Showing posts with label Advani. Show all posts
Showing posts with label Advani. Show all posts

Friday, November 28, 2008

இந்தியாவின் தவப் புதல்வர்களில் ஒருவர் ரஜினி! – இல கணேசன்

பொதுவாக திராவிட கட்சிகளில் உள்ள தலைவர்களுக்கு இணையாக பேச்சுத் திறன் கொண்ட தலைவர்கள் தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பாஜகவில் இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

யோசித்துப் பார்த்தால் அது உண்மைதான். யதார்த்தமான தேசியக் கட்சிகளின் பால் மக்களுக்கிருந்த ஈடுபாட்டைத் திருப்ப திராவிடக் கட்சிகள் பயன்படுத்திய உத்திகளுள் ஒன்று அலங்கார மேடைப் பேச்சு. ஆனால் தீரர் சத்தியமூர்த்தி, சிஎஸ் போன்ற போன தலைமுறை தலைவர்கள் அழுத்தமான, நாகரிகமான, மறுக்க முடியாத மேடைப் பேச்சுகளை வழங்குவதில் தனித்த திறனுடன் விளங்கினர்.

ஆனால் தமிழ் சினிமாவில் நிலவும் பாகுபாட்டைப் போலவே இவர்களின் பேச்சு ஏ சென்டர்களுக்கு மட்டும்தான் என்றிருந்த்து. ஆனால் அறிஞர் அண்ணா, கலைஜர், மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரது பேச்சுக்களே அனைத்துத் தரப்பு மக்களின் மனங்களையும் கொள்ளை கொண்டன.

இன்றைய தலைமுறையில் நல்ல மேடைப்பேச்சுக்கு திமுக பேச்சாளர்களை விட்டால் ஆள் கிடையாது (மோசமான பேச்சுக்கும்தான்!). புரட்சித் தலைவர் காலத்திலாவது பரவாயில்லை, ஆர்எம்வீ, முத்துசாமி, எஸ்டிஎஸ், ஜேப்பியார், நாவலர் என நிறைய தலைகள் இருந்தன. இவர்கள் பேச்சைக் கூட எடுபடாமல் செய்யுமளவுக்கு செல்வாக்கு புரட்சித் தலைவரின் முகத்துக்கு இருந்த்து. ஆனால் இன்றைய அதிமுகவில் அப்படிப்பட்டவர்களை வலை வீசித்தான் தேட வேண்டும்.

காங்கிரஸில் தமிழருவி மணியன், பீட்டர் அல்போன்ஸ் இருவரை விட்டால் நல்ல மேடைப் பேச்சுக்கு ஆளில்லை.

பாஜகவில் மூன்று நல்ல பேச்சாளர்கள் உள்ளனர். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் திருநாவுக்கரசர், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இல கணேசன். இந்த மூவரைத் தவிர நான்காமவர் ஒருவர் உண்டு. அது நம்ம சோ. ஆனால் அவர் எப்போது பாஜவை ஆதரிப்பார், எப்போது காலை வாருவார் என்று அவரது குரு அத்வானிக்கே தெரியாது!

இவர்களை எல்லாம் விட இல கணேசனுக்கு உள்ள சிறப்பு அவரது பேச்சில் இழையோடும் அழுத்தம் திருத்தமான வாதம். எந்தக் கருத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசத் தெரியாத மனிதர் அவர். கட்சிப் பணிக்காகவே தன் இளமையை அர்ப்பணித்துக்கொண்ட கட்டை பிரம்மச்சாரி, நேர்மையான மனிதர்.

பாஜக என்ற கட்சியுடன் நமக்குள்ள முரண்பாடுகளை தள்ளிவிட்டுப் பார்த்தால், இல கணேசன் அபரிமிதமான திறமைகளை உள்ளடக்கிய யதார்த்தமான மனிதர். எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய யதார்த்த அம்சங்களைக் கொண்ட நல்ல அரசியல்வாதி அவர்.
‘ஆர்த்தி’ என்ற புதிய ஆன்மீக தொலைக்காட்சி துவக்க விழா இரு தினங்களுக்கு முன் நடந்தது. சிறப்பு விருந்தினர் இல கணேசன்.

அவரது விழா சிறப்புரை மிகவும் அருமையாக, நிறைவாக இருந்தது. இந்த மனிதர் மட்டும் திராவிடக் கட்சிகளில் இருந்திருந்தால்... வைகோவைப் போல அருமையான பேச்சாளராக புகழ்பெற்றிருப்பார்... பரவாயில்லை. காலமிருக்கிறது. ரஜினி என்ற நேரிய மனிதரின் அரசியல் பிரவேசம் பாக்கியிருக்கிறது... பார்க்கலாம்!

தொடக்க விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் அவருடன் பேச வாய்ப்புக் கிடைத்தது.

கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக நம்மைக் கவனித்து வரும் ஒரு நண்பர் அவர். அந்த உரிமையில் அவரது காரில் ஏறிக் கொள்ளச் சொன்னவர், தொடர்ந்து அரைமணி நேரம் நம்மிடம் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

(நமது கேள்விகளை விட்டுவிடுவோம்... நேரடியாக அவரது பேச்சுக்குப் போய்விடுவோம்!)

நல்ல மனிதர் ஒருவருக்காக இணையதளம் நடத்துகிறீர்கள், முதலில் வாழ்த்துக்கள். ரஜினிக்கு வெப்சைட் என்ற பேரில் அவரது புகழ் பாடும் வேலை வேண்டாம். அதை ரஜினியே விரும்ப மாட்டார். எனக்குத் தெரியும் நண்பர் ரஜினியைப் பற்றி!

மக்களை... அவரது ரசிகர்களை மேலும் விவரமானவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்குங்கள்.

கிட்டத்தட்ட ரஜினிக்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட இணைய தளங்களும், நூறுக்கும் மேற்பட்ட பிளாக்குகளும் இருப்பதாக நண்பர் குருமூர்த்தி என்னிடம் ஒருமுறை சொன்னார். எனக்குத் தெரிந்து உலகில் எந்த நடிகருக்கும் இந்தச் சிறப்பு இல்லை என்றே நினைக்கிறேன். நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

ஆன்மீகத்தையும், இந்த நாட்டின் கலாச்சாரத்தையும் பாதுகாக்க நினைக்கும் ஒரு உண்மையான இந்தியனுக்கு கிடைத்துள்ள பெருமை இது.

ரஜினியை ஒரு நடிகன் என்றா நினைக்கிறீர்கள். நிச்சயம் இல்லை. அவர் அதற்கும் மேல். அவர் ஒரு அரசியல்வாதி அல்லது சமூக சேவகர் என்ற வட்டத்துக்குள் அடங்குபவரில்லை.

இந்த உலகில் நான் பெரிதும் மதிக்கும் அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி ஆகிய பெரிய தலைவர்களின் வரிசையில் ரஜினியை நான் பார்க்கிறேன். உடனே, அவர் பாஜவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். நிச்சயம் அப்படியொரு குறுகிய மனப்பான்மை எனக்குக் கிடையாது.

ரஜினி ஒரு அதிசயப்பிறவி. அவர் ஆதரவு அத்வானி போன்ற நல்ல மனிதருக்குக் கிடைத்தால் நல்லதுதான். அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இந்த இந்திய மக்களுக்கு அவரது சேவை கிடைக்க வேண்டும். அவரைப் போன்ற நல்ல மனிதர் பிறப்பதே அரிது. அப்படி ஒரு அதிசய மனிதரின் வருகைக்காகத்தான் நாடு தவம் கிடக்கிறது.

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள்... இன்றைக்கு நாடு இருக்கும் நிலைமயில் எந்த மனிதரையாவது, அரசியலுக்கு வாருங்கள், கட்சி துவங்குங்கள் என மக்கள் அழைக்கிறார்களா... இல்லையே! அந்தப் பெருமையை ரஜினி ஒருவருக்குத்தான் மக்கள் முன் வந்து தருகிறார்கள். வருந்தி வருந்தி அழைக்கிறார்கள். ஆனால் அந்த மனிதரோ, தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள ஒரு யோகியைப் போல தவம் இருக்கிறார்.

ராமாயண, மகாபாரத காலத்து தருமங்களையும் இந்த பாரதத்துக்கு தேவையான கர்ம சிந்தனைகளையும் ஒருங்கே கொண்டவர் நண்பர் ரஜினி. நியாய தர்மத்துக்கு அந்த அளவு முக்கியத்துவம் தருபவர்.

அவர் இடத்தில் வேறு யாரையாவது நினைத்துப் பாருங்கள்.. அவசர கோலகத்தில் ஏதோ ஒரு கட்சி தொடங்கி அல்ப சந்தோஷங்களைப் பார்த்துவிட்டு இந்நேரம் காணமல் போயிருப்பார் அல்லது மோசமான அரசியல்வாதிகள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்.
வரமாட்டேன்... வரமாட்டேன் என்கிறார். கடைசியில் இவர் வந்துதான் இந்த நாடு நல்ல வழிக்கு திரும்ப வேண்டியிருக்கும் பாருங்கள், என அடிக்கடி சொல்வார் என் நண்பர் குருமூர்த்தி.

அத்வானியின் ஆச்சர்யம்!

சமீபத்தில் சென்னை வந்த அத்வானி அவர்கள் ரஜினியைச் சந்தித்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

அது ஒரு அரசியல்லாத அரசியல் சந்திப்பு! அத்வானி அவர்கள் அத்தனை சீக்கிரம் ஒவுர் வீடு தேடிப் போய்விடமாட்டார். அவர் அந்த அளவு ஈகோ பார்ப்பவர் என்று நினைத்துவிட வேண்டாம். அவருக்கு மனிதர்களைப் பார்த்தவுடன் புரிந்துவிடும் ஒருவர் எவ்வளவு நேர்மையுடன் நடந்து கொள்வார் என்று. ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்தபின், அவரது மன உறுதி குறித்து மிகுந்த ஆச்சர்யப்பட்டார் அத்வானி. மக்களிடம் இத்தனை வரவேற்பு, அழைப்புகள் இருந்தும் ரஜினி அமைதி காக்கிறார் என்றால் அதற்குப் பின்னால் ஆழ்ந்த அர்த்தம் உள்ளது. இந்த மாதிரி நல்ல மனிதர்களின் நட்புதான் நமக்குத் தேவை; இவரைப் போன்ற மனிதர்கள்தான் இந்திய அரசியலுக்குத் தேவை என்றார். அதையே அவர் பத்திரிகையாளர்களிடமும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் தவப்புதல்வர்களுள் ஒருவர் ரஜினி. இந்த என் கருத்தில் என்றைக்கும் மாற்றம் இருக்காது, ரஜினி கட்சி ஆரம்பித்து தனி வழி கண்டாலும்...!, என்றார் இல கணேசன்.

இவை ஒப்புக்காக சொல்லப்பட்டவை அல்ல... உள்மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பதை நம்மால் உணர முடிந்தது!

http://www.envazhi.com

Friday, November 14, 2008

அதான் ரஜினி!

ஜினி அரசியலில் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அவரைச் சுற்றி அரசியல் இருக்கிறது... என்று சிவாஜி வெள்ளிவிழாவில் கவிஞர் வைரமுத்து சொன்னதன் உண்மை சிலருக்கு இப்போதாவது புரிந்திருக்கும் என நம்புவோமாக...

தன்னைச் சுற்றி இவ்வளவு அரசியல் நடந்தாலும், அதற்குள் தன்னை இழுக்க எவ்வளவோ முயற்சிகள், பகீரதப் பிரயத்தனமாய் தொடர்ந்தாலும் அதற்கு உடனடியாக மயங்கிவிடாத யோகியின் மனது அமையப் பெற்ற தலைவர்கள் மகாத்மா காந்தியைப் போல ஒரு சிலர் மட்டும்தான் இந்த நாட்டில் காணக் கிடைத்திருக்கிறார்கள்.

அப்படி ஒரு உன்னதமான மன நிலைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார் ரஜினி என்பதுதான் அவர் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் நமக்கு உணர்த்துபவை.

ரசிகர்கள் கட்சி ஆரம்பித்ததற்கு ஒரு எச்சரிக்கைக் கடிதம் எழுதியதில் தொடங்கிய ‘ரஜினி அரசியல் பரபரப்பு’ இந்த ஒரு மாத காலத்துக்குள் சுற்றிச் சுழன்று தமிழகத்தில் புதிய புயலைக் கிளப்பி வருகிறது.

இனி ரஜினியின் 'அரசியல் வாய்ஸ்' எடுபடாது என்று சில ரசிகர்களே கூட அயர்ந்து போய்விட்ட நிலையில், இலங்கைத் தமிழருக்கான உண்ணாவிரதம், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு என கிளம்பிய பரபரப்பு, இப்போது அத்வானி சந்திப்பு வரை வந்திருக்கிறது. அன்று அயர்ந்து போய்க் கிடந்த ரசிகர்கள் எல்லாம் இப்போது, ‘அட நம்ம தலைவர்தான் அடுத்த சிஎம்மாக்கும்...’ என்று அடித்தொண்டையில் சந்தோஷமாய் குரலெழுப்புவதைப் பார்க்க முடிகிறது.

மீடியாவுக்கோ, தங்கள் முகத்திரை கிழிந்து போன கவலை. தமிழ்நாட்டு மக்கள் எதை எழுதினாலும் படிப்பார்கள்தான்... ஆனால் எதை எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே கணக்கில் கொள்வார்கள்.. மற்றதை குப்பைத் தொட்டிக்கு சொந்தமாக்கி விடுவார்கள் என்ற உண்மை புரியாமல் பொய்யை எழுதியதால் கிடைத்துள்ள அவமானத்தால் வந்துள்ள கவலை அது.

இன்று பாவிகளின் பொய் பிரச்சார சாதனமாகத் திகழும் விஷ விகடன்கள், நாளொரு வண்ணம் பூசிக் கொண்டு சுயத்தை இழந்து நிற்கும் குமுதங்கள், அதல பாதாள சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொய் மலர்கள் எல்லாமே, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற பிரமையில் உளறிக் கொட்டிக் கொண்டிருக்கின்றன. இவை உளற உளற... அதுவே ரஜினிக்கு நல்ல உரமாக மாறிக் கொண்டு வருகிறது.

மக்களின் இந்த தெளிவு கடைசி வரைத் தொடர வேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் விருப்பம்.

சாராயம் குடித்த குரங்கை ஒரு குளவியும் கொட்டினால்... எந்த மாதிரி கிறுகிறுப்பு வருமோ அப்படியொரு போதைதான் அரசியல் அதிகாரம். ரஜினியின் நிலையில், வேறு ஒரு நடிகர்தான் என்றில்லை... வேறு யாராக இருந்திருந்தாலும் இந்நேரம் இந்த போதாக்கு அடிமையாகி தொலைந்தே போயிருப்பார்கள்...

இங்குதான் நாலு பேர் தலைவா என்றால் அடுத்து நான்தான் சிஎம் என்று இவர்களாகவே ஒரு நாற்காலி செய்து தூக்கிக் கொண்டு அலைக்கிறார்களே...

ஆனால் இந்த மனிதரைப் பாருங்கள்.... இவர் தீர்க்கதரிசி... பல தீர்க்கதரிசிகளின் ஆசி பெற்ற தீர்க்கதரிசி. அதுவே அவரை என்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வைக்கிறது.

நேற்றைய நிகழ்வையே பாருங்கள்...

அத்வானியின் சிறப்பு அழைப்பாளராக மேடை ஏறிய ரஜினி, அவரிடம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு திரும்புகிறார்.

ஒட்டுமொத்த மீடியாவும் விழாவை விட்டுவிட்டு ரஜினியின் பின்னால் ஓடி வந்து அவரை வழி மறிக்கிறது.

சார் சார் சார்... ஒரே ஒரு கேள்வி சார்... ப்ளீஸ்...ப்ளீஸ்...

நோ..நோ... இப்போ எதுவும் வேணாமே...

சார்... அத்வானியிடம் அரசியல் பேசினீர்களா...?

நோ.. திஸ் ஈஸ் எ கர்ட்டஸி விசிட்... இது மரியாதை நிமித்தமான சந்திப்பு... நத்திங் ஸ்பெஷல்!

சார், நீங்க பிஜேபிக்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவீங்களா?

ஓ... நோ நோ... அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.

நீங்க கட்சி ஆரம்பிக்கிறதா முடிவு பண்ணிட்டீங்களா சார்..?

ஸாரி... இது தேவையில்லாதது.

-அதான் ரஜினி!

எங்கும் எப்போதும் நிதானமிழக்காத, சுய கட்டுப்பாட்டுடன் கூடிய தலைவர்... இந்த தமிழ்நாடு இதுவரை பார்த்திராத தலைவராக ரஜினி உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உறுதி.

அவர் எப்போது வேண்டுமானாலும் வரட்டும்... ஆனால் அவர் வரும் நாள் நிஜமாகவே தமிழகத்தின் புதிய அரசியல் கலாச்சாரத்துக்கு, புதிய விடியலுக்கு வழிவகுக்கும் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி. அந்த நம்பிக்கை நடுநிலையாளர்களுக்கும் மத்திய தர மக்களுக்கும் வந்திருப்பதுதான் விசேஷம்!

குறிப்பு: வழக்கம்போல் இந்தப் பதிவுக்காகவும் விமர்சனக் கணைகளோடு வரும் பதிவர்/வாசகர்களுக்கு...

இங்கே எதையும் நாம் இட்டுக் கட்டிச் சொல்லவில்லை. மிகைப்படுத்தல் இல்லாத ஒரு சமப் பார்வையுடன்தான் இதை எழுத முயற்சித்துள்ளாம். படித்துவிட்டு சில நிமிடம் யோசித்துப் பார்த்து நீங்கள் விமர்சிக்கலாம்.

ஆரோக்கியமான விமர்சனங்களை என்வழி நிச்சயம் அனுமதிக்கும்!
http://www.envazhi.com

Thursday, November 13, 2008

அத்வானி – ரஜினி: எளிமையின் சிகரங்கள்!

ஜினியை அத்வானி சந்தித்ததன் பின்னணி குறித்து இனி ஒவ்வொருவரும் கட்டுக் கதைகளாக எழுதிக் குவிப்பார்கள். நமக்கு அந்த விவரங்கள் வேண்டாம். உண்மை மட்டும்தான் தேவை. ரஜினியைப் போன்ற உண்மையான மனிதர்கள் கட்டுக் கதைகளுக்காக கவலைப்படுவதில்லை.

ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பின் அத்வானி பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், சென்னை வரும்போது வீட்டுக்கு வருமாறு ரஜினி அழைத்தார். எனக்கும் அவரைச் சந்தித்துப் பேசும் ஆவலிருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது.
ஆண்டவன் நினைத்தால் நான் அரசியலுக்கு வருவேன் என ரஜினி கூறியிருப்பதை நான் வரவேற்கிறேன். நான் அவரிடம், ‘உங்கள் நிலைப்பாடு அற்புதமானது. நீங்கள் நிச்சயம் அரசியலுக்கு வருவீர்கள். அதற்கு என் ஆசீர்வாதம்’, என்று கூறினேன். அவரிடம் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யுமாறு கேட்டேன், ஆனால் பதில் சொல்லவில்லை, என்று யதார்த்தமாகக் கூறினார்.

சும்மா விடுவார்களா நம்ம காகிதப் புலிகள்...

அதற்குள், ‘அத்வானி ஒன்றும் தானாகப் போகவில்லையாம், ரஜினி வேண்டி வருந்தி அழைத்ததால்தான் போனாராம்’, என எழுதிவிட்டனர்.

அவர்களது பொறாமைத் தீயில் நாளும் அவர்களே வெந்து கொண்டிருப்பதன் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்...! இதில் ஒரு அல்ப திருப்தி..!

அத்வானியின் இயல்பு!

ஒரு அரசியல்வாதியாக நாம் அத்வானியைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. அவரது கட்சி மீதோ, அவர்களின் கொள்கை மீதோ நமக்கு பெரிய அபிப்பிராயமும் கிடையாது. ஆனால் அத்வானி நேர்மையாளர் எனப் பெயரெடுத்தவர். எளிமைக்கு மறுபெயர் அத்வானி என்று சொல்லலாம்.

2001-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் சமயத்தில் அவரது பேட்டி அவசரமாகத் தேவைப்பட்டது. அப்போது அவர் மத்திய அமைச்சர். அவரைப் பேட்டியெடுக்க அவரது செயலாளரிடம் தொடர்பு கொண்டோம். அடுத்த நாள் நேரில் வருமாறு அவரும் நேரம் ஒதுக்கிவிட்டார்.

ஆனால் டெல்லிக்குச் சென்று பேட்டியெடுத்து திரும்ப வேண்டும். அன்றைய விமானக் கட்டணப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய், இரண்டு நாள் கால அவகாசம் வேண்டும்.

செயலாளரிடம் நிலைமையைச் சொன்னபோது, டெல்லியில் உள்ள வேறு யாராவது ஒரு நிருபரை அனுப்புமாறு மாற்று யோசனை சொன்னார். ஆனால் அன்றைய சிறப்புக் கட்டுரைக்கான அவரது பேட்டி, குறிப்பாக இந்தி சேனலில் அன்றே ஒளிபரப்பாக வேண்டிய கட்டாயம். உடனே அவருக்கு நிலைமையை விளக்கினாம். அடுத்த 30 நிமிடம் கழித்து பேசச் சொன்னார்.

பேசினோம். மறுமுனையில் மாண்புமிகு எல்.கே. அத்வானி!

அத்தனை எளிமை, எளிதில் அணுகும் தன்மை கொண்டவர் அத்வானி. அவர் சூப்பர் ஸ்டாரை தேடி வந்து பார்ப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மீண்டும் மீண்டும் வரவேண்டியிருந்தாலும் வருவார்...!

மற்றபடி சூப்பர்ஸ்டாரின் இயல்பு பற்றி நாட்டுக்கே தெரியும். யாராக இருந்தாலும் தன்னைத் தேடி வந்துதான் பார்க்க வேண்டும் என்ற ஈகோ இல்லாத மனிதர் அவர்.

‘உங்கள் வீட்டுக்கு வருமாறு முன்பு அழைத்தீர்கள். வர முடியவில்லை. இப்போது சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்க வீட்டுக்கு வரலாமா...?’ என்று கேட்கும் இந்தியாவின் பிரதமர் பதவிக்கான பிரதான கட்சியின் வேட்பாளரிடம் அவர் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?

ரஜினியைப் போன்ற நல்லவர்களின் பெருமையை இங்குள்ள வக்கிரம் பிடித்த அரசியல்வாதிகளுக்கும், நோயுள்ளம் கொண்ட பத்திரிகையாள பாவிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆண்டவன், அத்வானியை போயஸ் இல்லம் (இனி அரசியலில் போயஸ் இல்லம் என்றால் ரஜினி வீடு என்று பொருள் கொள்க!) போக வைத்தார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் எத்தனை சரித்திர சந்திப்புகள் இந்த போயஸ் இல்லத்தில் நடக்கப் போகின்றனவோ!

என்ன சொல்றீங்க!
http://www.envazhi.com

Wednesday, November 12, 2008

‘நாளைய முதல்வரைச் சந்தித்த பாஜக பிரதமர் வேட்பாளர்’!!

ராகவ வீரா அவென்யூவுக்கு அடுத்த தெருவில்தான் இருக்கிறது அந்தப் பிரபல வீடு. அடுத்த முதல்வர் என அதிமுகவினரும் சில எதிர்க்கட்சிகளும் நம்பும் ஜெயலலிதாதாவின் வேதா இல்லம்தான் அது.

ஆனால் அந்த வீட்டை விட மிக சக்தி மிக்கதாக திகழ்வது ராகவ வீரா அவென்யூவிலிருக்கும் இன்னொரு இல்லம். வாய்மையே வெல்லும் என பொன்னெழுத்துக்கள் தகதகக்கும் அந்த இல்லத்தின் சொந்தக்காரர் யாரென்பது சொல்லாமலே தெரியும்!

இன்று புதன்கிழமை மாலை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அந்த இல்லத்தில் நடந்த சந்திப்பு மீதுதான் நிலைத்திருந்தது.

ஆம்... பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி இன்று சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்து அரைமணி நேரத்துக்கும் மேல் அரசியல் பேசினார்!

சென்னையில் இன்று நடந்த அத்வானியின் சுயசரிதை என் நாடு; என் வாழ்க்கை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அத்வானி முதலில் பார்த்துப் பேச விரும்பியது ரஜினியைத்தான்.

அவரிடம் ஏற்கெனவே ரஜினியின் சமீபத்திய அரசியல் சார்ந்த பேச்சுக்கள், அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள அசாதாரண எழுச்சி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருந்தது.

இதன் காரணமாகவே, தனது புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி பங்கேற்க வேண்டும் என அத்வானி விரும்பினார். அதை தமிழக பாஜகவினரிடமும் தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த இரு தினங்களுக்கு முன் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து விழாவுக்கு அழைப்பு விடுத்தார் இந்தி நடிகரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா.

அவரைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கான பாஜக வேட்பாளரான அத்வானி இன்று போயஸ் கார்டன் சென்றார்.

மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்திப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் திருநாவுக்கரசர், சோ எஸ். ராமசாமி மற்றும் எஸ். குருமூர்த்தி ஆகிய மூவர்தான்.

இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட விவரங்கள் என்னவென்று ரஜினி தரப்பில் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால் இச்சந்திப்பு குறித்துப் பேசிய திருநாவுக்கரசர், ரஜினியின் அரசியல் பிரவேசம், கட்சி ஆரம்பிக்கும் திட்டம் குறித்து அத்வானி கேட்டறிந்ததாகத் தெரிவித்தார்.

ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்த அத்வானி கூறுகையில், “இது அரசியல் நிமித்தமான சந்திப்புதான். வருகிற பொதுத்தேர்தலில் ரஜினியின் ஆதரவைக் கோரவே அவரது இல்லம் தேடிச் சென்றேன்....” என்று தெரிவித்தார்.

ஆனால் வெளிப்படையான எந்த ஆதரவையும தன்னால் அளிக்க முடியாது என ரஜினி தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த பிரதமர் எனும் நிலையில் வைத்துப் பார்க்கப்படும் நாட்டின் பெரிய தலாவர் ஒருவரே ரஜினியை வீடு தேடிப்போய் சந்தித்திருப்பது, ரஜினி ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஒரு வருங்கால முதல்வரை, வருங்கால பிரதமர் சந்தித்திருக்கிறார்...’ என அர்த்தத்துடன் சொல்லி மகிழ்கின்றனர் ரசிகர்கள்.

"மக்கள் ஆதரவு எனும் மகத்தான சக்தி இன்றைக்கு ரஜினியிடம் மட்டுமே உள்ளது. காரணம் மாசற்ற கரங்கள், நேர்மையான எண்ணங்களுக்குச் சொந்தக்காரர் ரஜினி. அதனால்தான் இன்று தமிழக அரசியலின் மையப் புள்ளியாகப் பார்க்கப்படுகிறார். டெல்லியைப் பொறுத்தவரை இன்றைக்கு கருணாநிதி, ஜெயலலிதாவை விட ரஜினியின் நகர்வுகள்தான் கூர்ந்து கவனிக்கப்படுகின்றன. இதை நன்கறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்", என்றார் நம்மிடம் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர்.

ஒவ்வொரு தமிழனும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் பெருமை இது!

நிஜமாகவே மகிழ்ச்சியில் மனம் அதிருதுங்கோ!!

http://www.envazhi.com