Showing posts with label Theater. Show all posts
Showing posts with label Theater. Show all posts

Monday, August 25, 2008

தியேட்டர்களில் பார்கள் – உதைக்க வேண்டாமா இவர்களை?

மக்கள் வாழ்க்கையில் திரைப்பட அரங்குகள் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன.

என்னதான் அறிவுஜீவிகள் வாய்கிழியப் பேசினாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை சினிமா என்பது முதல்வர்களை உருவாக்கும் இடமாகத்தான் இப்போதும் பார்க்கப்படுகிறது.

இன்றும் மக்களுக்கு குடும்பத்துடன் போய்வர ஒரு எளிய சிற்றுலா மையம் திரைப்பட அரங்குகள்தான்.

ஆனால் இத்தகைய அரங்குகள் எப்படி பராமரிக்கப்படுகின்றன?

எக்கச்சக்கமாக கட்டணம் வசூலித்தாலும் எந்த அடிப்படை வசதியும்- ஒரு சில திரையரங்குகளைத் தவிர- மற்றவற்றில் கிடையாது.
மோசமான இருக்கைகள், சுத்தமில்லாத கழிவரைகள், மூன்று நான்கு மடங்கு அதிக விலையில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள்... அடுக்கிக் கொண்டே போகலாம் இத் திரையரங்குகளின் லட்சணத்தை. சென்னை கூட இதற்கு விதிவிலக்கல்ல (சத்யம், ஐநாக்ஸ் என சில வளாகங்கள் தவிர).

குடும்பத்தோடு படத்துக்குப் போகும் ஒருவர் தியேட்டர்காரர்களோடு சண்டை போடாமல் வீடு திரும்பவதே அதிசயம்தான்.

இந்த லட்சணத்தில் அரங்குகளில், பார் வசதி செய்துகொள்ள அனுமதி வழங்க வேண்டும் என இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.


இக்கோரிக்கையை தீர்மானமாகவே நிறைவேற்றி அதை தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளனர் திரையரங்க உரிமாயாளர்கள் சங்கத்தினர்.

இச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், திரையரங்குகளில் வருமானத்தைப் பெருக்கும் பல்வேறு வழிகளைப் பற்றி ஆலோசித்து வருகிறோம். அதில் ஒன்று அரங்குகளிலேயே பார்களைத் திறப்பது!!

வெளிநாடுகளில் இதுபோல பார் வசதி கொண்ட திரையரங்குகள் உள்ளன. இதனால் பெண்கள் வருவது பாதிக்கப்படுவதில்லை. எனவே இதேபோல தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பார்கள் திறக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

நமக்குத் தெரிந்து பார் தியோட்டர்கள் வெளிநாட்டில் எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், ஏற்கெனவே குற்றங்களும், அத்துமீறல்களும் மலிந்துவிட்ட தமிழக திரையரங்குகளுக்குப் பொருந்துமா...

பணத்துக்காக இப்போது பார் கேட்பவர்கள், நாளை வாடிக்கையாளர்களுக்கு வசதியாக சிவப்பு விளக்கு கார்னர் ஒன்றை ஏற்படுத்தவும் கோரிக்கை வைப்பார்களோ? (இன்னும் பணத்தை அள்ளலாமே!)

ஒகேனக்கல் பிரச்சினையில் சூப்பர்ஸ்டார் ரஜினி கேட்டாரே ஒரு கேள்வி: ...உதைக்க வேண்டாமா இவர்களையெல்லாம்!, என்று.

நியாயமாக அது இந்த பேராசைக்கார, நேர்மையற்ற வணிகப் பிரதிநிதிகளான தியேட்டர்காரர்களுக்குத்தான் பொருந்தும்!!