Showing posts with label கட்சி. Show all posts
Showing posts with label கட்சி. Show all posts

Friday, September 19, 2008

களை கட்டும் மண்டபம்... மிரட்சியில் கட்சிகள்!


இனி ரஜினி ரசிகர்களுக்கும் அபிமானிகளுக்கும் நிறைய சுவாரஸ்யங்கள் காத்திருக்கின்றன.
அதில் முக்கியமானது, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ந்து வெளிவரும் ஆதாரப் பூர்வமான புதுப்புது தகவல்கள்.

மீடியா வர்ணிப்பதைப் போல ‘அக்டோபர் புரட்சி’க்கு முழுமையாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது ராகவேந்திரா கல்யாண மண்டபம்.

அனைத்து மன்றங்களுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரஜினியுடனான சந்திப்புக்கான நாள் மற்றும் நேரம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. ரஜினி அமெரிக்காவிலிருந்து திரும்பும் தேதி முடிவான கையோடு, இந்த விவரங்கள் பத்திரிகைகள் மூலமாகத் தெரிவிக்கப்படும் என்கிறார் சத்தியநாராயணா.

சம்பந்தப்பட்ட மன்றங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கும் இது தனியாகத் தெரிவிக்கப்பட உள்ளது. அநேகமாக அக்டோபர் இரண்டாம் வாரம் இந்தச் சந்திப்பு நிகழும் என்றும், ரஜினி முன்கூட்டியே வந்தால் முதல் வாரத்திலேயே கூட சில மாவட்ட மன்றத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

இன்னொரு பக்கம், ரஜினி அரசியல் பிரவேசம் நிகழ வாய்ப்புள்ளது என்ற தொனியில் சத்தியநாராயணா பேசியதைத் தொடர்ந்து, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தொடங்கி, அகில இந்திய தலைவர்கள் வரை பலரும் சத்தியநாராயணாவைத் துளைத்தெடுக்கிறார்களாம், மேல் விவரங்களைத் தரச் சொல்லி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களே இதில் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பல ஆண்டு காலமாக தமிழகத்தின் கோட்டையைப் பிடிக்க ரஜினி என்ற வரம் வேண்டிக் காத்திருக்கும் பாஜக அளவுக்கு அதிகமான குழைவையும் குசல விசாரிப்புகளையும் காட்டுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் யாருக்கும் எந்தப் பிடியும் கொடுக்காமல் சத்தியநாராயணா பதிலளித்து வருகிறார்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மிகவும் கலக்கத்தைக் கொடுத்துள்ளது இரு நடிகர்கள் -கம்- பார்ட் டைம் அரசியல்வாதிகளுக்கு. அவர்கள் யாரென்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்த மாதிரி ஒரு சூழலை சத்தியமாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

காரணம், உங்களுக்கு நினைவிருக்கும், ரஜினி கட்சி ஆரம்பித்தால், நான் பொதுச் செயலாளராகப் பணியாற்றவும் தயங்கமாட்டேன். எந்தக் கட்சியிலும் சேராத, சேர விரும்பாத என் மனைவி ராதிகா கூட ரஜினி கட்சியில் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறார், என்றெல்லாம் அறிக்கை விட்டவர் சரத்குமார்.

காவிரி நீர் உண்ணாவிரதத்தின் போது ரஜினியின் நம்பிக்கையான காரியதரிசி மாதிரி கூடவே இருந்து, ரஜினி கவர்னரைச் சந்தித்தபோது தரப்பட்ட கோரிக்கை மனுவின் நகல்களைப் பத்திரிகைகளுக்கு விநியோகித்ததும் கூட சரத்குமார்தான் (ஒருவேளை அன்று அவர் கனவு பலிக்காமல் போனதுதான் ரஜினிக்கு எதிராக அவரைத் திருப்பிவிட்டதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது!!).

எனவே இன்று ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்றே அனைவரும் பேசத் தொடங்கியிருப்பது அவர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
விஜயகாந்தின் கட்சியில் பல ரஜினி ரசிகர்களும் இருப்பது உங்களுக்கும் தெரியும். இப்போது, ரஜினியே அரசியலுக்கு வந்துவிட்டால் அஸ்திவாரத்துக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார் விஜயகாந்த்.

இதன் விளைவுதான், தனக்கு வேண்டப்பட்ட பத்திரிகை ஆசிரியர் மூலம், ரஜினிக்கு எதிரான செய்திகளை சில தினங்களுக்கு முன் வெளியிடச் செய்திருந்தார் என பேசிக்கொள்கிறார்கள். ரஜினி கட்சி ஆரம்பித்தால் மாவட்ட அளவில் வேலை செய்ய 100 பேர்கூட இல்லை என்றெல்லாம் அந்தப் பத்திரிகையும் விஜய்காந்துக்கு விசுவாசம் காட்டியிருந்தது.

நாம் முன்பே சொன்னதுபோல இனி எந்தப் பத்திரிகையைத் திறந்தாலும் ரஜினி சினிமா... ரஜினி கட்சி என்ற செய்திகளைத்தான் நீங்களும் பார்க்கப் போகிறீர்கள்.

ஆக... ரஜினி பற்றிய வதந்திகளுக்கும், அனுமானங்களுக்குமே இப்படி நடுங்குபவர்கள், அவர் களத்தில் இறங்கிவிட்டால் இன்னும் என்னவெல்லாம் பிதற்றப் போகிறார்களோ...

எச்சரிக்கையாக இருக்க வேண்டும் ரஜினி ரசிகர்கள்!

குறிப்பு: ரஜினி ரசிகர்களையும் அவர்கள் பலத்தையும் உளவறியும் வேலை படு வேகமாக நடந்து வருகிறது. அதுபற்றி நாம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். மேலும் சில புதிய விவரங்களையும் நாளை தருகிறேன்!