Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Sunday, March 15, 2009

விருதுகளைத் தாண்டிய மகா கலைஞர் இளையராஜா! - பாலமுரளி கிருஷ்ணா

.ஆர் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கினார்… மகா சந்தோஷம். அதற்காக மற்ற கலைஞர்களை குறைவாக மதிப்பிடுவது அறியாமை. இளையராஜா என்ற மகா கலைஞன் பிறக்காமல் போயிருந்தால் தமிழ் சினிமா இசையே தெரியாமல் போயிருக்கும். அவரும் எம்எஸ்வியும் இன்னும் எத்தனையோ மேதைகளும் விருதுகளையே வென்றவர்கள். அவர்களை யாரோடும் ஒப்பிட வேண்டாம், என்று கூறியுள்ளார் கர்நாடக இசை மேதை டாக்டர் எம் பாலமுரளிகிருஷ்ணா.

கர்நாடக இசை கலைஞரும், திரைப்பட பாடகருமான பாலமுரளி கிருஷ்ணா 40 வருடங்களுக்கு பிறகு ‘கதை’ என்ற படத்தில் பாடகராகவே நடித்து வருகிறார்.

இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 40 வருடத்துக்கு முன்பு ‘பக்தபிரகலாதன்’ என்ற படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தேன். அது புகழ்பெற்றது. பிறகு வந்த வாய்ப்புகள் அனைத்தும் நாரதர் வேடங்களாக வந்ததால் மறுத்துவிட்டேன்.

இப்போது ‘கதை’ படத்தில் நான் பாடிய பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பாடலை பாடுவது போன்று நடிக்கிறேன். சினிமாவில் நடித்தது குறைவுதான். காரணம் என் முழு கவனமும் இசையின் பக்கம் இருந்தது. இப்போது நிறைய நேரம் இருக்கிறது. நல்ல கேரக்டரோடு வாய்ப்பு தந்தால் தொடர்ந்து நடிப்பேன்.

யாரையும் யாரோடும் ஒப்பிட வேண்டாம்!

ரஹ்மான் ஆஸ்கர் வாங்கியது பற்றி நிறைய கேட்டு விட்டார்கள். நானும் நிறைய சொல்லிவிட்டேன். இந்த விஷயத்தில் நான் அதிகம் சங்கடப்பட்டது விருது பெற்ற ரஹ்மானோடு இளையராஜாவையும் மற்றவர்களையும் ஒப்பிட்டு வந்த செய்திகள் மற்றும் அரைவேக்காட்டுத்தனமான கட்டுரைகள்.

ரஹ்மான் ஒரு இளம் மேதை. அவர் ஆஸ்கர் விருது வாங்கியது எல்லாருக்கும் பெருமையான விஷயம்தான். ஆனால் அதற்காக மற்ற மேதைகளை சிறுமைப்படுத்தும் போக்கு, உண்மையான இசை ரசிகர்கள் செய்யும் வேலையல்ல.

இசை பொதுவானது. யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்து விடவில்லை. ஆனால் தனக்குத் தெரிந்த வித்தையை மட்டுமே விஸ்தாரமாகக் காட்டிக் கொண்டிருக்காமல், இசையின் இலக்கணத்தை மீறாமல் சாதனைகள் படைத்துக் கொண்டிருப்பவர் ராஜா. அவருக்கு விருதுகள் ஒரு பெரிய விஷயமல்ல. விருதுகளைத் தாண்டிய மகா கலைஞன் அவர். நியாயமாக இப்போது உலகின் உயர்ந்த இசை விருதுகள் அவரைத் தேடி வரவேண்டும்.

இன்னொரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். உலகின் அனைத்து இசைக்கும் ஆதி இந்திய இசையே. இங்கிருந்துதான் சகலமும் ஆரம்பம். ஒரு இந்திய இசையமைப்பாளருக்கு தெரிந்த ஆத்மார்த்தமான இசையை வெளிநாட்டுக்காரனால் தரமுடியாது.

நான் உலகின் பெரும்பாலான இசையைத் தெரிந்து வைத்திருக்கிறேன். பல மொழிகளில் பாடியிருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். இந்திய சாஸ்திரிய இசைக்கு இணையில்லை. அந்த சாஸ்திரிய இசையில் கரை கண்டவர் இளையராஜா என்றார் பாலமுரளி கிருஷ்ணா.

இளையராஜாவின் இசையில் சின்னக் கண்ணன் அழைக்கிறான்… என்ற காலத்தால் அழியாத இனிய பாடலைப் பாடியவர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. ராஜாவின் திருவாசகம் ஆரட்டோரியோவை வெளியி்ட்டவரும் அவரே.

குறிப்பு: தட்ஸ்தமிழில் வந்த கட்டுரை இது. ஒரு விஷயத்தை நண்பர்கள் கவனிக்க: இளையராஜா மற்றும் ரஹ்மான் இருவரின் நலம் விரும்பி டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா. யாரையும் யாரோடும் ஒப்பிடக்கூடாது என்பதே அவரது இந்தப் பேட்டியின் நோக்கமாக இருந்துள்ளது. ரஹ்மானை இளம் மேதை என்றே அவர் வர்ணிக்கிறார். எனவே கருத்து எழுதும் முன் இவற்றைக் கவனத்தில் கொள்வது நலம்.

Sunday, August 24, 2008

இது ‘விகட’ துவேஷம்!


பத்திரிகைகளைத் திட்டுவதல்ல நமது நோக்கம். உலகத்தின் அழுக்குகையெல்லாம் வெட்ட வெளிச்சமாக்கிக் காட்ட முயல்வதாகக் கூறிக்கொள்ளும் அவர்களின் உள்ளழுக்குகள் பற்றி அவ்வப்போது சுட்டிக் காட்டி நம்மைநாமே விழிப்பாக்கிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

கமர்ஷியல் – (போலி) அறிவு ஜீவித்தனம் இந்த இரண்டின் சரிவிகித கலவையாக்கும் நாங்கள் என மார்தட்டிக் கொள்ளும் விகடன் குழுமத்தில் உள்நீரோட்டம் போல மாறாமல் இருப்பது அவர்களின் கேவலமான ஜாதி வெறுப்புணர்வு!

வெளியிலிருந்து பார்க்கும் போதும், அவர்கள் தரும் அசைவ உணவுக் குறிப்புகள், தலித் இலக்கிய பீத்தல்களைப் படிக்கும்போதும், ‘என்னய்யா சொல்ற... அவங்க ரெம்ப்ப்ப நல்லவங்களாச்சே...’ என உங்களுக்கும் சொல்லத் தோன்றும்.

எரிகிற கொள்ளியில் இவர்கள் நல்ல கொள்ளிகள்...!
அப்படி வேண்டுமானால் சமாதானப்பட்டுக் கொள்ளுங்கள்.

ஆரம்ப நிலையில், திறமைகள் மொட்டவிழும் தருவாயில் உள்ள பலரையும் இவர்களின் குழுமப் பத்திரிகைகள் மட்டம் தட்டியே வந்திருக்கின்றன. அதே நபர்கள் மேலெழுந்து ஒரு சமூக அந்தஸ்தை எட்டிவிட்டால், அவர்களின் அறிவிக்கப்படாத பிஆர்ஓவாக செயல்படவும் துணிந்து விடும் மானமுள்ளவர்கள் இவர்கள்.

அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி சொல்லவில்லை. அண்ணாமலையில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்துப் பேசினார். அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி சர்க்குலேஷனைப் பெருக்கி காசு பார்த்தனர்.

ரஜினி செய்தது சரியா என்று கேட்காதீர்கள்... அதை அலசும் தருணமும் இதுவல்ல.
அடுத்து இளையராஜா.

தமிழ் சினிமாவின் போக்கையே தலைகீழாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரியவர். அவரது அறிமுகப் படம் அன்னக்கிளி.

அன்னக்கிளி என்னும் படம் யாருக்காக ஓடியது என்று கேட்டால் இன்றைக்கு பள்ளி செல்லும் குழந்தை கூடச் சொல்லவிடும்.

அந்தப் படம் தயாராகும் போது பஞ்சு அருணாச்சலத்துக்குப் பெயரே ‘பாதிப் படம் பஞ்சு’ என்பதுதான். அதாவது அவர் எடுக்கிற படம் பாதியிலேயே நின்றுவிடுமாம். அதனால் அப்படியொரு பெயர்.

ஆனால் கஷ்டப்பட்டு முழுசாகவே எடுத்து முடித்து திரையிட்டார் அன்னக்கிளியை. முதல் சில வாரங்கள் படம் படு சுமாராகத்தான் போனது. பல திரையரங்குகளில் தூக்கிவிட்டார்கள்.

அப்போதுதான் கல்யாண வீடுகள், திருவிழா கோயில்களில் மச்சானைப் பாத்தீங்களா... எனும் தெம்மாங்குப் பாட்டு சக்கை போடு போடத் துவங்கியது. அடுத்த வாரமே படத்தின் தலைவிதி மாறிப்போனது. பிளாக் பஸ்டர்!

அந்தப் படத்துக்கு விகடன் எழுதியுள்ள விமர்சனத்தைப் படித்துப் பார்த்தால் அதிர்ந்து போவீர்கள்.

‘இவ்வளவு கேவல எண்ணம் கொண்ட நீங்கள்தானா உங்களை தமிழ்நாட்டின் நாடித் துடிப்பு எனச் சொல்லிக் கொள்கிறீர்கள்...?’ எனக் கேட்டுத் துப்பி விடுவீர்கள்.

அந்தப் படத்தின் விமர்சனத்தில் எங்குமே இளையராஜாவின் பெயரே கிடையாது. அட குறாந்தது.. 'இந்தப் படத்துக்கு இசை யாரோ ஒரு புது இசையமைப்பாளர் இளையராஜாவாம்', என்று கூடப் போடவில்லை.

நல்லவேளை இதற்கு ஆதாரம் தேடும் சிரமம் கூட வைக்காமல், அவர்களே மலரும் நினைவுகள் எனும் பெயரில் குட்டி இணைப்பு வெளியிட்டு ‘எங்கப்பன் குதிருக்குள்தான் இருக்கான்’ என்று உறுதிப்படுத்தி விட்டார்கள்.

அவர்கள் கவனக்குறைவுக்கு நன்றி!

ஆனால் இன்றைக்கு, இளையராஜாவுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ இந்தப் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்களுள் ஒருவரும், அதோ பத்திரிகையின் ஒரு புகைப்படக்காரரும்தான்.
இவர்கள் சொல்லாமல் யாருக்கும் பேட்டி கூடத் தரமாட்டார் ராஜா என்ற அளவுக்கு அழுத்தமான பிம்பத்தை ஏற்படுத்திவிட்டாரகள். (தன்னை மனதளவில் ஒரு பிராமணராகவே இளையராஜா மாற்றிக் கொண்டதன் விளைவு இது என்றும் சொல்லலாம். அதுபற்றி வேறொரு சமயத்தில் பேசலாம்...!)

சிம்பனி, திருவாசகம் ஆரட்டோரியோவுக்கு இளையராஜா பணம் வாங்கினாரோ இல்லையோ... அந்த செய்தியை ஆவி, ஜூவிகளில் முடிந்தவரை தலைப்புச் செய்தியாக்கி நன்கு காசு பார்த்தவர்கள் இவர்கள்தான்.
இப்படி அவமானப்படுத்தி, பின்னர் இவர்களால் அரணைவனைக்கப்பட்ட கொண்ட மேதைகள் ஒருவரல்ல இருவரல்ல.. இன்னும் நிறைய.

வானத்தின் கீழே... அந்தப் பட்டியல் தொடரும்!