Wednesday, October 8, 2008

வேண்டாம் இந்த அர்த்தமற்ற ஒப்பீடு!


பத்திரிகைகளில் ரஜினியைப் புகழ்ந்து எழுதினால் மகிழ்கிறீர்கள்... விமர்சித்தால் கோபித்துக் கொள்கிறீர்கள். எப்போதும் நாங்கள் துதி பாடிக் கொண்டேஇருக்க முடியுமா...?

-இது பிரபல வார இதழின் பொறுப்பாசியரியராக உள்ள நம் நண்பர் கேட்ட கேள்வி.

அவருக்கு நான் சொன்ன பதிலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

‘நல்லவர் ஒருவரைப் பற்றி நல்லவிதமாகவே எப்போதும் எழுதுவதில் தவறில்லை. இன்னொன்று பொது வாழ்க்கையில் பத்திரிகைகள் குற்றம் சாட்டும் அளவுக்கு ரஜினி எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியலுக்கு அவர் வருவது, கட்சி ஆரம்பிப்பது எல்லாம் அவருக்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம். ஆனால் அதற்காக மட்டுமே அவர் மீது கடும் விமர்சனங்களை வைப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது...

கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு குற்றமா..!

தொடர்ந்து பத்திரிகைகள் அவரது அரசியல் பிரவேசம் குறித்து யூகங்கள் வெளியிடுவதும் பின்னர் அந்த யூகங்கள் பொய்த்துவிடும் நிலையில் அவரைத் திட்டித் தீர்ப்பதும் என்ன வகை பத்திரிகை தர்மம்?’

இந்தப் பதில் அவரை அமைதியாக்கிவிட்டது.

ரஜினியைப் பற்றி எழுதப்படும் நல்ல விஷயங்கள் நாடறிந்தவை... குற்றச்சாட்டுகள் இட்டுக் கட்டப்பட்டவை. அவர் யாரையும் சுரண்டியோ, ஓட்டு வாங்கி பதவிக்கு வந்து ஏமாற்றிக் கொண்டோ இல்லை, குற்றம் சாட்டிப் பேச. இதைப் புரிந்து கொண்டாலே போதும், அவர் மீதான விமர்சனங்கள் அடியோடு நின்றுபோகும்.

இன்று வெளியாகியுள்ள ரிப்போர்டர் வாரமிருமுறை இதழிலும் ரஜினிதான் கதாநாயகன். வழக்கம்போல பத்திரிகையும் அமோக விற்பனை!

வழக்கத்துக்கு மாறாக இந்த இதழில் சற்று தெளிவான, பரந்த பார்வையுடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் தலைப்பில் மட்டும் வழக்கம் போல வியாபாரத்தனம்.

தலைப்பு: யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? – ரஜினியை உசுப்பி விட்ட கருத்துக் கணிப்பு!

இது என்ன அபத்தம்... யாரை யாருடன் ஒப்பிடுவது?

யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என இனி கேள்வி எழுப்புவதில் அர்த்தமே இல்லை. இந்த விஷயத்தில் ஒரு மூன்றாம் தர கருத்துக் கணிப்புக்காக கவலைப்படும் சாதாரண நபரும் அல்ல சூப்பர் ஸ்டார்.

இனி இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே. உலக சூப்பர் ஸ்டார் என எல்லோரும் அவரை கொண்டாடும் வேளை நெருங்கும் தருணத்தில் இந்த மாதிரி அபத்தங்களை மீடியா தவிர்க்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்பதால், கட்டுரையின் நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தக் கட்டுரையின் ஆரம்பம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

படை பரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. ‘ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?’ என்ற அறத்துன்பமான நிலை.

அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.

சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது....


-இந்த சிறப்பான ஆரம்பம் இறுதி வரை தொடர்வதுதான் இக்கட்டுரையின் நல்ல அம்சம் (இங்கே தரப்பட்டுள்ள கட்டுரையின் பக்கங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்!).

மற்றொரு சிறப்பு, நமது நண்பர் சுந்தரின் (http://www.onlyrajini.com) கருத்துக்களும் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பது, அக்கட்டுரையை சரியான பாதையில் கொண்டு போய் முடிக்க உதவியிருக்கிறது.

ரஜினியைத் தாண்டிவிட்டார் விஜய் என்ற லயோலாவின் கருத்துக் கணிப்புக் குறித்த கேள்விக்கு சுந்தர் அளித்துள்ள பதில் சிறப்பாக இருந்தது. இதோ அந்தப் பகுதி:

“உடுமலையில் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.

கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள்.

ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப் பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை...''


-கட்டுரையை முழுவதும் படியுங்கள்!
http://www.envazhi.com

No comments: