Showing posts with label Rm Veerappan. Show all posts
Showing posts with label Rm Veerappan. Show all posts

Friday, October 17, 2008

இதுவா பத்திரிகை தர்மம்! – ஆர்எம்வீ

ஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 1995 முதல் வெளிப்படையாகப் பேசி வருபவர் ஆர்எம் வீரப்பன். ஒருவிதத்தில் அவர்தான் இந்த அரசியல் குறித்த பேச்சுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவரே, ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்றெல்லாம் கருத்துத் தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதைச் சொன்னவர் ஆர்எம்வீதானா? – இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டோம் இன்று.
அவரது பதிலை அப்படியே தருகிறேன். பத்திரிகை தர்மத்தின் லட்சணம் உங்களுக்கும் புரியும்!

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரது சமீபத்திய அறிக்கை குறித்தும் கருத்து கேட்டு என்னிடம் வந்தார்கள் சில பத்திரிகையாளர்கள். நானும் சில கருத்துக்களைச் சொன்னேன். ஆனால் அவர்களோ... நான் சொன்னவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து அவர்களுக்குப் பிடித்த மாதிரி கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளதைக் கண்டு உள்ளபடியே நான் வருத்தப்பட்டேன்.

இது பத்திரிகை தர்மமா... நான் சொன்னது என்ன?

“ரஜினி நல்ல மனிதர். எப்போதும் என்னிடம் அரசியல் குறித்து ஆர்வமாக பல விஷயங்களைப் பேசுவார், விவாதிப்பார். தனது முடிவான கருத்துக்களையும் கூறுவார். ஆனால் அரசியலுக்கு வரப்போவது குறித்து முடிவாக எதையும் சொல்லமாட்டார்.

எனக்குத் தெரிந்து ரஜினி இப்படித்தான். அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எப்போதே வந்திருக்க வேண்டும். இப்போது அவருக்கு தனி அரசியல் இயக்கம் தொடங்கி நடத்தும் அளவுக்கு ஆர்வம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இனி வருவாரா என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

மேலும் இந்த அறிக்கையில் தனது அரசியல் பிரவேசம் பற்றி அவர் எதையும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது அவரது தொண்டர்கள் சிலர் வேண்டாத வேலையில் இறங்கி அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சித்து வருகிறார்கள். தனிக் கட்சி, கொடி என்றெல்லாம் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு முடிவு கட்டவே இந்த அறிக்கை. அவரது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது...”

-இதுதான் ஆர்எம்வீ சொன்னது.

அதை எப்படி வெட்டி, ஒட்டி திரித்து வெளியிட்டுள்ளன சில பத்திரிக்கைகள் என்பதை நீங்களே நேற்று பார்த்திருப்பீர்கள்!

இதைவிடக் கொடுமை, இன்னொரு பத்திரிகை ரஜினியின் அறிக்கை பற்றிய செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு, ‘ரசிகர்களைக் கைவிட்ட ரஜினி!”
இவர்கள்தான் காஞ்சிபுரம் போய் நடராஜ குருக்களைத் தேடிப் பிடித்து, ரஜினி சோழி போட்டு நாள் பார்த்த கதையையெல்லாம் புலனறிந்து கொடுத்த நிகழ்காலத்தின் குரல்!

நல்லாருக்கு உங்க பத்திரிகை நியாயம்!

Saturday, October 11, 2008

ரஜினியின் இடம் அப்படியே இருக்கிறது! - ஆர்.எம்.வீரப்பன்


சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சரும் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்பி, ரஜினியின் அரசியல் பிரவேச அவசியம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். அதன் பிறகுதான் அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நமது மதிப்புக்குரிய முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் கட்டியம் கூறியவர் ஆர்எம்வீதான். பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவையும் அதில் ரஜினி நிகழ்த்திய புயல் வேக உரையையும், அதனால் எழுந்த அரசியல் பூகம்பங்களையும் மறுபடியும் ஒருமுறை இங்கே நினைவு கூற வேண்டியிருக்காது என நம்புகிறேன்.

ரஜினிக்காக மந்திரி பதவியையே துறந்தவர், ரஜினி கட்சி ஆரம்பித்தால் எதையும் செய்யத் தயாராக இருந்தவர் என அமரர் மூப்பனார் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஆர்எம்வீ.
இன்று ‘காலத்தின் கட்டாயம்’ அவரை இன்னொரு அணிக்குள் நிற்க வைத்திருந்தாலும் (அந்த ஏற்பாட்டைச் செய்தவரும் ரஜினிதான்!), இந்த நிமிடமே ரஜினி பொது வாழ்க்கை குறித்த சாதக அறிவிப்பை வெளியிட்டால் தயங்காமல் முதல் ஆதரவுக் குரல் தரத் தயாராக இருப்பவர்.

அவரிடம் எவ்வளவோ விஷயங்கள் பற்றி பேசினேன்.

அதில் அவர் ரஜினியைப் பற்றி, அவரது அரசியல் பிரவேசம் குறித்து கூறியதில் ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்.

இனி ஆர்எம்வீ:

நல்லவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ஒரு நல்லவரை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொண்டோம். புரட்சித் தலைவருக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு ரஜினிக்கு மட்டுமே அமைந்தது.

இது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல... நான் முன்பே சொன்ன மாதிரி, காலத்தின் கட்டாயத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு தானாகவே அமைந்துவிட்டது. அதை அவர் மறுதலித்ததும் அதன் பின் வந்த நிகழ்வுகளும் வரலாறு.

அந்த முடிவு குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன். அது அவரது சொந்த முடிவு.
ஆனால் இன்றைக்கு பத்திரிகைகளில் பரபரப்பாக பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதைப் படிக்கும்போது எனக்குள் பழைய வரலாறு சற்றே எட்டிப் பார்த்தது.

இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியமா?

இது ஜனநாயக நாடு. அவர் அரசியலுக்கு வருவதை யார் தடுக்கப் போகிறார்கள்... ஆனால் முதலில் அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா எனத் தெரியவேண்டும்.

யூகங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் உங்களைப் போன்ற அபிமானிகள் வருந்திக் கேட்பதால் சொல்கிறேன்... அரசியலில் ரஜினியின் இடம் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன்.

காரணம் மக்கள் மனதில் அவர் மீதான மரியாதை கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. தாங்கள் எதிர்பார்த்த மாதிரி அவர் அரசியலுக்கு வரவில்லையே என்ற கோபத்தில் சிலர் அவரை விமர்சிக்கக் கூடும். ஆனால் நல்லவர்களின் புகழ் நீண்டகாலம் நிலைத்திருக்கும், புரட்சித் தலைவரைப் போல...

-நிறைய பேசினாலும் அதில் அளவோடு எடுத்துக் கையாளுமாறு கேட்டுக் கொண்டார் ஆர்எம்வீ. அரசியல் சாணக்கியராயிற்றே!

குறிப்பு: ரஜினி ஆதரவாளர்களிடம் கருத்துக் கேட்டால் இப்படித்தானே சொல்வார்கள் என நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு காரியத்தில் இறங்குகிறோம்... அதற்கு நாம் யாரைக் கைத்துணைக்கு அழைப்போம்... நம்மை விமரிசிப்பவர்களையா... நலம் விரும்பிகளையா?

பல நேரங்களில் விமரிசனம் எனும் பெயரில் வரும் வக்கிரக் கணைகள் நல்ல முயற்சிகளைத் துவண்டு போகச் செய்துவிடும்.

ரஜினி அடிக்கடி சொல்வதுபோல, ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது நமக்கு வேண்டியவர்களையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும். அந்த செயலின் முடிவில் கிடைக்கும் வெற்றியை தனக்கும் சிறிது வைத்துக் கொண்டு மீதியை துணை நின்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். என்ன சரிதானே!

http://www.envazhi.com