Showing posts with label தட்ஸ்தமிழ். Show all posts
Showing posts with label தட்ஸ்தமிழ். Show all posts

Thursday, September 4, 2008

இயந்திரன் ஆனது ரோபோ!


சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்து ஷங்கரின் நடிக்கவிருந்த ரோபோபடத்தின் பெயர் இயந்திரன் - தி ரோபோ என மாற்றப்பட்டுள்ளது.

இதோ அதுகுறித்த அதிகாரப்பூர்வ செய்தி:

இந்தியாவின் ஷோமேன் எனப் புகழப்படும் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் புதிய படமான ரோபோவுக்கு, இயந்திரன் – தி ரோபோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சிவாஜிக்கு அடுத்து ரஜினிகாந்த்தும் ஷங்கரும் இணைந்து மீண்டும் ஒரு படம் செய்யப் போவதாக அறிவித்தனர். அதற்கு ரோபோ என்று தலைப்பும் சூட்டினர். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் என் இனிய இயந்திரா மற்றும் மீண்டும் ஜீனோ ஆகிய நாவல்களின் அடிப்படையில் உருவாக்கப்படும், தமிழின் முதல் பிரமாண்ட விஞ்ஞானப் படம் இது.

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் (சுமார் ரூ.140 கோடி) அய்ங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உருவாக்கும் இந்தப் படத்துக்கு பொருத்தமான தமிழ் தலைப்பு சூட்டப்படும் என ரஜினி முன்பு அறிவித்திருந்தார்.

தமிழில் பெயர் வைத்தால் கிடைக்கும் வரிச் சலுகைக்காக இந்தப் பெயர் மாற்றம் இல்லை என்றும், தமிழில் தலைப்பு வைக்க வேண்டும் என தமிழக அரசின் விருப்பத்தை மதிக்கும் வகையில் இப் பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் ரஜினி ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இயந்திரா என்ற பெயர் முதலில் பரிசீலிக்கப்பட்டது. பின்னர் இயந்திரன் என மாற்றப்பட்டது. ஆனால் இதில் ரஜினிக்கு அவ்வளவாக திருப்தி இல்லையாம்.
கடைசியில் அவரது யோசனைப்படி இயந்திரன் – தி ரோபோ என இந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 3 போட்டோ செஷன்கள் முடிந்து விட்டன. கடந்த வாரம் அமெரிக்காவில் ஹாலிவுட் ஸ்டுடியோவில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நாளை மறுதினம் முழு வீச்சில் பிரேஸ்ல் நாட்டில் படப்பிடிப்புத் துவங்குகிறது.

ஏற்கெனவே ரோபோ படப்பிடிப்புக்காக ஷங்கருடைய ஒரு குழு பிரேஸிலில் முகாமிட்டுள்ளது.
ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் நாளை புறப்படுகின்றனர். படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராய் நேராக பிரேஸிலுக்கு 7-ம் தேதி வந்து விடுவார் எனக் கூறப்படுகிறது.

நன்றி- தட்ஸ்தமிழ், எஸ்சினிமா