Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Monday, March 2, 2009

பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் போரணி!

பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பிரமாண்ட பேரணி!


பெங்களூர்: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.

இலங்கையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டித்து, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணி நேற்று பெங்களூர் டவுன் ஹாலில் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்கியது.

இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க நிர்வாகி மாரி, தமிழ் பிரமுகர்கள் பழனிகாந்த், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரபாகரன் மற்றும் புலிக்கொடி ஏந்தியபடி ஊர்வலம்!

திறந்தவெளி லாரியில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட தமிழ் பிரமுகர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து சாரை சாரையாக பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்ட பேனர்களை வைத்து இருந்தனர். இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளின் படங்களையும் பிடித்தப்படி சென்றனர்.

ஏராளமான தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தைக் கையில் ஏந்தியப்படி வந்தனர். சிலர் தமிழீழப் படம் மற்றும் புலிகளின் சிவப்புக் கொடியை ஏந்தி உணர்ச்சி மயமான கோஷங்களுடன் சென்றனர்.

கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே..,

இந்திய அரசே, இந்திய அரசே சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்காதே..,

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும்...,

மோதாதே மோதாதே தமிழனிடம் மோதாதே..,

ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்..,

புலிகள் மீதான தடையை நீக்கு,

இந்திய அரசே இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு..,

தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சேதான் பயங்கரவாதி...


என கோஷங்களை உரத்த குரலில் உணர்வுப் பொங்க எழுப்பினார்கள்.

பேரணியில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றார்கள். பேரணிக்கு கோலார், ஷிமோகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் நிதி

அல்சூர் கேட் போலீஸ் நிலையம் அருகே பேரணி வந்தபோது பெருந்திரள் கூட்டத்தால் பேரணி ஸ்தம்பித்தது. அப்போது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. போலீசாருக்கும், பேரணி சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

டவுன்ஹாலில் புறப்பட்ட பேரணி மாநகராட்சி அலுவலகம் வழியாக பன்னப்பா பூங்காவை சென்றடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஏற்கனவே திரட்டப்பட்ட ரூ.1 லட்சம் நிதியை சிவாஜிலிங்கத்திடம் வழங்கினார்கள். நிதியை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் நன்றி தெரிவித்து கொண்டார். அந்த நிதியை ஈழத்தமிழர் பேரவை அமைப்புக்கு வழங்குவதாக தெரிவித்தார். இந்த நிதியை கொண்டு 24 மணி நேரம் இயங்கும் ஈழத் தமிழர் தகவல் மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ராசனிடம் நிதி அளித்தனர். அந்த நிதியையும் அவர் பெற்று சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைத்தார்.

கவர்னரிடம் மனு

இதற்கிடையே ராசன் தலைமையில் தமிழ் பிரமுகர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று மனு கொடுத்தனர். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே பேரணி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மத்திய மண்டல துணை கமிஷனர் ரமேஷ் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

எந்த சிறு அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

Monday, February 2, 2009

கலைஞர் வளர்தெடுத்த அரசியல் நாகரீகம்!


கலைஞர் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!

உடன்பிறப்பே, நான் திமுக தலைவர் பதவியை ராஜினாமா செய்வதற்காக, நீங்கள் யாரும் உணர்ச்சிவசப்பட்டு தீக்குளிக்க வேண்டாம்… என்று அவர் சொல்லி முடித்த மறுநாள் காலை நான்கைந்து பேர் உயிருடன் கொளுத்திக் கொண்டதாக செய்தி வந்தது, முன்பொருமுறை.

ஒரு விஷயத்தை ‘செய்யாதீர்கள்…அரசியலாக்காதீர்கள்’ என கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிட்டுச் சொல்கிறார் என்றால், அந்த விஷயத்தை அவர் தீவிரமாகச் செய்யப்போகிறார் என்று அர்த்தம்.

ஈழத் தமிழர் விஷயத்திலும் இப்போது இதே பாணி அரசியலை கலைஞர் கையிலெடுத்திருக்கிறார். ‘முத்துக்குமார் தீக்குளித்த சம்பவத்தை அரசியலாக்காதீர்கள்… இம்மாதிரி தீக்குளிப்புகளை ஊக்கப்படுத்தாதீர்கள்’ என இந்தப் பக்கம் அறிக்கை விட்டுவிட்டு, இன்னொரு பக்கம், அதை தீவிர அரசியலாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். முத்துக்குமார் தீக்குளிப்பால் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்ட உணர்ச்சிப்பூர்வ போராட்ட நிலையை அடக்க முயலும் அரசியல் இது.

ஈழப் பிரச்சினையில் கலைஞர் அரசின் கையாலாகாத நிலையைக் கடுமையாகவே விமர்சித்திருந்த முத்துக்குமார், தன் மரணத்தை துருப்புச் சீட்டாக வைத்து போராடி ஈழப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என தனது வாக்குமூலமாக அளித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் முத்துக்குமாரின் உடலுக்கு மரியாதை செலுத்த வந்த திமுக எம்எல்ஏ பாபுவை துரத்தியடித்தனர் மாணவர்கள். இன்னொரு பக்கம் அரசு அறிவித்த நிதியையும் முத்துக்குமார் குடும்பம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டது.

இதில் கடுப்பாகிவிட்ட கலைஞர், எங்கே முத்துக்குமாரின் மரணத்தை வைத்து, தமிழகத்தின் பிரதிநிதிகளாக வைகோ, ராமதாஸ் உள்ளிட்டவர்கள் தங்களைக் காட்டிக் கொள்வார்களோ என்ற பயத்தில், முத்துக்குமார் மறைவை அரசியலாக்காதீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவே முத்துக்குமாரின் தீக்குளிப்பு திமுகவுக்கு அனுசரணையாக இருந்திருந்தால், கலைஞரின் அறிக்கை எப்படியெல்லாம் வர்ணம் பூசி வந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

செத்தவன் வீட்டில் அரசியல் செய்வதுதான் திராவிட அரசியலின் ஆரம்பமே. மொழிப்போர் தியாகிகள் என ஆரம்பித்து இப்போது ஈழப் போர் தியாகியாகிவிட்ட முத்துக்குமார் மரணம் வரை, அரசியலுக்கான முதல் விதையை ஊன்றுவதே திமுக அல்லது அதன் சார்பு அமைப்புகளாகத்தான் இருந்து வந்துள்ளன.

இப்போது தமிழகத்தில் தன்னெழுச்சியாக பரவியிருக்கும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டை தலைமையேற்று நடத்தியிருக்க வேண்டியதே கலைஞர்தான்.

இப்போது அவர் சார்ந்த ஊடகங்கள் திடீரென புலியெதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு மாறிவிட்டன. இதுவரை புலிகளின் அறிக்கைக்கு முக்கியத்துவம் தந்து வந்தவர்களுக்கு, இப்போது ராஜபக்சே பிரதர்ஸ் தருவதே அதிகாரப்பூர்வ செய்திகிவிட்டது. கலைஞரும் அவரைச் சார்ந்த ஊடகங்களும் இனி ராஜபக்சேவின் ராஜதந்திரம், பெருந்தன்மை குறித்தும் பேசலாம்!

உண்ணாவிரதம், கடையடைப்பு, பந்த் போன்றவற்றுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் கலைஞருக்கு, அதையே மற்ற தலைவர்கள் செய்யும்போது கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. இன்று சட்டத்தின் ஏகபோகக் காவலராகிவிட்டார், ஒரு காலத்தில் அரசியல் சட்ட நகலெரித்த இந்த பகுத்தறிவுவாதி.

சேது சமுத்திரத்துக்காக இவர் அறிவித்த வேலை நிறுத்தம், உருக்கமான அறிக்கைகளையெல்லாம் அத்தனை சுலபத்தில் மறந்துவிட்டாரே மனிதர்!

சோனியா காந்தியின் புலிகள் பழிவாங்கும் படத்துக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் கூட்டணியை விட்டுவிட்டால் அரசியலில் தனது வாரிசுகளுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடுமோ என்ற நம்பிக்கையின்மையும்தான் இன்று கலைஞரை மாறி மாறி குட்டிக்கரணமடிக்க வைத்துள்ளன.

தமிழினத் தலைவராக இவரை உருவகப்படுத்திக் கொண்டாடிக் கொண்டிருந்த தமிழர்கள் நிஜமாகவே பரிதாபத்துக்குரியவர்களே!

-எஸ்எஸ்
http:/www.envazhi.com

Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

னித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com