Showing posts with label survey. Show all posts
Showing posts with label survey. Show all posts

Thursday, October 9, 2008

கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல!


நான் தீவிர ரஜினி ரசிகனாக்கும் என்று சொல்லிக் கொண்டே, ரஜினியைச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்.
இன்று நேற்றல்ல... ஆரம்பத்திலிருந்தே இந்த இருவரும் இது போன்ற உள்ளடி வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பது சற்றே பின்னோக்கிப் பார்த்தால் புரியும்.

இன்றைய தேதிக்கு தன் சொந்த முகத்துக்கு பெரிய ஈர்ப்பு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, ரஜினி ரசிகன் எனும் இரவல் முகத்தை மாட்டிக் கொண்டவர்தான் விஜய். அவர் இதுவரை நடித்துள்ள 48 படங்களில் 47-ல் ஏதாவது ஒரு காட்சியிலாவது ரஜினியின் முகம், அவர் நடித்த படத்தின் காட்சி அல்லது அவர் பெயராவது வருமாறு பார்த்துக் கொள்வார் விஜய்.

ரஜினி ரசிகர்களை ஈர்க்க இதைவிட்டால் வேறு வழி கிடையாது அவருக்கு.

ஆனால் இன்று ஏதோ ஒரு இடம் கிடைத்ததும், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல ரஜினியை மட்டம் தட்டும் காட்சிகளை விஜய்யின் தந்தை சந்திரசேகரன் தன் சமீபத்திய மூன்றாம் தரப் படமான பந்தயத்தில் வைத்திருந்தார்.

அந்தக் காட்சிகளைப் பார்த்தும் ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருக்கக் காரணம் இதைப் பெரிதுபடுத்தப் போய், தேவையில்லாமல் அந்த கேவலமான படத்துக்கு விளம்பரம் கொடுத்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான்.

ஆனால் இப்போதோ...

லயோலா கல்லூரி தயாரித்து வெளியிட்ட ஒரு சர்வேயைக் காட்டி, தந்தையும் மகனும் வானுக்கும் பூமிக்குமாய் குதிப்பதை தமிழ் மக்கள் கிண்டல் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் முன்பே சொன்னது போல லயோலா சர்வே என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தீர்ப்பல்ல... அப்படி ஒரு சர்வே வெளியானதன் பின்னணி, அதில் குறிப்பாக விஜய்க்கு மட்டும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ரஜினியைச் சிறுமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரஜினியை விட விஜய் 0.2 சதவிகிதம் அதிக ஆதரவைப் பெற்றுவிட்டதாக அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இதெல்லாம் ஒரு கணிப்பா... ரஜினி என்ற மனிதரின் நிஜ செல்வாக்கினை அரசியல், சினிமா எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் பொது மக்களே நன்கறிவார்கள்.

ஆனால் இதைப் புரியாத போலி ரசிகர் விஜய், ரஜினியை மிஞ்சும் ஆதரவு மக்களிடம் தனக்கு இருப்பதாகவும், தானே அடுத்த முதல்வர் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, தன்னைத் தானே புகழ்ந்து சந்தோஷம் கொள்கிறார். இந்த சர்வே முடிவை பெரிய பெரிய கட் அவுட்களில் எழுதி வைத்து பெருமையடித்து வருகிறார்.

சில பத்திரிகைகளில், தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என சிறப்புக் கட்டுரை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம்.

இவர்களுக்கு ரஜினி பாணியிலேயே நாம் சொல்ல விரும்புவது ஒன்றை மட்டும்தான்: கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல, ரொம்ப நாள் தாங்காது!
http://www.envazhi.com

Friday, September 5, 2008

இது குமுதத்தின் முறை!


போனவாரம் ரஜினியின் இமேஜ் சரியத் தொடங்கிவிட்டதாக, கொலம்பஸூக்கு இணையான அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டு தனது முட்டாள்தனத்தைப் பறைசாற்றிக் கொண்டது விகடன்.

இந்த வாரம் குமுதத்தின் முறை. அவர்கள் கேட்டிருப்பது ஒரே கேள்விதான். அதாவது, ரஜினியின் வாய்ஸூக்கு மவுசு குறைந்துவிட்டதா?

இதில் ரஜினியின் வாய்ஸூக்கு இன்னும் மவுசு இருப்பதாக, அதாவது ரஜினிக்கு ஆதரவாக 86 சதவிகிதமும், மவுசு குறைந்து விட்டதென 10 சதவிகிதமும், தெரியவில்லை என 4 சதவிகிதத்தினரும் தெரிவித்திருந்தார்கள்.

எத்தனை பேரிடம் கேட்ட கேள்வி இது, எத்தனை பேர் பதில் சொன்னார்கள், எந்தெந்த ஊர்களில் நடத்தப்பட்டது என்ற விவரங்கள் எதையும் குமுதமும் தரவில்லை. ஜனங்களுக்கு என்ன தெரியும் என்று நினைத்து விட்டார்களோ... அல்லது சர்வே நடத்தியவர்களுக்கே விஷயம் தெரியாதா... புரியவில்லை.

இருந்தாலும் இந்த சர்வே கட்டுரை முழுக்க ரஜினியின் புகழ் பாடும் வகையில் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா, ரஜினியின் நண்பர்கள் சோ எஸ் ராமசாமி, பாபு ராஜேந்திரன் ஆகியோரிடம் கருத்துக்களைப் பெற்று பதிவு செய்துள்ளனர்.

‘இருபத்தைந்து வருஷமா அவர் சூப்பர் ஸ்டாரா நிக்கறாருன்னா சும்மாவா... அவரது படங்களுக்குப் போட்டியே அவரோட அடுத்த படம்தான் சார்...’ என ஒரு இளம் பெண் கூறியிருப்பதையே பல இளைஞர்களும் வழிமொழிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் இக்கட்டுரையில்.

ரஜினியின் எந்தப் படத்திலும் நஷ்டம் வந்ததே இல்லை என முத்துராமனும், எனக்கு உதவி செய்ய வந்த அந்தப் புண்ணியவானுக்கு இப்படி இக்கட்டு ஏற்பட நானே காரணமாகிவிட்டேனே, என பாலச்சந்தரும் உருக்கமாகக் கூறியிருந்தனர்.

ஆயுளில் பாதி நாட்களைக் தலைவருடனே கழித்துவிட்டேன். தலைவரைப் பற்றி பெரிய மனிதர்கள் பெருமையாகப் பேசுவதைக் கேட்பதே தனக்கு சந்தோஷமான விஷயம் என ரஜினி மன்றத் தலைவர் சத்யநாராயணா தெரிவித்திருந்தார்.

நல்லது... ஒரு நல்ல விஷயத்தை ஒப்புக் கொண்டு, வெளியிட்ட குமுத்துக்கு நன்றி!

நியாயமா?

ஏன்... இதே இதழில், குசேலன் வெளியான அடுத்த வாரம் ஒரு அஞ்ஞானி, கடிதம் என்ற பெயரில் ரஜினி குறித்து ஒரு குப்பைக் கட்டுரை எழுதியிருந்தாரே... அப்போது தெரியவில்லையா ரஜினியின் செல்வாக்கு என்ன என்பது?

இவர்களுக்கு நிச்சயம் தெரிந்துதானிருக்கிறது.

ஆனால் அதை வெளியில் லட்சக்கணக்கானோர் படிக்கும் ஒரு ஊடகத்தின் மூலம் வெளிப்படுத்தி, குசேலன் என்ற படத்துக்கு பாஸிடிவ் இமேஜ் ஏற்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை.

குசேலன் ரிலீசாவதற்கு ஒரு நாள் முன்பே படத்துக்கு ஓஹோவென விமர்சனம் எழுதிய இதே குமுதம், அடுத்த வாரமே அஞ்ஞானிகளை விட்டு காலை வாருகிறது. போன இதழில் கூட ரஜினிக்கு சவுந்தர்யா அட்வைஸ் என இஷ்டத்துக்கும் அவிழ்த்துவிட்டுள்ளது.

எதற்காக... எல்லாம் வியாபார உத்தி!

எனவே... ஆஹா இவர்கள் பரவாயில்லையே... நமக்கு ஆதரவாக சர்வே போட்டிருக்கிறார்களே எனறு மயங்கிவிட வேண்டாம் ரஜினியின் ரசிகர்கள்.
இவர்கள் ஒருபோதும் ரஜினிக்கு மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவிக்க விரும்பாதவர்கள்.

இதே குமுதம் அரசு பதில்களில் மறைமுகமாக ரஜினியைத் தாக்கி, அமிதாப்பைத் தூக்கியிருப்பதையும் மறந்துவிட வேண்டாம்.

அப்படியெனில் ரஜினி பற்றி யாருமே எதையும் எழுதக் கூடாதா..?

நியாயமாகப் பார்த்தால் ரஜினியைப் பற்றி எழுத இவர்கள் யாருக்கும் முதலில் குறைந்தபட்ச உரிமை கூடக் கிடையாது.

இவர்கள் ஒன்றும் அவரை ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து பொது வாழ்க்கையில் அமர்த்திவிடவில்லை. அல்லது, சும்மா கிடந்தவரைக் கூப்பிட்டு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து விடவில்லை.

கஷ்டப்பட்டு 30 வருடங்கள் நடித்துச் சம்பாதித்தார். தன்னோடு இருந்த அத்தனைப் பேருக்கும் சம்பாத்தியத்துக்கு வழி செய்து கொடுத்தார். எத்தனையோ சாதாரண தயாரிப்பாளர்களை நட்சத்திர தயாரிப்பாளர்களாக்கினார். இதோ இப்போதும் கூட தன் படத்தில் பணியாற்றிய பின்னணி தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு லட்சக் கணக்கில் அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுவும் தான் கவுரவ வேடத்தில் நடித்த ஒரு படத்துக்காக.

காசு கொடுத்து யாரையும் அவர் மன்றத்துக்கு அழைக்கவில்லை, பேனர் கட்டச் சொல்லவில்லை. அவர் மீதான ஈர்ப்பில், அன்பில் தானாகச் சேர்ந்த கூட்டம் இது. அதனால்தான் மற்ற எல்லோரையும் விட ரஜினி ரசிகர்களுக்கு ஒரு தனி மரியாதை இப்போதும். அவர்கள் சொல்வது கூட நட்சத்திர அந்தஸ்துடன் செய்தியாகும் தகுதியைப் பெறுகிறது.

ஒரு இஸ்திரிப் பெட்டியை வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அன்று மாலைப் பத்திரிகையிலேயே வண்ணத்தில் அந்தச் செய்தி வெளியாகியிருக்க வேண்டும் என அலையும் சரத்குமார்கள், விஜய்காந்துகளுக்கு மத்தியில் லட்சணக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள உதவிகளை சத்தமில்லாமல் செய்துவரும் ரஜினியைப் பற்றி அவதூறு பரப்ப இவர்கள் யாருக்குமே உரிமை கிடையாது.

நியாயமாக இதுவரை இவர்கள் பரப்பிய அவதூறுகளுக்கு ரஜினி சற்றே விரலசைத்திருந்தால் கூட கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்கள்.

ஆனால் ரஜினி இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட, விமர்சனங்கள் தீண்டாத மனிதராக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

ஒன்றுமில்லை... விஜயகாந்துக்கு எதிராக ஒரே ஒரு கட்டுரையை எந்த அஞ்ஞானியையாவது விட்டு எழுதச் சொல்லுங்களேன் பார்ப்போம்... அல்லது எந்த ஒழுக்க நெறிமுறைகளுக்கும் உட்படாத கமல்ஹாசனை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை எழுதச் சொல்லுங்கள் பார்க்கலாம். இவர்களால் நிச்சயம் முடியாது.

ஆனால் ரஜினி...

தன்னைப் பற்றி நல்லவிதமாக எழுதிச் சம்பாதிப்பவர்களையும் கண்டு கொள்வதில்லை, திட்டி எழுதி கல்லா கட்டும் நச்சுப் பத்திரிகைகளையும் கண்டு கொள்வதில்லை.

மக்களும், தனக்கு மேலுள்ள மகான்களும் பார்த்துக் கொள்வார்கள் இந்தக் கும்பலை என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவருக்கு. தனக்காக ரசிகர்கள் ஆவேசப்பட்டு எந்த வித ஆபத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற நிஜமான அக்கறையில், ரசிகர்களை இம்மாதிரி சோதனையான கட்டங்களில் மட்டும் சந்திப்பதே இல்லை. ஒரு நல்ல தலைவனுக்குரிய தகுதி இதுதான்.

நல்லவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை... குமுதம், விகடன், நக்கீரன் போன்ற பத்திரிகைகள் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தால் கூடப் போதுமே!