Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Monday, August 25, 2008

ரஜினி என்ற நல்ல ஆத்மா... மோகன்பாபு!


ரஜினிகாந்த் என் மிகச் சிறந்த நண்பன். என் வாழ்வில் மறக்க முடியாத மனிதன்... என்கிறார் நடிகர் மோகன்பாபு.

மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜ் குமார் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘என்னைத் தெரியுமா?’ இந்தப் படத்தை மோகன்பாபுவின் லட்சுமி பிரசன்னா மூவீஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் தயாராகிறது.

மனோஜை நாயகனாக அறிமுகப்படுத்தும் விழாவும், படத்தின் ஆடியோ வெளியீடும் நேற்று பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடந்தது.

அறிமுக நிகழ்ச்சிக்குப் பின்னர் மோகன்பாபு இப்படிப் பேசினார்:

தமிழ்நாட்டை நான் எப்போதும் மறக்க முடியாது. எனக்கு தாய்ப்பால் கொடுத்தது இந்த மண்தான். கலைக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என எந்த பேதமும் இல்லை எனப் புரிய வைத்தவர்கள் தமிழ் மக்கள்தான். இந்த உணர்வு எல்லாருக்கும் இருந்தால் நம் சினிமா உலகம் எவ்வளவு சிறப்பாக இருக்கும்?

ஒரு தாயின் பல குழந்தைகள் மாதிரிதான் தென்னிந்திய சினிமா. தமிழ்தான் நமக்கெல்லாம் தாய். இதுல எந்த மாற்றமும் இல்லே.

இதே சென்னையில்தான் நான் படித்தேன். சென்னையின் பிளாட்பாரங்களில்தான் நானும் ரஜினியும் ஒன்றாக அலைந்திருக்கிறோம், வாய்ப்புகளுக்காக. என் சினிமா வாழ்க்கை ஆரம்பித்ததும் இங்குதான்.

முன்பின் தெரியாத ஒரு நபர் ஐதராபாத்தில் ஒரு நயா பைசா கடனாகப் பெற முடியாது. அதுவும் சினிமாக்காரனுக்கு ஒருத்தரும் உதவ மாட்டார்கள். ஆனால் இந்த தமிழ்நாட்டில், நானும் ரஜினியும் வாய்ப்புக்காக அலைந்த நாட்களில் எத்தனையோ முறை எங்களுக்கு பணமும் உணவுப் பொருளும் கொடுத்து உதவியவர்கள் தமிழ் மக்கள். ஒரு சின்ன கார் ஷெட்டில், மழை ஒழுகும் கூரையில் ஒடுங்கி உட்கார்ந்துகொண்டு இருவரும் பல ராத்திரிகளைக் கழிச்சிருக்கோம்.

என் மகனை அறிமுகம் செய்வதற்காக இதை இங்கே பேசுவதாக நினைக்காதீர்கள். ஆந்திராவிலும் இதையேதான் சொன்னேன்.

தமிழர்கள் கிட்ட கத்துக்கங்க!

போங்கடா... போய் தமிழ் மக்கள் கிட்ட நல்ல பண்பு, உதவும் குணம், ரசனைன்னா என்னன்னு கத்துக்கங்கடா... நீங்களும் பெரிய அளவுக்கு வருவீங்கன்னு எத்தனையோ சினிமா விழாக்களில், பொது மேடைகளில் பேசினவன்தான் நான். என்னை அதற்காக யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. ஏன்னா நான் உண்மை பேசறேன்.

வாழ்க்கை ஒரு தேவாலயம் அல்ல... அது போர்க்களம்னு நான் அடிக்கடி சொல்லுவேன். அதைத்தான் ரஜினி தன் படத்துல டயலாக்கா வச்சான். இப்படி அடிக்கடி என் டயலாக்கை எடுத்து வச்சிடுவான் அவன். அது பெரிய ஹிட்டாயிடும். நான் சும்மா தமாசுக்கு சொல்றேன். ரஜினி என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த சிறந்த நண்பன். மிகச் சிறந்த ஆத்மா. அவனுக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.

வேண்டாம் அரசியல்!

நடிகனா இருந்தேன், அரசியலுக்கு வந்தேன். இப்போ அரசியல் ஒரு சாக்கடை எனத் தெரிந்துவிட்டது. அதனால் நல்ல கல்வியை நாட்டுக்குத் தரும் வேலையில் நிம்மதியா இறங்கியிருக்கேன் என்றார் மோகன் பாபு.