Friday, October 31, 2008

அடடா... என்னே தமிழுணர்வு!

குசேலன் படத்தில் ஒரு காட்சி. நரிக்குறவர் இன பிரதிநிதிகளான சின்னி ஜெயந்தும், பிரம்மானந்தமும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் மனு கொடுப்பார்கள். அப்போது ரஜினி அழகாக ஒரு வாக்கியம் சொல்வார்: ‘மனு வாங்க நான் என்ன மந்திரியா... நான் ஒரு நடிகன் அவ்வளவுதான்!’

-தன் நிலை உணர்தல் என்பதற்கு எத்தனை அழகான உதாரணம் பாருங்கள். இங்குள்ள நடிகர்கள் யாரும் தங்கள் நிலை உணர்ந்தவர்களாகவே தெரியவில்லை. உணர்வைக் காட்டுகிறோம் பேர்வழி என்று இருக்கிற பகையுணர்ச்சியைக் கிளறி விடுவதுதான் இவர்கள் செய்துவரும் வேலை.

பட்டால்தான் இவர்களுக்குப் புத்தி வருகிறது. ஒகேனக்கல் பிரச்சினையின்போது, ‘உருளுவது ரஜினி தலைதானே’ என்று பெரும்பாலான நடிகர்கள் சும்மா இருக்க, வயித்தெரிச்சல் கோஷ்டிகள் சந்தோஷமாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக மீடியாக்கள் பொய் பரப்பி, குசேலனில் தங்களுக்கு ஒரு ‘பங்கு’ கிடைக்காத கோபத்தைப் போக்கிக் கொண்டார்கள்!

ஆனால் அதே ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழக அரசு அடித்த குட்டிக் கரணங்களைப் பார்த்த பிறகுதான் பல முன்னணி நடிகர்களுக்கு, இதில் ‘புகுந்து விளையாடும்’ அரசியல் புரிய ஆரம்பித்தது. அதனால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தக் கூப்பிட்ட போது முதலில் உணர்ச்சி வேகத்தில் ஒப்புக் கொண்டவர்கள் பின்னர் சற்றே பின்வாங்கி, பின்னர் முழுசாகவே மறுத்துவிட்டனர்.

அமீர், சீமான் கைது என தமிழக அரசு போட்ட வேடத்தைப் பார்த்த பிறகு, தங்களின் எல்லை என்ன, எப்படி இனி பேச வேண்டும் என்றும் ஓரளவு ‘தெளிவாகி’ விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை.

அந்த அறிக்கையில், நடிகர் நடிகைகள் தங்கள் வரம்பு மீறி எதும் பேசக்கூடாது என்றும், தங்கள் உணர்வுகளை சுருக்கமாக வெளிப்படுத்தினால் போதும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு உளறக் கூடாது என்றும் அறிவித்து அதில் கையொப்பமிட்டு அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் விநியோகித்து வருகிறார்.

இதைத்தானே ஆரம்பத்திலிருந்து ரஜினி சொல்கிறார்.

கர்நாடகத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நிரந்தரமாகத் தங்கி அந்த மாநிலத்தவர்களாகவே மாறிவிட்டிருக்கிறார்கள். பெங்களூருவில் சரிபாதி தமிழர்கள்தான். ஐடி நிறுவன ஊழியர்களில் 80 சதவிகிதம் தமிழர்கள் நல்ல சம்பளத்துடன், தமிழ்நாட்டுக்கு திரும்பும் யோசனையே இல்லாமல் செல்வாக்குடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இவர்களின் அமைதி கெட்டும் போகும் விதத்தில் நாம் எப்போதும் பேசக் கூடாது. அரசுகள் மட்டத்தில் ஆராய்ந்து நிதானமாக எடுக்க வேண்டிய ஒரு முடிவை கலைஞர்களாகிய நாம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி கெடுக்க வேண்டாம், என்று பல ஆண்டுகளாகக் கூறிவருகிறார் ரஜினி.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர் நலன் பாதிக்காத வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறி வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் சொன்னதாலேயே அவரை தமிழர் விரோதியாகச் சித்தரித்தது ஒரு கும்பல். மீடியாவும் அவர்களுக்கு சொரிந்து கொடுத்தது. இப்போது அதுவே பெரிய புண்ணாகிப் போனதால், அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் இலங்கைத் தமிழர்கள் மீது பரிவு காட்டக் கூடாதா... அங்கே அவர்கள் செத்து மடிகிறார்கள்.. இங்கே இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ அவர்களும்தானே காரணம், அவர்களுக்குக் குரல் கொடுக்கக் கூடாதா...?

குரல் கொடுக்கலாம்... தப்பில்லை... ஆனால் குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு, குரல் வளையை நெறிக்கும் வேலையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நம்பி குரல் கொடுப்பதில் என்ன பலன்...?

ராஜீவ் காந்தியைக் கொன்றதற்காக தமிழர்கள் தண்டிக்கப்படுவது நியாயமா என முழங்கிய அரசியல்வாதிகள் தப்பிவிட்டார்கள். அதே குரலை உரத்து ஒலித்த பாரதிராஜாவைக் கைது செய்யுங்கள் என்ற முழக்கம் கேட்கிறதே... இந்த முழக்கத்துக்குப் பயந்து அவரும் அடக்கி வாசிக்கிறாரே... இதற்குப் பெயர் என்ன?

அன்று ரஜினியை விமர்சித்த அனைவரும் இன்று, ‘ரஜினி சொல்வதுதான் சரியானது. நமது உணர்வுகளை எந்த வற்புறுத்தலுக்கும் பணியாமல், அதேநேரம் யாரையும் வற்புறுத்தாமல் காட்டுவதுதான் சரியானது’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஏன்...? பச்சை சந்தர்ப்பவாதம்.

தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றதுமே, 'ரஜினி சொல்வதுதான் சரி... நாம் அப்படியே செய்யலாம்' என்று பேசத் தொடங்குகிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாதம் ஒருபோதும் உதவாது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மட்டுமல்ல... இம்மாதிரி உணர்ச்சிப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளில் கலைஞர்கள் என்றில்லாமல், அனைவருமே ஒருமித்த குரலில் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும். அதுதான் அந்த போராட்டத்துக்கு சரியான அந்தஸ்தைத் தரும். வெறும் உணர்ச்சிவசப்படல், எவ்வளவு சீரியஸான போராட்டத்தையும் கேலிக் கூத்தாக்கிவிடும்!
http://www.envazhi.com

2 comments:

Sanjai Gandhi said...

//அதே குரலை உரத்து ஒலித்த பாரதிராஜாவைக் கைது செய்யுங்கள் என்ற முழக்கம் கேட்கிறதே... இந்த முழக்கத்துக்குப் பயந்து அவரும் அடக்கி வாசிக்கிறாரே... இதற்குப் பெயர் என்ன?//

ராஜ தந்திரங்களை கரைத்து குடித்தவரைய்யா இந்த பாரதிராஜா.. :))

Anonymous said...

கலைஞர் கருணாநிதி - தமிழர்களில் அனுபவமிக்க, மூத்த நாடகக் கலைஞன்

- தேசப்பித்தன்

வன்னியிலிருந்து அனுப்பப்பட்டதாக சொல்லப்படும் ஓர் இறுவட்டை பார்த்ததும், தமிழக முதலமைச்சரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம் ஒன்று 29ம் திகதி சுபமாக, அதாவது முதல்வர் கருணாநிதிக்கு சுபமாக முடிவடைந்துள்ளது.

ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி ஆறு அம்ச தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்துடன் (?) ஆரம்பித்த கூத்தை, சொந்தப் பணத்தில் பத்து இலட்சம் ரூபாயை வழங்கியும் இந்திய மத்திய அரசின் முயற்சிகளுக்கு நன்றி கூறியும் நிறைவு செய்து வைத்துள்ளார் கருணாநிதி. இந்தியா என்ன செய்து கிழித்துவிட்டதென்று நன்றி கூறினாரோ, அது வேறு விடயம்.

கலைஞர் அரங்கேற்றிய இந்த நாடகத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தன. தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்தியப் பிரதமர், காங்கிரசின் தலைவர், தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள், தமிழ் சினிமாத்துறை, இலங்கை அரச அதிபர், இலங்கை அதிபரின் ஆலோசகர் எனப் பலரும் பங்கு பற்றியிருந்தனர். நாடகத்தில் பங்கு பற்றிய அனைவருமே தமது தரப்புக்களிற்கு ஏதுவான சாதகமான இலாபப் பங்குகளை பெற்றுக் கொள்ளத் தவறவில்லை.

இந்த கூத்தாட்டத்தில் பயனடைந்தவர் என்றால் அது கருணாநிதியும் அவரது குடும்ப அரசியல் தலைமையும், இந்திய மத்திய அரசின் அதிகார மையமும் எனலாம். இந்த நாடகத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள் இலங்கையின் இனவாத அரசியல் தலைவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால், ம.தி.மு.கவின் தலைவர்களும், தமிழ்ப் பற்றுக்கொண்ட தமிழ்த் திரை இயக்குநர்களும் எனலாம். ஏமாற்றப்பட்டவர்கள் என்ற வகையில் வஞ்சக நோக்கங்கள் எதுவுமின்றி ஈழத் தமிழர்களுக்காக வெயிலிலும் கடும் மழையிலும் தமது ஆதரவுக் கரங்களை உயர்த்திய சாதாரண தமிழகத் தமிழர்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். ஏமாறுவோம் எனத் தெரிந்தும் சொந்த மக்களையும் ஏமாற்றி, தாங்களும் ஏமாளியானவர்கள் யாரென்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன் போன்ற தமிழக தலைவர்களும்தான். ஒட்டுமொத்தமாக, இந்த நாடகத்தில் பழைய அனுபவத்தையே பாடமாகக் கற்றுக் கொண்டவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமே என்றால் அதை மறுப்பதற்குமில்லை.

மின்வெட்டு, விலைவாசி உயர்வு என்பவற்றால் மதிப்பிழந்திருந்த கருணாநிதி தலைமையிலான ஆளும் தரப்பு, மக்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதேவேளை அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற சட்டசபைத் தேர்தல்களுக்கான கூட்டணியாக மீண்டும் காங்கிரசுடனான தற்போதைய கூட்டை பலமானதொரு நிலையில் புதுப்பிக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதாவது மத்தியில் தமிழக கூட்டணியின் 40 எம்.பிக்கள் எனும் பலத்தை ஆளும் காங்கிரசுக்கு உணர்த்த வேண்டிய தருணமாகவும் இன்றைய காலம் தி.மு.கவிற்கு விளங்குகின்றது.

ஆனந்தவிகடன் - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைந்து நடாத்திய கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தப்பட்ட புலிகள் இயக்கம் அதன் தலைமைத்துவம் ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பன பற்றிய தமிழக மக்களின் உணர்வலைகளை சாதகமாக பயன்படுத்த துணிந்த கருணாநிதிக்கு ஈழத் தமிழர்கள் பற்றிய நாடகக் கூத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் தெரியும்..

மூதூர் கிழக்கில் இருந்து தமிழ்மக்கள் விரட்டப்பட்டு கிழக்கில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து அவலப்பட்டு, குண்டுவீச்சுக்களிலும், எறிகணை வீச்சுக்களிலும் முன்னூறுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டபோது வாய்மூடி கண்ணயர்ந்திருந்த கருணாநிதி, மத்திய அரசின் இலங்கைத் தமிழர் கொள்கையே தனது கொள்கை என்று சப்பைக் கட்டு கட்டிய கருணாநிதி, விடுதலைப் புலிகளுக்கு தமிழ்நாட்டில் எக்காலத்திலும் இடமில்லை என்று கூறி, இலங்கை அகதிகளுக்கெதிரான போக்கை சொல்லிலும் செயலிலும் காட்டி வந்த கருணாநிதி

இன்று இறுவெட்டை பார்த்து கண்ணீர்விட்டு, பத்து இலட்சம் ரூபா பணம் கொடுத்து நிவாரணப் பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்க தயாராகின்றார் என்றால் அது தேர்தல் நோக்கத்தைத் தவிர வேறொன்றில்லை.

தமிழ்நாட்டு எம்.பிக்கள் பதவிகளை துறக்க மாட்டார்கள் என்பதை ஈழத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதைப் போல இந்திய நடுவண் அரசும் கூட நன்கு அறியும். இருந்தும் கருணாநிதியின் நாட்டியத்திற்கு உணர்ச்சியூட்டி இலங்கையை மிரட்டியதன் மூலம் இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அதில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் எதுவும் உள்ளடக்கப்பட்டிருக்காது என்பதும் உண்மை.

ஈழப் போராட்டத்தின் இறுதி மூலோபாயமாக ஆயுதப் போராட்டம் அமைந்துள்ளதும், அதன் முதன்மையானதும், ஒரே போராட்ட அமைப்பாகவும் ஜனநாயக மறுப்பையும், ஈவு இரக்கமற்ற படுகொலைக் கலாச்சாரத்தையும் பிரதான தந்திரோபாயங்களாக கொண்ட புலிகள் அமைப்பே தற்போது விளங்குகின்றது.

புலிகளை ஜென்ம விரோதியாக ஒதுக்கி வைத்துள்ள இந்திய மத்திய அரசுக்கு இலங்கை அரசை மிரட்டி அடிபணிய வைக்கக் கூடிய மாற்று அமைப்புக்களோ, வழிகளோ வடகிழக்கில் கிடையாது. அதற்காக புலிகளை மறைமுகமாகவேனும் ஆசிர்வதிக்கும் எண்ணமும் தற்போதைக்கு இல்லை. இந்த நிலையில் இலங்கை அரசின் யுத்த அரசியலுக்கு முண்டு கொடுப்பதைத் தவிர வேறு வழி ஏதும் இந்தியாவுக்கு இருப்பதாக தெரியவில்லை. இலங்கை அரசு தன்னைவிட்டு விலகிச் செல்வதை தடுப்பதற்கு.

ஆனாலும் இலங்கை அரசோ இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதுதான் உண்மை. மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் கப்பல்கள்மூலம் கனரக யுத்த உபகரணங்களை எந்தவிதமான நிர்ப்பந்தங்களும் நிபந்தனைகளுமின்றி தென்கோடியில் இறக்கிவிட்டு செல்ல பாகிஸ்தானும் ஈரானும் சீனாவும் தயாராக உள்ளன. பொருளாதார உதவிகளை வழங்கி, இந்திய - மேற்குலக இராஜதந்திர அழுத்தங்களை உதாசீனப்படுத்தக் கூடிய பலத்தை இலங்கைக்கு கொடுக்க சீனாவும் ஈரானும் தயாராக உள்ளன.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் அடிப்படையாக இருந்த வட-கிழக்கு இணைப்பு விவகாரம் சிங்கள சமூகத்தால் தூக்கி வீசப்பட்டபோது கையாலாகாத நிலையில் இருந்த இந்தியா இன்று, கிழக்கு அதிகாரம் வேண்டும். வடக்கிற்கு அதிகாரம் வேண்டும் என்று கேட்பது கூட்டறிக்கையின் சுவைக்கு இடப்பட்ட வாசனைத் திரவியங்களை போன்றதே. இந்தக் கோலத்தில், இந்தியாவுக்கு சொல்லி இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்தச் செய்யலாம் என்று நினைத்த அனைத்து அரசியல் கூத்தாடிகளையும் என்ன பெயர் சொல்லி அழைப்பதென்றே தெரியவில்லை.

ஒரு காலத்தில் தமிழ் ஆயுத அமைப்புக்களை வைத்து இலங்கையை மிரட்டிய இந்தியா, மிகவும் பலவீனப்பட்டு போயுள்ள தனது இலங்கை சம்பந்தமான இராஜதந்திர நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்திக் கொள்ள கலைஞரின் உதவியை பெற்று செயற்பட முயற்சிக்கிறது போலும். இருந்தும் இந்தியா இதில் வெற்றிபெறப் போவதில்லை. எதிரியை வெல்ல முடியாவிடின் இணைந்துவிடுவதே மேல் என்று சொல்வதுபோல் இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து செயற்படவும் மறுபுறத்தில் முயற்சிக்கிறது.. ஆனாலும் அதிலும் இந்தியாவிற்கு வெறும் தோல்விதான். இலங்கை அரசின் நண்பர்கள் வரிசையில் இந்தியாவுக்கு முன்னால் பல நண்பர்கள் நிற்கிறார்கள். உலகிலேயே சிறந்த நண்பன் இந்தியாதான் என்று புதுடில்லியில் பசில் கூறியது ஏமாற்று என்பது பசிலுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் புரியும்.

இவற்றையெல்லாம் மேவி கலைஞர் இந்திய மத்திய அதிகார வர்க்கத்துடன் இணைந்து நடாத்திய நாடகத்தின் பிரதான விளைவுகள் எனச்சிலவும் சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

கருணாநிதி கொடுத்த (?) இரண்டுவார காலக்கெடு பகுதியில் வடக்கில் இலங்கை விமானப்படை குண்டு வீச்சுக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையை இலங்கை அரசு இந்திய அரசின் கையறுநிலையை ஆசுவாசப்படுத்த மேற்கொண்டிருந்தது என்பதை, மீண்டும் நேற்று (காலக்கெடு முடிவின் முதல்நாள்) இலங்கை விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான குண்டுவீச்சில் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்துகின்றது.

அடுத்ததாக, எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில், ஈழத் தமிழர்கள் சார்பாக அந்த மக்களால் முன்னெடுக்கப்படும் எத்தகைய எழுச்சிகளையும் அரசும், அதன் தோழமைக் கட்சிகளும் கணக்கிலெடுக்காமலிருக்கக் கூடிய துணிச்சலையும் ஈழத்தமிழர்களுக்காக ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடிய ஆதரவு நிலை வட கிழக்குக்கு வெளியே இருக்கப் போவதில்லை எனும் மோசமான நிலையையும் தமிழர்கள் தரப்பில் கருணாநிதியின் கூத்து உருவாக்கியுள்ளது.

ரஜீவ் காந்தியின் படுகொலையின் பின்பு, நீண்ட காலத்தின் பிறகு, சாதாரண தமிழக மக்கள் மத்தியில் உருவாகியுள்ள ஆரோக்கியமான கரிசனையை ஈழத் தமிழர்களாகிய நாம் அவமதிக்க வேண்டாம் வரவேற்போம். அதேநேரத்தில் தமிழக அரசியல் தலைமைகளிற்கு ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் அவர்களின் சுயநலமற்ற பங்கு, பணி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை ʽஅ" இலிருந்து சொல்லிக் கொடுக்க யாராவது முன் வந்தேயாக வேண்டும். என்றோ ஒரு நாளிலாவது, ஈழத் தமிழர்களுக்காக அர்த்தபுஷ்டியான ஆதரவை வெளிப்படுத்த அதை நெறிப்படுத்தக்கூடிய தலைமை உருவாகும் என்று காத்திருப்போம்.

www.thenee.com