
இந்தப் பதிவைப் படிக்கும் முன்... ஒரு சின்ன வேண்டுகோள்!
ரஜினி –கமல் இருவரில் யார் உசத்தி என்று அலசுவதற்கல்ல இந்தப் பதிவு. இந்த இருவரும் நண்பர்களாகவே இருந்தாலும், உண்மையில் யார் முதலிடத்திலிருக்கத் தகுதியானவர் என்பதை அலசும் பதிவு இது. இதற்கென்ன இப்போது அவசியம் என்பவர்கள் மேலே தொடருங்கள்.
கமல் ரசிகர்களும் படியுங்க... நியாயம் புரியும்!
இப்போது பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்களை சற்றே கூர்ந்து நோக்குபவர்கள், மீடியா... இல்லையில்லை... பத்திரிகையாளர்களின் வக்கிர புத்தி என்ன என்பதை வெகு எளிதாக உணரலாம்.
இதுவரை – கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் – ரஜினி – கமல் என்று எழுதப்பட்டு வந்த Ranking-ஐ திருப்பிப் போட முயற்சித்து வருகிறார்கள், ஒன்றுமே தெரியாத அப்பாவிகளைப் போல!
மேலோட்டமாகப் பார்க்கிறபோது இதில் என்ன இருக்கிறது இந்த அளவு அலட்டிக் கொள்ள... இந்த இருவருமே ஒரே அந்தஸ்தில் இருக்கும் நடிகர்கள்தானே... என்று சிலர் கேட்கக் கூடும்.
அதற்கு ஒரு சின்ன விளக்கம்...
சில மாதங்களுக்கு முன், கமல்ஹாசனின் தசாவதாரம் வருமா.. வராதா என்ற சூழலை மீடியா உருவாக்கிருந்த நேரம் அது. சிவாஜி தந்த வெற்றியில் எங்கும் எதிலும் ரஜினி என்ற சூழ்நிலை.
அப்போது, கமல்ஹாசன் தனது நெருக்கமான, சொல்லப்போனால் அந்தரங்கமான காராயதரிசி போன்ற ஒருவரிடம் குறைபட்டுக் கொண்டார் இப்படி... (இது ஜூவி கழுகு டைப் கப்ஸா இல்லை... உயிருள்ள ஆதாரங்களுடன் கூடிய உண்மை!!)
‘என்னய்யா இது... நானும் இவ்வளவு முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருக்கேன். வேணும்னா தோல்விப் படம் தர்றோம்... வித்தியாசமா பண்ண முயற்சிக்கிறேன். மீடியாக்காரங்க நம்மகிட்ட நல்லா பேசறாங்க... நம்ம படத்தைப் பத்தி நல்லாதான் எழுதறாங்க... ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்கு என்னை இரண்டாமிடத்திலேயே வைத்திருக்கப் போகிறார்கள்? இருபது வருஷமா ரஜினி – கமல்னுதான் எழுதறாங்க... இந்த ரேங்கிங்ல எப்பதான் மாறுதல் வரும்?’
அடுத்த நாளே, கமல் அலுவலகத்திலிருந்து போன் கால்கள் முக்கிய பத்திரிகையாளர்களுக்குப் பறந்தன. கமல்ஹாசனை அவர்கள் தனித் தனிக் குழுவாகப் போய் பார்த்ததும் தசாவதார அல்வா வாங்கி வந்ததும் தனிக் கதை.
சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்த மீடியா சந்தர்ப்பவாதிகள், இப்போது தங்கள் விஷமத்தனத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார்: சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்காக நீண்ட நாள் காத்திருந்த கமல் அதை தசாவதாரத்தில் பெற்று விட்டார்! (சிஃபி)
இன்னொருவர்: ரஜினி-கமல் என்ற ரேங்கிங்கில் தற்போது மாற்றம். தசாவதாரமும், குசேலனும் இந்த வரிசையை மாற்றிப் போட்டிருக்கின்றன (தினமலர்).
அடுத்தவர்: இனி கமல் Vs ரஜினி! (வாடகை கன்டன்டில் காலம் தள்ளும் எம்எஸ்என், யாஹூ!)
இன்னும் இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.
இது நியாயமா... யோசித்துப் பாருங்கள்!
சினிமா என்பது கலை என்ற நிலையைத் தாண்டி வெகு காலமாகிவிட்டது. இங்கு வியாபாரம்தான் பிரதானம். அதன்பிறகுதான் கலை... கொலை எல்லாம்.
வியாபாரத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ரஜினி என்றுமே முதலிடத்தில்தான் நிற்கிறார். முன்பே நாம் சொன்னதுபோல, ரஜினிதான் இன்றைக்கு இந்திய சினிமாவின் பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார் வெளிநாடுகளில்.
வெளிநாட்டில் நூறு நாட்களைக் கடந்து ஓடியவை ரஜினியின் படங்கள் மட்டும்தான்... மற்ற நடிகர்களின் வெற்றிப் படங்கள் கூட ரஜினியின் சுமாரான படம் என்று மீடியாவால் வர்ணிக்கப்பட்ட படங்களை நெருங்க முடியாது. அப்படி ஒரு சாதனை.
அட... நடிப்பென்று வந்தாலும் ரஜினிக்கு இணை கிடையாது. இன்றும் கூட ரஜினியின் அருமையான நடிப்பாற்றலை வியந்து பேசுகிறார் தங்கர் பச்சான். அவருக்கு மிகப் பிடித்த இரு படங்கள் அண்ணாமலை மற்றும் பாட்ஷா.
ஒரு ஆக்ஷன் ஹீரோ அழுதால்கூட ரசிக்க முடியும். ஆனால் ஒரு ரொமான்டிக் ஹீரோ சண்டை போட்டால்கூட அது டான்ஸ் மாதிரிதான் தெரியும் – இது நான் சொல்வதல்ல... நடிப்புச் சக்ரவர்த்தி என ரஜினி புகழும் அமிதாப்பச்சன் சொன்னது!
இன்றும் இயக்குநர் விக்ரமன் பிரமிப்போடு இப்படிக் கூறுகிறார்:
என்னுடைய வானத்தைப் போல படம், ரஜினி சாரின் படையப்பாவை முந்தியதாக குமுதத்தில் ஒரு செய்தி போட்டார்கள். அதை உடனே மறுத்து அறிக்கை கொடுத்தேன். காரணம் படையப்பா வசூலில் 20-ல் ஒரு பங்குதான் வானத்தைப் போல. இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
அதே போல.. பாபாவை ஒரு தோல்விப் படமென்று என்னால் ஒருபோதும் கூற முடியாது. அந்தப் படத்தில் எல்லா அம்சங்களுமே சிறப்பாக இருந்தன. நியாயமாக ரஜினியின் ரசிகர்கள் அதை நன்றாக ஓட வைத்திருக்க வேண்டும். பத்திரிகைகளில் வருவதை மட்டுமே நம்பிக்கொண்டு, படத்துக்கு போதிய ஆதரவளிக்காமல் விடுபவர்கள் எப்படி அவரது தீவிர ரசிகர்களாவார்கள்? சொல்பவர்கள் பேச்சைக் கேட்காமல் யோசித்துப் பார்த்தால் புரியும் நான் சொல்வது...
பாபாவுக்கு பணத்தை ரஜினி சார் திருப்பித் தந்தார் என்ற செய்தி எனக்குக் கிடைத்த போது மிகவும் வருத்தப்பட்டு ரஜினி சாரிடம் என் உணர்வுகளைச் சொன்னேன். நான் இந்த அளவு பேசக் காரணம், அடிப்படையில் ரஜினி சாரின் அத்தனை படங்களும் குடும்பம் சார்ந்தவை. குடும்பத்தோடு பார்த்து மகிழக் கூடியவை... ரஜினியோடு நான் யாரையும் ஒப்பிட மாட்டேன். அவர் வழி தனி வழி... அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார்தான்!”
-என்ன செய்வது... சினிமாவிலேயே இருக்கிற ஒருவருக்குத் தெரிந்ததை விட, தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என பிதற்றும் ஒரு கும்பல் இப்போது கமல் – ரஜினி என எழுத ஆரம்பித்துள்ளது.
இன்றைக்கு ரஜினி கவுர வேடத்தில் தோன்றிய ஒரு படத்தை சதி செய்து, உண்மைகளை மறைத்து தோல்விப் படமாகக் காட்டிவிட்டதால் அவரது மதிப்பு குறைந்துவிடுமா... அல்லது வசூல் சக்கரவர்த்தி அந்தஸ்து இறங்கிவிடுமா...
குசேலன் படத்தில இப்போதும் பிரமிட் சாய்மிராவுக்கு லாபம்தான். இதை எப்போதும் சொல்ல முடியும், எங்கேயும் சொல்ல முடியும். ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் பொய்க் கணக்கு காட்டி நஷ்டஈடு வாங்குவதில் குறியாக இருக்கிறார்கள். (இவர்களும் அடுத்த ரஜினி படம் வெளியாவதற்குள் தியேட்டர்களை சாய்மிராவுக்கோ ஆட்லேப்ஸூக்கோ விற்றுவிட்டு ஓடப் போகிறவர்கள்தான்.)
அதனால் இந்த ஜுஜுபி மேட்டருக்காக ரஜினியை ஒரு படி இறக்கி, தகுதியில்லாத ஒருவரை மேலேற்றப் பார்ப்பது என்ன நியாயம்?
ஆளவந்தான் தொடங்கி, மும்பை எக்ஸ்பிரஸ் வரை வெளியான கமலின் தோல்விப் படங்களுக்காக அவரை ஒவ்வொரு படியாக இறக்கிக் கொண்டே போயிருந்தால், இன்று தமிழ் சினிமாவின் கடைசிப் படியில் அல்லவா நின்று கொண்டிருந்திருப்பார் கமல்ஹாசன்!