குசேலன் என்ற படத்தின் தகுதி, தரம் இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, ரஜினி மீதான காழ்ப்புணர்ச்சியை மட்டுமே காரணமாக்கி அந்தப் படத்தை முதல் வாரத்திலேயே தோல்விப்படம் என முத்திரைக் குத்தி விட்டது மீடியா.முன்பே சொன்னது போல, இந்தப் படத்தில் ஆளுக்கு ஒரு பங்கு வேண்டும் என மீடியா வெளிப்படையாகக் கேட்காதது ஒன்றுதான் பாக்கி. மற்றெல்லாவற்றையும் செய்துவிட்டார்கள்.
இந்தப் படம் ஓடக் கூடாது என்று வெளிப்படையாகவே வேலை பார்த்தன பத்திரிகைகளும் சில சேனல்களும்.
ரஜினியின் ரசிகர் என்பதையும் தாண்டி ஒரு நல்ல சினிமா பார்வையாளனாக குசேலன் விவகாரத்தைப் பார்த்த அனைவருமே இந்தக் கருத்தை ஒப்புக் கொள்வார்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு, அழுத கண்களோடு வெளியில் வந்த அதே பத்திரிகையாளர்கள், படம் பார்க்கும்போது இருந்த இளகிய மனதை பொறாமைக்கு அடகு வைத்து, பொய்யெழுதி தங்கள் வக்கிரத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்.
ரஜினி கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக பிரச்சாரம் செய்து அவருக்கு எதிரான போக்கை உருவாக்க முயற்சி செய்தார்கள். ஒரு கவுரவ வேடத்தில் நடிக்க அவர் ரூ.26 கோடி வாங்கியதாக கூசாமல் பேசினார்கள்.
எந்தப் படமாக இருந்தாலும் குறைந்தது 3 மாதங்கள் வரையாவது பொறுமை காக்கும் திரையரங்க உரிமையாளர்கள், மூன்றாவது நாளே நஷ்ட ஈடு கேட்டு போர்க்கொடி தூக்கியதுதான் கொடுமை. இந்தப் படம் தூக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வரைகூட பெரும்பாலான திரையரங்குகளில் 50 சதவிகித பார்வையாளர்களைப் பார்க்க முடிந்தது. 10 சதவிகிதம் கூட பார்வையாளர்கள் இல்லாத பல படங்களை 200 நாட்கள் ஓட்டி சாதனைப் படைத்த திரையரங்கு உரிமையாளர்கள் படம் தோல்வி, அதிக விலைக் கொடுத்துவிட்டோம், நஷ்ட ஈடு வேண்டும் என பத்திரிகைகள் மூலம் செய்த பிரச்சாரம் நாடறிந்தது.
போகட்டும்...
இப்போது, வெளிநாட்டில் இந்தப் படம் எந்தளவு சாதனைப் படைத்துள்ளது என்ற விவரங்கள் கிடைத்துள்ளன.
இங்கிலாந்தில் மட்டும் இந்தப் படம் வசூல் செய்த மொத்தத் தொகை கிட்டத்தட்ட ரூ.89 லட்சம். வெளியான முதல் வாரத்தில் 13-வது இடத்தில் இருந்தது குசேலன். கமல்ஹாசனின் தசாவதாரம் ரூ.1.07 கோடிகளை வசூலித்துள்ளது. ஒரு சூப்பர் ஹிட் படம் எனப்பட்ட தசாவதாரத்துக்கும், தோல்விப் படம் என இவர்கள் வர்ணித்த ரஜினியின் குசேலனுக்கும் இடையிலான வசூல் வித்தியாசம் ரூ.19 லட்சம்! தசாவதாரத்தைக் குறைத்துச் சொல்ல இங்கே இதைக் குறிப்பிடவில்லை. ஒரு வணிக ஒப்பீட்டுக்காகத்தான்.
மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள், ரஜினியின் தோல்விப் பட வசூலுக்குச் சமம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளதைக் குறிப்பிடவே இதைச் சொல்கிறோம்.
அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிகச் சிறந்த படமாகப் பார்க்கப்பட்ட குசேலன், சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ரூ.5.96 கோடிகளை வசூலித்ததாக சிங்கப்பூர் ஸ்ட்ரெயிட்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை முழுமையாகக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளனர் ரஜினி ஆதரவாளர்கள் சிலர். இதையே சாய்மிரா நிறுவனமும் சில தினங்களுக்கு முன் உறுதிப்படுத்தியது நினைவிருக்கலாம்.
ரஜினிக்கு பகிரங்கக் கடிதம், வேறு பெயரில் ஒளிந்து கொண்டு மோசடிக் கடிதம் என்றெல்லாம் எழுதிய அஞ்ஞானிகள், இப்போது ரஜினி கூறிய விளக்கத்தைக் கேட்டதும் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்? அதே முக்கியத்துவத்துடன் ரஜினி விளக்கத்தையும் வெளியிட்டிருக்கலாமே!
மீடியா எப்போதும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதும், சம்பந்தப்பட்ட நபர் மீது இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு பொய் எனத் தெரிந்த பின் குறைந்த பட்சம் அதற்கான வருத்தம் கூடத் தெரிவிக்காததும் எந்த வகை தர்மத்தில் சேர்த்தி?
காலம் கடந்தாலும், உண்மைகள் இனியாவது வெளியில் வரட்டும்!
http://www.envazhi.com











