Friday, November 14, 2008

அதான் ரஜினி!

ஜினி அரசியலில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவரைச் சுற்றி அரசியல் இருக்கிறது... என்று சிவாஜி வெள்ளிவிழாவில் கவிஞர் வைரமுத்து சொன்னதன் உண்மை சிலருக்கு இப்போதாவது புரிந்திருக்கும் என நம்புவோமாக...

தன்னைச் சுற்றி இவ்வளவு அரசியல் நடந்தாலும், அதற்குள் தன்னை இழுக்க எவ்வளவோ முயற்சிகள், பகீரதப் பிரயத்தனமாய் தொடர்ந்தாலும் அதற்கு உடனடியாக மயங்கிவிடாத யோகியின் மனது அமையப் பெற்ற தலைவர்கள் மகாத்மா காந்தியைப் போல ஒரு சிலர் மட்டும்தான் இந்த நாட்டில் காணக் கிடைத்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு உன்னதமான மன நிலைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் ரஜினி என்பதுதான் அவர் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துபவை.

ரசிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் எழுதியதில் தொடங்கிய ‘ரஜினி அரசியல் பரபரப்பு’ இந்த ஒரு மாத காலத்துக்குள் சுற்றிச் சுழன்று தமிழகத்தில் புதிய புயலைக் கிளப்பி வருகிறது.

இனி ரஜினியின் 'அரசியல் வாய்ஸ்' எடுபடாது என்று சில ரசிகர்களே கூட அயர்ந்து போய்விட்ட நிலையில், இலங்கைத் தமிழருக்கான உண்ணாவிரதம், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு என கிளம்பிய பரபரப்பு, இப்போது அத்வானி சந்திப்பு வரை வந்திருக்கிறது. அன்று அயர்ந்து போய்க் கிடந்த ரசிகர்கள் எல்லாம் இப்போது, ‘அட நம்ம தலைவர்தான் அடுத்த சிஎம்மாக்கும்...’ என்று அடித்தொண்டையில் சந்தோஷமாய் குரலெழுப்புவதைப் பார்க்க முடிகிறது.

மீடியாவுக்கோ, தங்கள் முகத்திரை கிழிந்து போன கவலை. தமிழ்நாட்டு மக்கள் எதை எழுதினாலும் படிப்பார்கள்தான்... ஆனால் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே கணக்கில் கொள்வார்கள்.. மற்றதை குப்பைத் தொட்டிக்கு சொந்தமாக்கி விடுவார்கள் என்ற உண்மை புரியாமல் பொய்யை எழுதியதால் கிடைத்துள்ள அவமானத்தால் வந்துள்ள கவலை அது.

இன்று பாவிகளின் பொய் பிரச்சார சாதனமாகத் திகழும் விஷ விகடன்கள், நாளொரு வண்ணம் பூசிக் கொண்டு சுயத்தை இழந்து நிற்கும் குமுதங்கள், அதல பாதாள சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொய் மலர்கள் எல்லாமே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பிரமையில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. இவை உளற உளற... அதுவே ரஜினிக்கு நல்ல உரமாக மாறிக் கொண்டு வருகிறது.

மக்களின் இந்த தெளிவு கடைசி வரைத் தொடர வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் விருப்பம்.

சாராயம் குடித்த குரங்கை ஒரு குளவியும் கொட்டினால்... எந்த மாதிரி கிறுகிறுப்பு வருமோ அப்படியொரு போதைதான் அரசியல் அதிகாரம். ரஜினியின் நிலையில், வேறு ஒரு நடிகர்தான் என்றில்லை... வேறு யாராக இருந்திருந்தாலும் இந்நேரம் இந்த போதாக்கு அடிமையாகி தொலைந்தே போயிருப்பார்கள்...

இங்குதான் நாலு பேர் தலைவா என்றால் அடுத்து நான்தான் சிஎம் என்று இவர்களாகவே ஒரு நாற்காலி செய்து தூக்கிக் கொண்டு அலைக்கிறார்களே...

ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள்.... இவர் தீர்க்கதரிசி... பல தீர்க்கதரிசிகளின் ஆசி பெற்ற தீர்க்கதரிசி. அதுவே அவரை என்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வைக்கிறது.

நேற்றைய நிகழ்வையே பாருங்கள்...

அத்வானியின் சிறப்பு அழைப்பாளராக மேடை ஏறிய ரஜினி, அவரிடம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.

ஒட்டுமொத்த மீடியாவும் விழாவை விட்டுவிட்டு ரஜினியின் பின்னால் ஓடி வந்து அவரை வழி மறிக்கிறது.

சார் சார் சார்... ஒரே ஒரு கேள்வி சார்... ப்ளீஸ்...ப்ளீஸ்...

நோ..நோ... இப்போ எதுவும் வேணாமே...

சார்... அத்வானியிடம் அரசியல் பேசினீர்களா...?

நோ.. திஸ் ஈஸ் எ கர்ட்டஸி விசிட்... இது மரியாதை நிமித்தமான சந்திப்பு... நத்திங் ஸ்பெஷல்!

சார், நீங்க பிஜேபிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவீங்களா?

ஓ... நோ நோ... அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.

நீங்க கட்சி ஆரம்பிக்கிறதா முடிவு பண்ணிட்டீங்களா சார்..?

ஸாரி... இது தேவையில்லாதது.

-அதான் ரஜினி!

எங்கும் எப்போதும் நிதானமிழக்காத, சுய கட்டுப்பாட்டுடன் கூடிய தலைவர்... இந்த தமிழ்நாடு இதுவரை பார்த்திராத தலைவராக ரஜினி உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

அவர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும்... ஆனால் அவர் வரும் நாள் நிஜமாகவே தமிழகத்தின் புதிய அரசியல் கலாச்சாரத்துக்கு, புதிய விடியலுக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நம்பிக்கை நடுநிலையாளர்களுக்கும் மத்திய தர மக்களுக்கும் வந்திருப்பதுதான் விசேஷம்!

குறிப்பு: வழக்கம்போல் இந்தப் பதிவுக்காகவும் விமர்சனக் கணைகளோடு வரும் பதிவர்/வாசகர்களுக்கு...

இங்கே எதையும் நாம் இட்டுக் கட்டிச் சொல்லவில்லை. மிகைப்படுத்தல் இல்லாத ஒரு சமப் பார்வையுடன்தான் இதை எழுத முயற்சித்துள்ளாம். படித்துவிட்டு சில நிமிடம் யோசித்துப் பார்த்து நீங்கள் விமர்சிக்கலாம்.

ஆரோக்கியமான விமர்சனங்களை என்வழி நிச்சயம் அனுமதிக்கும்!
http://www.envazhi.com

No comments: