இந்தச் செய்திக்கு தனியாக ஒரு கமெண்ட் எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு கலைஞர் பார்த்துக் கொண்டது அவரது இலக்கிய மேதைமையைக் காட்டுகிறது.அழகிரியும் ஸ்டாலினும் மாறன் சகோதரர்களுடன் சமாதானமான பிறகு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்துள்ள பேட்டி (கேள்வி கேட்பதில் நம்மாளுங்க எவ்வளவு வீக்குன்னு தெரி்ஞ்சுக்க இன்னொரு சான்ஸ்!):
இந்த சந்திப்பு உங்களுக்கு எப்படி இருக்கிறது?
சந்தோஷமாக இருக்கிறது.
இந்த சந்திப்பு எதனால் நடந்தது?
இதயத்தால் நடந்தது.
தயாநிதி மாறனுக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா?
அதுபற்றி எல்லாம் இப்போது பேச விரும்பவில்லை.
உணர்வுபூர்வமாக எப்படி இருந்தீர்கள்?
எனக்கு கோபம் வரும்போதும், வருத்தம் வரும்போதும் எப்படி இருந்தேனோ அப்படித்தான் மகிழ்ச்சியின்போதும் இருந்தது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கூட அறிக்கை மோதல் நடந்தது. இதனிடையே இந்த திடீர் சந்திப்புக்கு என்ன காரணம்?
இதற்கு மூல காரணமாக இருந்து நிறைவேற்றி வைத்து எல்லோருக்கும் மகிழ்ச்சி தந்த பொறுப்பு மு.க.அழகிரியை சார்ந்தது. அவருடன் இணைந்து மு.க.ஸ்டாலின் செயல்பட்டு, இந்த நல்ல முடிவு ஏற்பட்டது.
குருபெயர்ச்சியால் ஏற்பட்ட விளைவா இது?
எங்கள் குருவையே நாங்கள் எதிர்த்த பிறகு, அந்த குருவுடன் இணைந்து செயல்பட்டதுதான் திராவிட இயக்க வரலாறு.
பேரன்கள் எல்லோரையும் பார்த்ததில் ஏற்பட்ட உணர்வு எப்படியிருந்தது?
கண்கள் பனித்தன; இதயம் இனித்தது.
அழகிரியின் மனமாற்றத்துக்கு என்ன காரணம்?
மனமிருந்தது. எனவே மாற்றம் ஏற்பட்டது.
மதுரையில் சன்டிவி, கே டிவி தெரியாத நிலை இருந்தது. இதன் பிறகு சுமூக தீர்வு ஏற்படுமா?
கேளாதீர்கள். கிளறாதீர்கள்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. அப்படி இதை எடுத்துக் கொள்ளலாமா?
அது உங்கள் பொறுப்பு. அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
அடுத்தகட்டமாக அரசியல் ரீதியாக, தொலைக்காட்சி ரீதியாக என்ன செய்வீர்கள்?
கலந்து பேசி தேவைப்படும் உரிய முடிவுகளை எடுப்போம்.
இந்த இணைப்பு விழாவுக்கு கனிமொழி வரவில்லையே?
எம்.பி.க்கள் குழுவுடன் விமான நிலையம் சென்று விட்டார். அதன் பிறகுதான் இவர்கள் வந்தார்கள். இப்போது திரும்பி வந்து கொண்டிருக்கிறார்.
தயாநிதி மாறன் மீண்டும் அரசியல் பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்தாரா?
பேசுவதற்கு அவ்வளவு நேரம் கிடைக்கவில்லை.
நாளை டெல்லி செல்லும் எம்.பி.க்கள் குழுவில் பங்கேற்பாரா?
மனித சங்கிலிக்கு வந்தார் அல்லவா.
இனிமேலாவது எல்லோரும் ஒற்றுமையாக இருப்போம் என்று வாக்குறுதி தந்திருக்கிறீர்களா?
இந்த கேள்வி ஒன்று போதும். அவர்களின் உள்ளங்களை ஒன்றுபடுத்த.
சமரசத்தின் பின்னணி என்ன?
அழகிரி, ஸ்டாலின்.
கேட்க மறந்த அல்ல மறக்கடிக்கப்பட்ட கேள்விகள்:
மதுரை தினகரன் அலுவலக ஊழியர்கள் எரிப்பு விவகாரம் இனி என்ன ஆகும்?
'மதுரையில் அராஜகம் செய்யும் ரவுடி அழகிரியும் அவர் கும்பலும்' என்று வாசித்து வந்த சன் டிவி, இனி 'மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் அழகிரி' என வர்ணிக்குமா...?
கலைஞர் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு சங்குதானா...?
தினகரனில் மீண்டும் கருத்துக் கணிப்பு வருமா?
சன் டிவி ஜெயலலிதாவுடன் செய்து கொண்டதாகச் சொல்லப்பட்ட ஒப்பந்தம் என்னாச்சு?
அடிக்கடி தன் முகத்தை சன்னில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொண்ட 'கருப்பு எம்ஜிஆர்கள்' கதி என்ன?



