Showing posts with label Azhagiri. Show all posts
Showing posts with label Azhagiri. Show all posts

Sunday, August 31, 2008

விகடன் சர்வே – எங்கே நடுநிலை?


‘என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்... துடைத்துப் போட்டு விடுகிறோம். எங்களிடம் இருக்கவே இருக்கிறது நடுநிலை எனும் முகமூடி. ரஜினியை அட்டையில் போட்டு காசு சம்பாதிக்க இதைவிட மிகச் சிறந்த ஆயுதம் எங்களிடம் இல்லை...’ என மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது விகடன் குழுமம், ரஜினி பற்றிய ஒரு அரைவேக்காட்டு சர்வேயை நடத்தியதன் மூலம்!

விகடனைத் திட்டுவதல்ல நமது நோக்கம்... ஆனால் இவர்கள் நடத்துவதுதான் பத்திரிகை, அதற்குப் பெயர்தான் பத்திரிகை தர்மம் என்று பிதற்றித் திரிகிறார்களே... அதைத் தோலுரிக்காமல் இருக்க முடியாதல்லவா?

ஒரே ஒரு சின்ன கேள்வியில் அம்பலப்பட்டு விடுகிறது விகடனின் அரைவேக்காட்டுத்தனம்...

ரஜினி அரசியலுக்கு வரலாமா... வேண்டாமா?

இந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது யாரிடம்? ஓட்டுப் போட்டு அரியணைக்கு அமர்த்தப் போகிற வாக்காளர்களிடம்...

ஆனால் இவர்கள் நடத்திய சர்வேயில் வாக்களித்தவர்களில் பெரும்பான்மை வாசகர்கள் யார் தெரியுமா? இணையத்தில் வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் வாசகர்கள். (சற்று கடுமையான வார்த்தைப் பிரயோகம். எல்லோருக்கும் இது பொருந்தாதுதான்... ஆனால் வேறு வழியில்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு, உதைக்க உடனடியாக யாரும் வரமாட்டார்கள் எனும் தைரியத்தில், ரஜினியைப் பற்றி கேவலமாக விமர்சிக்கும் கும்பல் மட்டுமே அதிகம் பங்கேற்ற கருத்துக் கணிப்பு இது!)

இவர்கள் முழுமையாக அல்லது பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். விகடனை இதழாக வாங்கிப் படிக்க முடியாமல் ஆன்லைன் சந்தா செலுத்தி படிப்பவர்கள். தேர்தலுக்காக நேரில் வந்து வாக்களிக்கும் வாய்ப்பற்றவர்கள். ஆக, நியாயமாக இவர்கள் விகடனுக்குப் போட்டிருக்கும் ஓட்டே செல்லாதது!

சாவடிக்கு வந்து வாக்களிக்க வக்கில்லாதவர்கள்தான், இந்த நாட்டின் அரசி யலைப் பற்றியும், ஆட்சி முறைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்கள்.

‘தேர்தல் வந்துடுச்சா... ஒரு நாள் லீவு கிடைச்சதுதான் லாபம்’ என்று கூறி வீட்டுக்குள்ளே மனைவியை விதவிதமாக சமைக்கச் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தீர்த்தவாரி நடத்தும் ஹைகிளாஸ் குடிகார கூட்டத்தின் கருத்தை பொதுமக்கள் மீது திணிக்கும் முயற்சி இது.

அல்லது, தங்களால் நேரடியாகச் சொல்ல முடியாத விஷயத்தை, வாசகர்கள் கருத்துக் கணிப்பு என விகடனே நடத்துகிற திணிப்பு.

இந்த சர்வேயில் விகடன் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திலும் விஷமத்தனம் ஒளிந்திருப்பதை, சாதாரணமாக நாள், வார இதழ்களைப் படிக்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
கன்னடர்களிடம் எந்தக் கட்டத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை ரஜினி. அவர் வார்த்தைகளில் சொன்னால் 'It is just a clarification to the people of Karnataka!'.

ஆனால் இவர்களோ இரண்டு கேள்விகளில் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாகவே எழுதியுள்ளனர்.

மன்னிப்புக்கும் வருத்தத்துக்கும் வித்தியாசம் என்னவென்று விகடனுக்கு தெரியவில்லையோ? கொஞ்சம் பிளாஷ்பேக்கை ஓட்டிப்பாருங்க...

1996-ல் ஜெயலலிதாவின் பாதாரவிந்தங்களில் விழுந்து பணிந்தார்களே... இந்த விஷக் குழுமத்தினர், அதற்குப் பெயர்தான் மன்னிப்பு... சமீபத்தில் ஜெயமோகனிடமும் எம்ஜிஆர் பக்தர்களிடம் அசடு வழிந்து நின்றார்களே அதற்குப் பெயர் வருத்தம் (விரிவாக ஆதாரங்களுடன் ஒரு பதிவு தயாராக இருக்கிறது!).

சூப்பர்ஸ்டார் ரஜினி இப்படி எந்தக் கேவலமான செயலையும் செய்யவில்லை என்பதை விகடனுக்கு இன்னும் எப்படி விளக்கிச் சொல்வது?

சரி... ஆன்லைன் வாக்களிப்பைத்தான் குறை சொல்கிறீர்கள்... ஊர் ஊராய் போய் கணித்தார்களே அது கூடவா தவறு? என அடுத்த கேள்வி உங்கள் மனதில் எழுகிறதல்லவா...

இதோ அவர்கள் கருத்து சேகரித்த லட்சணம்...

இதற்காக அமைப்பு ரீதியான எந்தக் குழுவும் ஊர் ஊராகச் செல்லவில்லை. குறிப்பிட்ட சில ஊர்களிலிருக்கும் விகடன் ஏஜென்டுகளும், லோக்கல் நிருபர்களும் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களின் அடிப்படையில் இவர்களாகவே ஒரு கணிப்புக்கு வந்திருக்கிறார்கள்.


கரூரிலிருக்கும் என் நண்பர் ஒருவர் மட்டுமே 10 படிவங்களை நிரப்பிக் கொடுத்திருக்கிறார்!
இப்படி கணிக்க என்ன Research Methodology-ஐ உபயோகித்தார்கள், Sampling கருவிகள் என்ன... ம்ஹூம்...

'அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? ரஜினி பெயரில் என்ன போட்டாலும் வாங்கிப் படிக்கிறீர்கள் அல்லவா... பிறகென்ன... நாளையே, 'ரசிகர்களைக் காக்க தேர்தல் களத்தில் ரஜினி', என ஒரு கவர் ஸ்டோரி போட்டால் போகிறது!' - இதுதான் விகட மனோபாவம்.

ரஜினிக்கு பகிரங்க கடிதம் என யாரோ ரசிகரின் பெயரில் எடிட்டோரியல் குழுவே ஒரு மொட்டைக் கடிதம் எழுதிய பிறகு, இவர்களிடம் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்! நியாயமாக இவர்கள் மீண்டும் ஒருமுறை ரஜினி பெயரைக் கூட அச்சடிக்க அருகதையற்றவர்கள்.

‘ரஜினி நின்றாலும் செய்தி, நடந்தாலும் செய்தி....’ – சர்வே கட்டுரை ஆரம்பத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வாக்கியம் இது.

அது தெரிந்துதானே கடந்த 15 வருடங்களாக ரஜினி நாமத்தை ஜெபித்தபடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

இவர்களுக்குத் துணிச்சலிருந்தால்,

யார் அடுத்த முதல்வர்- அழகிரியா? ஸ்டாலினா?

ஒகேனக்கல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி அடித்த பல்டி சரியா?

பொய்களை உண்மை போலவே பரப்புவதில் சன் குழுமத்துக்கு நிகர் எது?


இப்படி ஒரு பத்துக் கேள்வியை வரிசைப்படுத்தி, அட குறைந்த பட்சம் அறிவிப்பாவது செய்து பார்க்கட்டும்.

அடுத்த நாள், விகடன் ஒளித்திரையை இருட்டிப் போகச் செய்திருப்பார்கள் மாறன்கள்...
கருணாநிதி கவிதை வடிவில் சாபம் கொடுத்திருப்பார்... அதற்கும் முன்பே அதைப் படிக்கக்கூட அவகாசம் தராமல் அழகிரியும் ஸ்டாலினும் விகடன் அலுவலகத்தை காலி செய்திருப்பார்கள்...!!

Saturday, August 23, 2008

குசேலனுக்கு எதிராக ஒரு விஷ (சன்) நெட்வொர்க்!


கோயபல்ஸை நம்மில் யாரும் பார்த்ததில்லை... சன் - தினகரன் குழுமத்தினர் பெரிய மனது பண்ணி அந்த விஷ மனிதனின் வாரிசுகளாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தினகரன் குழும இதழ்கள் சன் நெட்வொர்க்குக்கு கை மாறியபோது ஒரு வாரப் பத்திரிகை இப்படி எழுதியிருந்தது.

“ஏற்கெனவே சாராயத்தைக் குடித்த குரங்கை ஒரு குளவியும கொட்டிவிட்டால் எப்படியிருக்கும்.... அப்படி ஒரு ஆட்டத்தை இனி இந்த குழுமம் தமிழகத்தில் நிகழ்த்துவதைப் பார்க்கலாம். சக பத்திரிகைகளான தினத்தந்தி, தினமலருக்கு மட்டுமல்ல... ஒட்டு மொத்த பத்திரிகை உலகத்துக்குமே ஒரு அபாய மணியாகத்தான் இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறது...”

கிட்டத்தட்ட அதை 100 சதவிகிதம் உறுதிப்படுத்தி வருகிறார்கள் சன் குழுமத்தினர். கோயபல்ஸ் பிரச்சாரம் என்ற வார்த்தை திமுக முகாம்களில் அடிக்கடி பிரயோகிக்கப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். அந்த ஒரிஜினல் கோயபல்ஸ் வாழ்ந்தது ஹிட்லர் காலத்தில். இந்த தலைமுறை அவனைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தைத் தீர்த்து வைத்துள்ளது சன் நெட்வொர்க்.

ஒரே பொய்யை தன்னிடம் உள்ள அத்தனை வித மீடியா மூலமாகவும் உண்மை போலவே ஜோடனை செய்து வெளிப்படுத்தும் இவர்களது டெக்னிக்கைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அந்த ஒரிஜினல் கோயபல்ஸே வெட்கித் தலைகுனிந்திருப்பார்.

அறவழிப் போராட்டமாவது செய்யுங்கள்!

இனி ரஜினி படங்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கிடைக்காது என்ற உண்மை ஒருபக்கம், கலைஞருக்குப் பிந்தைய வெற்றிடம் ரஜினிக்காக என்று ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயம்... இப்படி அவர்களின் நடவடிக்கைகளுக்கு சுயநல காரணங்கள் நிறைய.
எனவே இவர்கள் செய்தியைப் பார்த்து நண்பர்கள் மனக் கவலையடைவதை விட, அறவழிப் போராட்டம் எதையாவது உடனே செய்யலாம்.

குசேலன் விவகாரம் நிஜமாகவே தீர்ந்து விட்டாலும் கூட, இவர்கள் வேண்டுமென்றே அதைக் கிளறிக் கொண்டுதான் இருப்பார்கள்.

முதல் நாள் 40 கோடி நஷ்டம் என்று தியேட்டர்காரர்கள் சொன்னதாகப் போட்டார்கள். இப்போது 40 கோடி, 7 கோடியாகக் குறைந்திருக்கிறது. வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ரஜினி சிறப்புப் பேட்டி கொடுக்க ஒப்புக் கொண்டால், குசேலன், குபேரனாகிவிடும்! நஷ்டப் பழி போயே போய்விடும்!!

ஊரெல்லாம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதாகப் பிதற்றும் பத்திரிகைகள் தங்களுக்குள்ளேயே பெரும் பயங்கரவாதியாய், சமூகத்தை அரிக்கும் கிருமியாய் உருவெடுத்து வரும் இந்த மோசமான பத்திரிகை பயங்கரவாதத்தை எப்படி ஒழித்துக் கட்டப் போகிறார்கள்?
குறைந்தபட்சம் எதிர்த்து, கண்டித்து ஒரு எடிட்டோரியல் எழுதும் தைரியமாவது இவர்களுக்கு உள்ளதா...(சோ விதிவிலக்கு)?

காலை விடிந்ததிலிருந்து இரவு முடியும் வரை ரஜினி படங்கள், ரஜினி பாடல்கள்,. ரஜினி பட காமெடி என்று கல்லா கட்டும் இவர்கள், அடுத்து தங்கள் செய்திகளில் அவதூறு பரப்பவும் அதே ரஜினி தலையைத்தான் உருட்டுகிறார்கள்.

பால் கொடுத்த தாயின் மார்பை அறுத்துப் பார்க்கும் ஈன புத்திக்காரர்களுக்கும் இப்படிப்பட்ட ஆட்களுக்கும் வித்தியாசம் ஏதாவது உள்ளதா...?

இவர்களுக்கு பாடம் புகட்ட, ரசிகர்களுக்கு உடனடித் தேவை நிறைய அழகிரிகள்!

ரஜினியிடமிருந்து ஒரு முடிவான ஆனால் பாஸிடிவ் பதில் வந்தால் போதும், அழகிரிகளுக்குக் கூட அவசியமிருக்காது!!