Showing posts with label Theaters. Show all posts
Showing posts with label Theaters. Show all posts

Sunday, August 24, 2008

இவர்கள் பகல் கொள்ளைக்காரர்கள்!


திரைத்துறையில் ஒரு படத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர்களும் எப்போதும் சொல்லும் ஒரு விஷயம்:

‘சினிமாவில் தில்லுமுல்லுகள் ஆரம்பமாகும் இடமே திரையரங்குகள்தான்!’

சினிமாவில் எல்லாருக்குமே பேராசை உண்டுதான். ஆனால் அதுவே பெருவியாதியாய் பீடித்திருப்பது திரையரங்க உரிமையாளர்கள் எனும் பிரிவினரை.

அதற்கு உதாரணம் அவர்கள் நேற்று எழுப்பிய கோரிக்கைகள். இவற்றில் ஏதாவது நியாயமுள்ளதா கூறுங்கள்:

ஒரு படத்துக்கு 10 லட்சம் கொடுத்தால், அது அடுத்த வாரமே லாபத்தோடு திரும்பக் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது, இன்றைய திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும்.

யாரோ ஒரு சிலர் நியாயமாக நடக்க முயன்றாலும் அவர்களை சங்கம் என்ற பெயரில் கட்டுப்படுத்தி விடுகிறார்கள்.

முன்பே நான் குறிப்பிட்டது போல, 99 சதவிகிதம் தியேட்டர்காரர்கள் காட்டுவது பொய்க் கணக்குதான். இதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். உங்களுக்கும் அந்த உண்மை புரியும்.

அதிலும் மாவட்ட அளவில் உள்ள திரையரங்குகள் வருவாய்த் துறை அலுவலர்களைக் கையில் போட்டுக் கொண்டு அடிக்கும் கொள்ளை அளவில்லாதது. சென்னை போல சின்னச் சின்ன திரையரங்குகள் அல்ல, இரண்டாம் கட்ட நகரங்களில் இருப்பவை. இவற்றில் பல, 1000இருக்கைகள் கொண்டவை. ரஜினியின் படங்களுக்கு, இவற்றில் கூடுதலாக 500 பேர்வரை போட்டு அடைத்து படம் காட்டுவார்கள். பணம் பார்ப்பார்கள்.

டிக்கெட் விலையும் தாறுமாறாக இருக்கும். எல்லா கவுன்டர்களிலும் 100 ரூபாய் டிக்கெட் கொடுத்துவிட்டு, ரூ. 3.50 அல்லது ரூ.10 என டிக்கெட் விலையைக் கணக்குக் காட்டுவது இன்றும் அமோகமாக நடக்கிறது. இது அரசுக்குத் தெரியாதா அல்லது படம் பார்த்த ரசிகர்களுக்குத் தெரியாதா...

இதைக் கண்டு கொள்ளாமல் இருக்க மாவட்ட வருவாய் அதிகாரிகள், கலெக்டர் அலுவக பிஆர்ஓக்கள் (இவர்கள்தான் தியேட்டர் விசிட் அடிப்பார்கள்) அனைவருக்கும் படம் ஒடி முடிந்ததும் கரெக்டாக மாமூல் போய்ச் சேர்ந்துவிடும்.

தியேட்டர் அளவில் இவர்கள் அடித்த கொள்ளை போக, மீதமிருப்பதுதான் விநியோகஸ்தர்களுக்கு கணக்குக் காட்டப்படும். அதிலும் இம்மாதிரி எம்ஜி முறையில் வாங்கிய படங்களுக்கு, சூப்பர் ஹிட் என்ற லேபிளை பத்திரிகைகளும், மக்களும் குத்தினால்தான் தியேட்டர்காரர்கள் அமைதி காப்பார்கள். இல்லாவிட்டால் இப்போது போடுவது போலவே அநியாய ஆட்டம் போடுவார்கள்.

எல்லாவற்றுக்கும் இருக்கவே இருக்கிறார் ரஜினி... நீங்க ரொம்ப நல்லவர்... மனித நேயம் உள்ளவர் என்று சொல்லி போவோர் வருவோர் எல்லாம் அவரை சுரண்டப் பார்க்கிறார்கள்.
குசேலன் 80 சதவிகித நஷ்டம் எனக் கணக்கு கூறுவதை நிச்சயம் ரஜினியின் எதிரிகள் கூட ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அதிலும் இந்த அளவு அதிக தொகையைக் கேட்பதற்கு தியேட்டர்காரர்கள் சொல்லும் காரணம் இருக்கிறதே அது படு கேவலமானது. இந்த மாதிரி ஒரு ஈனப்பிழைப்பை யாரும் செய்ய மாட்டார்கள்.

இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்த காரணம் இருக்கிறது.
குசேலனுக்கு நஷ்ட ஈடு கேட்பதில்லை என விநியோகஸ்தர்கள் முடிவு செய்துவிட்டனர். அதை ரஜினியிடமும் கூறிவிட்டனர். ஆனால் இந்த தியேட்டர்காரர்களோ, அவர்களின் பங்கையும் சேர்த்து எங்களுக்கே கொடுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

நேற்று பத்திரிகையாளர் கூட்டத்தில் வெட்கமே இல்லாமல் இதைத் தெரிவித்துள்ளனர்.

24.08.08 தினத்தந்தி செய்தியின் ஒரு பகுதி...

....குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்கள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக, ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்து பேசினோம். எங்களுடன் ரஜினிகாந்த் மனிதாபிமானத்துடன் பேசினார். ரஜினிகாந்த் மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. எங்கள் பிரச்சினைகளை சுமார் 45 நிமிடங்கள் கேட்டறிந்தார்.

தியேட்டர் அதிபர்களுக்கு 35 சதவீத நஷ்டஈடு தருவதாக உறுதி அளித்து, பிரச்சினையை சுமூகமாக முடித்துக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். நாங்கள் இதுபற்றி எங்கள் பொதுக்குழுவில் கலந்துபேசி முடிவை சொல்வதாக தெரிவித்தோம்.
70 சதவீதம் வேண்டும்!

இந்தத் தொகை குறைவாக இருப்பதாக எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கருத்து தெரிவித்தார்கள். 35 சதவீத நஷ்ட ஈட்டுத் தொகையை ஏற்கக் கூடாது என்றும், கூடுதல் நஷ்ட ஈடு தொகை வாங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி, 70 சதவீத நஷ்ட ஈடு தொகை கேட்பது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். 70 சதவீதம் என்பது எவ்வளவு தொகை? என்பதையும் கணக்கிட்டு வருகிறோம்.

விநியோகஸ்தர்கள் பங்கையும் கொடுங்கள்!

குசேலன் படத்தின் வினியோகஸ்தர்களுக்கு 35 சதவீத நஷ்ட ஈடு கொடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள். வினியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்க மாட்டோம் என்று கூறிவிட்ட காரணத்தால், வினியோகஸ்தர்களுக்கு தரப்பட இருந்த நஷ்ட ஈட்டுத் தொகையையும் சேர்த்து எங்களுக்கே தரப்பட வேண்டும் என்றும் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
எங்கள் கோரிக்கையை ரஜினிகாந்த் மனிதாபிமானத்துடன்(!!) ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறோம்.

எங்களுக்கு உரிமை உள்ளது!

குசேலன் படத்துக்கு நஷ்ட ஈடு கேட்க எங்களுக்கு தார்மீக உரிமை இருக்கிறது. மலையாள படத்தில், மம்முட்டி 20 நிமிடங்கள்தான் வந்தார். அதை அப்படியே படமாக்குவதாக எங்களிடம் கூறவில்லை. ரஜினிக்காக, கதையை மாற்றி படமாக்குவதாக டைரக்டர் பி.வாசு கூறினார். ரஜினியின் குசேலன் என்றுதான் விளம்பரமும் செய்யப்பட்டது. எனவேதான் நாங்கள் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கிறோம், என்று கூறினார் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர் செல்வம்.


பிரஸ் மீட் முடிந்ததும் இதை அவர்களுக்கேற்ற விதத்தில் செய்தியாகப்
போட நிருபர்களுக்கு வெயிட்டான கவனிப்பு வேறு!)

பகல் கொள்ளை


கடவுளே... தார்மீக உரிமை, மனிதாபிமானம் பற்றியெல்லாம் யார் பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல் போய்விட்டது.
சம்பந்தமே இல்லாவிட்டாலும், தானாக முன்வந்து பணம் (நிச்சயம் நஷ்ட ஈடு அல்ல. குசேலன் நஷ்டமும் அல்ல. இது எரிகிற வீட்டில் பிடுங்கும் தியேட்டர்காரர்களின் பகல் கொள்ளை உத்தி) கொடுக்க ஒப்புக் கொண்டுள்ள ரஜினியை மேலும் மேலும் சங்கடப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொள்ளைக் கும்பல் மனிதாபிமானம் பற்றிப் பாடம் எடுக்கிறது.
நேரம்தான்!

குறிப்பு: தியேட்டர்காரர்கள் இந்த அளவு கொடூரமாக நடந்து கொள்வதன் பின்னணியில் ஒரு பிரபல நிறுவனமும் முக்கியப் புள்ளிகள் சிலரும் உள்ளனர். சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு அதைப் பதிவு செய்யும் திட்டமுள்ளது!

Saturday, August 23, 2008

ஒரு சதி உருவாகிறது!!


இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் நம் உதடுகள் முணுமுணுக்கும் வார்த்தை... அட கேவலமே...!

செய்யும் தொழிலுக்கு இதைவிட ஒரு கேவலத்தை வேறு எந்தப் பத்திரிகையாலும் ஏற்படுத்த முடியாது.

இந்தப் புகைப்படம் தினகரனில் மட்டும் நேற்று வெளிவந்தது.

இந்தப் புகைப்படத்தில் போஸ் கொடுப்பவர்கள் ஆந்திராவிலிருந்து வந்த (வரவழைக்கப்பட்ட?) சில வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆந்திராவின் மேற்கு மாவட்டங்களில் குசேலனின் தெலுங்குப் பதிப்பான கதாநாயகுடுவை வெளியிட்டவர்களாம். இப்போது நஷ்டமாகிவிட்டதாம். எனவே குசேலன் நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால் ரஜினியை எதிர்த்து சாகும்வரை உண்ணாவிரதமிருப்பதாக அறிவித்திருக்கிறார்களாம்.

அட அதைக்கூட விடுங்கள்... ஏதோ சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிவிட்டார்கள்...

சென்னைக்கு இவர்கள் எதற்கு வந்தார்கள்...? குசேலன் உண்மை நிலையை விசாரித்துவிட்டுச் செல்ல. ஆனால் இங்குள்ள சிலரோ, சும்மா பார்த்துட்டுப் போனா எப்படிய்யா... போய் குசேலனுக்கு எதிரா உண்ணாவிரதம்னு போஸ் குடு... தானாவே மேட்டர் பெரிசாயிடும். போங்கய்யா, துணையா நாங்க இருக்கோம், என ஏத்திவிட, அவர்களும் அந்த விடுதியின் ஒரு அறையில் உட்கார்ந்து குசேலனுக்கு எதிராக போஸ் கொடுத்தனர்.

அப்போதுதான் அந்தப் பத்திரிகையின் புகைப்பாடக்காரர் ஒருவர், ரெட்டி சார், சும்மா உக்காராதீங்க. அந்த காதாநாயகுடு பேனரோடு உட்காருங்க எனச் சொல்ல அவர்கள் திகைத்திருக்கிறார்கள். திடீரென பேனருக்கு எங்கே போவார்கள்!

ஆனால் எல்லா பொய்களையும் அக்மார்க் உண்மை போலவே காட்டும் பவர்புல் மீடியாவை மொத்தமாக வைத்திருப்பவர்கள் ஆயிற்றே... இப்படி ஒரு பேனர் தயாரிப்பதா அவர்களுக்குக் கஷ்டம்!

இரு தினங்களுக்கு முன்பே பக்காவாக ஏற்பாடு செய்து வைத்திருந்த ஒரு பேனரை அவசர அவசரமாகக் கொண்டுபோய், அங்கிருந்தவர்களில் இருவரை ஆளுக்கொருபக்கம் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, வேண்டிய மட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இவர்கள் பத்திரிகையில் மட்டும் வருகிறது... இந்தச் செய்தியும் படமும்.

“குசேலனுக்கு எதிராக தெலுங்கு திரையரங்க உரிமையாளர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!”
-எக்ஸ்க்ளூசிவாம்!

உண்மையாகவே உண்ணாவிரதமிருக்கப் போவதாகக் கூறினீர்களா என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டால், லேது லேது.... என்று மறுத்தவர்கள், இவர்களின் மீடியா பயங்கரவாதத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.

சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியது முதல், பத்திரிகைகளுக்கு வீராவேசமாய் பேட்டி கொடுத்தது வரை எதுவும் எங்கள் சொந்தக் கருத்தில்லை. இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்தவர்கள் அந்த நம்பர் ஒன் நாளிதழ் நடத்துபவர்கள்தான், என்கின்றனர் ஆந்திரப் பார்ட்டிகள்.

தினகரனில் வெளியான இந்தப் படத்தின் நிஜப் பின்னணியும், குசேலன் ரிலீசிலிருந்து இன்று வரை, இந்த குறிப்பிட்ட நாளிதழில் மட்டும் ரஜினிக்கு எதிராக வெளியாகும் திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் நிஜமான பின்னணி யார் என்பது புரிகிறதா...

அண்ணாமலையில் ரஜினி இப்படிச் சொல்வார்:

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஏன்யா இந்த புனிதமான அரசியலைக் (பத்திரிகைத் தொழிலை) கெடுக்கறீங்க...,
என்பார்.
எத்தனை சத்தியமான வார்த்தைகள்! இந்த சதிப் பேர்வழிகளுக்காகவே எழுதப்பட்ட மாதிரியல்லவா இருக்கின்றன!

இதே தினகரன் வளர்ந்த விதத்தை நினைத்துப் பாருங்கள்...

திமுக துணையின்றி, மதிமுக ஆதரவுமின்றி தவித்த 90களின் மத்தியில், ரஜினி என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் இந்தப் பத்திரிகையை உயிரோடு வைத்திருக்க பெரிதும் உதவியது.

எங்கோ ஒரு குக்கிராமத்தலிருக்கும் ரஜினி ரசிகன் ஒரு சின்ன தகவல் சொன்னால்கூடப் போதும், தினகரனில் கட்டம் கட்டிப் போடுவார்கள்.

அந்த தினகரன் செய்திருக்கும் வேலையா இது!

அட கேவலமே...!