Monday, March 2, 2009

பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் போரணி!

பிரபாகரன் படத்துடன் கர்நாடக தமிழர்கள் பிரமாண்ட பேரணி!


பெங்களூர்: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து பெங்களூரில் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பிரமாண்டமான பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது இயக்கக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி கர்நாடக தமிழ் மக்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

உடனடியாக போரை நிறுத்தி, தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்தனர்.

இலங்கையில் சிங்கள அரசு நடத்தி வரும் போரால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு வருவதை கண்டித்து, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூரில் பிரமாண்ட பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த பேரணி நேற்று பெங்களூர் டவுன் ஹாலில் தொடங்கியது. இதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு திரண்டனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்கியது.

இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணிக்கு கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராசன் தலைமை தாங்கினார். பெரியார் திராவிட கழக செயலாளர் எல்.பழனி, கர்நாடக தமிழ் மக்கள் இயக்க நிர்வாகி மாரி, தமிழ் பிரமுகர்கள் பழனிகாந்த், செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரபாகரன் மற்றும் புலிக்கொடி ஏந்தியபடி ஊர்வலம்!

திறந்தவெளி லாரியில் இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் உள்பட தமிழ் பிரமுகர்கள் சென்றனர். அதைத்தொடர்ந்து சாரை சாரையாக பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பேரணியாக சென்றனர். அவர்கள் கையில் தமிழ் இனப் படுகொலையை கண்டிக்கும் வகையில் எழுதப்பட்ட பேனர்களை வைத்து இருந்தனர். இலங்கையில் கொல்லப்படும் அப்பாவி குழந்தைகளின் படங்களையும் பிடித்தப்படி சென்றனர்.

ஏராளமான தமிழர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படத்தைக் கையில் ஏந்தியப்படி வந்தனர். சிலர் தமிழீழப் படம் மற்றும் புலிகளின் சிவப்புக் கொடியை ஏந்தி உணர்ச்சி மயமான கோஷங்களுடன் சென்றனர்.

கொல்லாதே கொல்லாதே தமிழர்களை கொல்லாதே..,

இந்திய அரசே, இந்திய அரசே சிங்கள ராணுவத்துக்கு ஆயுதங்களை வழங்காதே..,

வெல்லட்டும் வெல்லட்டும் தமிழ் ஈழம் வெல்லட்டும்...,

மோதாதே மோதாதே தமிழனிடம் மோதாதே..,

ஈழ ரத்தம் எங்கள் ரத்தம்..,

புலிகள் மீதான தடையை நீக்கு,

இந்திய அரசே இந்திய அரசே போரை நிறுத்த நடவடிக்கை எடு..,

தமிழர் ரத்தம் குடிக்கும் ராஜபக்சேதான் பயங்கரவாதி...


என கோஷங்களை உரத்த குரலில் உணர்வுப் பொங்க எழுப்பினார்கள்.

பேரணியில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு கோஷம் எழுப்பியபடி சென்றார்கள். பேரணிக்கு கோலார், ஷிமோகா உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தமிழர்கள் கலந்து கொண்டனர்.

ரூ.1 லட்சம் நிதி

அல்சூர் கேட் போலீஸ் நிலையம் அருகே பேரணி வந்தபோது பெருந்திரள் கூட்டத்தால் பேரணி ஸ்தம்பித்தது. அப்போது பயங்கர நெரிசல் ஏற்பட்டது. போலீசாருக்கும், பேரணி சென்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.

டவுன்ஹாலில் புறப்பட்ட பேரணி மாநகராட்சி அலுவலகம் வழியாக பன்னப்பா பூங்காவை சென்றடைந்தது. அங்கு பொதுக்கூட்டம் நடந்தது. கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பாக பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் நலனுக்காக ஏற்கனவே திரட்டப்பட்ட ரூ.1 லட்சம் நிதியை சிவாஜிலிங்கத்திடம் வழங்கினார்கள். நிதியை பெற்றுக்கொண்ட சிவாஜிலிங்கம் நன்றி தெரிவித்து கொண்டார். அந்த நிதியை ஈழத்தமிழர் பேரவை அமைப்புக்கு வழங்குவதாக தெரிவித்தார். இந்த நிதியை கொண்டு 24 மணி நேரம் இயங்கும் ஈழத் தமிழர் தகவல் மையத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகள் ராசனிடம் நிதி அளித்தனர். அந்த நிதியையும் அவர் பெற்று சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைத்தார்.

கவர்னரிடம் மனு

இதற்கிடையே ராசன் தலைமையில் தமிழ் பிரமுகர்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று மனு கொடுத்தனர். இலங்கையில் போரை நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இதற்கிடையே பேரணி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மத்திய மண்டல துணை கமிஷனர் ரமேஷ் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

எந்த சிறு அசம்பாவிதமும் இல்லாமல் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

1 comment:

தமிழ் தகவல்மையம்(மும்பை) said...

அன்பு நன்பருக்கு தங்களின் பணிக்கு வாழ்த்துக்கள்.

கோலார் தங்க வயல் தமிழர்கள் சமீபத்தில் சென்னைக்கு வந்து கோட்டை முன்பு போராட்டம் நடத்தினார்கள் அந்த செய்தி மற்றும் புகைப்படம் நடத்தியவர்களின் பெயர்கள் முக்கிய நபரின் அலைபேசி எண் தேவை,

அன்புடம் சரவணா மும்பை
தமிழ் செய்தி மையம் (மும்பை)
TPI(Mumbai) Tamil Press Info(mumbai