Thursday, November 6, 2008

மீடியாவுக்கு ரஜினி தந்த மரியாதை!

மீடியாவைப் பொறுத்தவரை ரஜினி ஒரு செய்திச் சுரங்கம். அவரது படங்களோ காமதேனு. அவரது சராசரி படங்கள் ஒளிபரப்பாகும்போது கூட, சாதாரண நாட்களைவிட ஒன்றரை மடங்கு கூடுதல் பார்வையாளர்கள் கிடைக்கிறார்கள் தமிழ் சேனல்களுக்கு. அதுவே சூப்பர் ஹிட் படமாக இருந்தால் கேட்க வேண்டுமா...

மிகையாகச் சொல்வதாக நினைக்கவேண்டாம், இன்றைக்கு பல பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களைத் தக்கவைத்துக் கொள்ள ஏதாவது ஒரு வடிவில் ரஜினியை தலைப்புச் செய்தியாக்குகின்றன.

நாம் முன்பே சொன்னபடி, வாரமிரு முறை இதழ்கள் இரண்டில் கண்டிப்பாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ரஜினி பற்றிய ‘டெஸ்க் ஒர்க்’ கட்டுரை இருந்தே தீர வேண்டும் என்பது கட்டாய உத்தரவாம்.

உண்மையில் வேறு ஒரு நடிகராக இருந்தால், கடந்த சில வருடங்களாகவே மீடியா செய்து வரும் அட்டூழியத்தைச் சகிக்க முடியாமல் விரட்டியடித்திருப்பார்கள். கணக்கில்லாமல் வழக்குத் தொடர்ந்து, பல பத்திரிக்கையாசிரியர்கள், வெளியீட்டாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிருபரை கோர்ட்டுக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கும் அலைய விட்டிருப்பார்கள்.

ஆனால் ரஜினியோ எப்போதுமே நல்ல மனிதனாக இருப்பதால், ‘பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே...’ என்பதுபோல், அழையா விருந்தாளிகளாக வந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு உரிய மரியாதையை அளிப்பது வழக்கம். அதற்கு சமீபத்திய ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு ஒரு நல்ல உதாரணம்.

ஆரம்பத்தில் இவர்களை உள்ளே விடலாமா என்பதில் சத்தியநாராயணாவுக்கு நிறைய தயக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு ரஜினியிடமிருந்து வந்த தெளிவான உத்தரவு, ‘மீடியா பீப்பிள் எல்லாரையும் உள்ளே விடுப்பா!’, என்பதுதான்.

புகைப்படக்காரர்கள் விரும்பிய வரை புகைப்படங்கள் எடுத்துத் தள்ள, வீடியோகிராபர்கள் தங்கள் பங்குக்கு ‘சுட்டுத்’ தள்ளினர்.

இந்தப் பேட்டியை கலைஞர் டிவியும் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் சில காரணங்களுக்காக அவர்கள் ஒளிபரப்ப யோசித்துக் கொண்டிருக்க, அந்த கேப்பில் புகுந்து விளையாடியது சன். மற்றபடி ரஜினி, இன்னார்தான் ஒளிபரப்பவேண்டும் என எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
இத்தனைக்கும் இந்த நிகழ்வைப் பதிவு செய்ய நாடு முழுவதிலுமிருந்து பலவேறு தேசிய அளவிலான சேனல்கள் ராகவேந்திரா மண்டபத்துக்குப் படையெடுத்திருந்தன. எவ்வித அழைப்பும் இல்லாமலேயே.

தன்னைக் கடுமையாக குறைகூறும் பல பத்திரிகையாளர்களைப் பற்றி ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவரது பக்குவத்தையும் முதிர்ச்சியையும் காட்டுவதாக அமைந்திருந்தது.
குசேலன் விவகாரத்தில் நீங்கள் கேட்டது மன்னிப்பா வருத்தமா... என்ற கேள்விக்கு ரஜினி அளித்த பதில், அவரது உள்மனதைக் காட்டுவதாக அமைந்தன.

சத்தியமா நான் மன்னிப்புக் கேட்கல.. நான் வருத்தம்தான் தெரிவிச்சேன். மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லே. ஆரம்பத்தில மீடியாக்காரங்க புரிஞ்சுக்காம மன்னிப்புக் கேட்டதா எழுதினாலும், பின்னர் உண்மை தெரிஞ்சிக்கிட்டாங்க. சரியா எழுதினாங்க... அவங்கள தப்பு சொல்லக் கூடாது... (ரஜினியின் முழுமையான பதில் இந்நேரம் உங்களுக்கே மனப்பாடமாகிவிட்டிருக்கும்!), என்றார்.

இன்னொரு கேள்வியில், நீங்க குழப்பவாதின்னு பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கே தலைவா, என ஒரு ரசிகர் கேட்ட போதும், ரஜினி பத்திரிகையாளர்களுக்கு எதிராக எதும் பேசவில்லை.

பத்திரிகைக்காரங்களை வச்சிக்கிட்டே இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்களே என சிரித்தவர், அடுத்து சொன்ன பதில் அவர் எவ்வளவு தெளிவானவர் என நிரூபித்தது.

நானும் சில நேரத்துல அப்படித்தானே நடந்துக்கிறேன்... நாம ஒண்ணு நெனச்சுப் பேசுவோம், அதை வேற விதமா புரிஞ்சிக்கிறாங்க. கொஞ்ச நாளைக்கு முன் நான் விட்ட அறிக்கை குழப்பமா இருக்குன்னாங்க. அந்த அறிக்கையை மட்டும் விடாம இருந்திருந்தா நாட்ல எவ்வளவு குழப்பம் வந்திருக்கும்... நான் என்னிக்குமே என் சுயநலத்துக்காக எந்தக் குழப்பமும் ஏற்படுத்தியதில்லை...

தன்னை உணரும் மனிதனே தலைசிறந்த தலைவன் என்பதை ரஜினி நிரூபித்த இடம் இதுதான்.

ரஜினி நினைத்திருந்தால், ‘நான் சொன்னதை மீடியா தவறாக பிரச்சாரம் செய்துவிட்டது..’ என பத்திரிகைகளை போட்டுக் காய்ச்சி எடுத்திருக்கலாம் வெளிப்படையாக. அந்த லட்சணத்தில்தான் இன்றைக்கு பெரும்பாலான பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும் ரஜினி விஷயத்தில் நடந்து கொண்டன(ர்).

ஆனால் ஒரு நல்ல ஆட்சியாளர்/தலைவருக்கு அழகு எதிராளியையும் அரவணைத்து, அவருக்கும் அனைத்து நன்மைகளும் கிடைக்கச் செய்வதே.

ரஜினி ஒரு நல்ல தலைவர்!
http://www.envazhi.com

No comments: