Showing posts with label Rama Narayanan. Show all posts
Showing posts with label Rama Narayanan. Show all posts

Wednesday, September 3, 2008

வெட்கம் கெட்ட பிழைப்பு!


ஒருவழியாக குசேலன் என்ற நல்ல படத்தை ஓடவிடாமல் செய்த திருப்தியுடன் சென்னையில் போட்டிருந்த தங்கள் முகாமைக் காலி செய்திருக்கிறது திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம்.

என்னடா இது... குசேலன் படத்தால நஷ்டம்... 80 சதவிகிதம் குறைந்த பட்ச உத்தரவாதத் தொகையை நஷ்ட ஈடாக திரும்பத் தரவேண்டும்னு அங்கே கூப்பாடு போட்டுக்கிட்டிருக்காங்க, நீங்க இன்னுமா குசேலனை தாங்கிப் பிடிக்கிறீங்க? - என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது.

என்ன செய்வது, ஒரு பெரிய பொய்க்கு மீடியாக்கள் ஆதரவு பலமாக இருந்ததால், அது உண்மை மாதிரியே ஆடாத ஆட்டம் போட்டு இப்போது ஓயும் கட்டத்துக்கு வந்துவிட்டது. அப்படியே விட்டு விட்டுவிட்டால் விஷயம் ஆறிப் போய்விடும், தங்களைச் சீண்ட தினகரனும் வராது, அவர்களது ‘பங்காளி’ விகடன் குழுமமும் வராது என ரொம்ப லேட்டாகப் புரிந்து கொண்ட தியேட்டர்காரர்கள் அனைவரும் இப்போது ரஜினி புகழைப் பாடியபடி, கொடுப்பதைக் கொடுங்கள், ஏற்கெனவே நாங்கள் பொய்க் கணக்கு காட்டிய தொகையைக் கூட்டிக் கழித்துப் பார்த்து கணக்கை சரி பண்ணிக் கொள்கிறோம், என்று பிளேட்டைத் திருப்பிப் போட ஆரம்பித்துள்ளனர்.

குசேலன் படத்தில் நஷ்டம் என்று கூறி சென்னையில் முகாமிட்ட அத்தனை திரையரங்கு உரிமையாளர்களுக்கும் 35 சதவிகிதத் தொகையை நஷ்ட ஈடாகத் தர தானாகவே முன் வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இத்தனைக்கும் அவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கிடையாது.
ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டு, தாங்கள் கொடுத்த குறைந்த பட்ச உத்தரவாதத் தொகையில் 70 சதவிகிதத்தை திருப்பித் தர வேண்டும் என அழிச்சாட்டியம் செய்து வீராவேசமாகப் பேட்டியும் கொடுத்தார் காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம்.

இப்போதோ, தாங்கள் அப்படி கேட்கவே இல்லை என்றும் இந்த விஷயத்தில் ரஜினி மற்றும் தயாரிப்பாளர்களின் இறுதி முடிவுக்குக் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர், அதே நபர்கள்.
காரணம் இந்த விவகாரத்தில் ரஜினி அமைதியாகிவிட்டதுதான்.

ஒரு அளவுக்குப் பிறகு இந்த விஷயத்தை ரஜினி தன் குரு பாபாஜியிடமே விட்டுவிட்டார் போலும்! திட்டிய வாய்களே பாராட்டுப் பத்திரம் வாசிக்க ஆரம்பித்துவிட்டன!!

நேற்று நடந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தின் முடிவில், குசேலன் பிரச்சினையைத் தீர்க்க ரஜினி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்றும், அந்தப் படத்தின் தயாரிப்பாளராக இல்லாவிட்டாலும் தானே முன் வந்து பணம் கொடுக்கவும் தயாராக இருந்த ரஜினியின் மனித நேயம் பாராட்டுக்குரியது என்றும் புகழாரம் சூட்டினார்கள்.

இனி எதிர்காலத்தில் இப்படி தன்னிச்சையான எந்த முடிவையும் எந்தப் படத்துக்கு எதிராகவும் எடுக்க மாட்டோம் என்றும் உறுதி கூறினர் (இல்லன்னா ரோபோவை இவங்களே வேற தியேட்டர்ல காசு கொடுத்து கியூவில நின்னு பார்க்க வேண்டி வருமே!).

குசேலன் படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருக்கு எதிராக தாங்கள் எந்த தவறான கருத்தையும் கூறவில்லை என்றும் தாங்கள் சொல்லாதவற்றையும் சொன்னதாகப் போட்டு வம்பில் மாட்டிவிட்டு விட்டன மீடியாக்கள் (தேவையா...?) என்றும் கூறி தங்கள் சரணாகதிப் படலத்தை அறிவித்துள்ளனர்.

கூட்டறிக்கை!

இன்னொரு பக்கம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணனும், தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் ஆர்எம் அண்ணாமலையும் கலந்து பேசி, குசேலன் பிரச்சினை சுமுகமாக முடிக்கப்பட்டதாக கூட்டறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.

திரையுலகம் என்பது கூட்டுக் குடும்பம் மாதிரி, இதில் அவ்வப்போது சிறுசிறு மன வருத்தங்கள் வரும். அப்படித்தான் இப்போதும் வந்தது, இப்போது எங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொண்டோம், என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த புத்தி 20 தினங்களுக்கு முன்பே வந்திருந்தால், குசேலன் என்ற நல்ல படம் மக்களின் முழு ஆதரவோடு ஓஹோ என்று ஓடியிருக்குமே...
நிச்சயம் இரண்டாவது வாரம் பெரிய அளவில் நன்றாகப் போயிருக்கும் இந்தப் படம். ஆனால் படம் பிக் அப் ஆகும் போதே அதன் கழுத்தை நெறிப்பது போல ஆர்ப்பாட்டம், கெடு என்றெல்லாம் பேசிவிட்டு, இப்போது ரஜினி மாதிரி ஒரு மனிதரை திரையுலகில் பார்க்க முடியுமா என பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

படத்தை மக்களுக்கு ஓட்டிக் காட்டும் தொழிலை விட்டுவிட்டு, அந்தப் படத்தின் விமர்சனத்தில் அல்லவா இவர்கள் அனைவரும் இறங்கியிருந்தார்கள் இத்தனை நாட்களும்!
தியேட்டருக்கு வரும் மக்களை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாகத்தானே இவர்கள் நடந்து கொண்டார்கள்...

ஊரறிய ஒரு நல்லவர் மீது சேற்றை வாரிப் பூசிவிட்டு, பின் யாருக்கும் தெரியாமல் காலில் விழுந்து, ‘ஐயா மன்னிச்சிடுங்க, உங்க மேல வீசுன சேற்றை கங்கைத் தண்ணி ஊத்தி நானே கழுவி விடுகிறேன்’ என்றானாம் ஒருவன்.

அப்படித்தானே இருக்கிறது இவர்கள் செய்கை!

பிரஸ் மீட் வைத்து குசேலன் மற்றும் ரஜினி மீது அவதூறு கூறியவர்கள், மீண்டும் அதே மாதிரி ஒரு பிரஸ் மீட்டில் அல்லவா தாங்கள் தவறு செய்துவிட்டதாக பகிரங்கமாக அறிவிக்க வேண்டுமே..?

தங்களைக் கூட்டி வைத்து இவர்கள் அவிழ்த்து விட்ட பொய்களையும் அவதூறுகளையும சுமந்து வந்த அதே பத்திரிகைகள், இப்போது அவர்களின் மறுப்பறிக்கையையும் பழிச் சொல்லையும் சுமக்கின்றன.

என்ன ஒரு கேவலமான பிழைப்பு!

மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... ஜாக்கிரதை!