
இன்றைய தேதிக்கு உலகிலேயே வசூலில் சாதனைப் படைத்த, முதல் தரமான, யாராலும் தொட முடியாத உயரத்துக்குப் போய் விட்ட ஒரே திரைப்படம் எது தெரியுமா?
சின்ன குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லிவிடுவார்கள், 'காதலில் விழுந்தேன்' என்று!!
சன் டிவி(களின்)யின் அன்றாட தலைப்புச் செய்தியே இந்தப் படத்தின் வரலாறு காணாத சாதனை பற்றித்தான்...
அட கேவலமே, என்று நீங்கள் தலையில் அடித்துக் கொள்வது எனக்கும் தெரிகிறது. என்ன செய்ய... நாம்தானே அவர்களை மேலும் மேலும் வளர்த்து, நம்மையே தின்னும் அசுரர்களாக மாற்றி வைத்திருக்கிறோம்! நமக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்!!
சன் நெட்வொர்க் மற்றும் அவர்கள் தொடர்புடைய அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் எப்படியெல்லாம் தவறாக, கிரிமினல்தனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இந்த வலைப்பூவில் நாம் ஏற்கெனவே அலசியிருக்கிறோம்.
இப்போது மீண்டும் ஒரு முறை நமது வாதங்களுக்கான ஆதாரங்களை சன் குழுமத்தினரே உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.
காதலில் விழுந்தேன் என்ற மட்டமான மூன்றாம் தர படத்துக்கு சன் டிவியும் அதன் சார்பு மீடியாவும் செய்கிற விளம்பரத்தைப் பார்க்கும்போதுதான் மீடியா உலகின் கேவல நிலையும் கயமைத்தனமும் பலருக்கும் புரிய வந்துள்ளது.
இந்தப் படத்தை மதுரையிலும் ராமநாதபுரத்திலும் ரிலீஸ் செய்ய விடவில்லையாம் அழகிரியின் ஆதரவாளர்கள். நல்ல வேளை, ஒரு பெரிய கொடுமையிலிருந்து அந்த இரு மாவட்ட மக்களையும், அவர்களின் பொன்னான நேரத்தையும் பணத்தையும் காப்பாற்றியிருக்கிறார் அழகிரி!
இதற்காக இவர்கள் குய்யோ முறையோ என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வைக்கும் 'செய்தி ஒப்பாரி' இருக்கிறதே... சகிக்கலை!
அதேநேரம் இது இந்திய அரசியல் சாசனம் மீடியாவுக்கு வழங்கியுள்ள உரிமைகளை சன் நிறுவனம் எ்படியெல்லாம் மீறுகிறது என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
சன் நிறுவனம் மத்திய அரசிடமிருந்து செய்தி ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஒரு மிகப் பெரிய ஊடகம். செய்தி என்ற பெயரில் யாரும் எதை வேண்டுமானாலும் தொலைக்காட்சியில் வாசித்துவிட முடியாது. அதற்கு ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகள், சட்ட விதிகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டு செய்தி ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள சன் தொலைக்காட்சி, இப்போது மக்களுக்கு எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறது பாருங்கள்.
ஒரு மூன்றாம் தர படத்தை இவர்கள் வாங்கிவிட்டார்கள் என்பதற்காக, தலைப்புச் செய்தியிலேயே, 'காதலில் விழுந்தேன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி, மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்', என்றெல்லாம் செய்தியாகவே தருகிறார்கள்.
விளம்பரம் என்ற பெயரில் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தப் படத்தின் டிரெயிலர், பாட்டு என படுத்துகிறார்கள். நிமிடத்துக்கொரு முறை விளம்பரம் செய்துவிட்டுப் போகட்டும், நமக்கென்ன... ஆனால் ஒரு உண்மைச் செய்தியாகவே இதைத் திணிக்க முயற்சிப்பது எத்தனை பெரிய குற்றம்?
தனது சொந்த லாபத்துக்காக, மக்களின் பாக்கெட்டைச் சுரண்டுவதற்காக, பாரபட்சமில்லாமல் உண்மைத் தகவல்களை மட்டுமே செய்தியாகக் கூறவேண்டிய முக்கிய நேரத்தில், நன்கு தெரிந்தே ஒரு பெரும் பொய்யைக் கூறிக்கொண்டிருக்கும் சன் டிவியை, மத்திய அரசு மனது வைத்தால் முழுமையாக முடக்கிவிட முடியும்.
இதுகுறித்து, மாநில அரசின் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி ஒரு கடிதம் எழுதினாலே போதும். ஆனால் செய்வார்களா...? நிச்சயம் மாட்டார்கள். அதுதான் அவர்கள் குடும்பத்துக்கே உரிய அரசியல் ஸ்டைல்!
அழகிரி மேட்டருக்கு வருவோம்...
இந்தப் படம் மதுரையிலும் பிற தென் மாவட்டப் பகுதியிலும் ரிலீஸ் ஆகவிடாமல் அழகிரி தடுப்பதாக சன் டிவி, தினகரன் செய்திகள் உளறுவது போதாதென்று, அந்தப் படத்தின் இயக்குநரை விட்டு பத்திரிகைகளுக்கும் செய்தி கொடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

நாம் அழகிரி அல்லது அவரது ஆட்கள் செய்வதை நியாயப்படுத்தவில்லை. ஆனால், அழகிரிக்கு எதிராக ஆதாரமிருந்தால் போலீசுக்குப் போக வேண்டியதுதானே, சன் நிறுவனம்?
அட கருணாநிதியின் போலீஸ் மீது நம்பிக்கை இல்லையென்ற வைத்துக் கொள்வோம்... கோர்ட்டுக்குப் போகலாமே.
அதைவிட்டுவிட்டு, வடிவேலுவுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் விஜய்காந்த், தன் கட்சியின் பெயரைக் கூட மறந்துவிட்ட சரத்குமார், மகனைக் கண்டிக்க வக்கற்ற ராஜேந்தர்... அட நேற்று வரை கருணாநிதியின் வீட்டு வாசலில் பழியாய் கிடந்துவிட்டு, இன்று முறுக்கிக் கொண்டு அவரது எதிரிகள் வீட்டு திண்ணைகளில் அமர்ந்து வெட்டிப் பஞ்சாயத்துப் பேசிக்கொண்டிருக்கும் விளங்காத கம்யூனிஸ்டுகளின் வீட்டுக் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள்..?
விதி வலியது.... இதே சன் நிறுவனம், ரஜினியின் குசேலன் படத்தைத் தங்களுக்குத் தரவில்லை என்ற கடுப்பில் எப்படியெல்லாம் அந்தப் படத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்...! விநியோகஸ்தர்களை, தியேட்டர்காரர்களைத் தூண்டிவிட்டார்கள்?
அன்று அவர்கள் குசேலனுக்கு எதிராக விதைத்தை வினையை அறுவடை செய்யும் நேரமல்லவா இது!
பிரஸ் கவுன்சில் மற்றும் மத்திய அரசிடம் சன்னுக்கு எதிரான ஆதாரங்களை இப்போதாவது சமர்ப்பிக்கவேண்டும்.
செய்யுமா தமிழக அரசு?



