
“அவரோடு நான் சண்டை போட்டிருக்கிறேன்... அவரை பொது மேடைகளில் விமர்சித்திருக்கிறேன். பலமுறை கருத்து வேறுபட்டிருக்கிறேன். ஆனால் பதிலுக்கு என்னை ஒரு முறைகூட அவர் திட்டியதோ விமர்சித்ததோ கிடையாது. ஏதாவது அவசரம் என்று தகவல் சொன்னால் மாறாத அன்போடு இப்போதும் முதலில் வந்து நிற்கிறார். அவரைப் போன்ற சிறந்த மனிதனை இந்த சினிமாவில் மட்டுமல்ல, சமூகத்திலும் கூடப் பார்த்ததில்லை...”
-சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பற்றி இயக்குநர் பாரதிராஜா சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் சொன்ன கருத்துக்கள் இவை.

மலேஷியாவில் இன்று நடக்கும் தன் மகள் ஜனனியின் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் பாரதிராஜா, நாளை இரவு ஓட்டல் இஸ்தானாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இதில் தன் முதல் படத்தின் நாயகர்களான சூப்பர்ஸ்டார் ரஜினி – கமல், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருந்து தருகிறார்.
ஜனனி – ராஜ்குமார் தம்பிதுரை திருமணத்தில் கலந்து கொள்ள நேற்று இரவே விமானத்தில் மலேஷியா புறப்பட்டுச் சென்றுவிட்டார் சூப்பர் ஸ்டார். அங்கு இரு தினங்கள் தங்கியிருக்கும் ரஜினி, நாளை நடைபெறும் இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார்.

“இது எங்கள் 30 ஆண்டுகால நட்புக்கு ஒரு சின்ன மரியாதை. கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு திரைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே குடும்பம்தான் என்பதை நிரூபிக்கத்தான் இந்த விருந்து...” என்கிறார் பாரதிராஜா.
நல்லா சத்தமா சொல்லுங்க பாரதிராஜா அவர்களே... இதே விருந்தில் கலந்துகொள்ள வரும் நடிகர் சங்க நாட்டாமைகள், பெரியார் வேடம் போட்டு நிஜத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் ‘டகால்டி’ பேர்வழிகளுக்கு உரைக்கிற மாதிரி!