
சில தினங்களுக்கு முன் பாஜக தலைவரும், ரஜினியின் நலம் விரும்பிகளில் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்.பி, ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை கொடுத்திருந்தேன்.
கிட்டத்தட்ட அதே கருத்தை நேற்றைய மாலைப் பத்திரிகைகளுக்கும் பேட்டியாகக் கொடுத்திருந்தார்.
நமது நண்பர்களில் சிலர், திருநாவுக்கரசரின் பேட்டி வந்து என்ன ஆகப்போகிறது என நினைக்கலாம்.
எந்தக் காரியத்திலும் இறங்கும் முன் நமக்கான ஆதரவுக் குரலைப் பெறுவது மிக முக்கியம். அது தருகிற மன உறுதியும், குதூகலமும் தனியானது.
ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால், நான்தான் அக்கட்சிக்கு பொதுச் செயலாளர். இந்தப் பணியை விரும்பி செய்வேன். என் மனைவி ராதிகா எந்த நிலையிலும் அவரது கட்சியில் பணியாற்றத் தயார் என்று பகிரங்கமாக சேனல்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்த சரத்குமார் இன்று என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்?

ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன் ரஜினியோடு இணைந்து செயல்படவும் தயாராக இருந்த, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் திருநாவுக்கரசர். இந்தப் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் அதே மரியாதையுடன் ரஜினிக்கு அவர் ஆதரவு தர முன் வந்திருப்பது சாதாரண காரியமா?
மீண்டும் அவரிடம் பேசினோம்:
ரஜினியை எதற்காக அரசியலுக்கு மீண்டும் அழைக்கிறீர்கள்?
மிக எளிய ஆனால் உண்மையான காரணம் என்ன தெரியுமா... ரஜினிக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவருக்கு இத்தனை சிக்கல்கள் வருகின்றன. இந்த மாதிரி நல்ல மனம் படைத்தவர்கள்தான் இன்று நமக்குத் தேவை.
ரஜினி என்றைக்கோ முதல்வராகியிருக்க வேண்டியது. ஐயா மூப்பனார் அவருக்காக ராஜபாட்டை போட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஜினி மறுத்துவிட்டார்.
பதவியை மறுப்பது சாதாரண விஷயமா... பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஏதாவது ஒரு சங்கத்தின் உறுப்பினர் பதவியைக் கூடத் துறக்க யாரும் தயாராக இல்லாத இந்த நாட்டில், சகல அதிகாரமும் நிறைந்த மாநில முதல்வர் பதவியையே வேண்டாம் என ஒருவரால் மறுதலிக்க முடியுமென்றால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியுமா?
அதனால்தான் ரஜினியை மீண்டும் மீண்டும் அழைக்கிறோம்.
ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லையே...?
அது அவரது தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது. என்னைக் கேட்டால், முன்னெப்போதும் இல்லாத சரியான சந்தர்ப்பம் அவருக்கு இப்போதுதான் வாய்த்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழகத்தில் உள்ள முன்னணிக் கட்சிகள் அனைத்தும் மக்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. கட்சி ஆரம்பித்துள்ள வேறு சில நடிகர்களின் நிலைமையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. அவர்களையெல்லாம் விட மிகச் சிறப்பாக, திட்டமிட்டுச் செயல்படக் கூடியவர் ரஜினி.
இந்தத் தருணத்தை அவர் சரியாகப் பயன்படுத்தி, தன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
ரஜினியிடம் நீங்கள் இது குறித்துப் பேசினீர்களா?
பேசியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார்.
ரஜினி வந்தால் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடும் வாய்ப்பு எந்த அளவு உள்ளது?
ரஜினியைப் பற்றி மீடியாவில் வருகிற செய்திகளை விடுங்கள். ஆனால் கிராமங்களில் பொது மக்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
எனக்குத் தெரிந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு அவருக்கு இணையான செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். கூடவே அவருக்கு மக்களிடமுள்ள மிஸ்டர் கிளீன் இமேஜ், லஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாக்குகளை அள்ளித்தரும்.
ரஜினி அரசியலுக்கு வந்தால், நானும் அவருக்குத் துணையாக இருப்பேன் என்று முன்பு கூறினீர்கள். அதே மன நிலையில் இபேபோதும் இருக்கிறீர்களா...?
நிச்சயமாக... அதே நேரம் அவர் தனிக் கட்சி கண்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும். அல்லது தனியாகவே நின்றாலும் நாங்கள் ஆதரவளிப்போம். ஒரு நல்லவர் வரட்டுமே... அதற்காகத்தான்!
http://www.envazhi.com



