Tuesday, November 18, 2008

சத்தியநாராயணாவை நீக்கவில்லை! – சுதாகர் பேட்டி

கில இந்திய ரஜினிகாந்த் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்து சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. அவை மவெறும் வதந்திகளே. சத்தியநாராயணா நீக்கப்படவில்லை. தற்காலிக ஓய்விலிருக்கிறார், என ரஜினியின் நெருங்கிய நண்பரும், மன்றப் பணிகளை கவனிப்பவருமான சுதாகர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் கூறியுள்ளதாவது:

ரஜினி ரசிகர் மன்றத்தில் இப்போதும் சத்தியநாராயணா பொறுப்பில்தான் உள்ளார். அவர் நீக்கப்பட்டதாகக் கூறப்படுவது வீண் வதந்தி.

கடந்த 3-ந் தேதி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து பேசியபோது, சத்யநாராயணாவை மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து மன்ற பணிகளை கவனிக்க ஏற்பாடு செய்வீர்களா? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டார்.

அந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளிக்கும்போது, சத்யநாராயணாவுக்கு உடல் நலம் இல்லை. அவரை ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி நான்தான் கூறியிருக்கிறேன். அவருடைய தாயார் சமீபத்தில் மரணம் அடைந்து விட்டார். தந்தைக்கு 88 வயது ஆகிறது. அவரை, சத்யநாராயணாதான் கவனிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் கொஞ்சநாளைக்கு ஓய்வு எடுத்துக்கப்பா... உனக்கு பதில் நானே அதுவரை மன்றத்தைப் பார்த்துக்கிறேன், என்று கூறினார். இப்போது தான் சொன்னதைப் போலவே சத்திக்கு ஓய்வளித்துள்ளார் ரஜினி.

ஆனால் சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாகவும், அவருக்கு பதில் என்னை நியமித்து இருப்பதாகவும் கண், காது, மூக்கு வைத்து வதந்தியைப் பரப்பி விட்டார்கள். அதில், கொஞ்சமும் உண்மை இல்லை. சத்யநாராயணாவை நீக்கிவிட்டதாக ரஜினிகாந்த் சொல்லவில்லை. சத்திக்கு உடல் நலம் இல்லாததால், தற்காலிகமாக ஓய்வு எடுத்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்.

நானே பார்த்துக் கொள்வேன்! - ரஜினி

இனிமேல் மன்ற பணிகளை நான்தான் கவனிப்பேன், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதற்காக ராகவேந்திரா மண்டபத்தில் 2 பணியாளர்களை வேலைக்கு நியமித்துள்ளார். அவர்கள் ரசிகர்களிடம் இருந்து வருகிற போன்கள் மற்றும் தகவல்களைக் குறித்து வைத்து என்னிடம் தருகிறார்கள். ரசிகர்களின் நிறை, குறைகளைக் கேட்டு, அவற்றை ரஜினிகாந்திடம் கூறவும், ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் கூறும் பதில்களை, ரசிகர்களிடம் கூறுவதற்காகவும்தான் அவர் என்னை நியமித்து இருக்கிறார்.

அவர் உத்தரவுப்படி, நான் என் பணிகளைச் செய்து வருகிறேன். இதுதான் உண்மை, என சுதாகர் தெரிவித்துள்ளார்.

எனவே மன்றப் பொறுப்பை தன் கையில் நேரடியாக ரஜினியே எடுத்துக் கொண்டிருப்பதால், பல அதிரடி முடிவுகள் அடுத்தடுத்து வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
http://www.envazhi.com

No comments: