
கமல்ஹாசன் என்ற திரைக் கலைஞனைத் தாக்கி எழுதும் எண்ணம் எப்போதும் எனக்குக் கிடையாது. ஆனால், அந்தப் பெரிய நடிகரின் சமூகப் பார்வை பற்றிய என்னுடைய மதிப்பீடுகளின் ஒரு பகுதிதான் இது. அவர் நடிப்பைப் பற்றி மேலான விமர்சனங்களை நிறைய வைத்தவன் என்பதால் இந்த விமரிசனத்தை வைப்பதிலும் தவறில்லை எனக் கருதுகிறேன்.
கமலின் இன்னொரு உலகம் பகுத்தறிவு பேசும் நாத்திக உலகம். இந்த தளத்தில் இவருக்கு நிறையவே நண்பர்கள் உண்டு. ஆனால் வசதிக்கேற்ப கடவுளை துணைக்கழைக்கும் இவரது நவீன பெரியாரிஸம்தான் நமக்குப் புரியவில்லை. இது பலருக்கும் தெரியும்.
ஆனால் என்ன காரணத்திலாலோ அவரது அத்துமீறல்களுக்கு மட்டும் சிலர் சிறப்புச் சலுகை காட்டுகின்றனர். மீடியாக்கள் அவரை செல்லப் பிள்ளையாய் கொண்டாடுகின்றன, கழுத்தில் தமிழன் வில்லை மாட்டி!
இது... அவரது கோணல்களைப் படம் பிடிக்கும் நேர்ப் பார்வை. அவ்வளவுதான்...
முன்னாள் பத்திரிகையாளர் (நமக்கு அவர் அப்படித்தான்!) ஒருவர் கமல்ஹாசனை தனது பிளாக்குக்காக சமீபத்தில் பேட்டி எடுத்திருக்கிறார்.
அதில்தான் கமல்ஹாசனின் பகுத்தறிவு பளபளக்கிறது!
இதோ அதில் ஒரு பகுதி...
...உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள். அவங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்.திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல.
ஏன் தெரியுமா? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனும்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான். இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும்!
ஆஹா... என்ன அரிய கண்டுபிடிப்பு!
இந்த நடுகல்லுக்கும் தமிழனின் நாட்டார் தெய்வங்களுக்கும் உள்ள தொடர்பை எத்தனை லாவகமாக மறைக்க முயல்கிறார் பாருங்கள்!
ராமானுஜரை தெய்வமாக வழிபடுகிறார்கள் இவரது சமூகத்தினர். அப்படியெனில் ராமானுஜக் கடவுளையும் ஒப்புக் கொள்கிறாரா இந்த ‘ஸ்ரீலஸ்ரீ கமலானந்த ஸ்வாமிகள்’!
அது கிடக்கட்டும்... ராமானுஜரை கடவுளாக இவரது சமூகம் கொண்டாடுகிறது. அதே ராமானுஜர்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏகப்பட்ட நல்ல விஷயங்களைச் செய்ததாகக் கூறுகிறார்கள். அப்படியெனில் இவரது சமூகத்தினர், இன்றைக்கு தாழ்த்தப்பட்ட மக்களை சகோதரர்களாக அல்லவா ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்! மாறாக, இன்றைக்கும் அவர்கள் நின்ற இடத்தை சாணம் தெளித்து தீட்டுக் கழிக்கிறார்களே... இந்த முரண்பாட்டுக்குப் பெயர்தான் பகுத்தறிவா...
ஆதி சங்கரர் மிகப் பெரிய சமூக சீர்திருத்தவாதிதான்... இவர்கள் சொல்லும் கதைகளின்படி. ஆனால் காஞ்சிபுரத்தில் நன்கு அறிமுகமான தலித் ஒருவனால் சங்கர மடத்து இரண்டாம் கட்டுக்குள் இன்னும்கூட நுழைய முடியாத நிலைதானே...
இதுபற்றியெல்லாம் தனது பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் கமல் பிரஸ்தாபிக்கலாமே... ஆனால் இன்றும் ராமானுஜதாஸன்... ரங்கராஜ நம்பியாக தன்னைக் காட்டிக் கொள்வதில்தானே இவருக்கு அக்கறை இருக்கிறது... வட கலை, தென்கலை என செத்துப்போன சமாச்சரங்களுக்கு விஞ்ஞான சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் இந்த திறமையான கலைஞர் என்பதுதான் வேதனை.
தலித்துகள் என்றால் ஆப்ரிக்கர்களைவிட கருப்பாக... பூவராகன்களாகத்தான் இருப்பார்கள் என்பது இவர் உலகத்து நியதி போலும்! தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கற்பனையில் கூடவா நல்ல உருவம் கொடுத்துப் பார்க்க முடியாது!
இதே கமல்ஹாசன் முன்பொருமுறை விகடனுக்கு அளித்த பேட்டி...
நான் எப்போதும் என்னை பிராமணனாக அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். என் பெண்ணுக்குக் கூட பள்ளியில் சாதிப் பெயர் குறிக்க மறுத்துவிட்டேன்.
சின்ன வயதில் எங்கப்பா கூட கோயிலுக்குப் போய் கச்சேரியெல்லாம் கேப்பேன். ஆனா, எனக்கு சுட்டுப்போட்டாலும் பிராமணத்தனம் வராது. சுட்டுப் போட்டாலும் இந்த மந்திரங்கள் தெரியாது. அதைக் கத்துக்கும் ஆர்வமும் எனக்கில்லை... நான் படிச்சதெல்லாம் நான்-பிராமண இலக்கியங்கள்தான்!
ஆனால் இன்று கமல் அந்த பிளாக்கருக்கு அளித்துள்ள பேட்டி...
...ஆமாம், எனக்கு விஷ்ணு ஸகஸ்ரநாமம் முழுசா தெரியுமே... (கொஞ்சம் சொல்லிக்காட்டுகிறார்). சுப்ரபாதம் முழுசா தெரியும். திருப்பல்லாண்டு கூட தெரியும். எனக்கு அபிராமி அந்தாதி தெரிஞ்சதினாலதான் என்னால் குணா படத்தில் அதை சொல்ல முடிஞ்சுது.
இதுக்கு காரணம் டி.கே. சண்முகம் அண்ணாச்சி. குழந்தையாக இருந்தபோது அவருடைய நாடக குழுவில இருந்தேன். ஊர் ஊரா போவோம். அப்ப கோவிலுக்கு கூட்டிக்கிட்டு போவார். எந்த கோவிலுக்கு போறோமோ அந்த பாடல் சொல்லணும். அப்படித்தான் தேவாரம், திருவாசகம் படிச்சேன். பிரபந்தத்தில எனக்கு பல பாடல்கள் தெரியும்... (அபிராமி அந்தாதியிலும், திவ்யபிரபந்தத்திலும் சில பாடல்கள் சொல்லிக்காட்டினார்...)
ஏன் இவ்வளவு முரண்கள் கமல் அவர்களே...
மூட நம்பிக்கைக்கு எதிர்ப்பு என்று கூறிக்கொண்டே நீங்கள்தான் எத்தனை மூடத்தனங்களை, முரண்களை உங்களுக்குள் கொண்டிருக்கிறீர்கள்...
தம் வசதிக்காக மரபுகளை உடைத்துக் கொண்டு வாழ்வதற்குப் பெயர் பகுத்தறிவல்ல...
மரபுகளும், சமூக விதி மீறல்களும் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்காகப் பயன்படும்போதுதான் அது புரட்சி. மற்றபடி சொந்த வசதிக்காக, ஒழுக்க மீறல்களுக்காக அவற்றைப் பயன்படுத்தும்போது, அது சுயநலமாகிறது!
இதை நமது ‘பச்சைத் தமிழர்கள்’ இனியாவது புரிந்து கொள்வார்களா... அல்லது பிரிவினை வளர்த்தாலும், நாகரீகமாக சாதியம் பேசினாலும் அவர் நம்மாளு என்று அனுசரித்துக் கொள்வார்களா... தொல் திருமாக்கள்தான் சொல்லவேண்டும்!
குறிப்பு: ரஜினிக்கு கமல் நெருங்கிய நண்பர். ரஜினி மிகவும் மதிக்கும் ஒருவரைப் பற்றி இப்படி எழுதலாமா என பின்னூட்டம் எழுதத் தயாராக உள்ள நண்பர்களுக்கு... அவர்களின் நட்புக்கும், இந்தக் கருத்துக்கும் சம்பந்தமில்லை. சொல்லப்போனால் கமல் என்ற நடிகரின் மீதான விமர்சனம் அல்ல இது. நடிகன் என்ற வட்டம் தாண்டிய கமலின் சமூகப் பார்வை மீதான விமர்சனம் மட்டுமே!



