Friday, October 31, 2008

இலங்கை விவகாரம்: கேப்'டவுன்'!!

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை ஈழத் தமிழ் ஆதரவாளர்களுக்கோ, அல்லது போர்முனையில் நிற்கும் புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிரானதோ அல்ல.

ஈழ ஆதரவு விஷயத்தில் நமது நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் வசிக்கும் அனைத்து தமிழர்களும் (மலையகத் தமிழர்கள் உள்பட) சம உரிமையுடன், சிங்களர்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே.

அதற்கான தீர்வு காந்தீய வழியில் வந்தாலும் சரி, நேதாஜி வழியில் கிடைத்தாலும் சரி, பெரும்பகுதி தாயகத் தமிழர்களைப் போல நமக்கும் சம்மதமே. எந்த முடிவும் தமிழர்களுக்கு சாதகமாகவே அமைய வேண்டும்.

யதார்த்தமாக இலங்கை விவகாரத்தைப் பார்ப்பவர்கள் பெரும்பாலும் இத்தகைய கருத்துக்களையே கொண்டிருப்பதை அறியலாம்.

ஆனால் அரசியல்வாதிகளின் ஆதரவுக்குள் ஆயிரம் கணக்குகள் இருக்கிறது. அப்படி ஒரு கணக்கைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மற்றபடி இலங்கைப் பிரச்சினையின் உண்மைகள் குறித்து பின்னொரு சமயம் ஒரு தொடர் கட்டுரை எழுதும் விருப்பம் உள்ளது.

ரஜினிக்கு ஆதரவான இந்த தளத்தில் விஜய்காந்துக்கு எதிரான கருத்துக்கள் வருவது சகஜம்தான் என்ற மனநிலையில் உள்ளவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உண்மையை யாரும் உரத்துச் சொல்லலாம்!

னித் தமிழீழம் மலரும் வரை நான் பிறந்த நாள் கொண்டாட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து, வைராக்கியமாக ‘வாழ்ந்து’ வருபவர் நம்ம விஜய்காந்த். ஈழத் தமிழர் ஆதரவு விவகாரத்தில் இயக்குநர்கள் ஒரு பக்கம் சிறை செல்வதும், நடிகர்கள்
உண்ணாவிரதமிருப்பதுமாக திரையுலகம் பரபரவென இயங்கிக் கொண்டிருக்கையில், மகனுக்கு பிரபாகரன் பெயர் சூட்டி தன் தமிழ்ப் பற்றை பறை சாற்றிக் கொண்டிருந்த விஜய்காந்த் மட்டும் அடக்கி வாசிப்பது ஏனோ?

அரெஸ்ட் பயமா... இல்லை... இல்லவே இல்லை! அரசியல் லாப நோக்கம்தான்!

இது என்ன புதுக்கணக்கு என்கிறீர்களா...

இது புதுசல்ல... பழைய கணக்குதான். என்றைக்கு டெல்லிக்குப் போய் மேலிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து காங்கிரஸ் கூட்டணிக்கு அச்சாரமிட்டு வந்தாரோ அன்று முதல் விஜய்காந்தின் ஈழப் பற்று ஈனஸ்வரத்தில் கேட்கத் துவங்கியிருப்பதை அரசியல் பாலபாடம் படிப்பவர்களும் கூட உணர முடியும்.

ராமேஸ்வரம் உண்ணாவிரதத்துக்கு வருவதாய் வாக்களித்த விஜய்காந்த் கடைசிவரை அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காத மர்மமும், இளைஞரணி மாநாடு முடிந்ததிலிருந்தே மந்திரித்துவிட்டவர் போல ஒரு மார்க்கமாய் திரிவதும் இந்த கூட்டணித் தேவைக்காகத்தான்.

இந்த மர்மம் புரிந்த பிறகுதான் கலைஞரும் ‘இந்திய இறையாண்மை மீதான தனது பற்றுத’லைக் காட்ட வேண்டி சில கைதுகளை அரங்கேற்றினார். இருக்கிற கூட்டணியைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவருக்கு மட்டும் இல்லாமல் போய்விடுமா என்ன?

இப்போது உண்ணாவிரத விவகாரத்துக்கு வருவோம். நாளை உண்ணாவிரதம். முன்பு பிரபாகரனை தனது தலைவராக அறிவித்த கேப்டன், இந்த உண்ணாவிரதத்தின் போது என்ன செய்யப் போகிறார்?

எல்லோரையும் போல சும்மா வந்து போகப்போகிறார். அவ்வளவுதான். இயற்கையாகப் பெய்யும் மழையாக இருந்தாலும் சரி, தன் வீட்டுத் தெருவில் பொங்கி வழியும் சாக்கடையாக இருந்தாலும் சரி, எல்லாவற்றுக்கும் கலைர்ஞர்தான் காரணம் என்று அறிக்கையாய் விட்டுத் தள்ளும் இந்த அரிதார கேப்டன், இலங்கை விவகாரத்தில் மட்டும் தன் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்த மறுப்பது மீடியாவுக்கு தெரியாதா...

இந்த திடீர் பதுங்கலை விமர்சித்து முடிந்தால் ஒரு ‘மனம் திறந்த மடல்’ எழுதிப் பார்க்கட்டுமே மீடியா உலக ஜோல்னா பையன்கள்...

தமிழினத்தின் ஏக போக பிரதிநிதிகளாய், தமிழர்களின் ஒட்டுமொத்த மனசாட்சியாய் தங்களைத் தாங்களே சித்தரித்துக் கொள்ளும் அஞ்ஞானிகளுக்கு இப்போது எங்கே போனது அறிவு?

அது சரி... இந்த அரிதார கேப்டனுக்கு பார்ட் டைம் ஆலோசகராகச் செயல்படும் அவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

ஆனால் இந்த கபட நாடகங்களையெல்லாம் அறியாத தமிழ் மக்கள் செய்தித்தாள்களில் / மீடியாவில் பதிப்பிக்கப்படுகிற அனைத்தையும் நம்பி அல்லது அதன்பால் உணர்ச்சி வசப்பட்டு, இம்மாதிரி நிகழ்களில் கலந்து கொள்ள முடியாத அனைவரையுமே தமிழ்த் துரோகிகளாகவே வரித்துக் கொள்கிறார்கள். அல்லது இந்த அவலங்களைத் தோலுரித்துக் காட்ட முயல்பவர்களையும் இதே பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

இங்கே நல்லவர்கள் அதிகம் பேசுவதில்லை; அதிகம் பேசுபவர்களின் பின்னணியில் ஆயிரம் அரசியலிருக்கிறது!

இந்த வருட ஈழ ஆதரவு சீஸன் நமக்கு உணர்த்தும் பாடம் இது!


http://www.envazhi.com

அடடா... என்னே தமிழுணர்வு!

குசேலன் படத்தில் ஒரு காட்சி. நரிக்குறவர் இன பிரதிநிதிகளான சின்னி ஜெயந்தும், பிரம்மானந்தமும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் மனு கொடுப்பார்கள். அப்போது ரஜினி அழகாக ஒரு வாக்கியம் சொல்வார்: ‘மனு வாங்க நான் என்ன மந்திரியா... நான் ஒரு நடிகன் அவ்வளவுதான்!’

-தன் நிலை உணர்தல் என்பதற்கு எத்தனை அழகான உதாரணம் பாருங்கள். இங்குள்ள நடிகர்கள் யாரும் தங்கள் நிலை உணர்ந்தவர்களாகவே தெரியவில்லை. உணர்வைக் காட்டுகிறோம் பேர்வழி என்று இருக்கிற பகையுணர்ச்சியைக் கிளறி விடுவதுதான் இவர்கள் செய்துவரும் வேலை.

பட்டால்தான் இவர்களுக்குப் புத்தி வருகிறது. ஒகேனக்கல் பிரச்சினையின்போது, ‘உருளுவது ரஜினி தலைதானே’ என்று பெரும்பாலான நடிகர்கள் சும்மா இருக்க, வயித்தெரிச்சல் கோஷ்டிகள் சந்தோஷமாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்கள்.

ரஜினி கன்னடர்களிடம் கேட்காத மன்னிப்பைக் கேட்டதாக மீடியாக்கள் பொய் பரப்பி, குசேலனில் தங்களுக்கு ஒரு ‘பங்கு’ கிடைக்காத கோபத்தைப் போக்கிக் கொண்டார்கள்!

ஆனால் அதே ஒகேனக்கல் பிரச்சினையில் தமிழக அரசு அடித்த குட்டிக் கரணங்களைப் பார்த்த பிறகுதான் பல முன்னணி நடிகர்களுக்கு, இதில் ‘புகுந்து விளையாடும்’ அரசியல் புரிய ஆரம்பித்தது. அதனால்தான் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தக் கூப்பிட்ட போது முதலில் உணர்ச்சி வேகத்தில் ஒப்புக் கொண்டவர்கள் பின்னர் சற்றே பின்வாங்கி, பின்னர் முழுசாகவே மறுத்துவிட்டனர்.

அமீர், சீமான் கைது என தமிழக அரசு போட்ட வேடத்தைப் பார்த்த பிறகு, தங்களின் எல்லை என்ன, எப்படி இனி பேச வேண்டும் என்றும் ஓரளவு ‘தெளிவாகி’ விட்டார்கள். அதன் விளைவுதான் இப்போது சரத்குமார் விடுத்துள்ள அறிக்கை.

அந்த அறிக்கையில், நடிகர் நடிகைகள் தங்கள் வரம்பு மீறி எதும் பேசக்கூடாது என்றும், தங்கள் உணர்வுகளை சுருக்கமாக வெளிப்படுத்தினால் போதும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சி வசப்பட்டு உளறக் கூடாது என்றும் அறிவித்து அதில் கையொப்பமிட்டு அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் விநியோகித்து வருகிறார்.

இதைத்தானே ஆரம்பத்திலிருந்து ரஜினி சொல்கிறார்.

கர்நாடகத்தில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் நிரந்தரமாகத் தங்கி அந்த மாநிலத்தவர்களாகவே மாறிவிட்டிருக்கிறார்கள். பெங்களூருவில் சரிபாதி தமிழர்கள்தான். ஐடி நிறுவன ஊழியர்களில் 80 சதவிகிதம் தமிழர்கள் நல்ல சம்பளத்துடன், தமிழ்நாட்டுக்கு திரும்பும் யோசனையே இல்லாமல் செல்வாக்குடன் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இவர்களின் அமைதி கெட்டும் போகும் விதத்தில் நாம் எப்போதும் பேசக் கூடாது. அரசுகள் மட்டத்தில் ஆராய்ந்து நிதானமாக எடுக்க வேண்டிய ஒரு முடிவை கலைஞர்களாகிய நாம் உணர்ச்சிவசப்பட்டுப் பேசி கெடுக்க வேண்டாம், என்று பல ஆண்டுகளாகக் கூறிவருகிறார் ரஜினி.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழர் நலன் பாதிக்காத வகையில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். அப்பாவி தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறி வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் சொன்னதாலேயே அவரை தமிழர் விரோதியாகச் சித்தரித்தது ஒரு கும்பல். மீடியாவும் அவர்களுக்கு சொரிந்து கொடுத்தது. இப்போது அதுவே பெரிய புண்ணாகிப் போனதால், அடக்கி வாசிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார்கள்.

அப்படியென்றால் இலங்கைத் தமிழர்கள் மீது பரிவு காட்டக் கூடாதா... அங்கே அவர்கள் செத்து மடிகிறார்கள்.. இங்கே இவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ அவர்களும்தானே காரணம், அவர்களுக்குக் குரல் கொடுக்கக் கூடாதா...?

குரல் கொடுக்கலாம்... தப்பில்லை... ஆனால் குரல் கொடுக்கச் சொல்லிவிட்டு, குரல் வளையை நெறிக்கும் வேலையில் ஈடுபடும் அரசியல்வாதிகளை நம்பி குரல் கொடுப்பதில் என்ன பலன்...?

ராஜீவ் காந்தியைக் கொன்றதற்காக தமிழர்கள் தண்டிக்கப்படுவது நியாயமா என முழங்கிய அரசியல்வாதிகள் தப்பிவிட்டார்கள். அதே குரலை உரத்து ஒலித்த பாரதிராஜாவைக் கைது செய்யுங்கள் என்ற முழக்கம் கேட்கிறதே... இந்த முழக்கத்துக்குப் பயந்து அவரும் அடக்கி வாசிக்கிறாரே... இதற்குப் பெயர் என்ன?

அன்று ரஜினியை விமர்சித்த அனைவரும் இன்று, ‘ரஜினி சொல்வதுதான் சரியானது. நமது உணர்வுகளை எந்த வற்புறுத்தலுக்கும் பணியாமல், அதேநேரம் யாரையும் வற்புறுத்தாமல் காட்டுவதுதான் சரியானது’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
ஏன்...? பச்சை சந்தர்ப்பவாதம்.

தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றதுமே, 'ரஜினி சொல்வதுதான் சரி... நாம் அப்படியே செய்யலாம்' என்று பேசத் தொடங்குகிறார்கள். இத்தகைய சந்தர்ப்பவாதம் ஒருபோதும் உதவாது.

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் மட்டுமல்ல... இம்மாதிரி உணர்ச்சிப்பூர்வமான பல்வேறு பிரச்சினைகளில் கலைஞர்கள் என்றில்லாமல், அனைவருமே ஒருமித்த குரலில் தங்கள் உணர்வுகளை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும். அதுதான் அந்த போராட்டத்துக்கு சரியான அந்தஸ்தைத் தரும். வெறும் உணர்ச்சிவசப்படல், எவ்வளவு சீரியஸான போராட்டத்தையும் கேலிக் கூத்தாக்கிவிடும்!
http://www.envazhi.com

Sunday, October 26, 2008

அது ஒரு ‘பாண்டியன்’ காலம்!

த்தனையோ தீபாவளிகள் வந்து போனாலும், 1992-ம் ஆண்டு தீபாவளியை இப்போது நினைத்தாலும் மனதுக்குள் மத்தாப்பு மழை...

பாண்டியன் ரிலீசான வருடம் அது... இத்தனைக்கும் அதற்குப் பிறகு உழைப்பாளி, முத்து என இரு ‘மெகா தீபாவளிகள்’ கடந்திருந்தாலும், பாண்டியன் மட்டும் ‘சம்திங் ஸ்பெஷல்’!
காரணம்... அந்தப் படம் எங்கள் ஊரில் நேரடி ரிலீஸ்!!

திருப்பத்தூருக்குப் பக்கத்திலுள்ள சற்றே பெரிய கிராமம் கெஜல்நாயக்கன்பட்டி. பெயரிலேயே தெரிகிறதல்லவா ஊரின் அந்தஸ்து!

உண்மையில் இந்த ஊருக்கு பெரிய அந்தஸ்தைத் தந்ததே அந்த ஊரின் நடுவில் அமைந்திருக்கும் ராமு தியேட்டர்தான். கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட தியேட்டர் என்றாலும் இப்போது பார்த்தாலும், ஏதோ ரஷ்ய பாணி திரையரங்கம் மாதிரி கம்பீரமாக நிற்கிறது.

இரண்டு மூன்று வாரங்களுக்கு ஒரு எம்ஜிஆர் படம், ரஜினி படம் கண்டிப்பாக வந்துவிடும். திரையரங்க உரிமையாளர் மகன் எங்கள் வகுப்புத் தோழன். தீவிர ரஜினி வெறியன். அவனுக்காகவே ரஜினி படங்களை அடிக்கடி போடுவார் அவன் தந்தை. கிட்டத்தட்ட எங்கள் பள்ளி / கல்லூரி இளமையின் பெரும்பகுதி நாள்களைக் கழித்த இடம்!

அது என்னமோ தெரியவில்லை... அந்தத் திரையரங்கம் இன்னொருவருடையது என்ற நினைப்பே எங்கள் யாருக்கும் இருந்ததில்லை. ஏதோ நம் சொந்த வீடு, நிலம் மாதிரி... நம்ம ராமு திரையரங்கம். திரையரங்க உரிமையாளர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வேறு. சமயத்தில் அவரே டிக்கெட்டும் கொடுப்பார் அல்லது கிழிப்பார்.

எப்போதெல்லாம் ரஜினி படம் அல்லது எம்ஜிஆர் படம் ரிலீஸாகிறதோ அன்றைக்கு நிச்சயம் அவரது அட்டெண்டன்ஸில் நாங்கள் இருப்போம். அடுத்த நாள் தலைமையாசிரியர் அறைக்குக் கூப்பிட்டு லிஸ்ட்டைப் படிப்பார். ஆனால் அந்த மிரட்டலெல்லாம் நமக்கு ஜுஜூபி...!

பொதுவாக ரஜினி படங்கள் குறைந்த பட்சம் ஒரு வருடம் கழித்துதான் இங்கு ரிலீசாகும். அதுவரை யாரும் பொறுத்திருக்க மாட்டார்கள். சைக்கிளில் ஏறி ஒரு மிதி மிதித்தால் திருப்பத்தூர் டவுன். தடுக்கி விழுந்தால் திரையரங்குகள். அங்கு ஏற்கெனவே பார்த்த ரஜினி படங்களை, இன்னொரு முறை ராமு தியேட்டரில் பார்ப்பதற்கே முதல் மூன்று நாள் கூட்டம் அலைமோதும். எந்தப் படமாக இருந்தாலும் இங்கு அதிகபட்சம் மூன்று நாட்கள்தான். எம்ஜிஆர் / ரஜினி படமென்றால் 5 நாட்கள். இந்த திரையரங்கில் அதிக பட்சம் 33 நாட்கள் ஓடியது ஒரு ரஜினி படம் மட்டுமே!

அண்ணாமலை என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தை ரஜினி கொடுத்திருந்த நேரம் அது... தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம் வரப்போகிறது ரஜினியால் என்ற நம்பிக்கை ஆழமாக வேரூன்றத் தொடங்கியிருந்தது. இந்தப் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது அந்த ஊரில்.

இந்த சூழலில் யாருமே எதிர்பார்க்காமல் ஒரு அதிசயம் நடந்தது-

அது... 1992 தீபாவளிக்கு ராமு திரையரங்கில் பாண்டியன் நேரடி ரிலீஸ்!

நம்பவே முடியவில்லை...

எப்படியாவது தங்கள் தலைவர் ரஜினி படத்தை நேரடியாக ரிலீஸ் செய்தே தீரவேண்டும், அந்தப் படத்தை குறைந்தபட்சம் 50 நாட்களாவது ஓட வைப்போம் என்று அந்தப் பகுதி ரஜினி ரசிகர்களும் ராமு திரையரங்க உரிமையாளருக்கு வாக்குறுதியளித்திருந்தனர் (இன்னொரு பக்கம், பாண்டியன் படத்தை ரிலீஸ் செய்யலேன்னா... தற்கொலை செய்து கொள்வேன் என்று உரிமையாளரை மிரட்டிவிட்டானாம் அவரது மகன்!)

அவரும் துணிந்து இறங்க, திருப்பத்தூர் டவுனே அதிர்ந்து விட்டது. இத்தனை பெரிய திரையரங்குகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த சின்ன கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண திரையரங்குக்கு எப்படி ரஜினி பட உரிமை கொடுத்தார்கள் என்ற அதிர்ச்சி அது. ஏற்கெனவே அண்ணாமலையை இரண்டு திரையரங்குகளில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்திருந்ததால், பாண்டியனை நழுவ விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம்.

இடையில் ஒரு பெரிய திரையரங்க உரிமையாளர், ராமு உரிமையாளரிடம் சமரசம் பேசி திருப்பத்தூர் நியூ சினிமாவிலும் ரிலீஸ் செய்து கொள்ள ஒப்பந்தம் போட்டார்கள்.
படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே கெஜல்நாயக்கன்பட்டியிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் ‘பாண்டியனின் தீபாவளி’ தொடங்கிவிட்டது. வண்ண விளக்குகள் மின்ன புதிய அரங்கம் போல ஜொலித்தது ராமு.

ரஜினியின் 90 அடி கட்-அவுட்டுகள் இரண்டு மிரட்டலாய் நிறுத்தப்பட, அதைப் பார்ப்பதற்கென்றே எப்போதும் ஒரு கூட்டம் திரையரங்கைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

அக்டோபர் 24-ம் தேதி இரவே அமர்க்களப்பட்டது ஊர். முதல் காட்சி இரவு 12 மணிக்குத் தொடங்கியது. கிருஷ்ணகிரி நெடுசாலையில் அமைந்திருக்கிறது அந்தத் திரையரங்கு. டிக்கெட் கவுண்டரிலிருந்து குறைந்தது 300 மீட்டர் தூரத்துக்கு வரிசை நீண்டது. பருகூர், மத்தூர், நாட்றம்பள்ளி என அந்த சுற்று வட்டாரத்தின் பெரிய ஊர்களிலிருந்தெல்லாம் ரசிகர்கள் திரண்டு வந்து திருவிழாக் கோலாகலத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். விடிய விடிய பாண்டியன் சிறப்புக் காட்சிகள்...

ரஜினி கட் அவுட்டுக்கு மாலை மரியாதை பாலாபிஷேகமெல்லாம் அமர்க்களமாக நடந்தது. அந்த கூட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்து, நண்பர்களையெல்லாம் ஒன்று திரட்டி, முதல் காட்சிக்கு வந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்புகள் கொடுத்து, கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பைவ் தவுசண்ட் வாலா வெடித்தும் கொண்டாடிய அந்த தீபாவளி... இன்னும் எத்தனை தீபாவளிகள் வந்தாலும் மறக்க கூடுமா என்ன!!

பின்குறிப்பு: விதவிதமான விமர்சனங்கள் வந்தாலும், பாண்டியன் அந்த ஊரில் 51 நாட்கள் ஓடியது. ஷீல்டும் வழங்கப்பட்டுள்ளது, இன்னமும்கூட திரையரங்கில் மின்னிக்கொண்டிருக்கிறது. தயாரிப்பாளருக்கு ஓரளவு லாபம்.

அவருக்கு அதைவிடப் பெருமை, இந்தப் படத்தை நேரடியாக வெளியிட்டதால் ரஜினியை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தன் மகனையும் அழைத்துப் போய் ரஜினியைப் பார்த்துவிட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து ரஜினி கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து நடித்த வள்ளி படமும் இங்கு நேரடியாக ரிலீசானது. ரஜினியே இவருக்கு விருப்பப்பட்டு அந்தப் படத்தைக் கொடுத்தாராம்!


http://www.envazhi.com

Thursday, October 23, 2008

ரஜினி ரசிகனாக இருப்பதில் என்ன பெருமை?

ம்மவர்கள் சிலர் ரஜினி படத்துக்கு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி முதல் ஷோ பார்ப்பார்கள்... ஆனால் வெளிப்படையாக தங்களை ரஜினி ரசிகன் என சொல்லிக் கொள்ள யோசிப்பார்கள். அப்படிச் சொன்னால் அறிவாளிகள் கூட்டம் தம்மை ஒப்புக் கொள்ளுமோ என்ற எண்ணம் போலிருக்கிறது!

இந்த மாதிரி நபர்கள் சிலரை நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள். ரஜினியின் சிறப்புகளைப் பற்றி நாம் சொன்னால் அல்லது எழுதினால், ‘அட, ஆமால்ல... ரஜினி மாதிரி ஒருத்தரைப் பார்க்க முடியாது,’ என்பார்கள்.

அந்தப் பக்கம் போய், வேறு யாராவது ஒருவர் ரஜினி பற்றி தாறுமாறாகப் பேசினால், அல்லது எழுதினால் அதைக் கேட்டு, படித்துவிட்டு அதற்கும் ‘அட, இதுகூட கரெக்டா இருக்கே!’ என்று அங்கும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு வைப்பார்கள்.

இந்த நண்பர்களுக்காகவே இந்த பதிவு...

உலகின் மிகச்சிறந்த நடிகர்களுள் ஒருவர் ரஜினி என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு முறை அல்ல, இருமுறை பாராட்டியிருக்கிறார் ரஜினியை. அது சம்பிரதாயமான பாரட்டல்ல...

ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இருநாட்டு கலாச்சாரத்துக்கு ஒரு பாலம் என்ற பொருளில் மன்மோகன் சிங் பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது.

‘உலகில் எந்த நடிகரிடமும் இல்லாத சிறப்பான நடிப்புத் திறமை, ஸ்டைல் கொண்ட ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். மசாலா படமா இருந்தாலும், கலைப் படமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பாத்திரத்துக்கு தனிச் சிறப்பைத் தரவேண்டும். அந்தத் திறமை ரஜினிக்கு மட்டுமே உண்டு.

நான் அமெரிக்காவில் இருந்தபோது பார்த்த எத்தனையோ நடிகர்களை ரஜினியோடு ஒப்பிட்டுப் பார்ப்பேன். நம்ம ரஜினிதான் எப்போதும் எனக்கு மேம்பட்டவராகத் தெரிவார். அது ரஜினி நம்மவர் என்பதால் அல்ல... ரஜினியிடம் உள்ள வசீகரத்தின் மகிமை அது. எம்ஜிஆருக்குப் பின் அப்படியொரு சக்தி உள்ள ஒரே நடிகர் ரஜினிதான்...’ – இதைச் சொன்னவர் சாதாரண நபரல்ல... கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா. (இத்தனைக்கும் இவரைத்தான் ஒகேனக்கல் உண்ணாவிரதத்தில் ரஜினி நேரடியாக விமர்சித்துப் பேசினார்.)
ரஜினி ரசிகர்கள் என்றால் ஏதோ அடிமட்டத்தில் இருப்பவர்கள் என்று சில அறிவுஜீவிகளுக்கு நினைப்பு.

ஆனால் மெத்தப் படித்தவர்களும் சரி... படிக்காத பாமரர்களும் சரி பெரிதும் விரும்பும் ஒரே நடிகர் ரஜினி மட்டுமே!

அதற்கு சிகரம் வைத்தது போல் உள்ளது சமீபத்தில் புக்கர் விருது (சர்வதேச அளவில் மிகவும் பெருமை வாய்ந்த இலக்கிய விருது) பெற்ற எழுத்தாளர் அரவிந்த் அடிகா அளித்துள்ள பேட்டி.

அரவிந்த் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில்தான். தனது 33 வது வயதில் எழுதிய முதல் நாவலான தி வொயிட் டைகருக்கு அவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்.

இந்த நாவலின் கதாநாயகன் பல்ராம் ஹல்வாய் கிட்டத்தட்ட ரஜினியின் திரை பிம்பத்துக்கு சரியாகப் பொருந்தக் கூடியவன். லஞ்ச ஊழலில் திளைக்கும் சமூகத்தின் அவலம் கண்டு பொங்குகிறான். வறுமையும் சமூக அநீதியும் அவனை சட்டத்தைக் கையிலெடுக்க வைக்கின்றன... (அட, தலைவர் படம் மாதிரியே இருக்கே... என்கிறீர்களா! நாவலில் அந்தப் பாத்திரத்தைச் சொன்ன விதம்தான் அதைப் பரிசுக்கு உரியதாக்கியிருக்கிறது)

ஒருவேளை இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரித்தால், யாரை ஹீரோவாகப் போடுவதாக உத்தேசம் என டைம்ஸ் ஆப் இந்தியா நிருபர் கேட்ட போது, சற்றும் தயங்காமல் அவர் சொன்னது:

‘இந்த வேடத்துக்கு ரஜினி மட்டும்தான் சரியாகப் பொருந்துவார்!’

மற்றொரு பேட்டியில் (சிஎன்என்) இதே கேள்வி கேட்கப்பட்ட போது, அவர் சற்றும் தயங்காமல் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

என்னுடைய பல்ராம் ஹல்வாய், இந்திய சூப்பர்ஸ்டார் ரஜினிதான். அவருக்கு மட்டுமே அந்த வேடத்தைத் தாங்கும் Charisma உண்டு. இன்னொன்று நான் சென்னைப் பையன், ரஜினி போன்ற ஒரு பாத்திரத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்த நாவலை எழுத உட்கார்ந்தேன், என்று கூறியிருக்கிறார்.
அதான் ரஜினி... அவர் அரசியலுக்கு வருகிறார்... வரவில்லை... அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள். எப்பேர்ப்பட்ட அரிய கலைஞர் நம்முடன் இருக்கிறார்... அந்தப் பெருமையை எண்ணிப் பாருங்கள்!

இப்போது சொல்லுங்கள்... தலைப்பாக வைக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை!
http://www.envazhi.com

சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!


ஜினியின் தயவில் இந்த ஆண்டும் சன் டிவிக்கு அமர்க்கள தீபாவளியாக விடிகிறது.
சூப்பர் ஸ்டாரின் சாதனைப் படம் சந்திரமுகியை தீபாவளி சிறப்புத் திரைப்படமாக அக்டோபர் 27-ம் தேதி ஒளிபரப்புகிறது சன் டிவி.

சந்திரமுகியின் சாதனை உலகமறிந்தது. ரஜினியின் படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம், அதிக திரையரங்குகளில் 100 நாட்கள் கொண்டாடிய படம், விநியோகஸ்தர்கள் ஷேர் என்ற வகையில அதிக லாபம் சந்பாதித்துக் கொடுத்து, அந்த சாதனையை இதுவரை எந்தப் படமும் தொட முடியாத உயரத்தில் உள்ள படம்.

சந்திரமுகியை மிகப்பெரிய விலைக்கு சன் டிவி வாங்கியிருந்தது. இப்போது அதைவிட பல மடங்கு அதிக விளம்பரதாரர் வருவாயுடன் ஒளிபரப்பப் போகிறது.

ரஜினியின் பாட்ஷா என்ற ஒரு படத்தின் மூலம் சன் சம்பாதித்த தொகை அந்தப் படத்தை வாங்கிய விலையை விட 20 மடங்கு அதிகம் என்கிறார்கள் சன்னில் பணியாற்றும் நமது நண்பர்கள்!

அதிக விலைக் கொடுத்து வாங்கினார்கள், இப்பேது அந்த ரிஸ்க் எடுத்த்தற்கு பலனாக நல்ல லாபம் சம்பாதிக்கப் போகிறார்கள். இதில் உங்களுக்கென்ன வந்தது என சிலர் கேட்கக் கூடும். வியாபாரத்தில் சென்டிமெண்ட் பார்க்கக் கூடாதுதான்.

ஆனால் சிவாஜி, குசேலனை தங்களுக்குத் தராத கோபத்தில் சன் நிகழ்த்திய கோயபல்ஸ் பிரச்சாரம் இருக்கிறதே... சகிக்க முடியாத, மனிதத்தன்மையற்ற செயல் அது. அது என்ன வகை வியாபார தர்மம்?
தனக்கு வேண்டியவர் என்பதற்காக ஒரேயடியாகத் தலையில் தூக்கி வைத்து ஆடுவதும், அவரே வேண்டாதவராகிவிட்டால், ஒரேயடியாக குழிதோண்டிப் புதைக்க முயல்வதும் சன் குழும நியாயங்கள்.

ரஜினி படங்களை ஒளிபரப்புவதற்கான வர்த்தக உரிமை வேண்டுமானால் சன்னுக்கு இருக்கலாம். ஆனால் தார்மீக உரிமை கிடையவே கிடையாது!
http://www.envazhi.com/

Wednesday, October 22, 2008

ரஜினி வழிதான் நம்ம வழியும்!


வ்வொரு படத்தின் வெளியீட்டுக்கு முன் அல்லது வெளியான அடுத்த நாள் பத்திரிகையாளர்களைச் சந்திப்பது அஜீத்தின் பாணி.

முன்பெல்லாம் இந்தமாதிரி சந்திப்பின் போது நிறைய பேசுவார் அஜீத். ஆனால் அந்தப் பேச்சின் ‘பலன்’களை நிறைய அனுபவித்து விட்டதாலோ என்னமோ இப்போது முழுமையாக அடக்கி வாசிக்கிறார்.

ஆனால் ஒவ்வொரு பத்திரிகையாளரிடமும் நிறைய நேரம் தனிப்பட்ட முறையில் பேசுகிறார், குடும்பம், உடல்நிலை, பொருளாதார நிலை, அவரது எண்ணங்கள் இப்படி நிறைய... ஆனால் எதுவும் பத்திரிகையில் போடுவதற்கல்ல!

ஏகன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஓட்டலில் விருந்து கொடுத்தார் அஜீத். மாலை 6 மணிக்கு ஆரம்பித்த இந்த சந்திப்பு இரவு 10 வரை நீண்டது.
பத்திரிகையாளர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும்கூட அஜீத் எதுவும் பேச மறுத்துவிட்டார்.

அது என்ன தனித் தனியாக பேசுகிறீர்கள்... அதையே மொத்தப் பேருக்கும் சேர்த்துப் பேசினால் என்ன? – அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன்.

அது வந்து சார்... மைக் பிடிச்சி நான் பேச ஆரம்பிச்சாலே, நான் சொல்ல வந்த விஷயத்தை திசை திருப்பிடறாங்க. இதுகூட நான் ரஜினி சார்கிட்டருந்து கத்துக்கிட்டதுதான். நான் தெரிவிக்க நினைக்கிறது ஒரு விஷயமா இருக்கும். ஆனால் மக்களைச் சென்று சேரும்போது அதுவே வேறு செய்தியாக இருக்கும்.

இப்படித்தான் என் பெயர் தேவையில்லாத சிக்கலில் சிக்கிக் கொண்டது சில ஆண்டுகளுக்கு முன். இப்போதுதான் அந்த மாதிரி வீண் வம்புகளில் சிக்காமல் இருப்பது எப்படின்னு கத்துக்கிட்டேன்.

ரஜினி சார் ஒருமுறை என்கிட்ட இப்படிச் சொன்னார்: நிறைய செய்ங்க... குறைவா பேசுங்கன்னு. நம்ம தலைவர் வழிதான், என் வழியும். அவர் சொன்னதைத்தான் இப்போ கடைப்பிடிக்கிறேன். அவர் கொடுத்த இமாலயன் மாஸ்டர்ஸ்தான் இப்போ என்னோட குரு.

இப்போ உங்ககிட்ட நான் பேசின இதே விஷயங்களை பிரஸ் மீட்ல பேசியிருந்தா, இதை எப்படியெல்லாம் கொண்டு போயிருப்பாங்கன்னு நினைச்சுப் பாருங்க... அதான் இந்த மீட்டிங்கை ஜஸ்ட் ஒரு கெட் டு கெதரா மாத்திட்டேன்...

இப்ப என்ன தெரியணும் என்னைப் பத்தி... நான் சந்தோஷமா இருக்கேன். நல்ல மனிதர்கள் இப்போ என்னைப் பத்திப் புரிஞ்சிக்கிட்டாங்க. அதுவே போதும் எனக்கு..., என்றார். பேச்சில் இன்னும் அந்தப் பழைய அஜீத்.

ஆனால் ‘தலைவர்’ வழிக்கு வந்த பிறகு ஒரு புதிய, அமைதியான அஜீத்தைப் பார்க்க முடிந்தது!
http://www.envazhi.com

‘தலைவா உன்னை நேரில் பார்க்கணும்!'


நான் அரசியலுக்கு வரும்போது வருகிறேன். நீங்கள் அதுவரை உங்கள் வேலையைப் பாருங்கள் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினியின் நிலைப்பாடு.

ஆனால் தங்கள் தலைவர் அரசியலில் ஈடுபட வேண்டும், அதுவும் இப்போதே நடக்க வேண்டும் என்பது தொண்டர்களாக மாறத் துடிக்கும் ஏராளமான ரசிகர்களின் விருப்பம்.

அதன் விளைவு, ரஜினி அறிக்கை வெளியிட்ட பின்னரும் அவரை அரசியலுக்கு அழைத்து கடிதங்களையும் தந்திகளையும் அவருக்கு ஏராளமாய் அனுப்பி வருகிறார்கள்.

இவற்றில் ரசிகர்கள் குறிப்பிட்டுப்பது இரண்டே விஷயங்கள்தான்:

தலைவா... உன்னை நேரில் பாக்கணும்!

சீக்கிரம் கட்சி ஆரம்பிச்சு, இந்த அரசியல்வாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாத்துங்க!

ரசிகர்களின் இந்தக் குரலுக்கு ஓரளவு பலன் கிடைத்த மாதிரிதான்.

இவர்களின் இரு கோரிக்கைகளின் முதலாவதை இன்னும் சில தினங்களில் ரஜினி நிறைவேற்றப் போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வரவிருப்பதாக ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் இத்தகைய செய்திகளைப் பார்த்த உடனே அதையே நிஜமென்று நம்பி ரகசிகர்கள் ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்துவிடுகிறார்களாம். இதனால் அவர்களுக்கும் கஷ்டம், சாருக்கும் தேவையற்ற சங்கடம். அவர் சொன்ன பிறகு வந்தால் போதுமே, என்கிறார்கள் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

http://www.envazhi.com

Monday, October 20, 2008

உண்ணாவிரதம்: எதற்குக் கூப்பிடுகிறீர்கள் ரஜினியை?

மிழ் திரையுலகினர் நடத்தும் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதில் தவறாமல் கேட்கப்படும் கேள்வி, ‘ரஜினி பங்கேற்பாரா?’

ஈழத் தமிழர் ஆதரவு எனும் உணர்ச்சிப் பூர்வமான போராட்டத்துக்கு திரையுலகினர் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் இந்த நேரத்தில் மட்டும் இந்தக் கேள்வி எழாமல் இருக்குமா?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராட்டம் என்ற குரல் எழத் தொடங்கிய உடனே இந்தக் கேள்வியும் மீடியாக்களால் உருவாக்கப்பட்டுவிட்டது.

ரஜினியை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவராகச் சித்தரிக்க ஒரு கூட்டமே முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் ரஜினியின் நிலைப்பாடு தெளிவானது.

‘இலங்கையில் அவதிபடும் தமிழர்களுக்கு விரைவில் நிரந்தர அமைதி கிடைக்க வேண்டும். இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதே என் விருப்பம்...’ என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அவரது இந்த பேட்டிக்குப் பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. இடையில் இலங்கைத் தமிழர் ஆதரவு என்று பேசினாலே பொடா பாயுமளவுக்கு மோசமான நிலையிருந்தது.
இப்போதுதான் திடீரென்று மீண்டும் ஈழத்து மக்களுக்கான ஆதரவு பெருமளவு திரளத் தொடங்கியிருக்கிறது.

இப்போது இந்த பேராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ள ரஜினி, உண்ணாவிரதத்தில் பங்கேற்கப்போவதாகவும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களுக்கு ரஜினியை அழைப்பதெல்லாம் சரிதான்.
அங்கே ரஜினியைப் பார்த்த பிறகுதான் இவர்களின் தமிழுணர்வு பீறிட்டுக் கிளம்பும். வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறத் தொடங்குவார்கள்.

அவரும் ஒரு தமிழர் என்று சொல்லித்தானே அழைக்கிறார்கள்... அவர் மேடைக்கு வந்ததும் எழும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பான வரவேற்பையும் கைத்தட்டலையும் பார்த்த பிறகுதான் இவர்களுக்கு, அடடா இவர் பக்கத்து மாநிலத்துக்காரராச்சே, இவ்வளவு தமிழர்களுடைய ஆதரவும் இவருக்கு மட்டுமேவா... என்ற பொறாமை எட்டிப் பார்க்கும்.

அப்போதே விஷமத்தனத்தை ஆரம்பித்துவிடுவார்கள். மேடை நாகரீகமாவது, மண்ணாவது... பேயாட்டம்தான்!

அப்படியெல்லாம் இந்த முறை நடக்காமல் பார்த்துக் கொண்டால்தான் இந்த உண்ணாவிரதத்துக்கு மரியாதை.

காரணம் ரஜினிக்கு நேரும் அவமானம், ஈழத் தமிழனுக்கு ஆதரவு தரும் ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் அவமானமாகவே கருதப்படும்!

ரஜினியை உயர்த்தி வைத்துப் பார்க்க இப்படி எழுதவில்லை. அவரது உயரம் உலகமறிந்தது.
ரஜினியை எதற்கு இந்த மாதிரி போராட்டத்துக்கு அழைக்கிறார்கள்... ரஜினி வந்து பேசினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்றா... இல்லை. உலகத்தின் கவன ஈர்ப்பைப் பெறுவதற்காகத்தான்.

ஆனால் நடப்பது என்ன?

இவர்ள் அழைப்பை பெரிதாய் மதித்து ரஜினி வருவார்... மேடையில் உள்ள துண்டு துக்கடாவுக்குக் கூட மரியாதை செலுத்துவார் (அது அவர் பண்பு!)... உலகின் கவனமே அவர் பக்கம் திரும்பும். அவ்வளவுதான்... இங்குள்ள சத்யராஜுக்கும், சரத்குமாருக்கும், இவர்களுக்கும் கீழ் மட்டத்திலுள்ள நடிகர்களுக்கும் அடிவயிறு பற்றிக் கொண்டு எரியும் பொறாமையில்.

ரஜினியை இவர்கள் வருந்தி வருந்தி அழைக்கும் ஒவ்வொரு போராட்டமும் இப்படித்தான் முடிந்திருக்கிறது.

இந்த முறை ஈழத் தமிழனுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டும் முன் உங்கள் மனதிலுள்ள பொறாமை அழுக்கை கழுவிவிட்டு ஒன்றுபடுங்கள்... உங்கள் குரல் தூர்ந்து கிடக்கும் உலகின் செவிகளைக் கிழிக்கும்!
http://www.envazhi.com

இயக்குநர்களின் இயக்குநர் ஸ்ரீதர்!


மிழ் சினிமாவின் எல்லைகளை விரிவடையச் செய்த படைப்பாளிளுள் முக்கியமானவராகக் கருதப்பட்ட இயக்குநர் ஸ்ரீதர் இன்று காலை 10 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், ஜெமினி என சிகரங்களை இயக்கிய பெருமைக்குரிய ஸ்ரீதர் சில வருடங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அத்துடன் திரைப்படப் பணிகளிலிருந்து முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டார்.

கடும் உடல்நலக் குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன் அவரை அடையாறு மலர் மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

ஒரு சாதாரண வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், பழைய கலாச்சாரத்தில் ஊறிப்போயிருந்த தமிழ் சினிமாவுக்கு அறுபதுகளில் புதுரத்தம் பாய்ச்சியவர்.
அதுவரை வசனங்களில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த சினிமாவை, உணர்வுகளால் வாழ வைத்த அற்புதக் கலைஞன் ஸ்ரீதர்.

அவரது இயக்கத்தில் உருவான கல்யாணப் பரிசையும், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் இன்றும் திரையுலகம் கொண்டாடுகிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய படங்கள்தான் என்றாலும் அவற்றின் திரைக்கதையில் தெரியும் புத்துணர்ச்சியை வேறு படங்களில் பார்ப்பது அரிது.
நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் தமிழில் போகுமா என்ற சந்தேகத்தோடு சிலர் பார்த்தபோது, அதன் தமிழ் வடிவம் மட்டுமல்ல, தில் ஏக் மந்திர் என்ற பெயரில் அதன் இந்தி வடிவத்தையும் சூப்பர் ஹிட் ஆக்கி சாதனைப் படைத்தவர் ஸ்ரீதர்.

1961-ல் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுதினார். அவரால் சூப்பர் ஸ்டார்களையும் இயக்க முடிந்தது, புதுமுகங்களையும் எளிதாக நடிக்க வைக்க முடிந்தது.

இன்று முன்னணி நடிகராகத் திகழும் விக்ரம் தனது வாழ்க்கையைத் துவங்கியது ஸ்ரீதரின் தந்துவிட்டேன் என்னை படம் மூலம்தான்!

கமர்ஷியல், கிளாஸிக் என தொட்டது அனைத்திலும் வெற்றி பெற்ற உன்னதக் கலைஞர் ஸ்ரீதர்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக ரஜினி உருவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரையும் கமல்ஹாசனையும் வைத்து ஸ்ரீதர் உருவாக்கிய இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக அமைந்தது.

பின்னர் ஸ்ரீதருக்காகவே ரஜினி துடிக்கும் கரங்கள் எனும் படத்தில் நடித்துக் கொடுத்தார். படம் வணிக ரீதியில் பெரிய வெற்றி. ரஜினிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை அலங்கார் திரையரங்க வளாகத்தில் 90 அடி உயர கட் அவுட் வைத்து அவரை சூப்பர் ஸ்டார் என்று அழுத்தம் திருத்தமாக நிரூபித்தவர் ஸ்ரீதர்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை வைத்து அவர் இயக்கிய உரிமைக்குரல், மீனவ நண்பன் இரண்டுமே வசூலில் சிகரம் தொட்டவை.

அதே போல நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோரின் திரைப் பயணத்தில் மறக்க முடியாத பல மைல் கற்களைப் படமாகத் தந்தவர் ஸ்ரீதர்.

சிவாஜி கணேசனின் சிவந்த மண் திரைப்படத்தை தமிழ் திரையுலகம் மறக்கமுடியுமா?

திரையுலகிலிருந்து அவர் முழுமையாக விலகினாலும் அவர் மனம் கடைசி மூச்சு நிற்கும்வரை சினிமாவையே சுவாசித்துக் கொண்டிருந்தது. தனது 78-வது வயதிலும் கூட சினிமாவுக்காக திரைக்கதையை உருவாக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதர். இன்றைய முன்னணி இயக்குநர்கள் பி.வாசு, இயக்குநராக இருந்து நடிகராகிவிட்ட சந்தானபாரதி, சிவி ராஜேந்திரன் என பல இயக்குநர்களை உருவாக்கியவர்.

தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் வெற்றிக் கொடி கட்டியவர் ஸ்ரீதர்.

கலைஞர் இரங்கல்:

ஸ்ரீதரின் மறைவு உண்மையாகவே தமிழ் திரையுலகுக்கு பெரும் இழப்பு என கலைஞர் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

கலையுலகம் கண்ணீர்!

இயக்குநர்களின் இயக்குநரான ஸ்ரீதரின் மறைவுக்கு தமிழ் திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக இயக்குநரும் தமிழ் திரைப்படதயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

(with inputs from www.thatstamil.com)

http://www.envazhi.com

தேமுதிக மாநாட்டு ‘சாதனை’!


விஜய்காந்த் ரூ.10 கோடி செலவில் பிரமாண்டமாய் சட்டசபை, நாடாளுமன்ற செட் போட்டு எடுத்த ‘இளைஞர் அணி மாநாடு சினிமா ரிசல்ட்’ என்ன?

வழக்கமாக சினிமாக்காரர்கள், சீசனில் படம் ரிலீஸானதும் ஒரு டயலாக் சொல்வார்கள்:

‘படம் பிரமாதமா இருக்குன்னு தமிழ்நாடே பாராட்டுது சார்...நல்ல கலெக்ஷன். தீபாவளி ரிலீஸ்லயே இந்தப் படம்தான் நம்பர் ஒன்...’
-இப்படி பேட்டி கொடுத்த மூன்றாவது நாளே படம் தியேட்டரைவிட்டு ஓடியிருக்கும்!

இந்த இளைஞரணி 'மாநாடு சினிமாவும்' இந்த லட்சணத்தில்தான் அமைந்தது.

நான் வித்தியாசமானவனாக்கும்... என்று மஞ்சள் கொடியோடு வந்து நின்ற விஜய்காந்த், இன்றைக்கு கழகங்களையே தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு பொய்யிலும் புனை சுருட்டிலும் ஓங்கி நிற்கிறார். பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதில் இன்றைய தேதிக்கு இவரை அசைச்சுக்க முடியாது!

இவரது தொண்டர்கள் மட்டும் சளைத்தவர்களா... ராவண ராஜ்யத்தில் வானரப் படைகள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ராமாயணக் காட்சிகள்தான் மனக் கண்ணில் நிற்கின்றன. அப்படியொரு ஆட்டம் போட்டிருக்கிறார்கள் இந்த விஜய்காந்த் சேனைகள், சிங்காரச் சென்னையில்...
ஒரு நபருக்கு 300 ரூபாய் கூலி, டாஸ்மாக் சரக்கு, பிரியாணி கொடுத்து இந்த கொள்கைச் சிங்கங்களைக் கூட்டி வந்திருக்கிறார் அவர்களின் கேப்டன்!

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தட்ஸ்தமிழ் செய்திகளைப் பாருங்கள்!


தேமுதிக மாநாட்டு சாதனை!

...விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.

கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.

திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.

மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.

இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.

'தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?
அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.
இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!


நெரிசலில் விழிபிதுங்கிய சென்னை!

ஒரு சின்ன மழைக்கே கடும் போக்கு வரத்து நெரிசலில் திணறும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டது சென்னை நகரம்.

இதில் அவ்வப்போது மாநாடு, பேரணிகள் என்று அரசியல்வாதிகள் விளையாடுவார்கள். நேற்று விஜய்காந்தின் முறை.

பிற்பகல் அவர் கட்சியின் மாநாடு துவங்குவதற்கு முன் ஆரம்பித்த போக்குவரத்து நெரிசல் நள்ளிரவு தாண்டியும் நீடித்தது.

வார இறுதி, தீபாவளி சீசன், கூடவே இந்த மாநாட்டு கலாட்டக்களும் சேர்ந்து கொண்டதால் கிண்டியிலிருந்து, தி.நகர், பீச், அண்ணாசாலைக்கு சென்ற பலரும் கடும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு முன்னேறவும் முடியாமல் பின்செல்லவும் வழியில்லாமல் தவித்தனர்.

பேருந்துகளில் சென்றோர் சாதாரண தூரத்தைக் கடக்கவே பல மணி நேரம் ஆனது. வாகனங்களைத் திருப்பிவிட வழியின்றி போக்குவரத்து போலீசார் மிகவும் திணறிப்போனார்கள்.

கடற்கரை காமராஜர் ரோடு, அண்ணாசாலை போன்ற முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பொதுமக்கள் பலர் அதிருப்தியுடன் திட்டியபடி வாகனங்களில் பல மணி நேரம் ஊர்ந்து சென்றனர்.


-இதுக்குமேல வித்தியாசமான கட்சிய, தலைவரை உலகத்துல எங்காவது உங்களால காட்ட முடியுமா...!

குறிப்பு: தமிழ்நாட்டில் எந்தக் கட்சித் தொண்டர்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்... திமுக, அதிமுக, மது ஒழிப்பு மாநாடு நடத்தும் பாமக, காந்தியடிகளைத் தலைவராகப் போட்டுக் கொள்ளும் காங்கிரஸ்... இப்படி எல்லா கட்சித் தொண்டர்களுமே குடிப்பதில் பிஎச்டியே வாங்கியிருக்கும் போது, விஜய்காந்தையும் அவர் கட்சிக்காரர்களையும் மட்டும் குடிகாரர்கள் என திட்டுவது சரியா என பல நண்பர்கள் கருத்து எழுதக் கூடும்.

அப்படி எழுதும் முன், 'நான் வித்தியாசமானவனுங்கோ... எங்க கட்சி வித்தியாசமோ வித்தியாமுங்கோ...' என்றெல்லாம் கவுண்டர் ஸ்டைலில் கூப்பாடு போட்டு வரும் விஜய்காந்தைக் கொஞ்சம் மனக் கண்ணில் நிறுத்திப் பார்க்கவும்.

அதே பதவி வெறி, அதே பணப் பேராசை, அதே துஷ்பிரயோகம், அதே கட்சிகளுடன் கூட்டு... அப்புறம் எதற்கு இந்தக் கருமம் வேறு... ஏற்கெனவே உள்ள கழகங்களே போதுமே!

தெரிந்து கொள்ளுங்கள் இந்த பதவி வெறியரை!

மாமன்னர் அக்பர் ஒரு முறை, ஒரு பெரிய கோட்டை அழிக்காமல் சின்னதாக்கிக் காட்ட முடியுமா என்றார்.

அதற்கு பீர்பால் பதிலேதும் பேசாமல், பெரிய கோட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்னக் கோடு போட்டு, “மன்னா... இப்போது பெரிய கோடு அழிக்காமலேயே சின்னதாகிவிட்டது. அதேநேரம் சின்னக் கோடு இருப்பதாலேயே பெரிய கோட்டின் மகத்துவமும் புரிகிறதல்லவா...!” என்றாராம்.

இது கதையல்ல...மாமன்னர் அக்பரின் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சம்பவங்களில் ஒன்று. பரவலாக நீங்களும் கேள்விப்பட்டதும் கூட.

நல்ல மனிதர்களின் புகழை, பெருமையை அவர்களது நலம் விரும்பிகள் மூலம் அல்லாமல் தெரிந்து கொள்வது எப்படி?

சில மோசமான மனிதர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம்.
தமிழக மக்களுக்கு, குறிப்பாக வாக்குச் சாவடிகளில் மணிக்கணக்கில் நின்று வாக்களிக்கும் வாக்காளர்களுக்கும் அப்படியொரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.

நல்ல மனிதர்கள் யார் என்பதைத் தாமதமாகக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் கெட்டவர்களை உடனே தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தில் சற்றே எட்டிப்பார்க்கத் துவங்கியிருக்கிற ஒரு தீய சக்தி விஜய்காந்த்!

இதைப் படிக்கும்போது, ‘ரஜினியின் புகழ் பரப்ப தளம் நடத்துபவர்கள் இப்படித்தான் சொல்வார்கள்’ என்று சிலர் முணுமுணுப்பது புரிகிறது.

பரந்து விரிந்த இநத வானத்தின் கீழே நடக்கும் அத்தனை நல்லது கெட்டதுகளையும் என்வழியில் அலச வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனாலேயே முன்பு விஜய் காந்த் – வடிவேலு சண்டையையும், எந்தளவு கீழ்த்தரமான அரசியல்வாதி விஜய்காந்த் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருந்தேன்.

இப்போது மாநாடு எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தைக்காரன் நாடகத்தை அரங்கேற்றியிருக்கும் இவரின் நிஜமுகத்தை அம்பலப்படுத்துவது அவசியமல்லவா!

இந்த மாநாடு எதற்காக?

சில தனியார் தொழிலதிபர்களின் தயவோடும், மீடியா உலக ஆக்டோபஸாகத் திகழும் சன் குழுமம் ஆதரவோடும் விஜய்காந்த் இப்படியொரு மாநாட்டை சென்னையில் நடத்தக் காரணம் என்ன?

தனக்கு சென்னை மக்களிடம் உள்ள செல்வாக்கைக் காட்டவும், தமிழகம் முழுக்க உள்ள தன் இளைஞர் சேனையை சென்னை மக்களுக்குக் காட்டவும்தான் என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார் விஜய்காந்த்.

உலகத்தில் இப்படியொரு அற்ப காரணத்துக்காக மாநாடு நடத்திய ஒரே நபர் விஜய்காந்தாகத்தான் இருப்பார்.

ஒருவிதத்தில் அவர் அன்று உண்மையைத்தான் பேசியிருக்கிறார்.

இந்த மாநாட்டை இப்போது நடத்த ஒரு காரணமும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கண்டித்து எல்லோரும் கறுப்பு பேட்ஜ் குத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லவா ரூ.10 கோடி செலவில் இப்படியொரு மாநாடு கூட்டினார்! அப்படியென்றால் எதற்கு இத்தனை வெட்டிச் செலவு... ஒரு அறிக்கையில் முடிக்க வேண்டிய விஷயமல்லவா இது!

மின்வெட்டு, வேலைவாய்ப்பு, கூட்டணி... இதெல்லாம் இன்று மக்கள் அறிந்தவை. அன்றாடம் விவாதிக்கிற பிரச்சினைகள். இதில் இந்த அரசின் பக்கம் உண்மையில் தவறு இருந்தால் மக்கள் தேர்தலில் பார்த்துக் கொள்வார்கள். இதை மாநாடு கூட்டிச் சொல்ல வேண்டிய அவசியமில்லையே. தினம் நான்கு முறை இந்த விஷயங்களுக்காகத்தானே இவர் அறிக்கை விட்டு பப்ளிசிட்டி தேடி வருகிறார்!

ஆமா... பதவிதான் முக்கியம்!

நிஜத்தில் எந்த கொள்கையும் இல்லாத, பதவி வெறியும், பணப் பேராசையும் கொண்ட ஒரு மனிதர் இவர்.

இதை இந்த திடீர் தலைவரே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்! அவரது மாநாட்டு அறிவிப்பைப் பாருங்கள்:

“விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ஆட்சியை பிடிக்கத்தான் என்று சிலர் கூறுகின்றனர். கட்சி தொடங்குவது ஆட்சியை பிடிக்காமல், காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் போகவா?

ஓர் இடத்தை அடைய வேண்டுமானால் குறிக்கோள் இருக்க வேண்டும். ஆட்சியைப் பிடிக்கவே கட்சியை ஆரம்பித்தோம். ஆட்சியைப் பிடிக்க ஏன் ஆசைப்படக்கூடாது? ஆட்சியைப் பிடிக்கவே கட்சி. நான் மறைக்க வேண்டிய அவசியமில்லை.

தேர்தல் நெருங்குகிறது. அதற்குத் தயாராகுங்கள். கட்சியினர் ஒவ்வொருவரும் நூறு ஓட்டுகளையாவது வாங்கித்தர வேண்டும். தேர்தலில் எதற்கும், யாருக்கும் பயப்படக்கூடாது.
மக்களே... தேமுதிகவை ஆட்சியில் உட்கார வைத்துவிட்டு, அப்புறம் பாருங்கள்!”

-அப்புறம் என்னத்தைப் பார்ப்பது... இவரும், இவர் மனைவி – மைத்துனர் மற்றும் உறவினர்கள் தமிழகத்தைப் பட்டா போட்டு விற்கும் கோலாகலக் காட்சியையா?

குறிப்பு: தேமுதிக மாநாட்டின் ‘சாதனை’களை அடுத்த பதிவில் பார்க்க!

http://www.envazhi.com

Friday, October 17, 2008

இதுவா பத்திரிகை தர்மம்! – ஆர்எம்வீ

ஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து 1995 முதல் வெளிப்படையாகப் பேசி வருபவர் ஆர்எம் வீரப்பன். ஒருவிதத்தில் அவர்தான் இந்த அரசியல் குறித்த பேச்சுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அவரே, ரஜினி அரசியலுக்கு வரவே மாட்டார் என்றெல்லாம் கருத்துத் தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதைச் சொன்னவர் ஆர்எம்வீதானா? – இந்தக் கேள்வியை அவரிடமே கேட்டோம் இன்று.
அவரது பதிலை அப்படியே தருகிறேன். பத்திரிகை தர்மத்தின் லட்சணம் உங்களுக்கும் புரியும்!

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரது சமீபத்திய அறிக்கை குறித்தும் கருத்து கேட்டு என்னிடம் வந்தார்கள் சில பத்திரிகையாளர்கள். நானும் சில கருத்துக்களைச் சொன்னேன். ஆனால் அவர்களோ... நான் சொன்னவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து அவர்களுக்குப் பிடித்த மாதிரி கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளதைக் கண்டு உள்ளபடியே நான் வருத்தப்பட்டேன்.

இது பத்திரிகை தர்மமா... நான் சொன்னது என்ன?

“ரஜினி நல்ல மனிதர். எப்போதும் என்னிடம் அரசியல் குறித்து ஆர்வமாக பல விஷயங்களைப் பேசுவார், விவாதிப்பார். தனது முடிவான கருத்துக்களையும் கூறுவார். ஆனால் அரசியலுக்கு வரப்போவது குறித்து முடிவாக எதையும் சொல்லமாட்டார்.

எனக்குத் தெரிந்து ரஜினி இப்படித்தான். அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எப்போதே வந்திருக்க வேண்டும். இப்போது அவருக்கு தனி அரசியல் இயக்கம் தொடங்கி நடத்தும் அளவுக்கு ஆர்வம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. இனி வருவாரா என்றும் உறுதியாகச் சொல்ல முடியாது.

மேலும் இந்த அறிக்கையில் தனது அரசியல் பிரவேசம் பற்றி அவர் எதையும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.

இப்போது அவரது தொண்டர்கள் சிலர் வேண்டாத வேலையில் இறங்கி அவருக்கு கெட்ட பெயரை உண்டாக்க முயற்சித்து வருகிறார்கள். தனிக் கட்சி, கொடி என்றெல்லாம் குழப்பம் ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு முடிவு கட்டவே இந்த அறிக்கை. அவரது எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க முடியாது...”

-இதுதான் ஆர்எம்வீ சொன்னது.

அதை எப்படி வெட்டி, ஒட்டி திரித்து வெளியிட்டுள்ளன சில பத்திரிக்கைகள் என்பதை நீங்களே நேற்று பார்த்திருப்பீர்கள்!

இதைவிடக் கொடுமை, இன்னொரு பத்திரிகை ரஜினியின் அறிக்கை பற்றிய செய்திக்கு கொடுத்திருக்கும் தலைப்பு, ‘ரசிகர்களைக் கைவிட்ட ரஜினி!”
இவர்கள்தான் காஞ்சிபுரம் போய் நடராஜ குருக்களைத் தேடிப் பிடித்து, ரஜினி சோழி போட்டு நாள் பார்த்த கதையையெல்லாம் புலனறிந்து கொடுத்த நிகழ்காலத்தின் குரல்!

நல்லாருக்கு உங்க பத்திரிகை நியாயம்!

ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!

ஜினி... இந்த மந்திரச் சொல்லை நண்பர்கள் உச்சரித்தாலும் செய்தி. எதிரிகள் விமர்சித்தாலும் செய்தி. அப்படியொரு மகிமை அவருக்கு!

அரசியல், பொது இயக்கம் இரண்டுக்குமே இப்போதைக்கு இடமில்லை என உறுதியாகக் கூறிவிட்ட ரஜினி, எந்திரன் படத்துக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

அதற்கு மேல் இந்த அறிக்கைக்கு கோனார் தமிழுரை கணக்காக விளக்கம் சொல்லாமல் (ஏற்கெனவே நிறைய விளக்கங்கள் வந்துவிட்டன... திருக்குறளுக்கு எழுதப்பட்டது போல!!), ரஜினியின் நண்பர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என களத்தில் நான் சேகரித்தவற்றைத் தருகிறேன்.

இவர்களில் பெரும்பாலானோர் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்தவர்கள்.

சு.திருநாவுக்கரசர் எம்.பி.:

அந்த அறிக்கையை நானும் பார்த்தேன். நான் அவரை அரசியலுக்கு அழைத்தது அரசியலை கவுரவப்படுத்தவே. இது அவருக்கும் தெரியும். நான் முன்பே சொன்ன மாதிரி எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். இன்னும் காலமிருக்கிறது, பார்க்கலாம்.

சோ எஸ்.ராமசாமி:

ரஜினி முடிவில் எந்தத் தவறும் இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறுவதற்காக அவர் விட்ட அறிக்கையல்ல இது. தன் பெயரை தவறாகப் பயன்படுத்தும் சிலருக்காக விடுத்த எச்சரிக்கை.

அவர் பெயரில் கட்சி என்றால் அதை அவர்தான் அறிவிக்க வேண்டும். போவோர் வருவோரெல்லாம் ரஜினி படம் போட்டு, அவர் பெயரில் கட்சி ஆரம்பித்தால், அவர்கள் தவறுக்கு இவரல்லவா பொறுப்பேற்க வேண்டும். மேலும், அது எந்த வகையிலும் பலமாகவும் இருக்காது. எல்லா விதத்திலும் பலவீனப்பட்டு நிற்கும். இப்படி ஒரு கட்சி தேவையா?

மற்றபடி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்கவே இந்த அறிக்கை என்று தெரிகிறது.

நடிகர் சரத்குமார்:

அவர் விட்ட அறிக்கைக்கு நான் என்ன கருத்து சொல்வது? அவர் தெளிவாகத்தான் இருக்கிறார், அவரது ரசிகர்கள்தான் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது. உள்ளுக்குள் அரசியல் ஆசை இன்னும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். மற்றபடி, தன் நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார்.

தொல் திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்):

அரசியலுக்கு வருவதும் வராமல் போவதும் அவர் விருப்பம். இதை யாரும் வற்புறுத்தவோ திணிக்கவோ முடியாது. மற்றபடி நான் அவரை வாருங்கள் என்று அழைத்து ஏமாறவுமில்லை, வராமல் போனதற்காக சந்தோஷப்படவுமில்லை!

தங்கர் பச்சான் (இயக்குநர்)

முதல்ல இப்படியெல்லாம் கூப்பிடறது, கட்டாயப்படுத்தறதே தப்பு சார். மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும்னா அதை அரசியலுக்கு வந்து பதவியைப் பிடிச்சுதான் பண்ண வேண்டியதில்லை.

இந்த நாட்டில் எவ்வளவோ நல்ல அரசியல்வாதிகள் களத்துக்கு வந்த பின்னரும் போதிய ஆதரவின்றி மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, வராத ஒருவரைப் பிடித்துக் கொண்டு இந்தபாடு படுத்துகிறார்களே... அவரை விடுங்க. ஒரு நடிகரா அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்பவும் சொல்றேன், அண்ணாமலை மாதிரி நல்ல படத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை!

ஜெ.செல்வகுமார் (முகவர், எல்ஐசி)

அரசியலுக்கு வருவேன் இல்ல வரல... இதுல ஒண்ணை தெளிவா சொல்லிவிட வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு, வந்தா தடுக்க முடியாதுன்னா... யார் தடுக்க முயற்சி பண்றாங்க. எல்லாருமே இவர் வரட்டும், என செய்வார்னு பார்ப்போம்னுதானே காத்துக்கிட்டிருக்காங்க....

இவரைப் போன்றவர்கள்தான் சார் அரசியலுக்கு வரணும். அப்படி வந்தா கண்டிப்பா நிச்சயம் விஜய்காந்த் மாதிரி கேவல அரசியல் செய்யமாட்டார். என்னைக் கேட்டா, இந்த விஜயகாந்துக்கு ஓட்டுப் போடறதை விட திமுகவுக்கு ஓட்டுப் போட்டுடுவேன். ரஜினி போன்றவர்கள் வந்தாதான் விழிப்புணர்வு ஏற்படும்!

ஜார்ஜ் (மெக்கானிக், வள்ளுவர் கோட்டம் சாலை):

எனக்கு அவர் மேல இருந்த நம்பிக்கை போய்டுச்சு. ஆனா நல்ல மனுசன். தேர்தல்ல நின்னா நிறைய பேரைத் திட்ட வேண்டி வருமேன்னு பயப்படறாரான்னு தெரியல.

தாமரை (தையல் கலை நிபுணர், திருவல்லிக்கேணி):

இந்த மனுசன் இன்னும் எத்தனை நாளைக்குதான் நம்பிய மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கப் போகிறாரோ? நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு தெளிவா சொல்லிட்டுப் போக வேண்டியதுதானே. இப்படி குழப்பமா பதில் சொல்லிக்கிட்டே இருந்தா வெறுப்பதான் மிஞ்சும்.
http://www.envazhi.com

Monday, October 13, 2008

அரசியலுக்கு வரவேண்டுமென என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது; வந்தால் யாராலும் தடுக்கவும் முடியாது!

ஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இதில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கிட்டத்தட்டமுழுமையான பதிலை ரசிகர்களுக்கு அவர் தந்திருக்கிறார். 'கண்ணா நான் வரும்போது உன்னைக் கூப்பிட்டுக்கிறேன்... அதுவரை உன் விருப்பப்படி இரு... அவசரப்படாதே!' - இதுதான் அவர் பாணியில் இந்த அறிக்கைக்கு அர்த்தம்!

தனக்காகக் காத்திருக்க முடியாமல் அவசரப்படும் ரசிகர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்பதே தன் ரசிகர்களுக்கு அவர் சொல்லியிருக்கும் செய்தி. மற்றபடி தன் பெயரில் கட்சி, தனிக் கொடி என்றெல்லாம் எல்லை மீறுபவர்கள் மீது நிச்சயம் சட்டப் பூர்வ நடவடிக்கை உண்டு என்று எச்சரித்துள்ளார்.

என்னை அரசியலுக்கு வருமாறு யாரும் வற்புறுத்தவும் முடியாது, அதே நேரம் வந்தால் யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி நான் வரும்போது என் ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை என்னுடன் இணைத்துக் கொள்வேன், என ஒரு அசத்தல் பன்ச் வைத்து அறிக்கையை முடித்திருக்கிறார் ரஜினி.

ரஜினி அறிக்கையின் சுருக்கம்:

அண்டை மாநிலங்களிலும் தமிழகத்திலும் சக நடிகர்கள் கட்சி ஆரம்பித்திருப்பதும், அதன் விளைவாக என் ரசிகர்கள் நானும் தமிழக அரசியலில் நேரடியாக ஈடுபட வேண்டும் என்ற எனது ரசிகர்களின் ஆர்வம் எனக்கு நன்றாகப் புரிகிறது.

அரசியல் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான கட்சிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

என் பெயரில் கட்சி, அதற்கென ஒரு கொடியை அறிமுகப்படுத்துதல், என் படத்தைப் பயன்படுத்துதல் போன்ற செயல்களில் எனது ரசிகர்களோ மற்றவர்களோ ஈடுபடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். ]

...இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலுக்கு வருமாறு என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. அதேநேரம், நான் அரசியலுக்கு வர முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கவும் முடியாது. அப்படி துவங்கும் நிலையில் நான் இருந்தால் எனது ரசிகர்கள் எங்கிருந்தாலும் அவர்களை அழைத்துக் கொள்வேன், என்று ரஜினி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த அறிக்கை அப்படியே இங்கு முழுமையாக தரப்பட்டுள்ளது. பெரிதாக்கிப்படிக்கவும்.
http://www.envazhi.com

அரசியல் இல்லையேல் சாகும் வரை உண்ணா விரதம்!


இது இன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் அவசரமாகக் கூடி எடுத்துள்ள முடிவு.

இதுகுறித்து இன்றைய தட்ஸ்தமிழ் செய்தியை அப்படியே தந்து விடுகிறேன்...

“ரஜினிகாந்த் ரசிகர்கள் கோமா நிலையில் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உற்சாகத்தை அளித்து புத்துணர்வை அளிக்கும் வகையில், ரஜினிகாந்த் உடனடியாக கட்சி தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்போம் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவ்வப்போது குரல்கள் வெடிக்கும். இப்போதும் அதுபோலவே கோரிக்கைகள் வலுத்துள்ளன. ஆனால் இந்த முறை ரசிகர்கள் சற்று வேகமாக உள்ளனர். கோவை மாவட்ட ரசிகர்கள் ஒரு படி மேலே போய் தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் கட்சி ஒன்றை துவக்கினர். கட்சிக்கு கொடியையும் அவர்களே அறிமுகப்படுத்தினர்.

இனி கோவை மாவட்டத்தில் ரஜினி ரசிகர் மன்றம் எதுவும் செயல்படாது என்றும், தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரிலேயே இயங்குவோம் எனவும் அவர்கள் அறிவித்தனர்.

மேலும், சென்னையில் தங்களை ரஜினி சந்திக்கும் போது கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மறுக்கும் பட்சத்தில் அனைத்து மாவட்ட ரஜினி ரசிகர் மன்றங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் அனைத்து மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இந்தச் சூழ்நிலையில் இன்று சென்னை மாவட்ட ரஜினி மன்றத்தினர் வள்ளுவர் கோட்டம் அருகே கூடி ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், 15ம் தேதி தலைவர் எங்களை சந்திப்பதாக கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் அனைவரும் அவரை பார்க்க முடியாது. குறிப்பிட்ட சில பேர் மட்டும் தான் செல்ல முடியும்.

எனவே அன்றைய தினம் தலைவரிடம் என்ன பேச வேண்டும்; என்ன கூற வேண்டும் என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவு அனைத்து ரசிகர்களையும் கட்டுப்படுத்தும்.

தலைவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும். ஒகேனக்கல், காவிரி பிரச்சனையை விட இன்று ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு காணப்படுகிறார்கள்.

திரையுலகில் தன்னை திட்டியவர்களுக்கு கூட தனது படங்களில் வாய்ப்பு தரும் தலைவர், இத்தனை ஆண்டுகளாக அவருக்கு பின்னால் இருக்கும் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்?

உறுப்பினர் பெருமையே போதும்!

நாங்கள் என்ன எம்பி பதவி, எம்எல்ஏ பதவியா கேட்கிறோம். அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று தானே கேட்கிறோம். எங்களைக்கூட கட்சி நிர்வாகிகளாக போட வேண்டாம். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்து அதில் நாங்கள் உறுப்பினர் என்ற பெருமையே எங்களுக்கு போதும்.

தேர்தல் வரும் போதெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு ரஜினி ரசிகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு, ஒரு ரேஷன் கார்டு பிரச்சனைக்கு சென்றால் கூட எங்களை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறார்கள்.

கோமாவில் கிடக்கிறோம்:

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தொடர்ந்து எங்களை தாக்கி வருகிறார்கள். நாங்கள் கோமா ஸ்டேஜில் கிடக்கிறோம். பல இடங்களில் எங்களுக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களின் நிலைமை இதுதான்.

அரசியல் கட்சிக்கு மாற்றாக சமூக இயக்கம் ஆரம்பிப்பது என்பதெல்லாம் பேச்சுக்கு உதவாத காரியம். அதற்காக தலைவரை நாங்கள் எதிர்ப்பதாக அர்த்தம் கிடையாது. ஆனால் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவசியமான ஒன்று.

சமீபத்தில் கோவை மாவட்ட ரசிகர்கள் தனி கட்சிக் கொடி ஆரம்பித்தது அவர்களுடைய நெருக்கடி நிலைமையை காட்டுகிறது. இருப்பினும் கட்சி, கொடி ஆகியவற்றை தலைவர் அறிவித்ததால்தான் மரியாதை. அதேநேரம் அவர்கள் மீது எந்த விதமான தவறான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

ஒருவேளை அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து தலைவர் மறுக்கும் பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஈடுபடுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் இந்தக் கொந்தளிப்பை எப்படி சமாளிக்கப் போகிறார் ரஜினி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.”


-இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருமே ரஜினி சமூக நல இயக்கம் தொடங்கக் கூடாது, கட்சிதான் துவங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் இந்த தனிக்கட்சி, சாகும் வரை உண்ணாவிரத நெருக்கடிகள், ரஜினியை வேறு முடிவுக்குத் தள்ளிவிடக் கூடாது. எனவே சற்று நிதானம் தேவை!
http://www.envazhi.com

ச்சும்மா... தமாசு!


இங்கே தரப்பட்டுள்ள படத்துக்கு தனி விளக்கம் தேவையில்லை. உங்களுக்கே நன்கு புரியும்... நாம் பார்க்காத போஸ்டர் யுத்தமா, என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது!

சில தினங்களுக்கு முன் ஹலோ எஃப் எம் அலுவலகத்தில் நடந்த ஏகன் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது அஜீத்தின் ரசிகர்கள் சிலர் மாலை மலர் அலுவலகம் அருகில் வைத்திருந்த பேனர் வாசகம் இவை.

லயோலா சர்வேயில் விஜய்க்கு அளிக்கப்பட்ட (அல்லது வாங்கப்பட்ட) முக்கியத்துவத்தைக் கண்டு கொதித்துப் போய்த்தான் அஜீத்தின் ரசிகர்கள் இப்படியெல்லாம் பேனர் வைத்திருக்கிறார்கள் என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை..!!
http://www.envazhi.com

Saturday, October 11, 2008

ரஜினியின் இடம் அப்படியே இருக்கிறது! - ஆர்.எம்.வீரப்பன்


சில தினங்களுக்கு முன்புதான் முன்னாள் அமைச்சரும் ரஜினியின் நலம் விரும்பிகளுள் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்பி, ரஜினியின் அரசியல் பிரவேச அவசியம் குறித்து வெளியிட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தோம். அதன் பிறகுதான் அவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நமது மதிப்புக்குரிய முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் கழகத் தலைவருமான ஆர்எம் வீரப்பன்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு முதல் கட்டியம் கூறியவர் ஆர்எம்வீதான். பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவையும் அதில் ரஜினி நிகழ்த்திய புயல் வேக உரையையும், அதனால் எழுந்த அரசியல் பூகம்பங்களையும் மறுபடியும் ஒருமுறை இங்கே நினைவு கூற வேண்டியிருக்காது என நம்புகிறேன்.

ரஜினிக்காக மந்திரி பதவியையே துறந்தவர், ரஜினி கட்சி ஆரம்பித்தால் எதையும் செய்யத் தயாராக இருந்தவர் என அமரர் மூப்பனார் அவர்களால் வர்ணிக்கப்பட்டவர் ஆர்எம்வீ.
இன்று ‘காலத்தின் கட்டாயம்’ அவரை இன்னொரு அணிக்குள் நிற்க வைத்திருந்தாலும் (அந்த ஏற்பாட்டைச் செய்தவரும் ரஜினிதான்!), இந்த நிமிடமே ரஜினி பொது வாழ்க்கை குறித்த சாதக அறிவிப்பை வெளியிட்டால் தயங்காமல் முதல் ஆதரவுக் குரல் தரத் தயாராக இருப்பவர்.

அவரிடம் எவ்வளவோ விஷயங்கள் பற்றி பேசினேன்.

அதில் அவர் ரஜினியைப் பற்றி, அவரது அரசியல் பிரவேசம் குறித்து கூறியதில் ஒரு பகுதியை மட்டும் தருகிறேன்.

இனி ஆர்எம்வீ:

நல்லவர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில் ஒரு நல்லவரை அரசியலுக்கு வருமாறு வேண்டிக் கொண்டோம். புரட்சித் தலைவருக்குப் பிறகு அப்படியொரு வாய்ப்பு ரஜினிக்கு மட்டுமே அமைந்தது.

இது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல... நான் முன்பே சொன்ன மாதிரி, காலத்தின் கட்டாயத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு தானாகவே அமைந்துவிட்டது. அதை அவர் மறுதலித்ததும் அதன் பின் வந்த நிகழ்வுகளும் வரலாறு.

அந்த முடிவு குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன். அது அவரது சொந்த முடிவு.
ஆனால் இன்றைக்கு பத்திரிகைகளில் பரபரப்பாக பல விஷயங்களை எழுதுகிறார்கள். அதைப் படிக்கும்போது எனக்குள் பழைய வரலாறு சற்றே எட்டிப் பார்த்தது.

இப்போது ரஜினி அரசியலுக்கு வருவது சாத்தியமா?

இது ஜனநாயக நாடு. அவர் அரசியலுக்கு வருவதை யார் தடுக்கப் போகிறார்கள்... ஆனால் முதலில் அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா எனத் தெரியவேண்டும்.

யூகங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது. இருந்தாலும் உங்களைப் போன்ற அபிமானிகள் வருந்திக் கேட்பதால் சொல்கிறேன்... அரசியலில் ரஜினியின் இடம் அப்படியே இருப்பதாகத்தான் நம்புகிறேன்.

காரணம் மக்கள் மனதில் அவர் மீதான மரியாதை கொஞ்சமும் குறைந்ததாகத் தெரியவில்லை. தாங்கள் எதிர்பார்த்த மாதிரி அவர் அரசியலுக்கு வரவில்லையே என்ற கோபத்தில் சிலர் அவரை விமர்சிக்கக் கூடும். ஆனால் நல்லவர்களின் புகழ் நீண்டகாலம் நிலைத்திருக்கும், புரட்சித் தலைவரைப் போல...

-நிறைய பேசினாலும் அதில் அளவோடு எடுத்துக் கையாளுமாறு கேட்டுக் கொண்டார் ஆர்எம்வீ. அரசியல் சாணக்கியராயிற்றே!

குறிப்பு: ரஜினி ஆதரவாளர்களிடம் கருத்துக் கேட்டால் இப்படித்தானே சொல்வார்கள் என நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். ஒரு காரியத்தில் இறங்குகிறோம்... அதற்கு நாம் யாரைக் கைத்துணைக்கு அழைப்போம்... நம்மை விமரிசிப்பவர்களையா... நலம் விரும்பிகளையா?

பல நேரங்களில் விமரிசனம் எனும் பெயரில் வரும் வக்கிரக் கணைகள் நல்ல முயற்சிகளைத் துவண்டு போகச் செய்துவிடும்.

ரஜினி அடிக்கடி சொல்வதுபோல, ஒரு நல்ல விஷயத்தைச் செய்யும்போது நமக்கு வேண்டியவர்களையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொள்ளவேண்டும். அந்த செயலின் முடிவில் கிடைக்கும் வெற்றியை தனக்கும் சிறிது வைத்துக் கொண்டு மீதியை துணை நின்ற அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். என்ன சரிதானே!

http://www.envazhi.com

Friday, October 10, 2008

'எந்திரன்' போட்ட ஆட்டோகிராஃப்...!


எந்திரன் கோவா படப்பிடிப்புக் காட்சிகள் தொடர்பான மேலும் சில புகைப் படங்களை நண்பர் அனுப்பியிருந்தார். இங்கே நீங்கள் பார்ப்பது அவற்றைத்தான்.

எந்திரன் படப்பிடிப்பு நடக்கும் ஒரு ரிசார்ட் வளாகத்தில், படப்பிடிப்பு இடைவேளையில் ரஜினி ஓய்வாக அமர்ந்திருக்கும் காட்சி இது.

ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ஆடிப்பாடும் காதல் காட்சி படமாக்கப்படுவதையும் தனது கேமராவில் கிளிக்கித் தந்துள்ளார் அந்த நண்பர்.

இன்னும் அதிக படங்களைப் பார்க்க விரும்புவோர், www.paddu.in என்ற இணைய தளத்துக்குப் போகவும்.

ரஜினியின் தீவிர ரசிகர்களில் ஒருவர் கோவாவுக்கே போய், ஷூட்டிங்கிலிருந்த ரஜினியைப் பார்த்ததுடன், படப்பிடிப்பில் ரஜினியைச் சுற்றி நிகழ்ந்தவைகளை படம் எடுத்து, அவற்றில் 78 ஸ்டில்களை தனது இந்த வலைப்பூவிலும் பதிந்துள்ளார். கூடவே ரஜினியிடம் ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார்.

படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அடம் பிடித்தவர்களைச் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிய ரஜினி, அவர்களின் மனம் சங்கடப்படக் கூடாதே என மீண்டும் அழைத்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததும் நடந்துள்ளது.

கோவாவுக்கு வரும் பல வெளிநாட்டுப் பயணிகளும் ரஜினியைப் பற்றிக் கேள்விப்பட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்துவிடுகிறார்களாம்.

படப்பிடிப்புக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வேடிக்கைப் பார்க்கும் இந்த வெள்ளைக்கார ரசிகர்கள் ரஜினியைப் பார்த்த பிறகுதான் அந்த இடத்தை விட்டே நகர்கிறார்களாம்.

கோவாவின் பனாஜி பகுதிக்கே ரஜினியால் ஒரு தனி களை வந்திருக்கிறது என அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் ககெண்ட் அடிப்பதாகத் தெரிவிக்கிறார் பிரபல ஆங்கில நாளிதழின் கோவா நிருபர் ஒருவர்.

பின்னே... அவர் சும்மா ஸ்டாரா... சூப்பர் ஸ்டாராச்சே!
http://www.envazhi.com

Thursday, October 9, 2008

கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல!


நான் தீவிர ரஜினி ரசிகனாக்கும் என்று சொல்லிக் கொண்டே, ரஜினியைச் சிறுமைப்படுத்தும் முயற்சியில் சிலர் இறங்கியிருக்கிறார்கள்.

அவர்களில் முக்கியமானவர்கள் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகரன்.
இன்று நேற்றல்ல... ஆரம்பத்திலிருந்தே இந்த இருவரும் இது போன்ற உள்ளடி வேலைகளில் தீவிரமாக இருந்திருப்பது சற்றே பின்னோக்கிப் பார்த்தால் புரியும்.

இன்றைய தேதிக்கு தன் சொந்த முகத்துக்கு பெரிய ஈர்ப்பு கிடைக்காது என்று தெரிந்து கொண்டு, ரஜினி ரசிகன் எனும் இரவல் முகத்தை மாட்டிக் கொண்டவர்தான் விஜய். அவர் இதுவரை நடித்துள்ள 48 படங்களில் 47-ல் ஏதாவது ஒரு காட்சியிலாவது ரஜினியின் முகம், அவர் நடித்த படத்தின் காட்சி அல்லது அவர் பெயராவது வருமாறு பார்த்துக் கொள்வார் விஜய்.

ரஜினி ரசிகர்களை ஈர்க்க இதைவிட்டால் வேறு வழி கிடையாது அவருக்கு.

ஆனால் இன்று ஏதோ ஒரு இடம் கிடைத்ததும், தீட்டிய மரத்திலேயே கூர் பார்ப்பது போல ரஜினியை மட்டம் தட்டும் காட்சிகளை விஜய்யின் தந்தை சந்திரசேகரன் தன் சமீபத்திய மூன்றாம் தரப் படமான பந்தயத்தில் வைத்திருந்தார்.

அந்தக் காட்சிகளைப் பார்த்தும் ரஜினி ரசிகர்கள் அமைதியாக இருக்கக் காரணம் இதைப் பெரிதுபடுத்தப் போய், தேவையில்லாமல் அந்த கேவலமான படத்துக்கு விளம்பரம் கொடுத்துவிடக் கூடாதே என்ற எண்ணத்தில்தான்.

ஆனால் இப்போதோ...

லயோலா கல்லூரி தயாரித்து வெளியிட்ட ஒரு சர்வேயைக் காட்டி, தந்தையும் மகனும் வானுக்கும் பூமிக்குமாய் குதிப்பதை தமிழ் மக்கள் கிண்டல் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் முன்பே சொன்னது போல லயோலா சர்வே என்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களின் தீர்ப்பல்ல... அப்படி ஒரு சர்வே வெளியானதன் பின்னணி, அதில் குறிப்பாக விஜய்க்கு மட்டும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், ரஜினியைச் சிறுமைப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

ரஜினியை விட விஜய் 0.2 சதவிகிதம் அதிக ஆதரவைப் பெற்றுவிட்டதாக அந்த கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. இதெல்லாம் ஒரு கணிப்பா... ரஜினி என்ற மனிதரின் நிஜ செல்வாக்கினை அரசியல், சினிமா எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் பொது மக்களே நன்கறிவார்கள்.

ஆனால் இதைப் புரியாத போலி ரசிகர் விஜய், ரஜினியை மிஞ்சும் ஆதரவு மக்களிடம் தனக்கு இருப்பதாகவும், தானே அடுத்த முதல்வர் என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து, தன்னைத் தானே புகழ்ந்து சந்தோஷம் கொள்கிறார். இந்த சர்வே முடிவை பெரிய பெரிய கட் அவுட்களில் எழுதி வைத்து பெருமையடித்து வருகிறார்.

சில பத்திரிகைகளில், தானே அடுத்த சூப்பர் ஸ்டார் என சிறப்புக் கட்டுரை வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள் என்றும் அறிகிறோம்.

இவர்களுக்கு ரஜினி பாணியிலேயே நாம் சொல்ல விரும்புவது ஒன்றை மட்டும்தான்: கண்ணா வேணாம்... இது நல்லதுக்கில்ல, ரொம்ப நாள் தாங்காது!
http://www.envazhi.com

Wednesday, October 8, 2008

வேண்டாம் இந்த அர்த்தமற்ற ஒப்பீடு!


பத்திரிகைகளில் ரஜினியைப் புகழ்ந்து எழுதினால் மகிழ்கிறீர்கள்... விமர்சித்தால் கோபித்துக் கொள்கிறீர்கள். எப்போதும் நாங்கள் துதி பாடிக் கொண்டேஇருக்க முடியுமா...?

-இது பிரபல வார இதழின் பொறுப்பாசியரியராக உள்ள நம் நண்பர் கேட்ட கேள்வி.

அவருக்கு நான் சொன்ன பதிலை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

‘நல்லவர் ஒருவரைப் பற்றி நல்லவிதமாகவே எப்போதும் எழுதுவதில் தவறில்லை. இன்னொன்று பொது வாழ்க்கையில் பத்திரிகைகள் குற்றம் சாட்டும் அளவுக்கு ரஜினி எந்தத் தவறும் செய்யவில்லை. அரசியலுக்கு அவர் வருவது, கட்சி ஆரம்பிப்பது எல்லாம் அவருக்குள்ள சூழ்நிலைகளைப் பொறுத்த விஷயம். ஆனால் அதற்காக மட்டுமே அவர் மீது கடும் விமர்சனங்களை வைப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது...

கட்சி ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு குற்றமா..!

தொடர்ந்து பத்திரிகைகள் அவரது அரசியல் பிரவேசம் குறித்து யூகங்கள் வெளியிடுவதும் பின்னர் அந்த யூகங்கள் பொய்த்துவிடும் நிலையில் அவரைத் திட்டித் தீர்ப்பதும் என்ன வகை பத்திரிகை தர்மம்?’

இந்தப் பதில் அவரை அமைதியாக்கிவிட்டது.

ரஜினியைப் பற்றி எழுதப்படும் நல்ல விஷயங்கள் நாடறிந்தவை... குற்றச்சாட்டுகள் இட்டுக் கட்டப்பட்டவை. அவர் யாரையும் சுரண்டியோ, ஓட்டு வாங்கி பதவிக்கு வந்து ஏமாற்றிக் கொண்டோ இல்லை, குற்றம் சாட்டிப் பேச. இதைப் புரிந்து கொண்டாலே போதும், அவர் மீதான விமர்சனங்கள் அடியோடு நின்றுபோகும்.

இன்று வெளியாகியுள்ள ரிப்போர்டர் வாரமிருமுறை இதழிலும் ரஜினிதான் கதாநாயகன். வழக்கம்போல பத்திரிகையும் அமோக விற்பனை!

வழக்கத்துக்கு மாறாக இந்த இதழில் சற்று தெளிவான, பரந்த பார்வையுடன் கூடிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஆனால் தலைப்பில் மட்டும் வழக்கம் போல வியாபாரத்தனம்.

தலைப்பு: யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? – ரஜினியை உசுப்பி விட்ட கருத்துக் கணிப்பு!

இது என்ன அபத்தம்... யாரை யாருடன் ஒப்பிடுவது?

யார் அடுத்த சூப்பர்ஸ்டார் என இனி கேள்வி எழுப்புவதில் அர்த்தமே இல்லை. இந்த விஷயத்தில் ஒரு மூன்றாம் தர கருத்துக் கணிப்புக்காக கவலைப்படும் சாதாரண நபரும் அல்ல சூப்பர் ஸ்டார்.

இனி இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ரஜினிக்கு மட்டுமே. உலக சூப்பர் ஸ்டார் என எல்லோரும் அவரை கொண்டாடும் வேளை நெருங்கும் தருணத்தில் இந்த மாதிரி அபத்தங்களை மீடியா தவிர்க்க வேண்டும். மற்றபடி தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை என்பதால், கட்டுரையின் நல்ல விஷயங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்தக் கட்டுரையின் ஆரம்பம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

படை பரிவாரங்களுடன் ரோம் நகரை நெருங்கிவிட்டார் ஜூலியஸ் சீசர். இடையே நொப்பும் நுரையுமாகக் கொந்தளித்து ஓடும் ரூபிகான் ஆறு. ‘ஆற்றைக் கடந்து போய் ரோமைக் கைப்பற்றுவதா? இல்லை அப்படியே பின்வாங்கி விடுவதா?’ என்ற அறத்துன்பமான நிலை.

அப்போது சீசர் எடுத்த முடிவு ரூபிகான் ஆற்றைக் கடப்பதுதான். அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.

சீசரைப் போல சூப்பர் ஸ்டார் ரஜினியும் அவரது வாழ்க்கை வரலாற்றில் ஒரு ரூபிகான் ஆற்றின் பக்கம் வந்து சேர்ந்து விட்டதாகவே தோன்றுகிறது, அண்மையில் அவர் தொடர்பாக நடக்கும் சில நிகழ்வுகளைப் பார்க்கும்போது....


-இந்த சிறப்பான ஆரம்பம் இறுதி வரை தொடர்வதுதான் இக்கட்டுரையின் நல்ல அம்சம் (இங்கே தரப்பட்டுள்ள கட்டுரையின் பக்கங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்!).

மற்றொரு சிறப்பு, நமது நண்பர் சுந்தரின் (http://www.onlyrajini.com) கருத்துக்களும் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பது, அக்கட்டுரையை சரியான பாதையில் கொண்டு போய் முடிக்க உதவியிருக்கிறது.

ரஜினியைத் தாண்டிவிட்டார் விஜய் என்ற லயோலாவின் கருத்துக் கணிப்புக் குறித்த கேள்விக்கு சுந்தர் அளித்துள்ள பதில் சிறப்பாக இருந்தது. இதோ அந்தப் பகுதி:

“உடுமலையில் குசேலன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் கோவை விமான நிலையத்துக்கு ரஜினி வருகிறார் என்ற தகவல் கசிந்ததும் சில மணிநேரங்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விமான நிலையம் முன் குவிந்து விட்டார்கள். அப்போது, அவர்களின் நெரிசலில் சிக்கிய ரஜினியை விமான நிலையத்துக்குள் அழைத்துச் செல்ல அவரது உதவியாளர்கள் திணறிவிட்டார்கள்.

கடந்த 1989-ல் தனது நண்பருக்காக குளிர்பான அறிமுக விழாவில் கலந்து கொள்ள ரஜினி திருச்சி சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை யாரும் மறந்துவிட முடியாது. இத்தனைக்கும் அந்த விழாவுக்கு முதல்நாள் இரவுதான் விழாவில் ரஜினி கலந்து கொள்கிறார் என்று அறிவித்தார்கள்.

ராமராஜன்(!) தொடங்கி கமல் வரை ரசிகர் மன்ற மாநாடுகளை நடத்தி விட்டார்கள். ஆனால், இதுவரை ரஜினி தனது ரசிகர்களை சென்னையைத் தவிர்த்து வேறு இடங்களில் சந்தித்ததே இல்லை. அப்படி ரஜினி மட்டும் ரசிகர்களைச் சந்திக்க ஒரு விழா நடத்தினால், அது தமிழகம் இதுவரை பார்த்திராத மிகப் பெரிய திருவிழாவாக இருக்கும். இதில் ரஜினி செல்வாக்குக் குறைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள் என்பதையெல்லாம் எந்த ரசிகரும் நம்பத் தயாராகவே இல்லை...''


-கட்டுரையை முழுவதும் படியுங்கள்!
http://www.envazhi.com

எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - திருநாவுக்கரசர்


சில தினங்களுக்கு முன் பாஜக தலைவரும், ரஜினியின் நலம் விரும்பிகளில் ஒருவருமான சு.திருநாவுக்கரசர் எம்.பி, ரஜினியின் அரசியல் எதிர்காலம் குறித்து அளித்த சிறப்புப் பேட்டியின் ஒரு பகுதியை கொடுத்திருந்தேன்.

கிட்டத்தட்ட அதே கருத்தை நேற்றைய மாலைப் பத்திரிகைகளுக்கும் பேட்டியாகக் கொடுத்திருந்தார்.

நமது நண்பர்களில் சிலர், திருநாவுக்கரசரின் பேட்டி வந்து என்ன ஆகப்போகிறது என நினைக்கலாம்.

எந்தக் காரியத்திலும் இறங்கும் முன் நமக்கான ஆதரவுக் குரலைப் பெறுவது மிக முக்கியம். அது தருகிற மன உறுதியும், குதூகலமும் தனியானது.

ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால், நான்தான் அக்கட்சிக்கு பொதுச் செயலாளர். இந்தப் பணியை விரும்பி செய்வேன். என் மனைவி ராதிகா எந்த நிலையிலும் அவரது கட்சியில் பணியாற்றத் தயார் என்று பகிரங்கமாக சேனல்களுக்கெல்லாம் பேட்டி கொடுத்த சரத்குமார் இன்று என்ன நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்?

ஆனால் 12 ஆண்டுகளுக்கு முன் ரஜினியோடு இணைந்து செயல்படவும் தயாராக இருந்த, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் திருநாவுக்கரசர். இந்தப் 12 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் அதே மரியாதையுடன் ரஜினிக்கு அவர் ஆதரவு தர முன் வந்திருப்பது சாதாரண காரியமா?

மீண்டும் அவரிடம் பேசினோம்:

ரஜினியை எதற்காக அரசியலுக்கு மீண்டும் அழைக்கிறீர்கள்?

மிக எளிய ஆனால் உண்மையான காரணம் என்ன தெரியுமா... ரஜினிக்கு நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரியாது. அதனால்தான் அவருக்கு இத்தனை சிக்கல்கள் வருகின்றன. இந்த மாதிரி நல்ல மனம் படைத்தவர்கள்தான் இன்று நமக்குத் தேவை.

ரஜினி என்றைக்கோ முதல்வராகியிருக்க வேண்டியது. ஐயா மூப்பனார் அவருக்காக ராஜபாட்டை போட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஜினி மறுத்துவிட்டார்.

பதவியை மறுப்பது சாதாரண விஷயமா... பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத ஏதாவது ஒரு சங்கத்தின் உறுப்பினர் பதவியைக் கூடத் துறக்க யாரும் தயாராக இல்லாத இந்த நாட்டில், சகல அதிகாரமும் நிறைந்த மாநில முதல்வர் பதவியையே வேண்டாம் என ஒருவரால் மறுதலிக்க முடியுமென்றால் அவர் சாதாரண மனிதராக இருக்க முடியுமா?

அதனால்தான் ரஜினியை மீண்டும் மீண்டும் அழைக்கிறோம்.

ஆனால் இந்த விஷயத்தில் ரஜினி ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லையே...?

அது அவரது தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது. என்னைக் கேட்டால், முன்னெப்போதும் இல்லாத சரியான சந்தர்ப்பம் அவருக்கு இப்போதுதான் வாய்த்திருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தமிழகத்தில் உள்ள முன்னணிக் கட்சிகள் அனைத்தும் மக்களிடம் நம்பிக்கையை இழந்து நிற்கின்றன. கட்சி ஆரம்பித்துள்ள வேறு சில நடிகர்களின் நிலைமையும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. அவர்களையெல்லாம் விட மிகச் சிறப்பாக, திட்டமிட்டுச் செயல்படக் கூடியவர் ரஜினி.

இந்தத் தருணத்தை அவர் சரியாகப் பயன்படுத்தி, தன்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

ரஜினியிடம் நீங்கள் இது குறித்துப் பேசினீர்களா?

பேசியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் ஒரு சிரிப்பு சிரித்து வைப்பார்.

ரஜினி வந்தால் இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிடும் வாய்ப்பு எந்த அளவு உள்ளது?

ரஜினியைப் பற்றி மீடியாவில் வருகிற செய்திகளை விடுங்கள். ஆனால் கிராமங்களில் பொது மக்களிடம் அவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.

எனக்குத் தெரிந்து புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு அவருக்கு இணையான செல்வாக்கு பெற்ற ஒரே நடிகர் ரஜினி மட்டும்தான். கூடவே அவருக்கு மக்களிடமுள்ள மிஸ்டர் கிளீன் இமேஜ், லஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மக்களின் வாக்குகளை அள்ளித்தரும்.

ரஜினி அரசியலுக்கு வந்தால், நானும் அவருக்குத் துணையாக இருப்பேன் என்று முன்பு கூறினீர்கள். அதே மன நிலையில் இபேபோதும் இருக்கிறீர்களா...?

நிச்சயமாக... அதே நேரம் அவர் தனிக் கட்சி கண்டால் பாஜக அவருடன் கூட்டணி வைக்க முயற்சிக்கும். அல்லது தனியாகவே நின்றாலும் நாங்கள் ஆதரவளிப்போம். ஒரு நல்லவர் வரட்டுமே... அதற்காகத்தான்!
http://www.envazhi.com

Tuesday, October 7, 2008

உலக சூப்பர் ஸ்டார் ரஜினி!


சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான கோவாவில் இப்போது பயணிகளுக்கு சுவாரஸ்யமான பகுதி எது தெரியுமா? பனாஜி!

ஆம்... இங்குதான் ரஜினியின் எந்திரன் – தி ரோபோ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

படப்பிடிப்பு தளத்தில் பார்த்த காட்சிகள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா இப்படி வர்ணித்துள்ளது, ஒரு மன்னரின் வருகைக்குக் கட்டியம் கூறுவது போல:

ரஜினி வருகிறார்... பராக்!

சுற்றிலும் பரபரப்பு, திரண்டு வரும் ரசிகர் வெள்ளம், அனைத்துக்கும் மத்தியில் அமைதியாய் அமர்ந்திருக்கிறார் உலக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், என்று தனது கட்டுரையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் அந்த நிருபர்.

சந்தேகமில்லை... ரஜினி ஒரு உலக சூப்பர்ஸ்டார்தான். ஒருசிலர் இதை மிகை என்றுகூடக் கூறலாம்... ஆனால் முத்து படத்திலேயே சர்வதேச நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டவர் ரஜினி.

அதன் தொடர்சியாக இரு பெரும் வல்லரசு நாடுகளின் பிரதமர்களால் உச்சரிக்கப்பட்ட ஒரே நடிகரின் பெயர் ரஜினியுடையதாகத்தான் இருக்கும்.

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டுப் பிரதமர்களால் இந்திய கலாச்சாரத்தின் பிரதிநிதியாக முன்மொழியப்பட்ட பெயர் ‘ரஜினி’!

சிவாஜி – தி பாஸ் படம் மூலம் உலகின் முன்னணி நட்சத்திரமாகிவிட்ட ரஜினி, எந்திரன் படமாகிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் உலக சூப்பர் ஸ்டாராக அங்கீகாரம் பெற்றிருப்பது ஒவ்வொரு இந்தியனையும் நெஞ்சு நிமிர வைக்கும்.
for more pictures please visit: http://www.envazhi.com

Exclusive: இதற்குப் பெயர்தான் ‘ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’!

சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் அளித்த பேட்டியைப் படித்துவிட்டிருப்பீர்கள்.

அதனால் ஒரு மாறுதலுக்காக, இதோ ஐஸ்வர்யாவின் புத்தம் புது படம், அதுவும் நம்ம ஸ்டைலிஷ் எந்திரனுடன் காதல் மொழி பேசும் காட்சி!
மக்களின் நாடித் துடிப்பை நன்கு தெரிந்து வைத்திருப்பவர் ரஜினி. இந்தக் கதைக்கு இப்படித்தான் வரவேற்பிருக்கும் என்பதை தெளிவாக முன்கூட்டியே சொல்லிவிடுவார்.
சந்திரமுகி, குசேலன் ஆடியோ வெளியீட்டு விழாக்களை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தனது படத்தில் ஐஸ்வர்யா ராயை நாயகியாக நடிக்க வைக்க தொடர்ந்து முயற்சிப்பது ஏன் என்பதற்கான விளக்கத்தை ரஜினி ஒரு மேடையில் சொல்லியிருந்தார். அதன் வீடியோ பதிவு கூட நமது தளத்தில் உள்ளது. இதோ அதன் சுருக்கம்:

‘என்னடா இந்தாளு எப்பப் பார்த்தாலும் ஐஸ்வர்யா ராய் நாயகியா வேணும்னு கேக்கிறானேன்னு சிலர் நினைக்கலாம்.

படையப்பாவில் நீலாம்பரியா, சந்திரமுகியில் நாட்டியக்காரி சந்திரமுகியா... ஐஸ்வர்யாவை கற்பனைப் பண்ணிப் பாருங்க. அதுக்காகத்தான் அவங்க வேணும்னு கேட்டேன்...’, என்று பேசியிருந்தார்.

எந்திரனில் இப்போது ஐஸ்வர்யா ராயைத் தவிர இன்னொரு நாயகியை ரஜினிக்கு ஜோடியாக நினைத்துப் பார்க்க முடியவில்லை அல்லவா?

இதுக்குப் பெயர்தான் திரை ரசாயணமோ... (அதாங்க ஆன்ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி!)
http://www.envazhi.com

Exclusive: எந்திரன் கோவா படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார்!


சக நடிகர்கள் தொடங்கி சாதாரண ரசிகன் வரை அனைவரையும் கட்டிப் போடும் அற்புத சக்தி மிக்கவை ரஜினியின் கண்கள்.

மிகச் சிறந்த தவசீலர்களுக்கும் யோகிகளுக்கும் மட்டுமே அமையப்பெற்ற வசீகரமும் இறைத் தோற்றமும் நமது ரஜினியின் கண்களுக்கு மட்டுமே உண்டு.

முதன் முதலில் அவரது கண்களின் தீட்சண்யம் கண்டு நான் மிரண்டு போனது ஜானி படத்தில், துரோகியாய் மாறும் காதலி தீபாவாவைக் கொன்றுவிட்டு ஒரு வெறித் தோற்றம் காட்டுவாரே அந்த காட்சியில்.

சந்திரமுகி வேட்டைய ராஜாவின் கண்களைப் பார்த்தபோது மீண்டும் அதே உணர்வை அடைந்தேன். அந்த பார்வையின் சக்திக்கு நிகரான வசனங்களை எவ்வளவு பெரிய இயக்குநராலும் எழுத முடியாது, அதற்கு நிகரான உணர்வுகளை எவ்வளவு சிறந்த நடிகராலும் காட்ட முடியாது. காரணம் அந்தக் கண்களில் தெரிவது வெறும் நடிப்பல்ல... ஒரு நல்ல மனிதரின் மனம். நல்லவரின் பார்வையை எதிர்த்து எவராலும் சில விநாடிகள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது.

பாபாவில் ரஜினி இப்படிச் சொல்வார்: “ஐயா... யாராவது பேசும்போது நான் அவங்க முகத்தைப் பார்க்க மாட்டேன். கண்களைத்தான் பார்ப்பேன். பொய் சொல்றவங்களை அவங்க பார்வையிலேயே கண்டுபிடிச்சிடுவேன்!”



-இந்த மாதிரி ஒரு மனிதரின் பார்வைக்கு எதிரே எவர் நிற்க முடியும்! அதனால்தான் அவர் முதுகுக்குப் பின் தூற்றுவோரும்கூட முகத்துக்கு நேரே வந்தவுடன் வாழ்த்திப் பாட ஆரம்பித்து விடுகிறார்கள்!

இங்கே எந்திரன் – தி ரோபோ படப்பிடிப்புக்காக கோவாவில் முகாமிட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினி, படப்பிடிப்பு இடைவேளையில் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கிறீர்கள். காணக்கிடைக்காத இந்த அரிய காட்சியை, சூப்பர் ஸ்டாரின் அதி தீவிர ரசிகர் ஒருவர் கோவாவில் காத்திருந்து படம் பிடித்து அனுப்பியிருக்கிறார்.

நண்பர்களே... உலகில் நீங்கள் எத்தனையோ சிறந்த நடிகர்களைத் திரையில் பார்த்திருப்பீர்கள், ரசித்திருப்பீர்கள்.

இந்தப் படங்களை ஒரு முறை பாருங்கள். இந்த சூரியப் பார்வைக்கு நிகராகுமா மற்ற நட்சத்திரங்களின் மினுக்கல்கள்!
http://www.envazhi.com

Saturday, October 4, 2008

வாங்க... வாங்க!

http://www.envazhi.com/

ரஜினி ரசிகர்களின் போக்கு தவறா?


சற்றுக் கடினமான மனதுடன் இந்தப் பதிவைத் தருகிறேன். புரிந்தவர்கள் கோபப்படாமல் சிந்திக்கட்டும். மற்றபடி எந்தப் பலனும் எதிர்பாராமல் ரஜினி என்ற ஈர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்ட ரசிகர்களுக்கு இந்தக் கட்டுரை சமர்ப்பணம்!

ரஜினியை அரசியலுக்கு வாருங்கள் என அழைக்க இதுவே சரியான தருணம் என வாதிடும் ரசிகர்கள் ஒருபக்கம்...

வேண்டாம்... அவர் இஷ்டப்படி விட்டுவிடுவோம். ரஜினி என்ற பிம்பத்தை மட்டும் ரசித்து மகிழ்வோம் என அறிவுபூர்வமாக பேசும் கூட்டம் இன்னொரு பக்கம்.

தாமாகவே ஒரு முடிவெடுத்து அந்த முடிவு நிறைவேற வழியில்லாத நிலையில் தாங்களாகவே எதிர்மறையாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள் என மேதாவித்தனம் காட்டும் விமர்சகர்கள் இன்னொரு கூட்டம்.

இதுதான் ரஜினி ரசிகர்கள் என்ற சமூகத்துக்குள் இன்று நிலவும் முரண்பாடு.

இந்த முரண்பாடு அந்த சமூகத்துக்குள்ளேயே இருந்தால் பரவாயில்லை. ஆனால் சிலர் தங்கள் எழுத்து வல்லமையைக் காட்டுவதாக எண்ணி மீடியாவில் வெளிச்சம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருவேளை இது ரஜினிக்கு எதிராக வேலை செய்யும் கூட்டத்தின் பிரச்சாரமாகவும் கூட இருக்கலாம். அப்படி இருந்தால் சந்தோஷமே... குறைந்தபட்சம் ரஜினி ரசிகர்களுக்குள் எந்த கருத்து பேதமுமில்லை என்ற சந்தோஷமாவது மிஞ்சும் சத்தியநாராயணா போன்றவர்களுக்கு!

ஒவ்வொரு முறையும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பது தவறா... இந்தக் குரலின் பின்னணியில் இருப்பது அரசியல் வியாபாரமா... ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வைத்து லட்சக் கணக்கில் சம்பாதித்துவிடத் துடிக்கிறார்களா ரசிகர்கள்?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளில் கொஞ்சம் கசப்பு தட்டினாலும், உண்மை உண்மைதானே!

இவற்றைப் பற்றி தீவிர பார்வையில் எழுதத் தொடங்கினால் பல ரசிகர்களால் மட்டுமல்ல... இன்று அறிவுஜீவித்தனம் பேசும் ஒருவராலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு கட்டத்தில் ரஜினி என்ற நல்ல நடிகரை, மனிதரை ரசிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போய்விட்டுவிடும் இந்த விவாதம்!

ஆரவாரம் இருந்தால்தான் திருவிழா!

ரசிகர்கள் பாலாபிஷேகம், பீரபிஷேகமெல்லாம் செய்யக் கூடாது. கட் அவுட் வைக்காமல், பேனர் கட்டாமல், பூமழை தூவாமல் அமைதியாக ரஜினி படத்தை ரசிக்க வேண்டும் என அறிவுரைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

குறைந்த பட்சம் இப்படியொரு சூழலில் அடுத்த வருடம் அமைதியாக எந்திரன் ரிலீசானால் எப்படியிருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்?

பட்டாசு கொளுத்தாமல், வாண வேடிக்கை இல்லாமல், தீப அலங்காரம் செய்யாமல், ஊர்கூடி வடம் பிடிக்காமல் ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்குமோ அப்படியாகிவிடும்!!

அப்படியொரு சூழல் நிலவும் போது, ‘என்ன ஆச்சு... ரஜினி படமா இது... ரசிகர்களுக்குப் பிடிக்காத மாதிரி எடுத்துவிட்டார்களே!’ என விமர்சனம் வைப்பவர்கள் நிச்சயம் இதே கூட்டத்தினராகத்தான் இருப்பார்கள். ‘ரஜினி தன் ரசிகர்கள் செல்வாக்கை இழந்துவிட்டார்’ என்பதற்கான அறிகுறி இது என கூலாகச் சொல்லிவிட்டுப் போவார்கள்.

ரஜினி படம் ரிலீசாவது ஒரு திருவிழா மாதிரி என எழுதிக் கிழிக்கும் யாருக்கும், அந்தத் திருவிழாவை யார் தயவுமின்றி சுயமாக நடத்தும் ரசிகர்களைப் பற்றிக் குறை சொல்லும் யோக்கியதை கிடையாது. எங்கோ ஒரு சில ரசிகர்கள் வரம்பு மீறியிருக்கலாம்... ஆனால் பரந்து விரிந்த சமுத்திரத்துக்குள் செம்மீனும் உண்டு, காதறுந்த செருப்பும் உண்டு.

ரஜினியும் அரசியலும்!

பின்னாளில் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் மட்டுமே எந்தத் தொண்டனும் பாலாபிஷேகம் செய்யவில்லை. திரைக்கு முன்னால் சில்லறையை வாரி இறைக்கவில்லை. ஆனால் அந்தத் ரசிகனுக்குத் தொண்டனாகும் ஆசையைத் தூண்டிவிட்டது யார்? பல ரசிகர்களால் வெளிப்படையாகக் கேட்க முடியாத கேள்வி இது! ஆனால் இதற்கான பதில் ரஜினி உள்பட அனைவருக்கும் தெரியும்.

ரஜினி அரசியல் ஆசை துறந்தவரல்ல... அரசியலை இதற்கு முன் முயற்சித்துப் பார்க்காதவருமல்ல. கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் தானும் ஒரு சக்தியாக அவர் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருந்தே வந்திருக்கிறார். இதை அவர் மறைக்கவில்லை. அதன் தாக்கம் அவரது ரசிகர்களிடமும் இருப்பது இயல்புதானே!

யாருக்கும் கிடைக்காத மக்கள் ஆதரவு எனும் அரிய வரம் ரஜினிக்கு மட்டும்தான் தானாகத் தேடி வந்தது. மூப்பனார் எனும் நியாயமான மனிதர் ஆதரவும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் திமுகவுக்கு வாரி வழங்கியவர் நமது ரஜினிதான்.

ரஜினிக்கு அரசியல் விருப்பமே இல்லை என்று வாதாடுபவர்களுக்காகத்தான் இதையெல்லாம் இங்கே குறிப்பிடுகிறேன்.

இன்றும் கூட எந்த தொலைக்காட்சி அல்லது பத்திரிகைப் பேட்டியிலும், தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதில்ல. ரசிகர்கள் வீணாக கற்பனை செய்து கொள்ள வேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கள். படம் வந்தால் ரசித்துவிட்டுப் போங்கள், என்று ரஜினி நேரடியாக பொட்டிலடித்த மாதிரி சொல்லவில்லை.

குசேலன் ரிலீசுக்கு இரு வாரங்களுக்கு முன் கைரளி டிவிக்கு அளித்த பேட்டியில் தனது அரசியல் பிரவேசத்தைக் காலம் முடிவு செய்யும் என்றுதான் அவர் கூறியுள்ளார்.
எனவேதான் வெறும் சூப்பர் ஸ்டார் என்ற நிலையைத் தாண்டி அவரை தலைவர் என விளித்து மகிழ்கிறார்கள் ரசிகர்கள். இதில் எங்கே தவறு வந்துவிட்டது?

ரஜினியின் இந்த மனநிலைக்கு எதிராக ரசிகர்கள் அமைதி காத்திருந்தால், அது ரஜினியின் செல்வாக்கை அல்லவா கேள்விக் குறியாக்கியிருக்கும்? கிட்டத்தட்ட அவரை அவமானப்படுத்துவதற்குச் சமானமாகிவிடும்.

இன்னொன்று, எல்லா ரசிகர்களும், தொண்டர்களும் அமைதியாக நன்கு சிந்திப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகை புத்திசாலித்தனம் என்று புரியவில்லை!

ஒவ்வொருவர் பார்வையும் வேறு வேறு கோணத்தில்தான் இருக்கும். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதிலேயே ஆயிரம் பேர் ஆயிரம் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா... அப்படித்தான்.

தனக்குப் பிடித்த நாயகன் தலைமைப் பொறுப்புக்கு வந்து இந்த சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் தன் கைக்காசை செலவழித்து போஸ்டர் அடிப்பவர்கள் மீது என்ன தவறு கண்டு விட்டார்கள் இவர்கள்?

இப்படி செலவழித்ததை திரும்ப எடுக்க வேண்டும் என்ற ஊழல் சிந்தனையோடேயே சுற்றிக் கொண்டிருப்பவர்கள் நிச்சயம் அடிமட்ட ரசிகர்கள் கிடையாது, அனைத்தும் அறிந்ததாகக் காட்டிக் கொள்ளும் அறிவு ஜீவிகளே!

இது ரஜினிக்கும் தெரியும். அதனால்தான் தன் ரசிகர்களிடம் அவர் கோபப்படுவதில்லை.
ரஜினியின் மன நிலை புரியாமல் ரசிகர்கள் அவரை நிர்பந்தப்படுத்துவதாக சிலர் விமர்சிக்கிறார்கள். இவர்களுக்கு மட்டும் ரஜினியின் மனம் புரிந்துவிட்டதா என்ன... பிரதமரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ‘நான் அரசியலுக்கு வருவதை ஆண்டவன் தீர்மானிக்கட்டும்’ என்கிறார் ரஜினி.

இவர்களோ... ரஜினிக்கு அரசியல் பிடிக்காது. அவர் வழியில் அமைதியாக எளிமையாக வாழ்ந்து, விதவிதமாக ஸ்டைல் காட்டி தங்களை மகிழ்வித்து ரிட்டையர் ஆனால் போதும் என்கிறார்கள்.

இதை எடுத்துச் சொல்பவர்களுக்கு அறிவிக்கப்படாத பிஆர்ஓ என்று பட்டம் வேறு...

ரொம்ப்ப கஷ்டம்யா...!

குறிப்பு: ரசிகர்கள் ஏன் ரஜினியை திரும்பத் திரும்ப அரசியலுக்கு அழைக்கிறார்கள் என்பதற்கான காரணங்கள் அடுத்த பதிவில்... சொல்லப் போனால் இதை எழுதியது மட்டும்தான் நான். கருத்து சொன்னவர்கள் திருவாளர் பொதுஜனம்!