
‘என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்... துடைத்துப் போட்டு விடுகிறோம். எங்களிடம் இருக்கவே இருக்கிறது நடுநிலை எனும் முகமூடி. ரஜினியை அட்டையில் போட்டு காசு சம்பாதிக்க இதைவிட மிகச் சிறந்த ஆயுதம் எங்களிடம் இல்லை...’ என மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது விகடன் குழுமம், ரஜினி பற்றிய ஒரு அரைவேக்காட்டு சர்வேயை நடத்தியதன் மூலம்!
விகடனைத் திட்டுவதல்ல நமது நோக்கம்... ஆனால் இவர்கள் நடத்துவதுதான் பத்திரிகை, அதற்குப் பெயர்தான் பத்திரிகை தர்மம் என்று பிதற்றித் திரிகிறார்களே... அதைத் தோலுரிக்காமல் இருக்க முடியாதல்லவா?
ஒரே ஒரு சின்ன கேள்வியில் அம்பலப்பட்டு விடுகிறது விகடனின் அரைவேக்காட்டுத்தனம்...
ரஜினி அரசியலுக்கு வரலாமா... வேண்டாமா?
இந்தக் கேள்வியை அவர்கள் கேட்க வேண்டியது யாரிடம்? ஓட்டுப் போட்டு அரியணைக்கு அமர்த்தப் போகிற வாக்காளர்களிடம்...
ஆனால் இவர்கள் நடத்திய சர்வேயில் வாக்களித்தவர்களில் பெரும்பான்மை வாசகர்கள் யார் தெரியுமா? இணையத்தில் வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் ஆன்லைன் வாசகர்கள். (சற்று கடுமையான வார்த்தைப் பிரயோகம். எல்லோருக்கும் இது பொருந்தாதுதான்... ஆனால் வேறு வழியில்லை. எங்கோ உட்கார்ந்துகொண்டு, உதைக்க உடனடியாக யாரும் வரமாட்டார்கள் எனும் தைரியத்தில், ரஜினியைப் பற்றி கேவலமாக விமர்சிக்கும் கும்பல் மட்டுமே அதிகம் பங்கேற்ற கருத்துக் கணிப்பு இது!)
இவர்கள் முழுமையாக அல்லது பெரும்பாலும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள். விகடனை இதழாக வாங்கிப் படிக்க முடியாமல் ஆன்லைன் சந்தா செலுத்தி படிப்பவர்கள். தேர்தலுக்காக நேரில் வந்து வாக்களிக்கும் வாய்ப்பற்றவர்கள். ஆக, நியாயமாக இவர்கள் விகடனுக்குப் போட்டிருக்கும் ஓட்டே செல்லாதது!

சாவடிக்கு வந்து வாக்களிக்க வக்கில்லாதவர்கள்தான், இந்த நாட்டின் அரசி யலைப் பற்றியும், ஆட்சி முறைப் பற்றியும் வாய் கிழியப் பேசுகிறார்கள்.
‘தேர்தல் வந்துடுச்சா... ஒரு நாள் லீவு கிடைச்சதுதான் லாபம்’ என்று கூறி வீட்டுக்குள்ளே மனைவியை விதவிதமாக சமைக்கச் சொல்லிவிட்டு நண்பர்களுடன் தீர்த்தவாரி நடத்தும் ஹைகிளாஸ் குடிகார கூட்டத்தின் கருத்தை பொதுமக்கள் மீது திணிக்கும் முயற்சி இது.
அல்லது, தங்களால் நேரடியாகச் சொல்ல முடியாத விஷயத்தை, வாசகர்கள் கருத்துக் கணிப்பு என விகடனே நடத்துகிற திணிப்பு.
இந்த சர்வேயில் விகடன் எழுப்பியுள்ள கேள்விகள் அனைத்திலும் விஷமத்தனம் ஒளிந்திருப்பதை, சாதாரணமாக நாள், வார இதழ்களைப் படிக்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும்.
கன்னடர்களிடம் எந்தக் கட்டத்திலும் மன்னிப்புக் கேட்கவில்லை ரஜினி. அவர் வார்த்தைகளில் சொன்னால் 'It is just a clarification to the people of Karnataka!'.
ஆனால் இவர்களோ இரண்டு கேள்விகளில் ரஜினி மன்னிப்புக் கேட்டுவிட்டதாகவே எழுதியுள்ளனர்.
மன்னிப்புக்கும் வருத்தத்துக்கும் வித்தியாசம் என்னவென்று விகடனுக்கு தெரியவில்லையோ? கொஞ்சம் பிளாஷ்பேக்கை ஓட்டிப்பாருங்க...
1996-ல் ஜெயலலிதாவின் பாதாரவிந்தங்களில் விழுந்து பணிந்தார்களே... இந்த விஷக் குழுமத்தினர், அதற்குப் பெயர்தான் மன்னிப்பு... சமீபத்தில் ஜெயமோகனிடமும் எம்ஜிஆர் பக்தர்களிடம் அசடு வழிந்து நின்றார்களே அதற்குப் பெயர் வருத்தம் (விரிவாக ஆதாரங்களுடன் ஒரு பதிவு தயாராக இருக்கிறது!).
சூப்பர்ஸ்டார் ரஜினி இப்படி எந்தக் கேவலமான செயலையும் செய்யவில்லை என்பதை விகடனுக்கு இன்னும் எப்படி விளக்கிச் சொல்வது?
சரி... ஆன்லைன் வாக்களிப்பைத்தான் குறை சொல்கிறீர்கள்... ஊர் ஊராய் போய் கணித்தார்களே அது கூடவா தவறு? என அடுத்த கேள்வி உங்கள் மனதில் எழுகிறதல்லவா...
இதோ அவர்கள் கருத்து சேகரித்த லட்சணம்...
இதற்காக அமைப்பு ரீதியான எந்தக் குழுவும் ஊர் ஊராகச் செல்லவில்லை. குறிப்பிட்ட சில ஊர்களிலிருக்கும் விகடன் ஏஜென்டுகளும், லோக்கல் நிருபர்களும் பூர்த்தி செய்து கொடுத்த படிவங்களின் அடிப்படையில் இவர்களாகவே ஒரு கணிப்புக்கு வந்திருக்கிறார்கள்.
கரூரிலிருக்கும் என் நண்பர் ஒருவர் மட்டுமே 10 படிவங்களை நிரப்பிக் கொடுத்திருக்கிறார்!
இப்படி கணிக்க என்ன Research Methodology-ஐ உபயோகித்தார்கள், Sampling கருவிகள் என்ன... ம்ஹூம்...
'அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? ரஜினி பெயரில் என்ன போட்டாலும் வாங்கிப் படிக்கிறீர்கள் அல்லவா... பிறகென்ன... நாளையே, 'ரசிகர்களைக் காக்க தேர்தல் களத்தில் ரஜினி', என ஒரு கவர் ஸ்டோரி போட்டால் போகிறது!' - இதுதான் விகட மனோபாவம்.
ரஜினிக்கு பகிரங்க கடிதம் என யாரோ ரசிகரின் பெயரில் எடிட்டோரியல் குழுவே ஒரு மொட்டைக் கடிதம் எழுதிய பிறகு, இவர்களிடம் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்! நியாயமாக இவர்கள் மீண்டும் ஒருமுறை ரஜினி பெயரைக் கூட அச்சடிக்க அருகதையற்றவர்கள்.
‘ரஜினி நின்றாலும் செய்தி, நடந்தாலும் செய்தி....’ – சர்வே கட்டுரை ஆரம்பத்தில் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் வாக்கியம் இது.
அது தெரிந்துதானே கடந்த 15 வருடங்களாக ரஜினி நாமத்தை ஜெபித்தபடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்?
இவர்களுக்குத் துணிச்சலிருந்தால்,
யார் அடுத்த முதல்வர்- அழகிரியா? ஸ்டாலினா?
ஒகேனக்கல் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி அடித்த பல்டி சரியா?
பொய்களை உண்மை போலவே பரப்புவதில் சன் குழுமத்துக்கு நிகர் எது?
இப்படி ஒரு பத்துக் கேள்வியை வரிசைப்படுத்தி, அட குறைந்த பட்சம் அறிவிப்பாவது செய்து பார்க்கட்டும்.
அடுத்த நாள், விகடன் ஒளித்திரையை இருட்டிப் போகச் செய்திருப்பார்கள் மாறன்கள்...
கருணாநிதி கவிதை வடிவில் சாபம் கொடுத்திருப்பார்... அதற்கும் முன்பே அதைப் படிக்கக்கூட அவகாசம் தராமல் அழகிரியும் ஸ்டாலினும் விகடன் அலுவலகத்தை காலி செய்திருப்பார்கள்...!!




