட்டனர். ஆரம்பம் முதல் தான் இதில் கவுரவ வேடம் ஏற்றுள்ளதாக ரஜினிகாந்த் கூறியது அனைவருக்கும் தெரியும்.

இது, ஒரு மலையாள படத்தின் மறுபதிப்பு என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்த படத்துக்கு இந்த விலை மிக அதிகம் என்று தெரிந்து பல பேர் அமைதி காக்க, ஒரு சிலர் மட்டும் இந்த படத்தை லாபம் என்ற நோக்கை மட்டும் வைத்து போட்டா போட்டி நடத்தி வாங்கியதும் அனைவருக்கும் தெரியும்.

இன்று இழப்பு என்றவுடன் போர்க்கொடி உயர்த்தி மிரட்டுவது ஏன்? பல படங்களில் அதிகப்படியாக லாபம் பெற்றபோது, அதன் வினியோகஸ்தருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ திருப்பிக் கொடுத்தது உண்டா?

படம் பெற்றது சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து. அதை விடுத்து ஒப்பந்தமிடாத கவிதாலயத்துக்கும், இதில் எந்த சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின் மீதும் பாய்வது ஏன்?

ரோபோ படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்தை மிரட்டிப் பார்க்கவா?

லாபமும், நஷ்டமும் வியாபார ஒப்பந்தத்தின் வழி நடக்க வேண்டிய ஒன்று. தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரெயில் தடம்புரண்டு ஊருக்குள் பாய்ந்தால், அதன் முடிவு எப்படி இருக்கும்? வேண்டாம் முரண்பட்ட விவாதங்கள், இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்ற பலம் வாய்ந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.