
விஜய்காந்துக்கு எதிராக திடீரென்று ஏன் இத்தனைப் பதிவுகள்...
திடீரென்று திமுகவுக்கு ஆதரவாகக் குரல் ஒலிக்கிறதே என்றெல்லாம் நண்பர்கள் பின்னூட்டங்களில் கருத்துப் பதிந்துள்ளார்கள்.
அவர்களுக்கு ஒரு விளக்கம்!
நான் திமுக அனுதாபி இல்லை.
ரஜினி பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என ஏன் ஆசைப்படுகிறோம்... என்பதற்கான விளக்கங்கள்தான் நீங்கள் இங்கே படித்த விஜய்காந்த் - வடிவேலு மோதல்கள் குறித்த பதிவுகள்.
சக நடிகர் ஒருரால் தாக்கப்பட்டவுடன் நான் அரசியலுக்கு வந்து அவரை தோற்கடிப்பேன் என காமெடியன் ஒருவரே இத்தனை உணர்ச்சிவசப்படுகிறார்.
இந்த தாக்குதலுக்குக் காரணமாகக் காட்டப்படும் கதாநாயகனோ, இது கலைஞரின் வேலை என்று, அரசியல் மற்றும் பதவியிலேயே குறியாக இருக்கிறார்.
வடிவேலுவுக்கும் விஜய்காந்துக்குமாவது பகை இருக்கிறது... ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொள்ள முகாந்திரமுள்ளது.
ஆனால் சம்பந்தமே இல்லாமல் அரசியல் என்ற ஒன்றை மட்டுமே காரணமாக வைத்து கலைஞர் மீது, அதுவும் ஒரு மாநில முதல்வர் மீது விஜய்காந்த் குற்றம் சாட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?
வடிவேலு வீட்டு மீது கல்லெறியச் சொன்னதும் கலைஞர்தான், பின்னர் வடிவேலுவை போலீசில் புகார் தரச் சொன்னதும் கலைஞர்தான் என்று சொல்ல வருகிறாரா விஜய்காந்த்?
அல்லது, வடிவேலுவே தன்வீட்டு மீது கல்லெறிந்து கொண்டார் என்கிறாரா?
கலைஞர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல... மாநில முதல்வர். அவருக்கு எதிராக விஜய்காந்த் இப்படிக் குற்றம் சாட்ட என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்?
மாநில முதல்வர் மீது ஆதாரமில்லாமல் இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறியதற்காக இவரை இப்போதே சிறையில் தூக்கிப் போட சட்டம் இடம் தருகிறதே...
இப்படிப்பட்ட அரை வேக்காடுகளைத்தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம் சிலர் தூக்கிப் பிடித்து வருகிறார்கள். அதை நம்மால் முடிந்தவரை எக்ஸ்போஸ் செய்யவே இத்தனை பதிவுகள்.
ஆனால்-
ரஜினி?
ஒரு கண்ணியமான மனிதர். நல்லவர். தனிப்பட்ட காரணங்களுக்காக உணர்ச்சிவசப்பட்டு மக்களைத் தூண்டிவிடாதவர். பாபா படத்துக்கு நேர்ந்தது போல ஒரு நிலை வடிவேலுவுக்கோ விஜய்காந்துக்கோ நேர்ந்திருந்தால்... சற்று கற்பனை செய்து பாருங்கள்.
ஆனால் ரஜினி அப்போதும் நிதானம் காத்தார். ரசிகர்களைத் தூண்டிவிட்டு வன்முறை செய்யச் சொல்லவில்லை. ராமதாஸ் வீட்டு மீது கல்லெறியச் சொல்லவில்லை.
அல்லது குசேலனை இப்படி குறிவைத்து தாக்கினார்களே என்று பத்திரிகைகளே வாங்காதீர்கள் என தன் ரசிகர்களுக்கு கட்டளையிடவில்லை அவர்.
ரஜினி என்ற நல்ல மனிதர்தான் இந்த நாட்டு அரசியலுக்கு இப்போது தேவை என்பதாலேயே இங்கே இவற்றைக் குறிப்பிடுகிறேன். மற்றபடி, ரஜினியோடு வேறு யாரையும் ஒப்பிடவும் முடியாது, ஒப்பிடவும் கூடாது.
பதினைந்து ஆண்டுகளாக ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்களே அரசியலுக்கு வா... வா... என வருந்தி வருந்தி அழைத்தும், இன்னமும் அமைதி காக்கிறாரே... அந்தப் பக்குவம் வேறு யாருக்கு வரும்?
சினிமா, அரசியல் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு மக்களுக்கு பெரிய அளவில் நன்மை செய் வேண்டும் என்ற ஒரு லட்சியம் ரஜினிக்கு இருக்கிறது. தமிழ் மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்... விஜய்காந்த் மாதிரி சில்லறை அரசியல்வாதிகளைப் புறம் தள்ள வேண்டும்!







